தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இனி எல்லாமே நீயல்லவோ.

2 posters

Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ.

Post by udhayam72 Fri May 10, 2013 3:18 pm

இனி எல்லாமே நீயல்லவோ.

ரமணிசந்திரன்

அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!

காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.

எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!

அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!

அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.

'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.

கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!

கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!

இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!


சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!

ஆனால், இன்று என்ன ஆயிற்று?

பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!

செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.


"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.

படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?

ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!

அல்லது...

"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"

அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...

"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.

வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"

"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."

"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!

"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."

"ஐயோ!"

சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.

வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?

"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."

"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"

"அவளைப் பார்க்கப் போவதற்கா? கவனி, டீப்! இப்போதைக்கு மீடியாவிடம், எந்தவிதக் குறுக்கீடும் இல்லாமல் தனியாக இருந்து, கதை வசனம் எழுதப் போயிருப்பதாக ஒரு கதை சொல்லியிருக்கிறேன்! அது, அப்படியே இருக்கட்டும்! உன்னிடம் கேட்டாலும், கவனம் சிதறாமல் இருப்பதற்காகத் தனிமை நாடிப் போனதாகச் சொல்லி விடு! அதற்காகவே, போன் எண் கொடுக்கவில்லை. செல் கொண்டு போகவில்லை என்றும்! இருக்கும் இடம் சொல்லு. என் காரில், உன் டிரைவரோடு வருகிறேன். நீ போன காரை, டிரைவரிடம் கொடுத்துவிட்டு, என் காரில் மருத்துவமனைக்குப் போகலாம்!"

அவனுடைய ஏஜண்ட் எலிசா கேட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டு, செல்லை, அந்தப் பெண்ணிடம் நீட்டினான். அவன்!

அவள் கண்ணில் அதிக ஆர்வம் இருந்ததோ?

செல்லை அவளிடம் கொடாமல் நிறுத்தி, அதை ஆராய்ந்தான். எலிசாவுடன் அவன் பேசியது, பதிவாகி இருந்தது! கூடவே, அவனும் அவளுமாக ஒரு போட்டோ! ஏதேனும் ஒரு பத்திரிகைக்கு, டீ.வி.க்குக் கொடுத்தால், ஏகப்பட்ட பணம் கிடைக்குமே!

உதட்டைப் பிதுக்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு, அனைத்தையும் அழித்து, அவள் கையில் கொடுத்தான்!

முகம் கன்றி நின்ற அவளிடம், மேலும் சில நோட்டுகளைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு, வரவேற்பில் அமர்ந்து, எலிசாவுக்காகக் காத்திருக்கலானான்.

அவன் அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை!


யு.எஸ். சாலைகளில், தூரம் ஒரு பொருட்டல்ல!

ஆயினும், காத்திருந்த அந்த நேரத்தில், அவனது மனம் தவியாய்த் தவித்துவிட்டது!

மித்ராவுக்குத் தாயின் அரவணைப்பு கிடைத்ததில்லை!

சும்மா ஒரு கதை எழுதி, நண்பர்களாக நடிக்கப் போய், அதை ஒரு பெரிய டைரக்டர் பார்த்துத் திரைப்படம் ஆக்க ஏற்பாடு செய்தார்! கதையில் இருந்து மாறுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவனை, அவர் கூடவே வைத்துக் கொண்டது!

ஆனால், டைரக்டர் திடீரென நோயுறவும், ஸ்டுடியோடிவில் அவனையே இயக்கச் சொன்னார்கள்!

படம், பெரும் வெற்றி!

தொடர்ந்த வளர்ச்சியில், சென்ற ஆண்டு ஆஸ்காரே கிடைத்தது!

முதலில் அவனுக்குத் திடீர்ப் புகழ் கிடைத்த போது, ஒட்டிக் கொண்டவள், மித்ராவுடைய தாய்! அந்த வயது, சூழ்நிலையில், அவனுக்கும் தப்பாகத் தெரியவில்லை! கர்ப்பம் என்றதும் திருமணமும், தன் போக்கில் நடந்ததுதான்!

மித்ரா பிறந்தாள்! அதே சமயம், அவனது இரண்டாவது படமும் பெருவெற்றி பெற்ற பிறகுதான், மனைவியாக இருப்பவளின் உண்மை உருவம், அவனுக்குத் தெரிய வந்தது!

அவளுக்கு நடிக்க ஆசை! தன்னைப் பெரிய கதாநாயகி ஆக்குவது, கணவனான அவனது கடமை என்றாள்.

நடிகைக்குரிய எதுவுமே அவளிடம் இல்லை என்று அவன் ஒரேயடியாக மறுக்கவும், பணமாவது கொடு என்று, விவாகரத்து வாங்கிக் கொண்டு போய் விட்டாள்!

அவள் பணம் கேட்டதை விட, அவனுக்குப் பெரிய அதிர்ச்சி என்ன என்றால், தன் குழந்தை என்பதே இல்லாமல், மித்ராவை விட்டுவிட்டுப் போய்விட்டதுதான்!

அவள் திட்டமிட்டிருந்த எதிர்காலத்துக்குக் குழந்தை இருப்பது சரிப்படாதாம்!

பெற்ற குழந்தையை விடுவது எப்படி முடியும் என்று சில நேரம், அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும்! அதாவது, எப்போதாவது ஓய்வு கிடைத்து, தன் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கிற போது, இப்படி ஆச்சரியப்படுவான்!

இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தால், நாமும், பெற்று வளர்த்தவர்களை விட்டு, ஆண்டுக் கணக்கில் பிரிந்து தானே இருக்கிறோம் என்று தோன்றும்!

அந்த உறுத்தல் அதிகமாகி, இருமுறை தாய்நாட்டுக்குப் போயிருக்கிறான்!

ஒரு தடவை, மித்ராவைக் கூட, அழைத்துப் போயிருக்கிறான்!

ஆனால், போய் இரண்டே நாட்களில், இங்கிருக்கும் வேலைப் பளு பற்றி, அவனுடைய ஏஜண்ட் எலிசா போன் பண்ணுவாள்!

உடனே, விழுந்தடித்துக் கொண்டு, திரும்பி விடுவான்!

யாருக்கு, அது பற்றி வருத்தமும், கோபமும் இருந்தது என்பது அவனுக்குத் தெரியும்!

அதிலும், படிக்க வந்ததை விடுத்து, இன்னொன்றில் ஈடுபட்டு, திருமணம், ரத்து என்று இந்த வாழ்வுக்குப் பழகிப் போனது பற்றி, ரொம்பவே எரிச்சல் தான்!

ஆனால், இந்தப் பணம் சம்பாதிக்க, அங்கே எத்தனை பிறவி எடுக்க வேண்டியிருக்கும்?


சொன்னால், அன்னைக்குப் புரியவில்லை என்பதில், அவனுக்கும் எரிச்சல்தான்!

குழந்தை வளர்கிற முறை சரியில்லை என்று ஒரு வாதம்! சும்மா, அவனைத் திருப்பி வரவழைப்பதற்காக ஒரு சப்பைக் கட்டுதான்!

மற்றபடி, இங்கே மித்ராவுக்கு என்ன குறை?

நீச்சல் குளத்துடன் கூடிய பெரிய வீடு! அவளுக்காகத் தனி நர்சரி! அறைகள்! அவற்றில், அவளுக்குத் தேவையான அனைத்தும்! பொறுப்பான 'ஹவுஸ் கீப்பர்!'

இதற்கும் மேலாகச் சில நாட்களில், மித்ராவை, எலிசா அவள் வீட்டுக்கு அழைத்துப் போவாள். நாள் முழுவதும், அவளுடைய பிள்ளைகளோடு விளையாடிவிட்டுத் திரும்புவாள்.

அங்கே போவது என்றாலே, மித்ராவுக்குக் குஷிதான்!

இதற்கு மேலாக, ஒரு நாலு வயதுச் சிறுமிக்கு என்ன வேண்டும்?

பஞ்சடைத்த ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு, அதற்கு ஜேடி என்று பெயர் வைத்து, வீட்டில் அவள் விளையாடுவதைப் பார்க்கையில், அவனுக்கு வேடிக்கையாக இருக்கும்!
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ.--1

Post by udhayam72 Fri May 10, 2013 3:20 pm


வேறு விலை உயர்ந்த ரோபோ மாடல் பொம்மைகளை வாங்கிக் கொடுத்தாலும், மித்ராவுக்கு இந்தப் பொம்மை மீதுதான் பிரியம் அதிகம்!

அதை ஒரு குழந்தை போலக் கொஞ்சுவது, அவ்வப் போது கண்ணில் படும்.

பெண் குழந்தைகளுக்கே உரித்தான தாய்மை உணர்ச்சி என்று அவன் எண்ணமிடும் போதே, அவளுடைய தாயின் நினைவு இடிக்கும்!

அவள் பெண்ணில்லையா? தாய் என்று நினைக்கக் கூடப் பிடிக்கவில்லை என்றாளே!

ஒருவேளை, தனிமை உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள குழந்தை, இந்தப் பொம்மையைப் பயன்படுத்துகிறாளோ என்று, இப்போது உட்கார்ந்து யோசிக்கும் போது, அவனுக்குத் தோன்றிற்று!

தனிமை உணர்வால்தான், உடனொத்த பிள்ளைகள் வீடுகளுக்கு, இப்படித் துடித்துக் கொண்டு ஓடுகிறாளோ?

இந்தப் பிறந்த நாள் பற்றி, மித்ரா பலமுறை ஆர்வமாக, அவனிடம் சொல்ல வந்தது, அப்போது அவனுக்கு நினைவு வந்தது!

வாழ்த்துக் கார்டு வாங்க வேண்டும்! பரிசு வாங்க வேண்டும்! அங்கே யாரோ நான்சி வருவாள்... மிச்சி வருவான்... இன்னும் யார் யாரோ!

"ஹவுஸ்கீப்பரிடம் சொல்லு" என்றவன், அதற்கு மேல் வெறுமனே 'ஊம்' கொட்டியபடி, சில முக்கியமான குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தது... மித்ராவின் பேச்சு நின்று போனதும், இப்போது ஞாபகம் வந்தது!

தந்தையின் கவனம் தன்னிடம் இல்லை என்று பேச்சை நிறுத்தியிருப்பாளோ? சே!

நெஞ்சு சுட்டது அவனுக்கு! அவளை விட எது முக்கியம்?

இனிக் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்!

தாயின் அரவணைப்பு தான் இல்லை! தந்தையும், யாரோ போல, அவ்வப்போது எட்டிப் பார்ப்பதோடு விட்டு விட்டால் எப்படி?

கூடாது! இனிமேல், தாயுமானவனாக இருந்து, அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்!

கடவுளே! அதற்கு, அவள் நல்லபடியாகப் பிழைத்து எழ வேண்டும்!

இப்போது உயிருக்கு ஆபத்து இல்லை, பிழைத்து விடுவாள் என்று எலிசா சொன்னாள் தான்! ஆனால், அப்படிச் சொன்னதில் இருந்தே, உயிருக்கு ஆபத்தான நிலையும் இருந்தது என்று அர்த்தமாகவில்லையா?

முழுக்க ஆபத்து நீங்கியிருக்குமா?

காட்! இந்த எலிசா எப்போது வந்து சேருவாள்?

கண்களோடு, முக அடையாளத்தையும் மறைத்த கறுப்புக் கண்ணாடி, தூக்கிவிட்ட கோட் காலரோடு, பொறுமையை இழுத்துப் பிடித்தபடி அவன் காத்திருந்தான்!

எலிசா காரோட்டியோடு வந்ததும், அவனது காரை, எலிசாவின் டிரைவரிடம் கொடுத்துவிட்டு, எலிசாவின் காரில், அவன் கிளம்பினான்.


முதலிலேயே கேட்டுவிட்ட போதும், கார் கிளம்பியதும், மீண்டும் ஒரு தரம், மகளது உடல்நிலை பற்றி, அவன் விசாரித்தான்.

"சொன்னேனே, டீப்! கார் பக்கவாட்டில் பட்டு, அவளைத் தூக்கி எறிந்து விட்டது. விழுந்த வேகத்தில், சில எலும்பு முறிவுகள்! அதிர்ச்சி வேறு! இரவில் உன்னைத் தேடினாள் போல! அக்கறையற்ற தகப்பனாக நீ தோன்றுவது, உன் புகழைக் கெடுத்துவிடும்! அடுத்த பட வசூலையும் கெடுக்கக் கூடும்! அதனால், நீ மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்... என்ன பார்க்கிறாய்? ஓ, இந்தப் போஸ் சரிதானா என்றா? ரொம்ப சரி! டைரக்டர் நீ. உனக்கு, இன்னொருவர் கற்றுத் தர வேண்டுமா?" என்று, முதல் தடவையாக, அவனுள் இருந்த வேதனையை உணர முடியாமல் பேசினாள் எலிசா.

ஆனால், அவளையும் குற்றம் சொல்லுவதற்கு இல்லை!

மனைவி பிரிந்த போது, 'விட்டது தொல்லை' என்பது போலச் சாதாரணமாக இருந்தவன் தானே? அந்த மனைவி பெற்ற பிள்ளையிடம் மட்டும் என்ன, பெரிய பாசம் வந்து விடும் என்று எண்ணியிருப்பாள்!

எலிசாவின் கவலையெல்லாம், மீடியா அவனைத் தவறாகச் சித்தரித்து விடக் கூடாது!

இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றபடி இருந்தாலும், அவனது படங்களில், உள்ளூர ஓர் ஒழுக்கம், நியாயம் இருக்கும்! அதைத் தருகிறவன் கெட்டவனோ என்று ரசிகர்களுக்குத் தோன்றிவிடக் கூடாது! தோன்றினால், அவனது படங்களைப் பார்க்கும் ஆவலும் குறைந்து போய் விடக் கூடும்! எனவே, அந்த நிலை வர விட்டுவிடக் கூடாது!

அவளது கருத்தில் இருப்பது, இதுதான்!

இந்த அக்கறை, அவனுக்காக மட்டுமானது அல்ல!

அவனது வருமானத்தில் பத்து சதவீதம் பெறும் ஏஜண்ட் அவள்! அவனது வருமானம் கூடக் கூடத்தானே, அவளுக்கும் லாபம்?

இன்னும் சில சினிமாத் துறையினரின் ஏஜண்டாக அவள் செயல்பட்டாலும், அவன் வழி கிடைப்பதுதான் பெருந்தொகை! அதற்காகவே...

தலையை உலுக்கிக் கொண்டான் அவன்!

மனம் சரியில்லாமல் இருப்பதால், இப்படியெல்லாம் தோன்றுகிறது போலும்! மற்றபடி, அவனை இந்த நிலைக்கு உயர்த்துவதற்கு, எலிசாவும் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறாள் என்பது, அவனும் அறிந்ததே!

முதல் படத்து டைரக்டர் தொடக்கத்திலேயே நோய்வாய்ப்பட்ட போது, இவனைக் கொண்டே படத்தை முடிக்கலாம் என்று மற்றவர்களை ஒப்ப வைப்பதற்கு, எவ்வளவு வேலை செய்தாள்!

புறம் திரும்பி, "என்ன செய்ய வேண்டும்?" என்று வினவினான் அவன்!

"சாலையோரத்து காஸ் ஸ்டேஷன் ஒன்றில், ஒரு காபி மட்டும் குடித்துக் கொள். ஷேவ் பண்ண வேண்டாம்! யார் என்ன கேட்டாலும், இடையூறின்றிக் கதை 'ஸ்கிரிப்ட்' தயார் பண்ணப் போனதாக, அதையே திருப்பித் திருப்பிச் சொல்லு! எங்கே என்பது வேண்டாம்! கூடவே இருந்து, நானும் கவனித்துக் கொள்கிறேன்!"

"சரி."


"மேலே எதுவும் கிளறினால், 'நோ கமென்ட்ஸ்' என்று விடு."

"சரி!"

"வரும் காலத்தில், இப்படி எதுவும் என்றால், என்னோடு தொடர்பு கொள்ளும்படி, உன் 'ஹவுஸ்கீப்'பரிடம் சொல்லி வை! சத்தமின்றிச் செய்ய வேண்டிய வேலையை, ஊரறியச் செய்து விட்டாள்!"

ஹவுஸ்கீப்பர் நல்ல பெண்மணி! வீட்டை முழுதும் அவள் பொறுப்பில் விட்டுவிட்டு, அவன் கவலையற்றிருந்தான்!


எலிசா, ஹவுஸ்கீப்பரைக் குற்றம் சொன்னது, அவனுக்குப் பிடிக்கவில்லை! ஆனால், அவள் சொன்னதிலும் தப்பில்லைதான்!

ஓசையற்றுச் செய்திருக்க வேண்டிய வேலை!

அவன் இல்லாத நேரத்தில், பிள்ளைக்குப் பெரிதாக ஒன்று என்றதும் பதறிப் போயிருப்பாள்!

ஆனால், அதையெல்லாம் சொல்லி, எலிசாவிடம் வாதாட மனமற்று, வெறுமனே தலையாட்டி வைத்தான் அவன்!

ஓரளவு, அவன் எதிர்பார்த்தது தான்! விவாகரத்தின் போது எதிர் கொண்டதுதானே?

ஆனால், ஆஸ்காரின் விளைவோ, என்னவோ, பன்மடங்கு அதிகமாகி இருந்தது!

காமிரா ஃப்ளாஷ்களின் கண்ணைக் குருடாக்கும் ஒளி வெள்ளம்! முண்டியடித்தபடி கேள்விக் கணைகளைத் தொடுத்தவாறு, படை அரணாய் அவனை நெருங்கிய ரிப்போர்ட்டர்கள் கூட்டம்!

அவர்களுக்குள்ளே புகுந்து, மருத்துவமனைக்குள் செல்ல முயன்றான் அவன்!

முன்னும் பின்னுமாக அட்டையாக ஒட்டிக் கொண்டு... அவன் அதைப் பெரிதாகக் கருதவில்லை! இதை விடக் கொஞ்சம் சின்ன அளவில் என்றாலும், ஐந்தாண்டுகளாக அன்றாடம் அனுபவிப்பதுதானே!

ஆனால், அவர்கள் கேட்ட கேள்விகள்!

இப்படி ஓர் அவசரத்துக்குக் கூட அணுக முடியாமல், ரகசியமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

மகளின் விபத்து பற்றிச் சரியாக எத்தனை மணிக்குத் தெரியும்?

தெரிந்த போது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஆபத்தான நிலைமையாமே! பிழைப்பாள் என்று தோன்றுகிறதா? பிழைக்காவிட்டால், எப்படி இருக்கும்?

இந்த மாதிரி நிலைமையில், மகள் கூட இருக்க முடியாமல் போகக் காரணம் என்ன? இனி இந்தத் தொழிலில் இருந்து விலகி விடுவீர்களா?

விலகிய பிறகு, என்ன செய்யப் போகிறீர்கள்?

மித்ராவின் நிலைமைக்கு, என்ன காரணம்?

ஆஸ்கார் கிடைக்காத ஆத்திரத்தில், யாரோ முக்கியமானவர்கள் செய்திருப்பதாக எண்ணுகிறீர்களா? அவர்கள் பெயர் சொல்ல முடியுமா?

அவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்?

மனைவியோடு, என்ன தகராறில் பிரிந்தீர்கள்?

இந்த விபத்தைப் பயன்படுத்தி, மனைவியோடு சேர்வீர்களா... மனைவி வேறு யாரோடும் வாழ்கிறாளா? விட்டுவிட்டு வருவாளா?

வராவிட்டால், மகளோடு, தாய்நாட்டுக்கே போய் விடுவீர்களா?

அவனை மூட்டை கட்டிக் கடலுக்கு அடியில் புதைக்காத குறை!


ஆத்திரத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அதைப் பிடித்துக் கொண்டு, பிலுபிலுவென்று உலுக்குவார்கள்!

யாரிடமும் கை நீட்டிவிடக் கூடாது என்று மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, பிடிவாதமான இறுகலுடன், அதிகம் நெருங்கியவர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னேறி, ஒருவாறு மருத்துவமனைக்குள் சென்றான் அவன்.

"பொறுங்கள், ஜென்டில்மேன்! டீப் அதிர்ச்சியுற்றிருக்கிறார்! மகளைப் பற்றிய கவலை சற்றுக் குறைந்ததும், உங்களைச் சந்தித்து, எல்லா விவரமும் சொல்வார்!" என்று பத்திரிகை, டீ.வி. ரிப்போர்ட்டர்களைச் சமாதானப்படுத்திவிட்டு, எலிசா அவனிடம் ஓடி வந்தாள்!

"'நோ கமென்ட்ஸ்' சொல்லு என்றேனே! மீடியாவிடம் பதமாக நடக்க வேண்டாமா? மகளைப் பற்றிய அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லி சமாளித்து வைத்திருக்கிறேன்! வா!" என்று, மித்ராவுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் அவனை அழைத்துச் சென்றாள்.


உயிருக்கு ஆபத்து நீங்கி விட்டது என்று, நல்ல சேதியை முதலில் தெரிவித்து விட்டு, "ஐசியுவில் இருந்து மித்ராவை வார்டுக்கு மாற்றி விடலாம். ஆனால், உங்களைப் போன்ற பிரபலங்கள் வந்து போவது, மருத்துவ வார்டு சூழ்நிலையைப் பாதிக்கக் கூடும்! கொஞ்சம் தனிமை காப்பதாக, தனிப்பட்ட வார்டு ஒன்று இருக்கிறது! உங்கள் மகளை, அங்கே மாற்றலாமா?" என்று கேட்டார் வைத்தியர்.

"இன்னும் தனியாக..." என்று தொடங்கியவனை இடையிட்டு, "இப்போதைக்கு, அவளுக்கு மருத்துவக் கண்காணிப்பு அதிகம் தேவை, மிஸ்டர் டீப்! பிரத்தியேக வார்டில் இருப்பது, அவளுக்கு நல்லது!" என்றார் மருத்துவர்!

மாற்றத்துக்கான பணம் கட்டுவது போன்ற வேலைகளைக் கவனிப்பதற்காக எலிசாவை அனுப்பிவிட்டு, அவள் சென்றதும், "டாக்டர், உண்மையைச் சொல்லுங்கள்! என் மித்ராவுக்கு மெய்யாகவே, இனி எந்த ஆபத்தும் இல்லைதானே? இந்த விபத்தின் பின் விளைவாக, வேறு எதுவும் வந்து விடாதே!" என்று கவலையுடன் கேட்டான் அவன்!

தன்னை மீறி, அவன் குரல் கரகரத்தது!

கூர்ந்து நோக்கிவிட்டு, "எல்லாச் சோதனையும் செய்தாயிற்று, மிஸ்டர் டீப்! பின் விளைவாக எந்தப் பிரச்சினைகளுக்கும் இடம் இல்லை! ஆனால், இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீங்கள், அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட நேற்றைய இரவில் எங்கே போனீர்கள்? சின்னக் குழந்தைப் பருவத்திலேயே, மித்ராவுடைய தாயார் பிரிந்து போய் விட்டதாகக் கேள்விப்பட்டேன்! அவளே, அன்னையைத் தேடவே இல்லை! ஆனால், பின்னிரவில் மயக்கம் தெளிந்து, வலியும், ஏக்கமுமாக, அப்பா, அப்பா என்று அவள் புலம்பிய போது, நீங்கள் அருகில் இருந்திருந்தால், அப்போதே, சில மணி நேரம் முன்பாகவே, குழந்தை திடப்பட்டிருக்கக் கூடும்!" என்றார் வைத்தியர்!

அந்த நேரத்தில்...

இடையூறு வரக்கூடாது, என்று, அந்தப் பெண்னின் செல்லைக் கூட வாங்கி, அணைத்து வைத்தது, அவனுக்கு வலியுடன் நினைவு வந்தது!

வலி மட்டுமல்ல! குன்றலோடும்!

அவனது ஆறடி உயரம் அரையடியாகக் குறுகிவிட்ட உணர்வு!

விடிகாலையில் எப்போதோ அவள் எழுந்து போட்டோவை எடுத்துவிட்டு, செல்லையும் 'ஆன்' பண்ணியே வைத்திருக்கிறாள்! யாருடைய அழைப்பையும் எதிர்பார்த்திருந்தாளோ என்னவோ? இந்த மாதிரித் தொழிலுக்கு, நேரம் காலம் ஏது?

ஒரு வகையில் அவளது திருட்டுத்தனமும் நல்லதாயிற்று! அல்லது, விபத்து பற்றிய விவரம், அவனுக்கு இன்னமும் தெரிந்திராது!

என்ன கேவலம்!

கேவலம் அவனது நடத்தையில்! மகள் இங்கே உயிருக்குப் போராடுகையில், அவன் சே!

இன்று வரை, தப்பாக நினைத்திராதது, இன்று வேறு மாதிரித் தெரிந்தது!


பத்திரிகையாளர் தொல்லைக்காக மட்டும் தானே, அவன் ரகசியம் காத்தது?

ஆனால், நடந்ததில் தப்பில்லை என்றால், இப்போது இந்த டாக்டரிடம் ஏன் சொல்ல முடியவில்லை?

நடந்த உன்மை மட்டும் வெளியே தெரிந்தால், எல்லோரும், அவனை என்ன நினைப்பார்கள்?

நல்லவேளை! அப்படி எதுவும் நேராமல், எலிசா காப்பாற்றினாள்!

படுக்கையில் கிடந்த மகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கையில் அவனுக்கு என்னென்னவோ தோன்றிற்று!


இந்த வயதில், அவன் எப்படியெப்படி வளர்ந்தான் என்பது நினைவு வந்தது!

விளையாடும் போது, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டு அழுத போது, "விளையாட்டில் பட்டதற்கெல்லாம் அழக்கூடாதும்மா!" என்றவாறே தலையைத் திருப்பித் தன் கண்ணைத் துடைத்துக் கொண்ட, தாயின் நினைவு!

கதை சொன்னபடி, வலிக்காமல் ஊசி போட்ட தந்தை!

காயம் நன்றாக ஆறி, தோல் நிறம் மாறும் வரைக் கவனித்த விதம்!

வெறும் சிராய்ப்புக்கே இந்தப் பாடு! அவனுடைய மகள் மறுபிறவி எடுக்கையில், அவன் அந்தப் பகுதியிலேயே இல்லை!

பிரத்தியேக வார்டு, ஸ்பெஷல் அறை என்று மித்ரா மாற, மாற, அவன் மருத்துவமனையே கதியென்று கிடந்தான்!

"பாசமுள்ள தந்தையாக, உன்னைப் பற்றிய செய்திகள் பிரமாதம்! மித்ரா வீட்டுக்கு வரும்வரை, பல்லைக் கடித்துக் கொண்டு, இப்படியே இருந்து விடு!" என்றாள் பூங்கொத்துடன் வந்த எலிசா.

மகளை மெல்ல நடக்க வைத்துக் கொண்டிருந்த அவன், எலிசாவை விசித்திரமாகப் பார்த்தான்!

அவனுக்குப் பல்லைக் கடித்துப் பொறுக்க வேண்டிய அவசியம் இருக்கவே இல்லையே! அந்தச் சின்ன உருவத்துக்கு உதவியும் பணிவிடைகளும் செய்து, அவனுக்குச் சுகமாக அல்லவா இருக்கிறது!

"மருத்துவமனையில் இருந்து, மித்ரா திரும்பி வரும் வரைதான்! அதுவரை இதே விதமான போஸிலேயே இருந்து விட்டால் போதும்! அதுவே, அடுத்த படத்துக்கு அருமையான முன் விளம்பரம் போல ஆகிவிடும்! மித்ரா குணமாகி வீட்டுக்கு வந்துவிட்டால், அப்புறம், நீ பழைய மாதிரியே இருந்து கொள்ளலாம்! நல்ல வேளையாக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது! ஸ்டுடியோவில் அடிப்படை வேலைகள் தான் நடக்கின்றன!"

அவனுள் ஓர் எண்ணம் தலைதூக்கியது!

யோசனையில் இருந்தவனை, வீடு திரும்பிய மறுநாள், குணமடைந்து வந்ததற்காக, மித்ராவை வாழ்த்துவதாக வந்த டெலிபோன் கால் முடிவெடுக்க வைத்தது!

குழந்தைக் குரலில் வாழ்த்திவிட்டு, அப்பா பழகும் ஆன்ட்டிகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் ஒருவன்!

யார், யார் வீட்டுக்கு வருவார்கள்? யார் யாரை அப்பா வெளியே கூட்டிப் போவார்? அன்றைக்கு, அவளுக்கு அடிபட்ட போது கூட, அப்பா, அப்படி எந்த ஆன்ட்டியுடனோ தான் போயிருந்தாரா?

மகளின் ஓரிரு பதில்களிலேயே, இன்னோர் இணைப்பைக் காதில் வைத்த தந்தைக்கு விஷயம் புரிந்து போயிற்று!

பரபரப்பான செய்தி வேண்டும்! அது, மட்ட ரகமாக இருந்தால், ரொம்பவே நல்லது! இப்போது, அதற்கான வாய்ப்பு ஒன்று இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் இருக்கிறது!

அதைப் பெறுவதற்காக, இந்தச் சிறு குழந்தையைக் கூட விடுவதாக இல்லை!

ஆனால், அந்தக் குழிக்குள், மகளை இழுத்துவிட, அவன் தயாரில்லை! அப்புறம், அவள் வெளியே எங்கேயும் போகவே முடியாது!

இந்தப் பிரச்சினை முடிந்து, மறக்கும் வரையேனும்...

"நீ இப்படி, இந்தச் சூழ்நிலையில், போட்டது போட்டபடி விட்டுவிட்டுக் கிளம்பினால் எப்படி, டீப்?" என்று தொடங்கி, அவனது இந்தியப் பயணத்தைத் தடுக்க, எலிசா எவ்வளவோ முயன்றாள்.

எப்போதுமே, அவன் இந்தியாவுக்குக் கிளம்புகையில், அவள் இப்படி ஏதாவது சொல்வது வழக்கம் தான்! ஓரிரு முறை, பயணமே நின்றிருக்கிறது!

ஆனால், இந்தத் தடவை, அவன் பிடிவாதமாக இருந்தான்.

"ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது! ஸ்டுடியோவில் அடிப்படை வேலைகள் தானே நடக்கின்றன?" என்று அவள் வார்த்தைகளையே திருப்பிப் படித்து, மேலேயும் சொன்னான் அவன்! "இதற்கு, நான் இங்கே இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே!"


அவள் முகம் போன போக்கைப் பார்த்து மனம் இளகி, "எனக்கு என் தாயாரை ஒருதரம் பார்த்தாக வேண்டும், எலிசா! கதைச் சுருக்கத்தைக் காஸ்டிங் டைரக்டரிடம் கொடுத்து விட்டேன். அவர் நடிகர் நடிகைகள் எல்லாம் பேசி முடித்து, அதன் பிறகு, பட்ஜெட் திட்டமிடும் போது, நான் வந்தால் போதுமே!" என்றான் அவன், விளக்கமாக.

"ஆனால், எழுத வேண்டாமா?"

"எழுதுவதுதானே? அதை எங்கே இருந்தும் செய்ய முடியும்! முக்கியமாக, மித்ராவுக்கு முழுமையான இடமாற்றம் வேண்டும் என்பது, என் கருத்து மட்டுமல்ல, டாக்டருடைய அறிவுரையும் கூட அதுதான், எலிசா!"

அவனது பிடிவாத குணமும், எலிசா அறிந்ததே! அவனே, ஈரேட்டாக இருக்கும் வரைதான் மாற்றங்கள் எல்லாம்! அந்த நிலை தாண்டி விட்டால், மாற்ற முடியாது!

புரிந்து விடவே, "சரி சரி போய்வா!" என்று அவனை ஒத்துப் பேசி, "ஆனால், ரொம்ப நாள் அங்கே தங்கி விடாதே! ஹாலிவுட், ஒரு மாதிரி உலகம். யாருக்காகவும் காத்திருக்காது" என்ற ஓர் எச்சரிக்கையோடு, அவனை அனுப்பி வைத்தாள்!

அவளிடம் சொல்லாத இன்னொன்றும் இருந்தது!

மகளைக் குளிப்பாட்டி, உடை அணிவித்து, சேர்ந்து விளையாடி, தூங்குமுன் கதை சொல்லித் தூங்க வைத்து... இப்படிக் கூடவே இருந்து பலவும் செய்யவும், "நான்சி, மிச்சியுடைய அப்பாக்கள் போல, நீயும் எனக்கு நிஜ அப்பா ஆகி விட்டாயாப்பா?" என்று சிறுமி கேட்டது. அவனுக்குப் பொட்டில் அறைந்தது போல ஆகிவிட்டது.

சமாளித்துக் கொண்டு, "எப்போதுமே, அப்பா, உன் நிஜ அப்பாதான் செல்லம்!" என்ற போது, குழந்தை ஒப்புக்கொள்ளவில்லை!

"ஊகூம்! இதெல்லாம் செய்தால் தான், நிஜ அப்பாவாம்! சும்மா, எப்பவாவது பார்த்து, கிஸ் பண்ணிட்டுப் போகிற அப்பா, சினிமா அப்பா... நீ சினிமா எடுக்கிறதாலே, நீயும் அதே மாதிரி, சினிமா அப்பா ஆகி விட்டேன்னு மிச்சி சொன்னான். ஆனால் இப்போ நீயும் நிஜ அப்பா ஆகிவிட்டே! இல்லையப்பா?" என்றாள் மகள்.

இதற்கெல்லாம் கூட, மகளை ஏங்க விட்டுவிட்டு, அவன் என்ன வாழ்க்கை வாழ்ந்தான்?

இங்கேயே இருந்தால், எல்லாம் பழைய மாதிரியே தான் ஆகிவிடும்! கொஞ்ச காலமேனும், இதிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்! அதற்கு, இங்கிருந்து வெளியேறியாக வேண்டும்!

விமானத்தில் ஏறி, மகளுக்கு பெல்ட்டை மாட்டிவிட்டு, தன் சீட் பெல்ட்டையும் மாட்டி, விமானமும் கிளம்பிய பிறகே, அப்பாடி என்று, சீட்டில் வசதியாகச் சாய்ந்தான் அவன்!

என்னமோ, மேலே விழுந்து பிடுங்கும் ஓநாய்களிடம் இருந்து தப்பிய உணர்வு!

மகளைக் காப்பாற்றி விட்டதாகவும்!

அன்றைக்கு, அண்ணன் வெளிநாட்டுக்குக் கிளம்பி விடுவான். முன் மதியத்தில் கிளம்பும் ரயிலில் மும்பைக்குப் போய், அங்கே அவனது தலைமை அலுவலகத்தில் விவரம் தெரிவித்துவிட்டு, அப்படியே அமெரிக்காவுக்கு விமானம் ஏறி விடுவான்!

பூபாலன் ரயிலில் ஏறும் வரையில், ரயில் புறப்படும் வரையிலும் கூட, அவனோடு கூடவே சந்தனா இருக்கலாம்!

அதன் பிறகு?

பத்து நாட்களுக்கு முன்பாக, அவளுடைய தந்தை, அந்த ஃப்ளாட்டில், அவளோடு இருந்தார். பிறகு...


ஒரே இடத்தில் வேலை. தந்தை தலைமை ஆசிரியர். மகள் ஐந்தாம் வகுப்புக்குப் பாடம் எடுத்தாள். தலைமை ஆசிரியர் மகள் என்பதால், அவளுக்குப் பல சலுகைகளை மற்றவர்கள் அளித்த போதும், முடிந்த வரையில், அவள் அதைப் பயன்படுத்துவது இல்லை! இந்தக் குணமே, அவளுக்கு நிறைய நலம் விரும்பிகளைச் சம்பாதித்துத் தந்தது எனலாம்.

கலகலப்பான தந்தை, சிதம்பரநாதன்! சில தலைமை ஆசிரியர்களைப் போலப் பள்ளியைத் தன் தலை மேலேயே தாங்க முடியாமல் சுமப்பவர் போல முகத்தை உம்மென்று வைத்திராமல், சாதாரணமாகவே இருப்பார், சும்மாவே, சிரித்த முகம் அவருக்கு!

அப்பா, மகள், இருவரும் சேர்ந்தே வேலைக்குப் போனார்கள். கடை கண்ணிக்குப் போனார்கள்.

அதிலும், அவளுடைய அண்ணன் பூபாலன் வெளியூர்க் கல்லூரியில் இடம் கிடைத்துப் படிக்கப் போன பிறகு, தந்தை தான் அவளுக்கு எல்லாம் என்கிற மாதிரி! அப்போதெல்லாம், அந்தத் தந்தையும் இல்லாமல் தவிக்கும் ஒரு காலம் விரைவிலேயே வரப் போகிறது என்று, அவள் கனவில் கூட நினைத்ததில்லை!
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ.-2

Post by udhayam72 Fri May 10, 2013 3:24 pm

கலகலவென்று எத்தனை கதைகள் சொல்வார்!

வில்லி பாரதத்தையும், கம்ப ராமாயணத்தையும் முழுமையாகப் படித்து மனதிலும் இருத்திக் கொண்டவர், அவர். மக்களுக்கும் கற்றுக் கொடுத்திருந்தார்.

நாட்டின் இதிகாசங்களை அறியும் போது தான், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு புரியும் என்பார்! ஆயிரம் நீதி நூல்களைப் படித்தும் மனதில் பதியாத நியாய அநியாயப் பாகுபாடுகள், இவற்றைப் படித்தால் தெரியும் என்பது அவரது கருத்து!

அதனாலேயே, மக்கள் இருவருக்குமே, அவற்றைக் கதைகளாகவே கற்றுக் கொடுத்தும் இருந்தார்!

திடுமென, "மகாபாரதப் போர் நிகழாமல் எப்படித் தடுக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்று கிருஷ்ணரிடம், சகாதேவன் சொன்னான்?" என்று கேட்பார்!

"'பாராளக் கர்ணன், இகல் பார்த்தனை முதலில் கொன்று அணங்கின் காரார் குழல் களைந்து, காலில் தளை பூட்டி, நேராக நின்னையும் நான் பிடித்துக் கட்டுவனேல், வாராமல் தடுக்கலாம் மாபாரதம்' என்றான்" என்று பாடலைச் சொல்லி, விளக்கமாக 'கர்ணனுக்குப் பட்டம் கட்டி, அவனை எப்போது இகழ்ந்து பேசும் அர்ஜுனனை முதலில் கொன்று விட்டு, விரித்துப் போட்ட கூந்தலை காட்டி சபதத்தை நினைவூட்டும் திரௌபதியைச் சிறையிட்டுக் கடைசியாக எல்லோரையும் ஆட்டி வைக்கும் உன்னையும், நான் கட்டி விட்டால், பாரதப் போர் மூளாமல் தடுக்க முடியும்' என்று சகாதேவன் சொன்னதையும் சேர்த்து, அவரிடம் தெளிவாகக் கூற வேண்டும்!

தடுமாறினால், திரும்பச் சொல்லிக் கொடுப்பார்! ஆனால், பத்துக்கு மூன்றைச் சரியாகச் சொல்லி விட்டால் கூடச் சிதம்பரம் பூரித்துப் போவார்!

தந்தையைப் பார்த்து, விரும்பி ஆசிரியை ஆன சந்தனா, மாணவ மணிகளின் பல்வேறு பிழைகளைப் பொறுத்துப் போகப் பயின்றதே, அவரைப் பார்த்துதான், அவரது போதனையால்தான்!


"முப்பத்தைந்து சதவீதம் மதிப்பெண் எடுத்தாலே, அடுத்த வகுப்புக்குப் போக முடியும் என்று ஏன் வைத்திருக்கிறார்கள்? நூறு மதிப்பெண் எடுக்க, முயற்சி செய்ய வேண்டியதுதான். ஆனால், கவனக் குறைவு, மறதி என்று, மனிதனிடம் எத்தனையோ குறைபாடுகள்! ஆயினும், முப்பத்தைந்து சதம் எடுத்து விட்டாலே, மனிதனாக முன்னேறுவதற்கு, அவன் முயற்சி எடுக்கிறான் என்று நிரூபிக்கப்பட்டு விடுவதாகக் கொள்ளப் படுகிறது! எல்லோருக்கும் ஒரே மாதிரிதானே கற்றுத் தருகிறோம். ஏன் எல்லோரும் நூறு மார்க் வாங்கவில்லை என்று எரிச்சல் படக் கூடாது! ஒவ்வொருவர் ஒவ்வொன்றை, உள்ளே வாங்கிக் கொள்ளும் திறனில் வேறுபாடு உண்டு. கணக்குப் பாடத்தில் முட்டை வாங்குகிறவன், தொழிலில் பெரிய பணக்கணக்கை, மனதிலேயே பிரமாதமாகப் போட்டு, முன்னேறப் பார்த்திருக்கிறேன். யார், யாரிடம் என்ன திறன் இருக்கிறதோ, அதைப் பார்த்துப் பாராட்ட, ரசிக்க, நீ முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்..."


இப்படி நிறைய, அவளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்!

அதனாலேயே, வகுப்பில் ஒரு வம்புக்கார வால், "திருவள்ளுவர் தப்பாக எழுதிவிட்டால், எந்த ரப்பரை வைத்து, எப்படி அழித்திருப்பார் மிஸ்?" என்று சந்தேகம் கேட்ட பிறகு, வகுப்புப் பிள்ளைகளுடன் சந்தனாவும் சேர்ந்து நகைத்திருக்கிறாள்.

அது மட்டுமல்ல! வீட்டுக்கு வந்து, தந்தையிடமும் வகுப்பில் நடந்ததைச் சொல்ல, இருவருமே ரசித்துச் சிரித்தார்கள்!

"என்ன கற்பனையெல்லாம் வருகிறது பாரேன்!" என்று வியந்து, இன்னொரு முறை சிரித்துவிட்டு, அவரிடமே இன்னோர் ஐயமும் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

"சந்தனா என்று, இது என்ன பெயர், அப்பா? இப்படிப் பெயர், நான் கேட்டதே இல்லை!"

பழைய நிகழ்ச்சியை மனதில் நினைத்து, சன்னமான முறுவலுடன், "நீ, பெண்ணாகப் பிறந்ததும், உனக்கு ஊர்த் தெய்வமான, முப்பிடாரி அம்மனின் பெயரை வைக்க வேண்டும் என்று, உன் தாத்தா ஆசை! ஆனால், அரைத்த சந்தனத்தில் செய்த சிலை போல, அழகாகக் கிடந்தாயா, உன் அம்மாவுக்கு அந்தப் பெயர் தான் தோன்றி விட்டது!" என்றார் அவர். தொடர்ந்து, "அம்மா சொன்னது, எல்லோருக்குமே பொருத்தமாகத் தோன்றிவிட, அதுவே உன் பெயராகிப் போயிற்று! அதுவும், உன் தாத்தா, உன்னைச் சந்தனச் சாந்துக் கட்டி என்று நீளமாகத்தான் கொஞ்சுவார்!"

தொடர்ந்து, நரை மீசையுடன் திடகாத்திரமான ஒருவர், அவளைத் தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொஞ்சிய சந்தோஷமான நினைவுகள், அவளுக்குத் தோன்றும்!

அதுதான் அப்பா!

துன்பங்களைப் பேசுவதும் இல்லை. கற்பனை செய்ய விடுவதும் இல்லை!

இல்லையென்றால், மனைவியை இழந்து, இந்த பதினெட்டு ஆண்டுகளாகத் தாயுமாகி, இரு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய சிரமம் பற்றி, எவ்வளவோ சொல்லிப் பிள்ளைகளின் மனதில் சுமையேற்றி இருக்கலாம்!

ஆனால், அதெல்லாமே, அவர் ரசித்துச் சொன்ன தினுசில், வேடிக்கை விளையாட்டாக மாறிவிடும்!

இட்லி மிளகாய்ப் பொடியை வாங்கி வந்து, தெரியாமல் ஒரே மாதிரி இருந்த சர்க்கரை டப்பாவில் போட்டு வைத்து விட்டு, அதையும் காலை வேளையில் அவசரத்தில் கவனியாமல், இட்லிக்கு அதே பொடியைப் போட்டு எண்ணெய் ஊற்றி வைத்தது, இனிப்பும் காரமுமாகப் பிள்ளைகளுக்கு அந்தச் சுவை பிடித்துப் போகவே, ஒரு பெரிய ஜோக்காக மாறியது!

அவ்வப்போது, சுவையில் ஏதாவது கூடக் குறைய இருந்தாலும், 'அதுபோலத்தான்' என்று கிண்டலாகப் பேசும் அளவுக்கு!

பதினைந்து வயதில் தொடங்கி, மெல்ல மெல்லத் தந்தைக்கு உதவியாகத் தொடங்கி, சந்தனா சமையல் செய்கையில் ஏதாவது தப்புத் தவறுகள் நேர்ந்தாலும், இதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டே மூவரும் உண்டு விடுவார்கள்!

அந்த மகிழ்ச்சி, இனி என்றேனும் கிடைக்குமா?



"என்னடாம்மா? அப்பா நினைவா?" என்று கனிவாகக் கேட்டபடி, அண்ணன் அருகில் வந்து அமர்ந்த போதுதான், சந்தனாவுக்குச் சுய உணர்வு வந்தது.

பாவம்! அவள் இப்படிக் கலங்கினால், அவனால் எப்படி நிம்மதியாக வெளிநாடு செல்ல முடியும்?

"சந்தோஷமான நினைவுதாண்ணா! சர்க்கரையும் இட்லிப் பொடியும் சேர்த்து உண்போமே, அதை நினைத்தேன்! இப்படி, அப்பாவைப் பற்றிய எல்லாமே மகிழ்ச்சிகரமான நினைவுகள் தானே? உனக்குச் சாப்பாடு, தனித் தனியாக, மதியத்துக்கு, இரவுக்கு என்று கட்டி வைத்து விட்டேன். நீ சாமான்கள் எல்லாம் எடுத்து வைத்தாயிற்றா?" என்று, அண்ணனுக்கு முகம் காட்டாமல் எழுந்தாள் அவள்.

தந்தையின் வளர்ப்புதானே அவனும்!


கூடவே எழுந்தபடி, "இந்த ஒப்பந்தம் மட்டும் இல்லையென்றால், நான் பேசாமல் இங்கேயே இருந்து விடுவேன்!" என்றான் அவன் வருத்தத்துடன்! "இடையில் விட்டால், நாம் சில லட்சங்கள் கட்ட நேரும். ஆனாலும், இருப்பதை வைத்து, எப்படியோ கட்டி விடலாமே என்று தான் எனக்கும் தோன்றுகிறது! எதற்கும், நிறுவனத்தில் ஒரு தரம் கேட்டுப் பார்க்கப் போகிறேன், சாந்தும்மா. ஏனென்றால்..." என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை அவசரமாக இடை மறித்தாள் தங்கை.

"அந்த மாதிரி மட்டும், எதுவும் கூடவே கூடாது, அண்ணா! உன் எதிர்காலம் நல்லபடியாக அமைந்துவிட்டது என்று, அப்பா எவ்வளவு மகிழ்ச்சியோடு, உன்னை அனுப்பினார்! அதைக் கெடுப்பதா? நினைத்துக் கூடப் பாராதே! அப்படி நீ போகாமல் இருந்தால், அப்பாவின் ஆசையை, நான் தான் கெடுத்து விட்டதாக, அதுதான் எனக்கு அதிக வேதனையாக, குற்ற உணர்வாக இருக்கும்! என்ன? எண்ணி மூன்றே நாட்கள்! அப்புறம், விடுதிக்குப் போய் விட்டால், அங்கே புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், அவர்களோடு பழகுவது என்று மனம் மற்றதில் ஈடுபடத் தொடங்கி விடும். அப்புறம் பார்த்தால், வேலை. இப்படி, என் நேரம் சரியாகப் போய் விடும்! ஓய்ந்த நேரத்தில் நினைக்கக் கூட, நமக்குத் தான் அப்பாவைப் பற்றி எத்தனையோ சந்தோஷமான நினைவுகள் இருக்கின்றனவே! நீ சும்மா தேவையற்று என்னைப் பற்றிக் கவலைப்படாதே!" என்று, உள்ளே இல்லாத தெம்பை, வெளியே காட்டிப் பேசி, அண்ணனின் மனதை அமைதிப்படுத்தினாள்!

"இருந்தாலும், சின்னப் பெண் நீ. உன்னைத் தனியாக விட்டுப் போக, மனமே வரமாட்டேன் என்கிறதேம்மா! முன்பாவது, அப்பா இருந்தார்!" என்றவனின் கண்களில் குபுக்கெனக் கண்ணீர் பொங்கியது!

சந்தனாவுக்கும் வேதனைதான்!

ஆனால் அதைக் காட்டினால், காரியம் கெட்டுப் போகும் என்று உணர்ந்து, "ஐயோ! என்னண்ணா இது? ஆண் பிள்ளை அழலாமா? கடல் கடந்து போகிறோமே என்று பார்க்கிறாயா? இந்தக் காலத்தில், அதெல்லாம் ஒரு தூரமே அல்ல! உலகமே ஒரு 'குளொபல் வில்லேஜ்' ஆகிவிட்டது என்று நாம் பேசிக் கொண்டிருந்தது மறந்து விட்டதா? நீ வெளிநாட்டுக்குப் போகாவிட்டாலும், இங்கே சென்னையிலேயா இருக்க முடியும்? மும்பையில் தானே இருக்க வேண்டும்? அதற்கும், வெளிநாட்டுக்கும் ஒன்றும் பிரமாதமான வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! அதற்காக, வேலையையே விட்டு விட யோசிக்காதே! மும்பையும் 'சிலிக்கான் வாலி'யும் ஒன்றுதான் என்பேன். இந்தப் ப்ராஜக்டை நல்லபடியாக முடித்து விட்டு வந்தால், சென்னைக்குப் பதவி உயர்வுடன் கூடிய மாற்றம் தருவதாக, உன் அலுவலகத்தில் சொல்லியிருந்தார்களே, நினைவில்லை? அதனால், கண்ணைத் துடை... இல்லை, முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு புறப்படு! வா! அப்பா படத்துக்கு முன்னே நின்று சொல்லிக் கொள்ளும் போது, இப்படி அழுத முகமாகவா, நிற்பது? ம்! போய் முகத்தைக் கழுவு!" என்று பூபாலனை விரட்டினாள்!

பூபாலனுக்கும், ஒருவாறு தங்கை சொல்வது சரியென்று தோன்றிவிட, மெல்லத் தலையாட்டிவிட்டு, முகம் கழுவச் சென்றான்.

ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியெல்லாம், சந்தனாவுக்கு ஒரே அறிவுரை தான். கதவை எப்போதும் உட்புறம் பூட்டிக்கொண்டு இருக்க வேண்டும். பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருக்கும் கிரில் கதவைப் பூட்டுப் போட்டுப் பூட்ட வேண்டும்! எப்பொழுதும்! வேலைக்காரம்மா உள்ளே இருக்கும் போதும், பூட்டுதான்! வேலை முடிந்து, அந்தம்மா போகிறபோது மீண்டும் திறந்து விட்டுக் கொள்ளலாம்! இந்த விஷயத்தில் சோம்பல் படவே கூடாது!

அவன் திரும்பத் திரும்பச் சொன்ன விதத்தில், சந்தனாவுக்குப் போரடித்துப் போயிற்று! சிரிப்புக் கூட வந்தது எனலாம்! ஆனால், அண்ணன் சொல்வது, அவள் மீதுள்ள அக்கறையால் அல்லவா? எனவே, அவ்வப்போது கண்கள் பளிச்சிட்ட போதும், பதில் பேசாமல் சாதுவாய்க் கேட்டுக் கொண்டாள்!

ரயில் நிலையத்திலும், பூபாலன் இன்னொரு தரம் வீட்டுப் பாதுகாப்புப் பற்றித் தொடங்கவும், குறுக்கிட்டு, "அண்ணா, திடீரென்று நான் ரொம்ப மக்காகி விட்டேனோ என்று சந்தேகமாக இருக்கிறது!" என்றாள், அப்பாவி போல.


திகைப்புற்று, "ஏம்மா, அப்படி? எனக்கொன்றும் அப்படித் தோன்றவில்லையே! எப்போதும் போலப் பளிச்சென்று தானே, இருக்கிறாய்... ஏன், ஏதேனும் புரியவில்லையா? அப்படி எதுவும் இருந்தால், இப்போதே என்னிடம் கேட்டுவிடு!" என்று, அவளுக்கு மூத்த அண்ணனாய் உதவ முன் வந்தான் அவன்.

"ஆமாம் அண்ணா! இதற்கு விளக்கம் நீதான் சொல்லித் தர வேண்டும்!" என்று கவலையாகத் தொடங்கினாள் தங்கை. "நம் வீட்டில், இந்த மூன்று நாட்களும் எப்படி இருக்க வேண்டும் என்று, கிட்டத்தட்ட முப்பது தடவை சொல்லி விட்டாய்! இன்னமும் என் மண்டையில் அது ஏறிய மாதிரி, உனக்குத் தோன்றவில்லை போல இருக்கிறதே. அதுதான் சந்தேகம் வந்து விட்டது!" என்று சாதுவாகவே கேட்டுவிட்டுச் சட்டெனக் கண் சிமிட்டிக் குறும்பாகச் சிரிக்கவும், அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது!

"வாலு!" என்று அவள் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு, "நிஜமாகவே அத்தனை தடவையா சொன்னேன்?... ம்ம்ம்... இருக்கும், இருக்கும்! பத்திரிகையில், அடுத்த தெருவில் நடந்த திருட்டைப் பற்றிப் படித்ததில் இருந்து, எனக்கு அதே நினைவாகத்தான் இருக்கிறது! நீ எச்சரிக்கையோடு இருப்பாயல்லவா?" என்று கவலையுடன் கேட்டான் பூபாலன்.

"என்னண்ணா நீ, இந்த வீட்டில் நான் இருக்கப் போவது, மிஞ்சி மிஞ்சி மூன்றே நாட்கள் தானே? எதிர் ஃப்ளாட்டில் வேறு சுந்தரிக்கா குழந்தை பெற வந்ததில் இருந்து, உறவினர் வருவதும் போவதுமாக நடமாட்டம் நிறைய இருக்கிறது! பயமே படாதே!" என்றவள், அவன் மீண்டும் தொடங்கு முன் அவசரமாக "அண்ணா, அங்கே வேலை, வேலை என்று நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்து விடாதே! 'சுவரை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும்' என்பது போல, ஆரோக்கியத்துக்கு அப்புறம் தான், மற்றது எல்லாம்!" என்றாள் சந்தனா.

"நல்லவேளை, நினைவுபடுத்தினாய்...!" என்று பூபாலன் மறுபடித் தொடங்கினான். "பார் சந்தனா, அந்த வேலை பார்க்கும் மகளிர் விடுதியில் உணவு எல்லாமே நன்றாக இருக்கும் என்று தான் சொன்னார்கள்! ஆனால், எப்படியும், உன் சமையல் போலச் சுவையாக இருப்பது கடினம் தான்! அதற்காகச் சரியாகச் சாப்பிடாமல், உடம்பைக் கெடுத்துக் கொண்டு விடக் கூடாது! ஆனால், மற்ற பல இடங்களுக்கு, இந்த ஹாஸ்டல் உணவு பிரமாதம் என்று கேள்வி. அதைவிட முக்கியமாக, மிகவும் பாதுகாப்பான இடம்! அதனால் தான், கெஞ்சிக் கூத்தாடி, இதில் உனக்கு இடம் பிடித்தேன். சரியாக ஒன்றாம் தேதி மாலைக்குள் போய்விடு! இல்லாவிட்டால், கிடைத்த இடம், வேறு யாருக்காவது போய்விடும்! அங்கே இடம் பிடிக்கப் பெரிய போட்டி இருக்கிறது!"

அன்பும் அக்கறையுமாக, ஒருவருக்கொருவர் இப்படியே ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கையில் திடுமென ரயில் கிளம்பும் நேரம் வந்தது!

தன்னை மீறிக் கண்ணீரைச் சொரிந்த இருவரையும் பிரித்தவாறு, ரயில் கிளம்பிச் சென்றது!

இந்தப் பரந்த உலகில் யாருமே இல்லாதது போன்ற வெறுமையை உணர்ந்தபடி, தூரத்தில் புள்ளியாகி மறையும் ரயிலை வெறித்தவாறு, சந்தனா தனித்து நின்றாள்!

ரயில் கண்ணுக்கு மறைந்த பிறகும் கூட சந்தனாவுக்கு, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்லப் பிடிக்கவில்லை!

எங்கே செல்வது?

வீட்டை நினைக்கவே, மனம் கலங்கியது.

அவளது வெகு சிறு வயதில் மறைந்து விட்ட தாயின் நினைவு அவளை அதிகம் வருத்தியதில்லை!

ஆனால், தந்தை, அண்ணன் இருவருமே இல்லாமல், தன்னந் தனியே, அந்த வீட்டில், அவள் எப்படி இருப்பாள்?

புரிந்துதான், அவள் தங்குவதற்காக, வேலை பார்க்கும் மகளிர் விடுதிகளை அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல விடுதியில், பூபாலன் அவளுக்கு இடம் பிடித்துத் தந்திருக்கிறான்!


ஆனால், அந்த இடத்துக்குப் போவதற்கு, இன்னும் மூன்று நாட்கள் இருந்தன.

அந்த மூன்று நாட்கள், எப்படியோ சமாளித்து, அவள் இந்த வீட்டில் தான் இருந்தாக வேண்டும்!

இருபத்தியிரண்டு வயதில், இதைவிட, எவ்வளவோ மனோதிடம், தைரியம் இருக்க வேண்டும் என்று, தனக்குத் தானே எவ்வளவோ சொல்லிக் கொண்ட போதும் வீடு திரும்ப, அவளுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது!

எதிரே ரயில் நிலையக் கடிகாரம், மணி பனிரண்டைக் காட்டியது!

பள்ளியில், மதிய உணவு இடைவேளை நேரம்!

தந்தையின் அறையை ஒட்டியிருந்த வராந்தாப் பகுதியில் அமர்ந்து சாப்பாட்டுப் பாத்திரத்தைப் பிரிப்பது நினைவு வந்தது!

எளிய உணவுதான்! ஏதாவது கலந்த சாதம் அல்லது, இட்லி தோசை! அதுவே, அமிர்தமாகத் தோன்றும்!

அன்று கூட...

இல்லை, நினைக்கக் கூடாது! அன்றைய தினத்தை இயன்றவரை நினையாதிருப்பது நல்லது! நினனவு வந்துவிட்டால், அப்புறம் இந்தக் கனவுகளால் வேறு நஷ்டம்!

முயன்று, மனதை வேறுபுறம் திருப்பினாள் சந்தனா.

இன்னமும், அரைநாள் வகுப்புகள் இருந்தன...

'நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம், அம்மா! குறைந்தது, ஒரு மாதத்துக்கேனும் வேலை கொடுத்தாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு, உன் இடத்துக்கு, நாங்கள் யாரையும் நியமிக்கவில்லை! நாங்களே, ஒருவர் மாற்றி ஒருவர் உன் வகுப்புகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்! அதனால், உன்னால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக வந்து, வேலையைப் பார்! வேலையில் ஈடுபடுவது, உன் மனதுக்கும் நன்றாக இருக்கும் என்பதால்தான் சொல்லுகிறேன்' என்று முன்பு உதவித் தலைமை ஆசிரியையாக இருந்து, இப்போது தந்தைக்குப் பதிலாகத் தலைமை ஆசிரியை ஆகியிருக்கும் சரசுவதி ரங்கநாதன் ஏற்கனவே, சந்தனாவிடம் சொல்லியிருந்தார்!

எனவே, அவள் பள்ளிக்குப் போவது, யாருக்கும் பிரச்சினையாக இருக்கப் போவதில்லை! சொல்லப் போனால், அவளது பொறுப்பைப் பகிர்ந்து கொண்டு, அதிக வேலை செய்யும் மற்றவர்களுக்குப் பளு குறையும்!

அப்போது பள்ளிக்குப் போனால், ஒன்றிலிருந்து, மூன்று வரையிலான வகுப்புகளை எடுக்கலாம்!

அப்புறம், அங்கே மற்றவர்களோடு வேலை, மறுநாள் பாடம் பற்றிப் பேசிவிட்டு, சற்றுத் தாமதமாகவே வீடு திரும்பலாம்!

எப்படியும், குறைந்தது நாலு மணி நேரம், அவள் வீட்டுக்குப் போகத் தேவையிராது!

முன்புறமாகச் சென்று, வரிசையில் நின்று, ஆட்டோ பிடித்துப் போவதை விட, கார் பார்க் வழியே பக்கவாட்டில் சென்றால், பள்ளிக்குச் சீக்கிரமாகப் போய்ச் சேரலாம்! அன்று எடுக்க வேண்டிய பாடம் பற்றித் தயார் பண்ணவும் சற்று அவகாசம் கிடைக்கும்!

அவசரமாகத் திரும்பிப் பக்கவாட்டு வழியில் வேகமாகச் சந்தனா நடக்கலானாள்.

கார்ப் பார்க்கின் முதல் மூலை திரும்புகையில், செல்லில் பேசியவாறே, கைப்பையை மூடியபடி, காரினுள் ஏறிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி!

அவளது பெயரின் மூலமான சந்தன வண்ணச் சேலை!


ஐம்பதைத் தாண்டியவளாகத் தோன்றிய அந்தப் பெண்மணி, கார் கதவைச் சாத்தவும் கார் வேகமெடுத்து அங்கிருந்து வெளியேறியது!

டிரைவர் காரை ஏற்கனவே ஸ்டார்ட் செய்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவாறே முன்னேறிய சந்தனா திடுக்கிட்டு நின்றாள்!

அந்தப் பெண்மணி, காரில் ஏறிய இடத்தில் ஒரு பர்ஸ் கிடந்தது!

ஏதோ கொஞ்சம் சில்லரையை மட்டும் வைக்கிற மாதிரிச் சின்னது அல்ல, அது! நிறைய ரூபாய் நோட்டுகளை ரகம் வாரியாக வைக்கக் கூடிய தினுசு.

பணம் நிறைய இருந்து, தப்பான யார் கையிலாவது மாட்டிக் கொண்டு விடப் போகிறதே என்று எண்ணிய சந்தனா, வேகமாகச் சென்று அந்தப் பர்சை எடுத்தாள்.

பர்சோடு வேகமாகச் சாலையை அடைந்து, இரு புறமும் ஆராய்ந்தாள். அந்தக் கார் சென்ற இடமே தெரியவில்லை!

அருகில் வந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி, பள்ளி முகவரியைக் கொடுத்துவிட்டு, பர்சை நிதானமாகத் திறந்து பார்த்தாள்.

நல்ல வேளையாக, அவள் அஞ்சியது போலப் பர்சில் அதிகப் பணம் இருக்கவில்லை!

பர்சைத் தவறவிட்ட பெண்மணி யார் என்று அறிய வசதியாக, அந்தப் பெண்மணியின் விசிட்டிங் கார்டு பையினுள் இருந்தது!

அதன்படி, அடையாறுப் பக்கமாக, அந்தம்மாவின் வீடு இருந்தது! பள்ளி தாண்டிப் பாதி தூரம், மறுபுறம் செல்ல வேண்டும்!

செல்லலாம்! அந்த வீட்டைத் தேடிச் சென்று, நேரிலேயே கொடுத்துவிட்டு, அதன் பிறகே வீடு திரும்பலாம்! இன்னும் கொஞ்ச நேரம் வெளியில் கழியக் கூடும்! என்றாலும் கூட அதைச் செய்ய, சந்தனாவுக்குத் தயக்கமாக இருந்தது.

அந்த அம்மாள் கட்டியிருந்த சேலை, ஏறிய கார், கைப்பை, பையைப் பற்றியிருந்த கையில் அணிந்திருந்த கடிகாரம், மோதிரம் அனைத்தையும் எண்ணிப் பார்க்கையில், அந்தப் பெண்மணி, சற்று அதிகப்படிப் பணம் படைத்தவள் என்பது, நன்றாகவே தெரிந்தது!

பணக்காரர்களைக் கண்டால், சந்தனா சத்தமின்றி ஒதுங்கி விடுவாள்! படிக்கிற காலத்திலேயே!

ஒரிரு முறை கவனித்து விட்டு, அவளுடைய தந்தையே, அவளிடம் கேட்டிருக்கிறார்!

"பாவம்மா, அந்தக் கோகிலா! ஆசையாக உன்னிடம் பேசவந்தால், காது கேளாத மாதிரி, ஒதுங்கி ஓடிவிட்டாயே! அவள் என்ன, சிங்கமா? புலியா?" என்றவருக்கு, "அவள் பணக்காரிப்பா!" என்று சந்தனா கூறியிருக்கிறாள்.

"அந்தக் கோகிலாவுடைய தலையாட்டிக் கூட்டத்தைக் கவனித்திருக்கிறீர்களாப்பா? அவள் எழுந்தால், எல்லோரும் எழ வேண்டும். அவள் பொட்டு வைக்காமல் வந்தால், இவர்கள் வைத்திருந்த பொட்டைக் கூட, எடுத்து எறிந்துவிட வேண்டும். மணியடித்தால் கூட, வகுப்பறைக்குள் அவள் தான் முதலில் செல்ல வேண்டும்! மற்ற எல்லோரும், அவளுக்கு அப்புறம்தான்! ஏன், ஓர் ஆசிரியருக்கு வணக்கம் சொல்வதானாலும் கூட, அவளுக்குப் பிறகுதான் மற்றவர்கள் சொல்லலாம்! இன்றைக்கு, அவளாக என்னைத் தேடி வந்தாலும், விரைவிலேயே, மற்றவர்களைப் போல, நானும் அவளுக்கு வாலை ஆட்ட வேண்டும் என்று கோகிலா எதிர்பார்ப்பாள் தானே? அதெல்லாம், என்னால் முடியாதுப்பா!" என்று அவள் உறுதியோடு கூறிய போது தந்தை அவளை மாற்றச் சற்றும் முயற்சிக்கவில்லை!


ஏனெனில், அவருக்கும் கிட்டத்தட்ட அதே குணம் தான்!

பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து கொண்டு, பணக்காரர்களை ஒதுக்க முடியாது என்றாலும், நெருப்பில் குளிர் காய்கிற மாதிரிதான், அவர் செல்வந்தர்களிடம் பழகுவார்!

வெளிப்படையாக விலகுவதும் கிடையாது, ஒட்டுவதும் இல்லை! ஆனால், எல்லோருக்கும் பிரியமானவர்!

எப்பேர்ப்பட்ட மனிதர்! அவரைப் போய்... என்று பெருமூச்சு விட்ட சந்தனா, சட்டெனத் தலையை உலுக்கி, மீண்டும் கையில் இருந்த பர்சைப் பார்த்தாள்.


விசிட்டிங் கார்டில் உள்ள டெலிபோன் எண்ணுக்கு போன் செய்து, பர்சை வாங்கிப் போக, யாரையேனும் அனுப்பச் சொல்லலாமா என்று யோசித்தபடி பர்சை மேலும் ஆராய்ந்த போது, விசிட்டிங் கார்டோடு, ஒரு சிறுவனின் படம், அந்தச் சிறுவனோடு கூடிய ஒரு குடும்பப் படம். சிறுவன், இளமைப் பருவத்துள் காலடி எடுத்து வைத்த போது எடுத்த படம், ஒரு கிரெடிட் கார்டு, கூடவே மருத்துவமனையின் அடையாள அட்டை ஒன்றும் இருப்பதைப் பார்த்தாள் அவள்!

சந்தனாவின் பள்ளிக்கு அடுத்த தெருவில் இருந்த மருத்துவமனைதான்! 'சுகம்' என்று பெயர் வெளியே இருந்து பார்க்க, நன்றாகத்தான் இருக்கும்.

அட்டையைத் திருப்பிப் பார்த்தால், அன்று மாலை ஆறு மணிக்கு, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரோடு சந்திப்பு என்று குறிக்கப்பட்டிருந்தது!

பர்சை, அதற்கு உரியவரிடம் சேர்ப்பிக்கும் வழி, இப்போது சந்தனாவுக்குப் புரிந்து போயிற்று!

பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியையிடம் 'ரிப்போர்ட்' செய்த போது, சந்தனாவை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார் அவர்!

தானே ஆசிரியர்கள் அறைக்கு அவளை அழைத்துச் சென்று, "உங்கள் அதிகப்படி வேலைப் பளுவைக் குறைப்பதற்காகத் தன் துயரத்தை ஒதுக்கி வைத்துவிட்டுச் சந்தனா சீக்கிரமாகவே வேலைக்கு திரும்பியிருக்கிறாள்! பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனைவி இறந்து ஒரே வாரத்தில், சிதம்பரம் சார் வேலைக்குத் திரும்பியது, எனக்கு இப்போது நினைவு வருகிறது! நாங்கள் எல்லோரும் ஒரே செட்! உன் அம்மா சாருவுக்காக அவர் உள்ளூர உருகியது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதை வெளிக் காட்டாமல், சிதம்பரம் சார் அவ்வளவு வேலை செய்வார்! கடமை உணர்ச்சி மிகுந்த அந்தத் தந்தைக்கு ஏற்ற மகள்!" என்று பாராட்டவும், சந்தனாவுக்குச் சற்று வெட்கமாக இருந்தது!

அவள் ஒன்றும் வெறும் கடமை உணர்ச்சி மட்டுமே காரணமாய், அதற்காக மட்டுமாகப் பள்ளிக்கு வரவில்லையே! அந்த வகையில், இந்தப் புகழ்ச்சிக்கு அவள் ஏற்றவளும் அல்ல!

ஈடு செய்வதற்கு, முழுக் கவனத்துடன் வேலை செய்ய வேண்டும் என்று மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டு, அதன்படியே வேலையையும் தொடங்கினாள் அவள்.

பள்ளி நேரம் முடிந்ததும், இந்தப் பத்து நாட்களாக அவளது வகுப்புகளில் நடந்த பாடம், அடுத்துச் செய்ய வேண்டியது பற்றி உடனொத்த ஆசிரியர்களோடு பேசி விட்டு, அவர்கள் கிளம்பிய பிறகே, சந்தனா பள்ளி அலுவல் அறைக்குச் சென்று, அங்கே ஒரு பெரிய கவரை வாங்கி வந்து, ரயில் நிலையத்தில் கண்டெடுத்த பர்சை அதனுள் வைத்து ஒட்டினாள்.

முகவரியைக் குறித்து வைத்துக் கொண்டு, பர்ஸ் உர்மையாளரின் விசிட்டிங் கார்டைப் பார்சலின் மீது ஒட்டி எடுத்துக் கொண்டு கிளம்பி, 'சுகம்' மருத்துவமனைக்குச் சென்றாள்.

அங்கே, அந்தப் பர்ஸ்காரப் பெண்மணி அறிமுகம் ஆனவராக இருந்தாள்!

"மாதாமாதம் பரிசோதனைக்காக வருகிறவர்கள் ஆயிற்றே! அத்தோடு, பெரிய டாக்டருக்கு வேண்டியவர்கள் வேறு! இன்றைக்கு ஆறு மணிக்கு அந்தம்மா வருவார்கள். வந்ததும் தன்னிடம் கூட்டி வரவேண்டும் என்று, பெரிய டாக்டர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார்! அப்போது உங்கள் பார்சலைக் கட்டாயமாக, மேடத்திடம் கொடுத்து விடுகிறேன்!" என்று உறுதி கூறிய வரவேற்புப் பெண், சிறு தயக்கத்துடன், "நீங்கள், மிஸ்?..." என்று வினவினாள்.

ஒரு கணம் குழப்பத்துடன் நோக்கிய சந்தனாவுக்கு உடனே அந்தப் பெண்ணின் தயக்கம் புரிந்தது.

லேசாக முறுவலித்து, தன் கைப்பையைத் திறந்து, தன் ஆசிரியப் பதவிக்கான அடையாள அட்டையை எடுத்துக் காட்டினாள்.

"தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள், மேடம்! அடையாளம் தெரியாமல், யாரிடமும், எதையும் வாங்கி வைக்கக் கூடாது என்று எங்களுக்குக் கட்டளை இருக்கிறது! வெடிகுண்டு மிரட்டல் கலாச்சாரம் பெருகிவிட்டதல்லவா? அதனால்தான்..." என்றபடி, சந்தனாவின் பெயரையும், வேலையையும் குறித்துக் கொண்டாள் அவள்.


"பயங்கரவாதம் அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் இந்த எச்சரிக்கை அவசியம் தானே?" என்று, அவளோடு ஒட்டிப் பேசிவிட்டு, "மறக்காமல் கொடுத்து விடுங்கள். நான் அப்புறமாக அவர்களிடம் போன் பண்ணிப் பேசிக் கொள்கிறேன்!" என்று கூறிவிட்டுக் கிளம்பினாள் சந்தனா!

எப்படியும், பர்ஸ் கிடைத்துவிட்டதா என்று, அந்தப் பெண்மணியிடம் உறுதிப் படுத்திக் கொள்ளும் கடமை அவளுக்கு இருக்கிறதுதானே? என்னதான் மெதுவாகப் பார்சல் பண்ணி, மெதுவாக நடந்து வந்து கொடுத்த போதும், மணி ஐந்து கூட ஆக மறுத்தது!

இப்போதும், மறுபுறம் திரும்பி நடந்தால், பத்தே நிமிஷத்தில் வீடு வந்துவிடும்!

அவ்வளவு பக்கம் தான்!

ஆனால்...

இன்னொரு கிளை வழியே சென்று, தெரு மூலையில் இருந்த பூங்காவுக்குப் போய், உள்ளே இருந்த இரும்பு பெஞ்ச் ஒன்றில், அலுப்புடன் அமர்ந்தாள்!

நல்ல வேளையாகச் சிறுவர், சிறுமியர் சிலர் பூங்காவுக்கு வந்திருந்தனர்!

அவர்கள் விளையாடுவதைப் பார்த்திருப்பதில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்லபடியாகவே, கழிந்து விட, லேசாக இருள் பரவத் தொடங்கியதும், எழுந்து வீட்டை நோக்கிச் சந்தனா நடக்கத் தொடங்கினாள்.

இரவில், ஒரு வேளை பசித்தால்... என்று, தெருமூலைக் கடையில் சின்னதாகப் பாதி ரொட்டியை வாங்கிக் கொண்டு மெதுவாகவே நடந்து வந்தாள்.

படியேறிப் போய், யந்திரமாய் கதவைத் திறந்து, கதவருகே இருந்த ஸ்விட்சைக் கையால் தடவிப் போட்டவள், கண் முன்னே தென்பட்ட காட்சியில் விதிர்வித்து, மூளைமரத்துச் சிலையாகிப் போனாள்!

சந்தனாவின் உள்ளே புழுவாய் அரித்துக் கொண்டிருந்த வலி மட்டும் இல்லை என்றால், வீட்டில் ஒரு வேறுபாட்டை, அவள் முதலிலேயே கண்டிருப்பாள்.

அவர்களது வீட்டின் முன் கதவுக்கு மூன்றடி முன்னதாகத் தொடங்கி, வழி முழுவதும், இரும்பு கிரில் போடப் பட்டிருந்தது. கதவும் கிரில் தான். அந்தக் கதவின் பூட்டு, சாவியால் தொட்டதுமே முன்பே திறந்து கொண்டதே!

பூட்டவில்லைபோல என்று அரைகுறையாக எண்ணினாளே தவிர, அவளோ, அண்ணனோ அப்படிக் கவனம் அற்றவர்கள் அல்ல என்பது, தோன்றவில்லையே!


யாரோ... யாரோ என்ன, திருடர்கள், அந்தப் பூட்டை உடைத்து, அடுத்து, கதவிலேயே பதித்திருந்த தாளையும் எப்படியோ திறந்து, உள்ளே வந்திருக்கிறார்கள்! வந்து, பூபாலனும் அவளுமாக ஒதுக்கிக் கட்டி வைத்திருந்த எல்லாவற்றையும் பிரித்து, கலைத்து வீசி எறிந்து வீட்டைக் களேபரமாக்கிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்!

எதையெல்லாம் திருடிப் போனார்களோ?

கண்டபடி குப்பையாய் வீசி இறைத்திருக்கும் இந்தக் குவியலில் என்ன காணாமல் போயிருக்கிறது என்று எப்படித் தெரியும்?

அதற்கு முன், அந்தத் திருடர்கள் போய் விட்டார்களா? அல்லது இங்கேயே ஒளிந்து...

நெஞ்சு படபடக்க, சந்தனாவின் பார்வை அங்குமிங்கும் பாய, அவள் அச்சத்துடன் பின்னடைகையில், பின்புறம் இருந்து அழைப்பு மணி ஓசை கேட்கவும், உடல் நடுங்கப் பற்றி அலறி விட்டாள்!

அவளது அலறல் சத்தம் கேட்டு, எதிர் வீட்டில் இருந்து, அந்த வீட்டு அம்மாளும், மகனும் ஓடி வந்தார்கள்!

"சந்தனா, என்னடியம்மா? என்ன? எதற்குக்... கத்..." என்றபடி ஓடி வந்த அம்மாள், வீடு கிடந்த நிலையைப் பார்த்ததும், "ஐயோ!" என்று தானும் அலறினாள்!

"என்னடி இது? நாங்கள் சுந்தரியையும் பிள்ளையையும் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிக் கொண்டு, கொஞ்சம் முன்னால் தான் வந்தோம்! அப்போ... அம்மாடியோவ்! நம்ம ஃப்ளாட்டிலே கூடத் திருட்டா? எத்தனை பேர் வந்தார்களோ? நல்லகாலம், நீ தனியாக இருந்து, அவர்களிடம் மாட்டியிருந்தால், கடவுளே! உன்னைக் கொன்று கூட..." என்று அவள் ஏதேதோ சொல்ல, "அப்பா, அப்பா, இங்கே சந்தனக்கா வீட்டில் திருட்டு!" என்று மகன் கத்த, "என்னது? என்னது? திருடன் உள்ளே இல்லையே, முதலில் அதைப் பார்! சுந்தரிம்மா, உள்ளே பூட்டிக்கொள்!" என்று உரக்கக் கூவியபடி, எதிர் வீட்டுக்காரரும் வந்து சேர்ந்தார்.

"என்னென்ன போச்சோ தெரியலியே!"

"இரண்டு பக்க வீட்டிலும் ஆள் இல்லாதது தெரிந்துதான், திருடன் வந்திருக்கிறான்! எத்தனை பேரோ தெரியலியே!"

"நல்ல வேளை! எதிரே நம் வீட்டை உடைக்கவில்லை! பூட்டு உடைந்திருந்ததா?"

"எதெது திருட்டுப் போயிருக்கிறது என்று பார்த்தாயா?"

"அச்சோ! எதையும் தொடக்கூடாது! போலீசுக்குச் சொல்லி விட்டாயா?... டேய், நீ போய் செகரட்டரியைக் கூட்டி வா!"

இப்படி ஆளாளுக்கு ஏதேதோ பேசினார்களே தவிர, சந்தனாவின் நடுக்கம் அதிகமாவதை யாருமே கவனிக்கவில்லை!

காற்றில் ஆடும் சருகைப்போல, அவளது உடம்பு தூக்கிப் போடுகையில், "நீ முதலில் உட்காரம்மா!" என்று சோஃபாவில் கிடந்த துணிகளை ஒதுக்கி, யாரோ அவளது தோளைப் பற்றி உட்கார வைத்தார்கள்!

அப்பாடி என்று கண் மூடித் தலை சாய்த்து அமர்ந்தாள் சந்தனா.

"ஐயையோ, எதையும் தொடக்..." என்று பதறிய எதிர் வீட்டு அம்மாளின் பேச்சில் குறுக்கிட்டு, "அவளுக்கு அதிர்ச்சி! உடம்பு நடுங்குவதைப் பாருங்கள்! உடனே, குடிப்பதற்கு ஏதாவது சூடாகக் கொடுக்க வேண்டும்! நிறையச் சர்க்கரை போட்டு, டீ... இங்கே சமையல் அறை எங்கே இருக்கிறது?" என்று கேட்டபடி, சந்தனாவின் சில்லிட்டிருந்த கையைப் பற்றி, வேகமாகச் சூடு வரத் தேய்த்து விட்டாள், அவளை உட்கார வைத்த பெண்மணி.



"நான் கூடப் பார்த்திருக்கிறேன் அம்மா! இனிப்பாக டீ குடித்தால், அதிர்ச்சி குறைந்து, தெம்பு வரும் என்று, வகுப்பில் முதல் உதவியில் சொல்லிக் கொடுத்தார்கள்! ஆன்ட்டி இங்கே கிச்சன், அது!" என்று காட்டினான் சுதாகர், எதிர் வீட்டுப் பையன்!

"ஏய், பொறுடா! ஏதேனும் பெரிய பொருள் போயிருந்தால், ரேகையைக் கெடுத்து விட்டீர்கள் என்று போலீஸ் தகராறு பண்ணுவார்கள்! கனகம், நீ போய் நம் வீட்டில் டீ போட்டு எடுத்து வா!" என்று மனைவியை அனுப்பினார் எதிர் வீட்டுக்காரர். "அங்கே பேத்தியைக் கொஞ்ச உட்கார்ந்து விடாமல், சீக்கிரமாக வா! சுதா, நீயும் கூடப் போய், அம்மாவை விரட்டிச் சீக்கிரம் கொண்டு வரச் சொல்லு!" என்று மனைவியையும், பின்னோடு மகனையும் அனுப்பி வைத்தார்.


அதன் பிறகே, சந்தனாவின் அருகில் அமர்ந்து, அவளது கைகளைச் சூடு வரத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்த பெண்மணியைச் சரிவரக் கவனித்து, "நீங்கள் யார் என்று தெரியவி
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty Re: இனி எல்லாமே நீயல்லவோ.

Post by udhayam72 Fri May 10, 2013 3:26 pm

சுந்தரியுடைய பிள்ளையைப் பார்ப்பதற்காக, அவருடைய சம்பந்தி வீட்டார் வந்து விட்டால், அவர்களைக் கவனிக்கவே, அவருக்கு நேரம் சரியாக இருக்கும்!

அவர்களை விட்டு, எனக்காக வந்து நில் என்று அழைப்பது தப்பு!

அத்தோடு, சம்பந்தி வீட்டார் முன்னிலையில், அடிக்கடி, போலீசார் வந்து போவது நன்றாக இராது என்றும் எண்ணுகிறார்!

"அத்தோடு நீயும், உடனே ஹாஸ்டலுக்குப் போகப் போகிறாய்! போலீஸ், அது இது என்றால், குடி வருகிறவர்களுக்கு வெறுத்துப் போகும்! ஒன்றும் போகவில்லை என்றால், எதற்கு வீணாக? பேசாமல் வீட்டை ஒதுக்கி விட்டுப் படுத்துத் தூங்கி, நன்றாக ஓய்வெடு, வரட்டுமா? சுதா, கப்புகளை எடுத்துக் கொண்டு வா!" என்று கிளம்பினார் அவர்.

சந்தனாவின் விழிகள் அச்சத்தால் அகன்றன.

படுத்துத் தூங்குவதா?

இந்த வீட்டிலா?

அண்ணன் சொன்ன அடுத்த தெருத் திருட்டு நினைவு வர, அவள் முகம் வெற்றுத் தாளாய் வெளுத்தது!

அங்கே, தனித்திருந்த பெண்ணைக் கொன்றே விட்டார்கள்!

பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அந்தத் திருடர்கள், மறுபடியும் வரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

இப்போதே கூட, யாரேனும், எங்கேனும் ஒளிந்திருக்கிறார்களோ, என்னவோ, என்று எண்ணும்போதே, சந்தனாவின் நெஞ்சு படபடத்தது!

அச்சத்துடன் அவளது பார்வை சுழலுவதைக் கவனித்து மீண்டும் அருகமர்ந்து, அவளது கையைப் பற்றி வருடி, "இங்கே, உன்னோடு யாரும் இல்லையாம்மா?" என்று மீனாட்சி வினவினாள்.

"இ... இல்லை..." என்ற சின்னவளின் முகம் கசங்கியது. "அப்பா... அப்பா இறந்து, அதற்கு வந்துவிட்டு, அண்ணன் இன்று தான்..." என்று தொடங்கி கண்ணீரிடையே விவரம் சொன்னாள்.

"மூன்று நாட்கள் தானே, சமாளித்து விடலாம் என்று நினைத்தேன், ஆன்ட்டி! ஆனால் இப்போது... பயம்ம்...மாக..."

வாக்கியத்தை முடிக்க முடியவில்லை அவளால்!

ஆறுதலாக அவளைத் தட்டிக் கொடுத்து மீனாட்சி அம்மாள் ஒரு யோசனை சொன்னாள். "பாரம்மா, சின்னப் பெண் நீ! இங்கே, நீ தனியே இருப்பது, அதுவும் இன்றைய நிலையில், சற்றும் சரியல்ல! ஓர் இரண்டு நிமிஷம் உட்கார்ந்திரு! இதோ வந்து விடுகிறேன்!" என்று எழுந்து எதிர் ஃப்ளாட்டுக்குச் சென்றாள்.

அவளைக் கண்டதும் வந்த வீட்டுக்காரக் கனகத்திடம், "இன்று ஒரு நாள், சந்தனா உங்கள் வீட்டில் தங்க வசதிப்படுமா?" என்று வினவினாள்!

"இல்லையே!'" என்று கையைப் பிசைந்தாள் அந்தப் பெண்மணி. "சுந்தரி... என் மகள் வீட்டில், மாப்பிள்ளை, அவர் அம்மா, அப்பா, என்று குடும்பமே வருகிறார்கள்! இரண்டு நாள் இருந்து, புண்ணியாகவாசனம் எல்லாம் முடித்துக் கொண்டு போவார்கள்! அவர்கள் வசதியைப் பார்க்க வேண்டும்!..."

"நிச்சயமாய்!" என்றாள் மீனாட்சி அம்மாள்! "ஆனால், அந்தச் சின்னப் பெண்ணைத் தனியாக விட முடியாது! அதனால்... அவளை, என் வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன்..." என்றவள், எதிர் வீட்டம்மாவின் முகம் போன போக்கைக் கவனித்து, "காலம் இருக்கிற நிலையில், யாரையும் நம்பி விட முடியாதுதான்! உங்கள் பையனையோ, கணவரையோ விசாரித்துத் திருப்தியானதும், காரிலேயே திருப்பி அனுப்பி விடுகிறேன்! என் கார்டு தருகிறேன். 'சுகம்' மருத்துவமனையில், பெரிய அளவில் எனக்குப் பங்கு இருக்கிறது! அங்கே கூட விசாரிக்கலாம்! அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்று கூடத் தெரியாமல் இருக்கும் எத்தனையோ ஃப்ளாட்வாசிகள் போல இல்லாமல், சந்தனாவிடம் அக்கறையாக இருக்கிறீர்கள்! அதனால் தான் உங்களிடம் கேட்க வந்தேன்!"


மீனாட்சி மேலே பேசிய விதத்தில், கனகத்துக்கு ஒரு மாதிரி மனம் குளிர்ந்தது!

மருமகன் வீட்டார் வர இருக்கும் இந்த நேரத்தில் யாரை அனுப்புவது என்று அவள் யோசிக்கையில், "என்னது?" என்று சுதாகர் அருகே வந்து, அன்னையின் கையில் இருந்த கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு, "அட, இங்கேதான் என் சினேகிதன் பரசு இருக்கிறான்! அவன் ஏழில்! நீங்கள் ஆறா? வாசலில் தொடங்கி, வரிசையாக அசோக மரம் இருக்குமே!" எனவும், கனகம் நிம்மதியோடு தலையாட்டினாள்.

"உங்களுக்கு வீண் தொல்லை. ஆனால், நன்றி ஆன்ட்டி! என்னாலும், இன்று, இங்கே தனியாக இருக்க முடியாதுதான்!" என்று எல்லையற்ற ஆறுதலோடு, சந்தனாவும் மீனாட்சியோடு கிளம்பி விட்டாள்.


மீனாட்சி அம்மாளின் வீட்டுக்குக் கிளம்பிய போது, அன்று ஒரு நாளை மட்டும் தான், சந்தனா மனதில் எண்ணியிருந்தாள்.

அன்றைக்கு அந்த அவர்களது ஃப்ளாட்டில் தங்குவது, தன்னால் முடியாது என்பது மட்டும் தான் அவள் மனதில் இருந்தது.

அதற்குச் சரியாக, மீனாட்சி அம்மாளும் அவளது வீட்டுக்கு அழைக்கவும், வேறு எதையும் யோசியாமலே, அவள் கிளம்பி விட்டாள்.

எதிர் வீட்டுப் பெண்மணியும், அதற்குச் சாதகமாகப் பேசினாள் என்பது நிம்மதியைத் தந்தது.

இல்லையென்றால், நல்லது நினைக்கும் ஒருத்தியை எதிர்த்துக் கொண்டு வந்தோமே என்று, அவளுக்கு உறுத்தியிருக்கும்.


ஆனால், அவளது ஒப்புதல், சந்தனாவுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரவே, புது இடத்துக்குப் போகிறோம் என்கிற உணர்வே இல்லாமல், காரிலேயே, அவளுக்குத் தூக்கம் வந்து விட்டது.

"அதிர்ச்சியின் பின் விளைவு!" என்று மீனாட்சி சொன்னது, லேசாகக் காதில் விழுந்தது. அப்புறமாக, அண்ணா நகரில் மீனாட்சி அம்மாளின் வீட்டு வாயிலில், அவள் எழுப்பியது தான் சந்தனாவுக்குத் தெரியும்.

அவ்வளவு ஆழ்ந்த தூக்கம்!

மீனாட்சி அம்மாளின் வற்புறுத்தலுக்காக இரண்டு தோசைகளை விழுங்கி விட்டுப் பழக்க தோஷத்தில் பல்லைத் துலக்கி, அவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் கிடந்த படுக்கையில் விழுந்தவள், மீண்டும் சில மணி நேரம், உலகை மறந்து உறங்கினாள்.

அதன் பிறகு... அந்தக் கனவு!

ஏதோ ஒரு பயணம்!

சந்தனாவும், அவளுடைய தந்தையும் சந்தோஷமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்! வண்ண வண்ணப் பூக்களுடன் கூடிய செடிக் கொடிகளும், மரங்களும் நிறைந்த மலையில், அவற்றை ரசித்தபடி, ஆனந்தமாக ஏறிப் போகிறார்கள்!

திடுமென பேய்மழையுடன் சூறைக்காற்று எங்கிருந்தோ வீசக் கண் மண் தெரியாமல் ஓடுகிறார்கள்! ஓடிக் கொண்டே பார்த்தால், அவள் மட்டுமாய்த் தனியே ஓடிக் கொண்டு இருக்கிறாள்! அவருக்கு என்னவோ ஆகிவிட்டது என்று தெரிகிறது!

அந்த இருட்டு, மழையில் பதறிக் கொண்டு, தந்தையைத் தேடுகிறாள்! திடுமென அவரது திகைத்த முகம் மட்டும் தூரத்தில் தெரிகிறது! ரத்தக் காயங்களுடன்!

ஓடி அவரை அடைகிற வேகத்தில் கீழே விழுந்து, உடல் நடுங்க எழுந்து அமர்ந்த சந்தனாவுக்குச் சற்று நேரம், சுற்றுச் சூழல் ஒன்றுமே புரியாத நிலை! கண்களைக் கசக்கி, கைகால்களை உதறி, தலையை உலுக்கி, ஒருவாறு தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபட்ட பிறகே, கனவு வேகத்தில் படுக்கையில் இருந்து, உருண்டு கீழே விழுந்திருப்பது அவளுக்குப் புரிந்தது!

இங்கே எப்படி வந்திருக்க முடியும் என்பதும்!

இது, அந்த நல்ல பெண்மணி மீனாட்சி அம்மாளின் வீடு!

திருட்டு நடந்த வீட்டில், சந்தனா தனித்திருக்க வேண்டாம் என்று, தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

அந்தப் பர்சைத் திருப்பிக் கொடுத்த ஒரே காரணத்தால்! நல்லது செய்தால், நல்லதே நடக்கும் என்று, தந்தை சொல்வது சரிதான்!

ஆனால், அந்தக் கனவு!

வாழ்நாள் முழுவதும், அது அவளைத் தொடருமா?

திருப்பித் திருப்பி, அதே கனவு என்று இல்லை!

முந்தியது, கடலில் ஒரு படகுப் பயணம்!

புயலில், ஒரு பனிப் பாறையில் படகு மோதிக் கவிழ்கிறது!
ஆனாலும், அதிலும், இதே போலத் தந்தையைத் தேடி அலைகிறாள்! கடைசியில் ரத்தம் வழியத் தந்தையின் திகைத்த முகம்.

அண்ணன் கூட இருந்தபோது, தந்தையின் பகுதியை மட்டும் விட்டுவிட்டு, அவனிடம் தன் கனவை விவரித்தாள்.

வேடிக்கையில் பிரியம் உள்ள அவன், "பனிப் பாறையா? டைட்டானிக் எத்தனை தடவை பார்த்தாய், அருமைத் தங்கையே? அதில் உள்ள காட்சி கனவாகவே வரத் தொடங்கி விட்டதே!" என்று சிரித்தான்.


கூடச் சேர்ந்து முறுவலித்துவிட்டு, சந்தனா சும்மா இருந்து விட்டாள்.

இது, தந்தையின் மறைவுடன் தொடர்பு உள்ள ஒன்று என்பது, அவளுக்கு நிச்சயம்! அதைச் சொல்லி, அவனையும் புண்படுத்துவானேன்?

ஆனால், இன்றையக் கனவில், சந்தனா சற்று அதிகமாகவே மிரண்டு போனாள். வாழ்க்கை முழுவதும், இந்தப் பயங்கரமான கனவுகள், அவளை வருத்தப் போகின்றனவா?

மெல்ல எழுந்து, படுக்கையில் அமரப் போனவள் தயங்கினாள்.

இத்தோடு, அப்படியே படுத்துத் தூங்கி, மறுபடியும் அந்தக் கனவு வந்து விட்டால்?

கனவில் தந்தையைப் பார்க்கையில், மகிழ்ச்சியாகத்தான் இருந்தது! அதுவும், அப்பா இறந்து விட்டதாக நினைத்தோமே இதோ இருக்கிறாரே என்று இரட்டிப்பு சந்தோஷம்!

ஆனால், அவரைக் காணாமல், அதுவும் பயங்கரமான சூழ்நிலையில் இங்கும் அங்குமாய், அவரைப் பதற்றத்துடன் தேடும் போது... இன்னொரு தரம் அதைத் தாங்க முடியாது!

இன்னமும், குளிர் காய்ச்சல் வந்தது போல, உள்ளே நடுங்கிக் கொண்டு தான் இருந்தது.

கொஞ்சம் நடந்து உடலில் சூடேறினால், இந்தப் படபடப்பும், பதற்றமும் குறையக் கூடும்! ஆனால், அடுத்தவர் வீட்டில், அதுவும் முதல் முதலாக வந்திருக்கையில், இரவில் தனியே அங்குமிங்கும் அலைவதும் தப்பு! யாரும் பார்த்தால் தப்பாக எண்ணத் தோன்றும்!

அதுவும், முதல் முதலாக அன்றுதான் சந்தித்த ஒருத்தியை, அந்த அம்மா நம்பி வீட்டுக்குக் கூட்டி வந்திருப்பதே அதிசயம் என்கையில்...

யோசித்துவிட்டு, விளக்கைப் போட்டவள், படுக்கையில் தலைப்புறமாக ஒரு சிறு முக்காலியின் மீது வைக்கப்பட்டிருந்த பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தோட்டத்துப் புறமாக இருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி நின்றாள்.

தோட்டத்திலிருந்து வந்த மிதமான குளிர் காற்று, முகத்தில் மோதிச் செல்கையில், உடலும் மனமும், மெல்ல இறுக்கம் தளர்வதை உணர்ந்தாள்.

இந்தப் பெரிய தோட்டத்தில் காலார நடந்தால், இன்னமும் நன்றாகத்தான் இருக்கும் என்று எண்ணியபடியே பார்த்தவளுக்கு, உள்ளூர ஒரு திகைப்பு உண்டாயிற்று!

அவள் இருந்த அறைக்கு, ஓர் அறை தள்ளி, இன்னோர் அறையில் இருந்தும், ஜன்னல் வழியே, விளக்கொளி, தோட்டத்தில் விழுந்து கொண்டிருந்தது!

ஒரு பெண் தலையின் நிழலும் கூட!

அது மீனாட்சி அம்மாளாக இருக்கும் என்று சந்தனாவால், ஊகிக்க முடிந்தது! ஆனால் இரவில் தூக்கமின்றித் தவிக்கும் அளவுக்கு அந்த அம்மாவுக்கு என்ன துன்பம்? மருத்துவமனைக்குக் கூடப் போயிருந்தாரே?

எந்தத் துன்பமும் இருக்கக் கூடாது கடவுளே என்று வேண்டிக் கொண்டு, கூடவே, வேறு கனவு எதுவும் வரக் கூடாது என்று தனக்காகவும் கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு, சந்தனா, விளக்கை அணைத்து விட்டுப் பிடிவாதமாகப் படுக்கப் போனாள்.

இன்னும் ஓரிரு மணி நேரமாவது, கட்டாயமாகத் தூங்கியாக வேண்டும்!


ஒழுங்கான உறக்கம் இல்லாவிட்டால், பள்ளியில் சரியானபடி பாடம் எடுக்க முடியாது! அத்தோடு, அங்கே வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலை வேறு இருக்கிறது!

சற்று அதிகாலையிலேயே எழுந்து, ஒட்டியிருந்த குளியலறையில் குளித்து, மீனாட்சி அம்மாளின் உந்துதலின் பேரில், முந்திய நாள் இரவு எடுத்து வந்திருந்த சல்வாரில் அவள் வெளியே வந்த போது, பணியாள் போலத் தோன்றிய ஒரு பெண் அவளை அழைத்துப் போக வந்திருந்தாள்.

"அம்மா கூட்டி வரச் சொன்னாங்க."

சாப்பாட்டு அறையில், வீட்டு எஜமானி காத்திருந்தாள்.


இரவு சரியாக தூங்காததின் அடையாளமாக அவளது கண்களைச் சுற்றிலும் கருவளையத்தைக் கண்ட சந்தனாவுக்கு, அதன் காரணம் தானோ என்று ஒரு சந்தேகம் திடுமெனத் தோன்றி வாட்டிடலாயிற்று!

என்னவோ இரக்க குணத்தினால், அவளை அழைத்து வந்து விட்ட போதும், அவளைப் பற்றி மீனாட்சி அம்மாளுக்கு என்ன தெரியும்? இந்தப் பெண் எப்படிப் பட்டவளோ, என்னவோ என்று, அதன் காரணமாக விழித்திருந்தாள் என்றால்?

ஆனால், சந்தனாவைக் கண்டதும் மீனாட்சி முகம் மலர்ந்த விதம், அந்தக் குன்றலைப் போக்கி, அவளுக்கு நிம்மதி அளித்தது.

"வாம்மா! வா, உட்கார். காலையில் உனக்கு என்ன சாப்பிட்டுப் பழக்கம்? காபியா? டீயா? பலகாரத்தோடா? அப்புறமா அல்லது..." என்று கேட்டுக் கொண்டே போனவளைப் புன்னகையோடு, இடைமறித்து, "எப்படி என்றாலும் ஒன்றுதான் ஆன்ட்டி! எப்படியும் பள்ளிக்குக் கிளம்புமுன், ஒரு காபி பழக்கம்! அவ்வளவுதான்! இப்போது வெறும் காபி மட்டும் தந்தீர்களானால், சீக்கிரமாக வீட்டுக்குப் போய், பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு, பள்ளிக்குப் போக நேரம் சரியாக இருக்கும்..." என்றவள், மீனாட்சி அம்மாளின் கண்கள் பளிச்சிடவும், சிறு திகைப்புடன் அவளை நோக்கினாள்.

"நீ அவசரப்படுவது சரிதான் என்று நினைத்தேன்! பள்ளிக்குத் தாமதமாகப் போனால் பெஞ்சில் ஏற்றிவிட மாட்டார்களா, என்ன?" என்று பெரியவள் முறுவலிக்கவும், சந்தனாவுக்குச் சிரிப்பு பீறிட்டது!

அவள் ஆசிரியை! அவளைப் போய்ப் பெஞ்சில்...

சிரித்துவிட்டு, "அப்பா அங்கே தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆன்ட்டி! கற்றுக் கொடுப்பவர்களே தாமதமாகப் போனால், பிள்ளைக்கு நேரம் தவறாமை எப்படி வரும் என்று இதில் ரொம்பக் கண்டிப்பு" என்ற பெண்ணின் முகம், தந்தையின் நினைவில், லேசாக வாடியது!
கவனியாதது போல, "முதலில் சாப்பிடு நேற்றுக்கூட இரவில் சரியாகச் சாப்பிடவில்லை! இப்போதும் பட்டினியாகப் போனால், பிள்ளைகளுக்குச் சரியாகக் கத்த எப்படி முடியும்? கார், அந்தப் பக்கம் போக வேண்டியிருக்கிறது! அப்படியே, உன்னைக் கொண்டு விடச் சொல்லுகிறேன். இப்போது நாம் சாப்பிடுவோம்!" என்ற மீனாட்சி, உட்புறமாகப் பார்த்து ஏதோ சைகை செய்யவும், உள்ளிருந்து வந்த பணிப்பெண், தட்டு வைத்துப் பரிமாறலானாள்.

இதற்கு மேல் மறுப்பது நன்றாயிராது. கூடவே, காரைக் கூடத் தனக்காக மட்டுமே தான் அனுப்புகிறாள் இந்த அன்பான பெண்மணி என்றும் தோன்றிய போதும், இன்னொரு காரணம் சொல்லும் போது, அதையும் தான் எப்படி மறுப்பது?

இரவு தூங்காதது பற்றிக் கேட்கலாமா என்று சந்தனா யோசிக்கும் போதே, "இரவில் நீ சரியாகத் தூங்கவில்லையேம்மா! புது இடம் என்பதாலா? அல்லது... அப்பா... அங்கே வீடு பற்றியா?" என்று மீனாட்சி வினவினாள்.

"எ... எல்லாம் சேர்ந்து என்று நினைக்கிறேன்..." என்ற பதிலுடன், ஒரு கணம் மௌனமாக இருந்தவள், உடனேயே, "நீங்களும் தூங்கவில்லையே, ஆன்ட்டி?... உடம்புக்கு ஒன்றுமில்லையே? டாக்டரிடம் வேறு போய் வந்திருக்கிறீர்கள்?" என்று மனதில் சிறு உறுத்தலோடு வினவினாள்.

உச்சுக் கொட்டிவிட்டு, "கொஞ்ச நாளாக சிறு படபடப்பு! அது, பெரிதாக ஒன்றும் இல்லை!" என்றாள் விட்டேற்றியாக.

ஆரோக்கியம் பற்றி மீனாட்சி காட்டிய அலட்சியத்தோடு, வீட்டு மனிதர்களாக அதுவரை யாரும் கண்ணில் படாததும் மேலும் மனதை உறுத்த, "வீட்டில் வேறு யார்... நீங்கள் த... தனியாகவா இருக்கிறீர்கள், ஆன்ட்டி?" என்று கவலையுடன் வினவினாள் சின்னவள்.



"தலைவிதி!" என்றாள் மீனாட்சி கசந்த குரலில், சுருக்கமாக.

"ஆன்ட்டி..."

சந்தனாவை நிமிர்ந்து பார்த்த மீனாட்சியின் முகத்தில் சிந்தனை தெரிந்தது!

"வாம்மா... ஹாலில் உட்கார்ந்து காபியைக் குடிப்போம்! அப்படியே, நானும் உன்னோடு கூட வருகிறேன்.. உனக்குத் துணையாக இல்லை! மருத்துவமனையில் சில கணக்குகள் பார்க்க வேண்டும்! அத்தோடு... ஒரு யோசனை! வாயேன் யோசிப்போம்!"

காரில் செல்லும் போதுதான், மீனாட்சி தன் யோசனையைச் சொன்னாள்.


சந்தனா தன்னந் தனியே அந்த வீட்டில் மூன்று தினங்களைக் கழிப்பதை விட, மீனாட்சியின் வீட்டிலேயே இருந்து விட்டால் என்ன?

ஒன்றாம் தேதி குடிவரும் ஆட்களுக்காக வீட்டை ஒதுக்கிக் கொடுப்பது ஒன்றுதானே, அந்த வீட்டில் செய்ய வேண்டிய வேலை? சந்தனாவின் துணிமணிகளை எடுக்கச் செல்லும் போது, இரண்டு ஆட்களைக் கூட்டிப் போய், அதைச் செய்து விடலாம்!

சந்தனா அந்த வீட்டில் தனியே இருக்க வேண்டாம் என்பதற்காகச் சொல்லுகிறாள்! ஆனால், ஒரு பிரியமாக இருக்கிறாள் என்பதற்காக அவள் தலையிலேயே சுமையாய் ஏறி உட்காரலாமா? அது தப்பு அல்லவா?

"ஆன்ட்டி, வேண்டாம். என்னைத் தூண்டாதீர்கள்! என் பொறுப்பை நான் தான் செய்ய வேண்டும்! உங்களிடம் தள்ள முடியாது! அத்தோடு, இந்த ஒரு நாள் நீங்கள் செய்ததே பெரிய உதவி! இதற்கு மேல், நான் உங்களைத் தொல்லை செய்வது தப்பு!" என்றாள் சந்தனா.

"தொல்லையே அல்லம்மா!" என்றாள் பெரியவள், "வீட்டில், எந்த வேலையையும் நான் செய்வது இல்லை! அதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வீட்டில் நான் தனியாக அல்லவா இருக்கிறேன்! நீயே கவலையாகக் கேட்டாயே, அப்படிக் கேட்க நாதியற்ற தனிமை! சந்தனா எனக்கு என்னவோ, உன்னைப் பார்த்ததுமே, முற்பிறவிப் பந்தம் போல மிகவும் பிடித்துப் போயிற்று! நீ, இங்கே சில நாட்கள் இருப்பாய் என்றால், சில நாட்கள் என்ன? எப்போதுமே இருந்தாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. எனவே உனக்காக என்று எண்ணாமல், எனக்காக, என் மகிழ்ச்சிக்காக, இங்கே வாயேன்!" என்றாள் வற்புறுத்தலாக!

"ஆன்ட்டி, நீங்கள் சொல்வதைக் கேட்டால், என்னவோ, உங்களுக்காக நான் தான் தியாகம் பண்ணுகிற மாதிரி, எனக்கே தோன்றிவிடும் போல இருக்கிறது! ஆனால், அது பொய் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்! அத்தோடு அண்ணா நகரில் இருந்து, எங்கள் பள்ளிக்கு வருவதும் ரொம்பக் கஷ்டம், ஆன்ட்டி! நேர் பஸ்சில் கூட, ஒரு மணி நேரத்துக்கு அதிகம் ஆகும்."

"பஸ்சில் போனால்தானே? தினமும், 'சுக'த்திலிருந்து எனக்குக் கணக்கு வழக்குகளும், அன்றாட நிலவரங்களும் வரும். அவைகளில் கையெழுத்திட்டுக் காலையில் அனுப்புவேன்! அதே காரில், நீ பள்ளிக்குப் போய் வாயேன்! முதலில், இன்றோடு சேர்ந்து இந்த மூன்று நாட்கள் நம் வீட்டிலேயே இரு! அதன் பிறகு மற்றதைப் பார்ப்போம்!"

மீனாட்சி அம்மாள் தனிமையின் கொடுமையில் மிகவும் நொந்து போயிருக்கிறாள் என்பது, சந்தனாவுக்குப் புரிந்தது!

பார்க்கப் போனால், சந்தனாவுக்கும், இப்போது கிட்டத்தட்ட அதே நிலைதான்! அக்கறை காட்ட யாருமற்ற தனிமை!

ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்! மீனாட்சி அம்மா, ஓர் இக்கட்டில் உதவியவளும் கூட! ஒரு மூன்று நாட்கள், அவளோடு கூட இருப்பதில் என்ன தப்பு?

இப்படித்தான் சந்தனா, மீனாட்சி அம்மாவின் வீட்டுக்கு வந்தது! மூன்று நாட்களுக்காக மட்டுமே என்று!

ஆனால், அந்த மூன்று நாட்களில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம், பெண்கள் விடுதியைப் பற்றிய நினைவையே, சந்தனாவின் மனதில் இருந்து அகற்றி விட்டது!

மும்பையில் இருந்து, பூபாலன் பள்ளி எண்ணுக்கு போன் செய்த போது, மீனாட்சி அம்மாவைப் பற்றிய எதையுமே, சந்தனா அவனிடம் சொல்லவில்லை!

திருட்டு, எதிர் வீட்டாரின் உதவ முடியாத நிலை பற்றியெல்லாம் சொன்னால், மற்றதை மறந்து, உடனேயே சென்னைக்கு வந்து நிற்பான்! அவனது எதிர்காலம், பாழாகிப் போகும்!

எனவே, எந்தவிதச் சந்தேகமும் தோன்றாதபடிக்கு, முன்பு திட்டமிட்டபடியே எல்லாம் நடப்பதுபோலத் தோன்றுமாறு, பேசிவிட்டு போனை வைத்தாள்.


அன்று பள்ளி முடிகிற நேரத்துக்கு, மீனாட்சியும் வந்து விட, இருவருமாகச் சந்தனாவின் வீட்டுக்குச் சென்றனர்.

வீட்டைப் பார்த்த பிறகு, தன் வீட்டுக்கு வருமாறு மீனாட்சி அவளை வற்புறுத்தத் தேவையே இருக்கவில்லை!

இங்கே, தனியே இருக்க முடியாது என்பது, சந்தனாவுக்கு, சர்வ நிச்சயமாகத் தெரிந்து போயிற்று!

அதே போல, மீனாட்சி அம்மாவைப் பிரிந்து, ஏதோ ஒரு புதிய இடத்தில் வசிப்பது முடியாது என்றும், அடுத்த மூன்று நாட்களில், அவளுக்குத் தெரிந்து போயிற்று!

அந்த அளவுக்கு, மீனாட்சி பிரியமாக இருந்தாள்!

பிரியம் என்றால், அன்பைக் கொட்டி அமுக்குவது போல அல்ல! சும்மா கேலியும், சிரிப்புமாகவே!

விருந்தோம்பல் என்கிற பெயரில், அளவு மீறித் திணிப்பது இல்லை!

அவள் நினைத்ததற்கு ஓர் இட்லியோ, ஒரு ஸ்லைஸ் ரொட்டியோ, சந்தனா குறைவாக உண்டாள் என்றால், "எனக்கும் ஒரு டிக்கெட் இலவசமாகத் தருவாய் அல்லவா?" என்று கேட்பாள்!

முதலில் புரியாமல், "எதற்கு டிக்கெட்?" என்று சந்தனா கேட்டதுண்டு!

பதிலாக, "அதுதானம்மா, நீ கலந்து கொள்கிற அழகிப் போட்டிக்கு!" என்பாள் சாதாரணமாக.

"நானா? அழகிப் போட்டியா?" என்று சந்தனா குழம்புகையில், "ஆமாம்மா! அதற்குத்தானே, ஒல்லியாக ஒடிந்து விழுகிற மாதிரி இருக்க வேண்டும்? அப்படி மெலிவதற்காகத்தானே, நீ இப்படிச் சாப்பாட்டைக் குறைக்கிறாய்?" என்று அப்பாவி பாவனையில் மீனாட்சி கண்ணை உருட்ட, சந்தனாவுக்குச் சிரிப்பு பீறிடும்!

முதல் தடவை இப்படிக் குழம்பிய போதும், அடுத்த முறை "தரலாம்! ஆனால் அப்புறம் உங்களுக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் ஆசை வந்துவிட்டால், எனக்குப் பரிசு எப்படிக் கிடைக்கும்? அதனால், தரவே மாட்டேன்!" என்று சந்தனா பதில் கொடுக்க, மீனாட்சி விழுந்து விழுந்து சிரிப்பாள்!

நேரமாகிவிட்டது என்று வேகமாகச் சென்றால், "பார்த்துப் போம்மா! எங்கள் அண்ணா நகரில், நிறையப் புதையல்கள் உண்டு. அங்கங்கே விழுந்து, அதையெல்லாம் நீ தட்டிக் கொண்டு போய்விட்டால் எப்படி?" என்பாள்.

"பரவாயில்லை! உங்களுக்கு மட்டும், புதையலில் கொஞ்சூண்டு பங்கு தருகிறேன்!" என்று சந்தனாவும் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போவாள்!

இந்தக் கேலி, சிரிப்புகளூடே, மீனாட்சியை உள்ளூர ஒரு சோகம் அரிப்பதைச் சந்தனா கண்டு பிடித்திருந்தாள்.

யாரும் கவனியாத போது, எங்கேயோ நிலைக்கும் பார்வை, ஒரு சின்ன வார்த்தையில் கண்ணில் தோன்றும் நிராசை...

காரணம் என்னவாக இருக்கும் என்று தெரிந்தால், இந்த வருத்தத்தை குறைக்க முயற்சி செய்யலாமே என்று தோன்றினாலும், அது பற்றிக் கேட்க, சந்தனாவுக்குத் தயக்கமாக இருந்தது! அதிகப்படி உரிமை எடுத்துக் கொண்டு மூக்கை நுழைப்பது போலத் தோன்றி விடக்கூடாதே என்ற பயம்!

அந்தரங்கங்களை, அவரவராகத்தான் சொல்ல வேண்டும்! தூண்டித் துருவி அதிகப்படுத்தி விடக் கூடாது என்கிற இன்னோர் அச்சமும் அவளுக்கு இருந்தது!

எனவே, எதையும் பாராதது போலக் காட்டிக் கொண்டு, பெரியவளைச் சிரிக்க வைப்பதில் முனைவாள் சின்னவள்!


மீனாட்சியும் முட்டாள் அல்ல! சந்தனாவின் முயற்சியைப் புரிந்து கொண்டு, தானும் முயன்று எதையாவது சொல்லி நகைக்க முயற்சிப்பாள். சற்று நேரத்தில் அது மெய்யான சிரிப்பாகவே மாறிவிடும்!

உடல்நிலையைப் பற்றி அதிக அக்கறையற்று மீனாட்சி அம்மாள் இருப்பதைக் கவனித்து, அவளது மாத்திரை, மருந்துகளைப் பற்றிக் காலை, இரவு வேளைகளில் நினைவூட்டுவதையும், சந்தனா வழக்கமாக்கிக் கொண்டாள்.

அந்த மூன்று தினங்களிலேயே, இப்படி ஒருவருக்கொருவர் காட்டிய அக்கறையும், கரிசனமும், இருவரையும் பிணைத்து விட, தன் வீட்டிலேயே தங்கி விடும்படி மீனாட்சி மீண்டும் கேட்ட போது, சில நிபந்தனைகளோடு, சந்தனாவும் விருப்பமாகவே சம்மதித்தாள்.


முதலாவதாகத் தன் முடிவின் காரணங்களை, அண்ணன் பூபாலனிடம் தெரிவித்தாள்.

தங்கையின் மன அமைதி, மகிழ்ச்சி, பதுகாப்பு முதலியவற்றை முக்கியமாகக் கருதிய பூபாலனும், தன் நண்பர்கள் மூலம் மீனாட்சி அம்மா பற்றி விசாரித்து விட்டு, அவளது முடிவை நல்லவிதமாகவே ஏற்றான்.

அடுத்து, தன் செலவுக்கான பணத்தை மீனாட்சி வாங்கிக் கொண்டே ஆகவேண்டும் என்பதில் சந்தனா பிடிவாதமாக இருந்தாள்.

"என்னம்மா, வீட்டில் பொதுவாகச் செய்வதுதானே? உன் ஒருத்திக்காக, அதிகமாக என்ன ஆகிவிடப் போகிறது?" என்று பெரியவள் ஆட்சேபித்த போது, "ஒட்டுண்ணியாக உறிஞ்சி வாழ என்னால் முடியாது ஆன்ட்டி! அங்கே, அண்ணன் பார்த்து வைத்திருக்கும் விடுதியில் உள்ள கட்டணம் நீங்களும் வாங்கிக் கொள்ள வேண்டும்!" என்றாள் உறுதியான குரலில்.

"இல்லாவிட்டால், நான் இங்கே இருக்க முடியாது, ஆன்ட்டி!" என்றாள் மென்மையாகவும்.

"சரிம்மா!" என்று விட்டுக் கொடுத்த போதும், "ஆனால் அந்த மாதிரி விடுதி எல்லாம் லாப நோக்குடன் நடத்தப்படுகின்றவை! உன்னிடம், நான் சம்பாதிக்க வேண்டுமா? குறைத்துக் கொடு!" என்றாள் மீனாட்சி.

சந்தனாவும் இறங்கி வந்து, விடுதிச் செலவில் எழுபத்தைந்து சதவீதம் கொடுப்பதாக முடித்தார்கள்!

அதே போல, அவளுக்காக காரை அனுப்புவதையும், சந்தனா ஒப்புக்கொள்ளவில்லை.

ஏனெனில், மீனாட்சியின் பார்வைக்கான காகிதங்கள், காரில் அனுப்பப்படுவது இல்லை என்று அதற்குள் அவள் கண்டுபிடித்திருந்தாள். ரகசியமான குறிப்புகள் கூரியர் மூலமும் மற்றவை, அந்தப் பகுதியில் இருந்து மருத்துவமனைப் பணிகுச் சென்று வரும் ஒருவரிடமும் அனுப்பப்பட்டன. திருப்பி அனுப்புவதும், அப்படித்தான்.

எனவே, பள்ளிக்குச் செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் வேன் ஒன்றில் ஏற்பாடு செய்து கொண்டாள்.

தடுக்க மாட்டாமல், "ஆனாலும், உனக்குக் கொஞ்சம் அதிகப்படியான சுதந்திர புத்திதான்! உன் அப்பா உன்னைப் பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டார்!" என்று மீனாட்சி குறைப்பட்ட போது, "இல்லாவிட்டால், இந்தக் காலத்தில் வாழவே முடியாது ஆன்ட்டி! நசுக்கி விடுவார்கள்! தைரியம், புருஷ லட்சணம் மட்டுமல்ல, இப்போது பெண்கள் லட்சணமும் கூடத்தான்!" என்று சந்தனா சிரிக்க, மற்றவளும் தன்னை மீறிப் புன்னகை செய்தாள்!

இரு பெண்களுக்கும், வயது வேற்றுமையை மீறிப் பல விஷயங்களில் மனம் ஒத்துப் போயிற்று!

பொது விஷயங்களில், உணவுச் சுவையில்... இலகுவாகப் பேசியபடி காலாற நடப்பதில்கூட!

'பெஞ்சில் ஏற்றுவது' என்று, மீனாட்சி கூறிய அப்போதிலிருந்தே, அவளுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்ற ஊகம், சந்தனாவுக்கு இருந்தது! அவளுடைய தந்தையும், மகளுக்குச் சிரிக்கக் கற்றுக் கொடுத்திருந்தார்!

எனவே, வீட்டில் அடிக்கடி சிரிப்புச் சத்தம் கேட்கலாயிற்று!


ஒரு நாள் பள்ளி வீட்டுப் பாட நோட்டுப் புத்தகத்தைத் திருத்திக் கொண்டிருந்த சந்தனா, திடுமென வாய்விட்டுச் சிரித்தாள்!

கேள்வியாக நோக்கிய மீனாட்சியிடம், "ஒன்றுமில்லை, ஆன்ட்டி! குறிக்கோளை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்று கேள்வி. இவன், முதலில் நாம் தாயாராக வேண்டும் என்று எழுதியிருக்கிறான்," என்று விளக்கவும் "தயார், தாயாராகிவிட்டதா?" என்று மூத்தவளும் சேர்ந்து நகைத்தாள்.

அதே போலச் சந்திரனில் பேசினால் கேட்காது. ஏன் என்று கேட்டால், பேசுவதற்கு அங்கே மனிதர்கள் இல்லாததுதான் காரணம் என்று பதில் சொன்ன புத்திசாலியைப் பற்றி, ஒருநாள் சந்தனா மீனாட்சியிடம் விவரித்தாள்.


"ஒலி பயணம் செய்யத் தேவையான காற்று இல்லாததால் தான் என்று சொல்லிக் கொடுத்தாலும், ஒத்துக் கொள்ளாமல் எப்படியும் பேசுவதற்கு மனிதர்கள் இருந்தால் தானே, அவர்கள் பேசுவது கேட்கும் என்று அதிலேயே நிற்கிறாள். ஆன்ட்டி! சொல்லிச் சொல்லிப் பார்த்து, அலுத்துப் போய், காற்று பற்றி எழுதினால், மதிப்பெண் கிடைக்கும் மற்றது எழுதினால் முட்டை கிடைக்கும் என்ற பிறகுதான், அவள் ஓரளவு வழிக்கு வந்தாள், ஆன்ட்டி! இத்தனைக்கும், கண்ணாடிக் கதவுக்கு அந்தப் பக்கம் நின்று, பேசிக் கூடக் காட்டிவிட்டேன். அப்படியும் சந்திரனில், கண்ணாடிக் கதவு கிடையாது மிஸ், என்று எனக்குக் கற்றுத் தருகிறாள், அந்த புத்திசாலி!" என்றாள் சந்தனா, சிரிப்புடனேயே.

இதுபோல, மீனாட்சியும் சொல்லுவாள்!

அவளுடைய தோழி ஒருத்தியைப் பெண் பார்க்க வந்தார்களாம்! "அப்போதெல்லாம், ரேடியோதான் சந்தனா. தோழி வீட்டில் புதிதாக ரேடியோ வாங்கியிருந்தார்கள்! சத்தமாக வைத்திருந்தார்கள்! விரும்பிக் கேட்டவை நிகழ்ச்சி! அப்போதே பழைய பாடல் ஒன்று, ரொம்பப் பிரிபலமானது! 'வாட்டசாட்டமான காட்டுப் பயல் வந்தானம்மா, இந்த வீட்டில் நுழைந்தானம்மா' என்று ரேடியோ பாடுகிறது. மாப்பிள்ளை வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார்! நாங்களெல்லாம் எப்படிச் சிரித்திருப்போம் என்று, நீயே கற்பனை செய்து பார்!"

சிரித்து விட்டு, "கற்பனை செய்யும் போதே, ஒரு சின்ன சந்தேகம், ஆன்ட்டி! பெண் பார்க்க வந்தது, தோழியையா? அன்றி, உங்களையா?" என்று சாதுவாய் விசாரித்தாள் சந்தனா.

"போக்கிரி, வாயைப் பார்! அங்கிள், அந்தக் காலத்து டாக்டர்! முழுக்கைச் சட்டையும், டையுமாகக் கம்பீரமாக இருப்பார்! அவரைப் போய்க் காட்டுப் பயல் என்கிறாயா? உன்னை..." என்று சந்தனாவின் காதைத் திருகுவது போலப் பாவனை செய்தாள், மீனாட்சி!

"ஐயோ!" என்று வலிப்பது போல், சின்னவள் நடிக்க, இருவருமே, சிரிப்பில் மூழ்கினர். இப்படிப் பழைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்கையில், ஒரு நாள், "முன்பு ஒரு விளம்பரம் வரும், சந்தனா, 'நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? பலவீனமாக இருக்கிறீர்களா?' என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டுவிட்டுக் கடைசியாக, இந்த டானிக்கைச் சாப்பிடுங்கள் என்று, விளம்பரம் முடியும்! விளம்பரங்களைக் கிண்டலடிப்பது, தீபுவுக்கு, மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு!..." என்று தொடங்கி, முதல் முறையாக மகனைப் பற்றி, மீனாட்சி அம்மா பேசினாள்!... "இந்த ஒவ்வொரு கேள்விக்கும், 'ஆமாம்... ஆமாம்.. அட ஆமாம்ப்பா' என்று சொல்லிக் கொண்டிருப்பான்! இன்று, ஒரு கேள்வியாக, 'நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறீர்களா?' என்று விளம்பரத்தில் கேட்க, இவனும் சற்றும் யோசியாமல், 'ஆமாம்ப்பா, ஆமாம்!" என்று சொல்லிவிட்டு, அதே சமயத்தில் அறைக்குள் தற்செயலாகச் சென்றுவிட்ட என்னைப் பார்த்து விழித்தான் பார்! இப்போதும், அந்த முகம் கண்ணிலேயே நிற்கிறது!" என்று நகைத்தாள் பெரியவள்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty Re: இனி எல்லாமே நீயல்லவோ.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 10, 2013 3:29 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty Re: இனி எல்லாமே நீயல்லவோ.

Post by udhayam72 Fri May 10, 2013 3:30 pm

கூடச் சேர்ந்து சிரித்துவிட்டு, "தீபு என்றால் உங்கள் மகனா ஆன்ட்டி?" என்று வினவினாள் சந்தனா.

கண்களில் மெல்லச் சிரிப்பு மறைய, "ஆமாம்! பிள்ளையே பிறக்காதோ என்றிருந்த சமய்ம் உண்டாகிப் பிறந்தான்! எங்கள் வாழ்வில் ஒளியேற்றப் பிறந்தவன் என்று, இந்தப் பெயர் வைத்தோம்! ஆனால், அவன் அயல் நாட்டுக்கு ஒளியேற்றப் போய்விட்டான்..." என்ற மீனாட்சி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிப் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

சொல்லக் கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பது போலும் என்று சந்தனாவுக்குத் தோன்றியது.

ஒரு நாள் பள்ளி வீட்டுப் பாட நோட்டுப் புத்தகத்தைத் திருத்திக் கொண்டிருந்த சந்தனா, திடுமென வாய்விட்டுச் சிரித்தாள்!

கேள்வியாக நோக்கிய மீனாட்சியிடம், "ஒன்றுமில்லை, ஆன்ட்டி! குறிக்கோளை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்று கேள்வி. இவன், முதலில் நாம் தாயாராக வேண்டும் என்று எழுதியிருக்கிறான்," என்று விளக்கவும் "தயார், தாயாராகிவிட்டதா?" என்று மூத்தவளும் சேர்ந்து நகைத்தாள்.

அதே போலச் சந்திரனில் பேசினால் கேட்காது. ஏன் என்று கேட்டால், பேசுவதற்கு அங்கே மனிதர்கள் இல்லாததுதான் காரணம் என்று பதில் சொன்ன புத்திசாலியைப் பற்றி, ஒருநாள் சந்தனா மீனாட்சியிடம் விவரித்தாள்.


"ஒலி பயணம் செய்யத் தேவையான காற்று இல்லாததால் தான் என்று சொல்லிக் கொடுத்தாலும், ஒத்துக் கொள்ளாமல் எப்படியும் பேசுவதற்கு மனிதர்கள் இருந்தால் தானே, அவர்கள் பேசுவது கேட்கும் என்று அதிலேயே நிற்கிறாள். ஆன்ட்டி! சொல்லிச் சொல்லிப் பார்த்து, அலுத்துப் போய், காற்று பற்றி எழுதினால், மதிப்பெண் கிடைக்கும் மற்றது எழுதினால் முட்டை கிடைக்கும் என்ற பிறகுதான், அவள் ஓரளவு வழிக்கு வந்தாள், ஆன்ட்டி! இத்தனைக்கும், கண்ணாடிக் கதவுக்கு அந்தப் பக்கம் நின்று, பேசிக் கூடக் காட்டிவிட்டேன். அப்படியும் சந்திரனில், கண்ணாடிக் கதவு கிடையாது மிஸ், என்று எனக்குக் கற்றுத் தருகிறாள், அந்த புத்திசாலி!" என்றாள் சந்தனா, சிரிப்புடனேயே.

இதுபோல, மீனாட்சியும் சொல்லுவாள்!

அவளுடைய தோழி ஒருத்தியைப் பெண் பார்க்க வந்தார்களாம்! "அப்போதெல்லாம், ரேடியோதான் சந்தனா. தோழி வீட்டில் புதிதாக ரேடியோ வாங்கியிருந்தார்கள்! சத்தமாக வைத்திருந்தார்கள்! விரும்பிக் கேட்டவை நிகழ்ச்சி! அப்போதே பழைய பாடல் ஒன்று, ரொம்பப் பிரிபலமானது! 'வாட்டசாட்டமான காட்டுப் பயல் வந்தானம்மா, இந்த வீட்டில் நுழைந்தானம்மா' என்று ரேடியோ பாடுகிறது. மாப்பிள்ளை வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார்! நாங்களெல்லாம் எப்படிச் சிரித்திருப்போம் என்று, நீயே கற்பனை செய்து பார்!"

சிரித்து விட்டு, "கற்பனை செய்யும் போதே, ஒரு சின்ன சந்தேகம், ஆன்ட்டி! பெண் பார்க்க வந்தது, தோழியையா? அன்றி, உங்களையா?" என்று சாதுவாய் விசாரித்தாள் சந்தனா.

"போக்கிரி, வாயைப் பார்! அங்கிள், அந்தக் காலத்து டாக்டர்! முழுக்கைச் சட்டையும், டையுமாகக் கம்பீரமாக இருப்பார்! அவரைப் போய்க் காட்டுப் பயல் என்கிறாயா? உன்னை..." என்று சந்தனாவின் காதைத் திருகுவது போலப் பாவனை செய்தாள், மீனாட்சி!

"ஐயோ!" என்று வலிப்பது போல், சின்னவள் நடிக்க, இருவருமே, சிரிப்பில் மூழ்கினர். இப்படிப் பழைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்கையில், ஒரு நாள், "முன்பு ஒரு விளம்பரம் வரும், சந்தனா, 'நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? பலவீனமாக இருக்கிறீர்களா?' என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டுவிட்டுக் கடைசியாக, இந்த டானிக்கைச் சாப்பிடுங்கள் என்று, விளம்பரம் முடியும்! விளம்பரங்களைக் கிண்டலடிப்பது, தீபுவுக்கு, மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு!..." என்று தொடங்கி, முதல் முறையாக மகனைப் பற்றி, மீனாட்சி அம்மா பேசினாள்!... "இந்த ஒவ்வொரு கேள்விக்கும், 'ஆமாம்... ஆமாம்.. அட ஆமாம்ப்பா' என்று சொல்லிக் கொண்டிருப்பான்! இன்று, ஒரு கேள்வியாக, 'நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறீர்களா?' என்று விளம்பரத்தில் கேட்க, இவனும் சற்றும் யோசியாமல், 'ஆமாம்ப்பா, ஆமாம்!" என்று சொல்லிவிட்டு, அதே சமயத்தில் அறைக்குள் தற்செயலாகச் சென்றுவிட்ட என்னைப் பார்த்து விழித்தான் பார்! இப்போதும், அந்த முகம் கண்ணிலேயே நிற்கிறது!" என்று நகைத்தாள் பெரியவள்.

கூடச் சேர்ந்து சிரித்துவிட்டு, "தீபு என்றால் உங்கள் மகனா ஆன்ட்டி?" என்று வினவினாள் சந்தனா.

கண்களில் மெல்லச் சிரிப்பு மறைய, "ஆமாம்! பிள்ளையே பிறக்காதோ என்றிருந்த சமய்ம் உண்டாகிப் பிறந்தான்! எங்கள் வாழ்வில் ஒளியேற்றப் பிறந்தவன் என்று, இந்தப் பெயர் வைத்தோம்! ஆனால், அவன் அயல் நாட்டுக்கு ஒளியேற்றப் போய்விட்டான்..." என்ற மீனாட்சி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிப் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

சொல்லக் கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பது போலும் என்று சந்தனாவுக்குத் தோன்றியது.

இப்போது ஒரு நெகிழ்வில் வாயை விட்டுவிட்டு, அப்புறம் ஏன் சொன்னோம் என்று வருந்துவது, அன்பில் விரிசல் விழ வைத்துவிடும்! அப்படி விரிசல் விழுந்து, கிட்டத்தட்ட தாய் போல எண்ணத் தொடங்கியிருந்த, இந்தப் பிரியமான பெண்மணியைப் பிரிய நேருமானால்?

சந்தனாவால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை!

அத்தோடு, அவரவர் அந்தரங்கங்கள் அவரவருக்கு! இவ்வளவு அன்பிருந்தும், சந்தனா மட்டும், எல்லாவற்றையும் மீனாட்சி அம்மாவிடம் ஒப்பித்து விட்டாளா என்ன?


முறுவலித்து, "எங்கோ ஓர் இடத்தில் ஒளியேற்றினால் சரிதானே ஆன்ட்டி! இப்போது, நீங்கள் அந்தக் 'காட்டுப் பய்ல்' மாதிரி, வேறு கதைகள் இருந்தால், சொல்லுங்களேன்" என்று கேட்டுக் கொண்டாள். "எனக்கு என்னவோ, அந்த நிகழ்ச்சி உங்கள் வீட்டில் தான் நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் போகவே மாட்டேன் என்கிறது!" என்று, ஓரக் கண்ணால், குறும்பாக நோக்கினாள்.

சிரித்தவாறே, கையை நீட்டிச் சின்னவளின் கன்னத்தை வருடினாள், மீனாட்சி.

"அருமையான பெண்ணம்மா நீ!" என்றவள், தொடர்ந்து, தான் சந்தித்த வேறு சில பல வேடிக்கை நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

அவற்றுள் ஒன்று, அவளது எட்டாம் வகுப்பில், 'ஹோம் சயன்ஸ்' தேர்வில், அவரை நல்ல பலன் தர என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, அவரைச் செடிக்குப் பதிலாக, 'அவரை' அதாவது கணவரை என்று எடுத்துக் கொண்டு, சில மாணவிகள் எழுதிய பதில்!

இருவரும் விழுந்து விழுந்து சிரித்த போது, சந்தனாவுக்கு, வீட்டில் தமையன், தந்தையோடு ஜோக்கடித்துச் சிரிக்கும் அதே உணர்வு!

மீனாட்சி அம்மா வீட்டுச் சமையல்காரம்மா கூட, சந்தனாவிடம் தனியே வந்து, "அம்மா இப்படிச் சிரித்து சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து, ஏழெட்டு வருஷம் ஆகிப் போச்சும்மா! அய்யாவும் போய், சின்னவரும் வெளிநாட்டிலேயே தங்கிவிட்ட பிறகு, ஆளே மாறிப் போய், வெறும் எந்திரம் மாதிரி, நடமாடினாங்க. எப்படியோ, அது மாறி அவங்க நல்லா ஆனால் சரி! அதனாலே, நீ மட்டும், எங்கம்மாவை விட்டு, எங்கேயும் போய்விடாதேம்மா!" என்று கூறிவிட்டுப் போனாள்!

இந்த ஆன்ட்டியை விட்டுப் போவதா?

நினைக்கக் கூட முடியவில்லை, சந்தனாவால்!

பெண் துணையின்றி வளர்ந்தவள் சந்தனா! அதனால், மீனாட்சி அம்மாவை, ஒரு தாய் போல என்று அவளால், ஒப்புமை கட்டி நினைக்க முடியவில்லை!

ஆனால், உலகில் யாருமே இல்லை என்று தன்னந்தனியே நின்றவளுக்கு, நானிருக்கிறேன் என்று, ஆதிமூலமாய், அபயகரம் கொடுத்தவள் ஆயிற்றே!

கோடி ரூபாய் கொடுத்தால் கூட, அந்த அபயகரத்தை விட்டுப் போவதா?

"நானாக ஒரு போதும் இங்கிருந்து போகவே மாட்டேன்!" என்று சமையல்காரம்மாவிடம் உறுதி கூறிய போது சந்தனா முழுமனதோடு, தன் வார்த்தைகளை நம்பித்தான் சொன்னாள்!

ஆனால், அங்கே இருக்கப் பிடிக்காமல், மனம் வெறுத்து, அந்த வீட்டை விட்டுத் தானாகவே ஒரு நாள் வெளியேறுவாள் என்று அப்போது அவளுக்குத் தெரியாது!

அன்று சந்தனா வீடு திரும்பக் கிளம்பிய நேரம், வழக்கம் போலத்தான்.

ஆனால், வெகு அதிசயமாக வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைவாக இருக்கவே, எப்போதும் வரும் நேரத்துக்குக் கிட்டத்தட்ட அரை மணி நேரம் முன்னதாகவே, சந்தனா வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள்.

ஆனால், அதிலும் ஒரு சிறு பிரச்சினையாக, கேட்டைத் திறந்து விடுவதற்கு, வாயில் காவலன், கேட் அருகே இல்லை!

பெரிய கேட், சின்ன கேட் இரண்டின் அருகிலும் இல்லாமல், பின்புறமாக அவன் ஏதோ தோட்ட வேலை செய்து கொண்டிருந்தான்!


பொதுவாக ராசையா வேலையில் அலட்சியம் காட்டுகிறவன் இல்லை!

ஆனால் தோட்டக்காரனுக்கு உதவியாக கொத்திக் கிளறி, முரட்டு வேலை ஏதாவது செய்து கொடுப்பான்!

அன்றும் அது போலச் செய்து கொண்டிருந்த போதுதான், சந்தனா திரும்பி வந்தது!

ஆனால், கேட் திறந்து விட அவன் இல்லாததையும் அவளுக்குப் பிரச்சினை என்று சொல்லிவிட முடியாது!

அப்படி வாயில் கதவருகில் யாரும் இல்லாதபோது, தடையின்றி உள்ளே வருவதற்கு, அந்த வீட்டு மனிதர்கள் அறிந்த ரகசியம் ஒன்று உண்டு!

சின்ன கேட்டின் உட்புறமாகக் கையை நன்றாக நீட்டிப் பக்கவாட்டுச் சுவரில், சற்றுத் தள்ளிப் பதித்திருந்த தாளைத் திறந்து கொண்டு, உள்ளே செல்வார்கள்.

கேட் தாண்டி, நாலு எட்டுதான் உள்ளே வைத்திருப்பாள்!

அதற்குள், "இவ்வளவு தூரம் தாண்டி, இங்கேயுமா இந்தத் தொல்லை? மரியாதையாக, வந்த வழியே திரும்பிச் செல்! அல்லது, உன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன்!" என்று அதட்டியது, ஓர் ஆண் குரல்!

குரல் ஆணினதாக இருந்ததோடு, வெகு கடுமையாகவும் இருக்கவே, பக்கத்து வீட்டில் தான் ஏதோ, காற்று வீசிய தினுசில், இந்த வீட்டில் இருந்து பேசுவது போல் தோன்றிவிட்டது என்று எண்ணியவளாய், சந்தனா மேலும் வீட்டை நோக்கி நடக்கலானாள்.

"சொல்லிக் கொண்டே இருக்கிறேன், திமிராக உள்ளே வருகிறாயா? பெண் என்பதால், சும்மா இருப்பேன் என்று நினைத்தாயா? ஏய் ராசையா, இவளைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைப் பூட்டு!" என்றபடி, வீட்டின் உள்ளிருந்து வாயில் வராந்தாவுக்கு வந்து, வாயில் காவலனுக்கு ஒருவன் உத்தரவிடவும், சந்தனாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போயிற்று.

இந்த வீட்டில், யார் இவன்? அதுவும், இந்த அதட்டலோடு?

அவள் வியந்து நோக்குகையிலேயே, அவனது குரலுக்கு ஓடி வந்த ராசையா, சந்தனாவைப் பார்த்துவிட்டுத் திகைத்து நின்றான்.

"என்னடா, பெண்ணைப் பார்த்ததும் விழித்துக் கொண்டு நிற்கிறாய்? இதுகள் எல்லாம், பெண்களே அல்ல! பிசாசுகள்! காரியம் சாதிப்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்! திருட்டுத்தனமாகக் கதவைத் திறந்து கொண்டு வருகிறாள், பார்! போ! போய் அடித்து விரட்டு! மீண்டும் இந்தப் பக்கம் வரவிடாதே!" என்று மீண்டும் அவன் அதட்டிய விதத்தில், சந்தனாவுக்கு ஒரு விஷயம் தெளிவாயிற்று.

இந்த அளவுக்கு உரிமையோடு வீட்டு வேலையாளை விரட்டுவது என்றால், இவன் இந்த வீட்டுக்கு உரியவனாகத் தான் இருக்க வேண்டும்!

அப்படியானால், எங்கோ விளக்கேற்றப் போய்விட்டதாக, மீனாட்சி அம்மா வருத்தத்துடன் சொன்ன அந்த தீபன், இந்த மனிதனா? ஆன்ட்டியுடைய சொந்த மகன்!

ஆன்ட்டியின் அமைதிக்கும் இவனது ஆத்திரத்துக்கும்!

உள்ளே கைவிட்டுக் கதவைத் திறந்ததால், தப்பாக நினைத்து விட்டானா?

இப்படிக் குற்றவாளி போல, வீட்டுக்கு வெளியே நின்று விளக்கம் சொல்ல, சந்தனாவுக்குப் பிடிக்கவில்லை.

அதைவிடத் தன்னைப் பற்றிய விளக்கத்தைத் தானே சொல்வதை விட, வேலையாள் சொல்வது நல்லது என்றும் தோன்றவே, தீபனுக்குப் பதில் சொல்ல முயற்சி கூடச் செய்யாமல், சும்மா பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

அதற்கு ஏற்ப ராசையாவும், "அய்யா, இந்த அம்மா கொஞ்ச நாளா, நம்ம வீட்டிலேதான் இருக்கிறாங்க. இவங்க கிட்டே, அம்மாவுக்கு ரொம்பப் பிரியம். இந்தம்மா வந்தப்புறம்..." என்று விளக்கத் தொடங்கினான்.

ஆனால், அவன் பேச்சை மதியாமல், "ஓகோ! மோப்பம் பிடித்து, முன்பே வந்து காத்திருக்கிறாளோ! பார் பெண்ணே, அதெல்லாம் என்னிடம் ஒன்றும் பலிக்காது! முதலில் இங்கிருந்து வெளியே நட!" என்று உறுமினான் தீபன்.


இப்போது, சந்தனாவுக்கும் கோபம் வந்திருந்தது!

அவனுக்கு முன்பிருந்தே அங்கிருக்கும் வேலையாள் ஒரு விளக்கம் சொல்கிறான். அதை என்னவென்று கூடக் கேளாமல், வாய்க்கு வாய் வெளியேறு, வெளியேறு என்றால் எப்படி?

பிசாசுப் பட்டம் வேறு!

எந்தப் பெண், அவனை எப்படி ஏமாற்றினாளோ?

அதற்காக, என்னமோ இவன் மகா மன்மதன் போலவும், இவனுக்காகவே, சந்தனா இந்த வீட்டுக்கு வந்து, காத்துக் கிடப்பது போல, என்ன அசட்டுத் தனமான பேச்சு!

அப்படி எந்த ஆண் மகனுக்காகவும், அவள் ஒரு போதும் காத்துக் கிடக்கவே மாட்டாள்!

அதை அவனிடம் விளக்கிவிடும் எண்ணத்தில், "பாருங்கள் மிஸ்டர் தீபன்..." என்று சந்தனா தொடங்கும்போதே ஆத்திரத்துடன் குறுக்கிட்டான் அவன்!

"முடியாது! பார்க்கவும் முடியாது! கேட்கவும் முடியாது! முதலில், இங்கிருந்து வெளியே போ! அல்லது, உன்னையும் உன்னை அனுப்பியவர்களையும், கேஸ் போட்டு, உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்!"

அனுப்பியவர்களா?

இவனை வளைத்துப் பிடிக்க, ஒரு கூட்டமே வேலை செய்வதாக எண்ணினானா?

என்ன திமிர்! என்ன கர்வம்!

இனி, இவனிடம் பேசிப் பயன் இல்லை!

பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டு, ஓர் அலட்சிய பாவனையுடன் வீட்டை நோக்கி நடந்தாள் சந்தனா!

அவன் கொதி நிலைக்குப் போய்விட்டான் போலும்! "ஏய்! ஓர் அடி முன்னே எடுத்து வைத்தாலும், அப்புறம் உன்னை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..."

தீபன் ஆத்திரத்துடன் கத்திக் கொண்டிருக்கும் போதே, "என்ன இங்கே சத்தம்?" என்ற மீனாட்சியின் குரல் கேட்க, அதைத் தொடர்ந்து, அவளும் வெளியே வந்தாள்!

சந்தனாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து, "வாம்மா! இன்று சீக்கிரமே வந்துவிட்டாய் போல!" என்று கனிவோடு வரவேற்றாள்.

பதிலுக்கு முறுவலித்து, "இன்னும் ஐந்து நிமிஷம் முன்னாலேயே உள்ளே வந்திருப்பேன், ஆன்ட்டி! ஆனால், உங்கள் பிள்ளைக்குத்தான் ஏதோ பிரச்சினை!" என்று கிண்டலாக, மீனாட்சியுடைய மகனைக் கண்ணால் காட்டினாள் சின்னவள்!

ஆத்திரத்துடன் அன்னையை நெருங்கினான் தீபன். "அம்மா, இவளை நம்பாதீர்கள். பாருங்கள், இங்கே ஏதாவது செய்தி கிடைக்கும் என்று, உங்களோடு ஒட்டிப் பழகிக் கொண்டு, உங்கள் வீட்டிலேயே, குடி வந்து விட்டாள், இவள்! என்ன கதை சொன்னாளோ, நீங்கள் ஏமாந்து விட்டீர்கள்! முதலில் இவளை வெளியேற்றுங்கள்!"

"சேச்சே, நிறுத்துப்பா! என்ன பேச்சு இது, தீபன்? நீ சொல்லுகிற மாதிரி எதுவும் இல்லை! எனக்குச் சந்தனாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்..." என்ற தாயைக் குறுக்கிட்டு, "என்னம்மா தெரியும்? இவளை முதல் தடவையாக இப்போதுதான் பார்க்கிறேன்! அதற்குள், இவளுக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது. நான் யார் என்று தெரிந்திருக்கிறது! எப்படி முடியும்? என் வார்த்தைக்கு மாறாக, நீங்களாக என்னைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டீர்கள்! என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகே இங்கே வந்திருக்கிறாள் என்று, இதிலிருந்தே தெரிந்து விடவில்லையா?" என்று வாதாடினான்.

மீனாட்சியிடம் பேசிய பிறகு, சிரித்த முகமாக வீட்டு வாயிலின் படிகளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்த சந்தனா, வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

தன்னைப் பற்றிப் பேசக்கூடாது என்று, இவன் தான் தாயிடம் சொல்லி வைத்திருக்கிறானா?


ஒரே மகன் என்றாலும், அந்த மகன், அவனுடைய குடும்பத்தார் ஒருவரின் புகைப்படத்தைக் கூட, அந்த வீட்டில் பார்த்திராதது நினைவு வந்தது, இன்னமும் அவளது ஆச்சரியத்தை அதிகரித்தது!

இந்தத் தீபன் தான் தடுத்திருக்க வேண்டும்!

இவனைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்று ரகசியம் காக்கும் அளவுக்கு, இவன் அப்படியென்ன கொம்பன்? அல்லது குற்றவாளியா?

அதனால் தான், பர்சில் இருந்த படங்களை, மீனாட்சி ஆன்ட்டி, அவ்வளவு முக்கியமாகக் கருதியிருக்க வேண்டும்.

ஆனால் எதற்காக?

"சும்மா, அதையே சொல்லிக் கொண்டிராதே, தீபன். நான் தான் ஒரு தரம், பேச்சு வாக்கில், என் மகன் என்று, உன் பெயரைச் சந்தனாவிடம் சொல்லி விட்டேன்! அது, நீதான் என்று எப்படித் தெரியும் என்று, அடுத்த கேள்வி கேட்காதே! இந்த வீட்டில் நின்று, இந்தக் கத்துக் கத்துகிறவன் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று, ஒரு முட்டாள் கூடப் புரிந்து கொள்வாள்" என்று சற்றே அலுத்த குரலில் கூறிய மீனாட்சி, சந்தனாவிடம் திரும்பி, "நீ உள்ளே போம்மா! இன்றைய சிற்றுண்டி, உனக்குப் பிடித்த குழிப் பணியாரம். இதோ, இவனுக்கும் அது பிடிக்குமே என்று செய்யச் சொன்னேன்! போய், முகம் கழுவிவிட்டுச் சாப்பிடு" என்று கூறவும், அதற்கு மேல் அங்கே நில்லாமல், சின்னவள் உள்ளே சென்றாள்.

மாடியில் வாயிற்புறத்தை நோக்கிய அறை அவளுக்குத் தரப்பட்டிருப்பது! எனவே தொடர்ந்து தாயும் மகனும் பேசியது, அறைக்குள் சென்ற பிறகு, அவள் விரும்பாவிட்டாலும் அவளது காதுகளில் தெளிவாக விழுந்தது!

"உங்களுக்கு உலகம் தெரியாது, அம்மா! இவளை, இங்கே இருக்க விடுவது, நல்லதில்லை!" என்றான் மகன்.

"எனக்கு உலகம் தெரியாதா? அப்படி உலகம் தெரியாத அம்மா எப்படியோ போகட்டும் என்று தானே, இத்தனை ஆண்டுகள் அங்கேயே இருந்துவிட்டாய்! சரி. அது உன் வாழ்வு, உன் விருப்பம்! சந்தனாவுக்கு என்று, இங்கே, இப்போது யாரும் இல்லை! அவள் வீட்டில், திருட்டு வேறு நடந்து, தவித்துக் கொண்டு நின்றாள் பாவம்! எனக்கும், இந்தத் தனிமை, தாங்க முடியாத பாரமாகி விட்டது! அதனால், எனக்குத் துணையாக, அவளை, நான் தான் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்! இரு மாதங்களாக, எனக்கு அவள் தான் ஒரே துணை! இனி, நீ கிளம்பிய பிறகும், அவள் தான் துணையாக இருக்கப் போகிறாள்!" என்றாள் மீனாட்சி அம்மா சற்று அழுத்தமான குரலில்!

"அது, தேவையில்லை, அம்மா! இதை இப்போதைக்கு மனதோடு வைத்துக் கொள்ளுங்கள்! இந்த முறை, என் மனதில் வேறு கருத்து இருக்கிறது! இனி, இங்கேயே இருந்து விடலாமா என்ற எண்ணத்தில் தான், இப்போது வந்ததே!"

நம்பாமல், 'உச்'சுக் கொட்டினாள் அன்னை!

"கடந்த இரண்டு முறை வந்த போதும் கூட, நீ இப்படித் தான் ஏதோ சொன்னாய்! ஆனால், உன் ஏஜெண்ட் தான், உனக்கு நன்றாக அமெரிக்க மோகத்தை ஏற்றி வைத்திருக்கிறாளே! சுயநலம் பிடித்தவள்! இரண்டே நாளில், ஏதாவது சாக்கிட்டு, அவள் ஒரு போன் பண்ணிக் கூப்பிட்டாள் என்றால், குடிகாரன் பேச்சு மாதிரி, எல்லாம் அத்தோடு சரி! உடனே, விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவாய்!..."


"இல்லைம்மா! இந்தத் தடவை மித்ராவுக்காகவேனும்..."

"மித்ராவைக் காட்டி, என்னை மடக்கப் பார்க்காதே! முதலில் ஒரு மாதமேனும் இருந்து காட்டு! அப்புறமாக, உன்னை நம்புகிறேன்! ஆனால், சந்தனா விஷயத்தில் தலையிடாதே! அவளை, நான் தான் கட்டாயப்படுத்தி, இங்கே கூட்டி வந்தேன்! அவள் இங்கே தான் இருப்பாள். அவளைப் போகச் சொல்ல முடியாது!" என்றாள் தாயார் உறுதியான குரலில்!

"என்னவோ, எனக்குப் பிடிக்கவில்லை! எதற்கும், நான் இங்கே தங்க நினைப்பது பற்றி, அந்தப் பெண்ணிடம் வாய் விட்டு விடாதீர்கள்! அப்புறம், அவள் ஏதாவது பத்திரிகைக்குச் செய்தி கொடுத்து, ஒரே களேபரம் ஆகிவிடப் போகிறது!" என்று, தாயை எச்சரித்தான் தீபன்.


"ஆமாம், நீயும், உன் பத்திரிகையும்! யார் யாரோ, எது எதற்கோ பயப்படுகிறார்கள்! உனக்கு, இது ஒரு ஃபோபியா!" என்றாள் தாயார் சற்று அலட்சியமாகவே!

"இந்த மீடியாக்காரர்கள், செய்திக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது! டயானாவின் மரணம் எப்படி நடந்தது, நினைத்துப் பாருங்கள்! அந்தப் பெண்ணின் வீட்டில் நடந்த திருட்டே, அவள் நம் வீட்டில் நுழைவதற்கான நாடகம் என்பது தான் என் கருத்து! ஆராய்ந்து பார்த்தால், அதுதான் உண்மையாகவும் இருக்கும்!" என்றான் மகன்.

என்ன உளறல் இது என்ன சந்தனா யோசிக்கையிலேயே, "முழுப் பைத்தியமாக மாறுமுன், உன் ஃபோபியாவுக்கு ஏதாவது சிகிச்சை செய்!" என்று மீனாட்சி எரிச்சலாகக் கூறிய விதத்தில், அவளுக்குச் சிரிப்பு வர, அந்த சிரிப்புடனேயே திரையை ஒதுக்கிக் கொண்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்!

தாயும் மகனும், அதே இடத்தில், வீட்டின் முன்புறத் தோட்டத்தில் தான் நின்றனர்.

தீபனின் எரிச்சல் மிகுந்த முகம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது!

அதே நேரத்தில், ஜன்னல் திரையின் அசைவை உணர்ந்து விழி உயர்த்தி நோக்கிய தீபனின் பார்வையில், அவளது சிரித்த முகம் பட்டுவிட, அவனது கண்கள் கனலை உமிழ்ந்தன.

எரித்து விடுவான் போல, எவ்வளவு கோபம்!

துணி கொண்டு துடைத்தாற் போல அவளது சிரிப்பு தானாக மறைய, உள்ளூர வாட்டத்துடன், சந்தனா உள்ளே திரும்பினாள்.

மீனாட்சி அம்மாவுடைய மகனுக்கு, அவளிடம் ஏன் அவ்வளவு வெறுப்பு?

காரணம் எதுவாக இருந்தாலும், அவனது வெறுப்பு அவளை மிகவும் பாதித்தது என்பது மட்டும் நிஜம்!

மீனாட்சி அம்மா மிகவும் நல்லவள்! பல தரும காரியங்களில் ஈடுபட்டிருந்தாள்.

நூறு சதவீதம் ஆரோக்கியமான உடல்நிலை கிடையாது!

ஆனாலும், அதற்காக, முகத்தை சீர்யசாக வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்.

கேலியும் சிரிப்புமாக, மிகவும் சந்தோஷமான மனோ பாவம் உடையவள்!

அதனாலேயே சந்தனாவுக்கும், அவளை மிகவும் பிடித்துப் போய், வேற்று வீடு என்கிற எண்ணமே இல்லாமல், சந்தனா அந்த வீட்டில் மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தாள்!

தந்தையைப் பற்றிக் கூடப் பல சந்தோஷமான சம்பவங்களை, அவ்வப்போது பெருமையாகவும், சிறு ஏக்கங்களுடனும் மீனாட்சி அம்மாளிடம் பேசி, அவளால் ஆறுதல் அடைய முடிந்திருக்கிறது!

இப்போது, மகன் வரவினால், அந்த நிலை மாறிவிடும் போல இருக்கிறதே என்று சந்தனா வருத்தத்துடன் நினைத்தாள்.

அண்ணன் வரும் வரை, பாதுகாப்பாக இங்கேயே இருப்பது, அவன் வந்த பின்னும் அந்தப் பக்கத்திலேயே வீடு பார்த்து வசிப்பது என்று எண்ணியதெல்லாம், தலைகீழாக மாறியது.

அந்த வீட்டில் தீபனுக்கு எந்த அளவு அதிகாரம் உண்டோ, சந்தனாவுக்குத் தெரியாது! ஆனால், ஒரு மகனின் உரிமை, மற்ற எதையும் விட அதிகம் தானே?

வீட்டு அம்மாவுடைய மகனுக்கு அடியோடு பிடிக்காத போது, அந்த வீட்டில் தொடர்ந்து தங்க, அவளுக்கும் விருப்பம் இருக்கவில்லை!

அதுவும், அவன் தாயுடன் தொடர்ந்து தங்கும் விருப்பத்துடன் வந்திருந்தால், அவனது விருப்பத்துக்குத்தான் முதல் உரிமை கொடுக்க வேண்டும்! பானகத் துரும்பு மாதிரி, அவன் முகம் சுளிக்க, அவள் அங்கே இருப்பது சரியல்ல!

இந்தப் பிரச்சினைக்குச் சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியவாறே, மெல்லக் கீழே இறங்கிச் சென்றாள் சந்தனா.

படிகள் ஹால் பகுதிக்குத் திரும்பும் போதே, யாரோ தன்னைக் கவனிப்பது போன்ற உணர்வு சந்தனாவுக்கு.

தீபனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, சோஃபாக்கள் போடப்பட்டிருந்த பக்கம் பாராமலே, உட்புறம் திரும்பியவளின் பார்வை வட்டத்தில், அவனது நெடிய உருவம் போல எதுவும் தெரியாது போகவும், விழி திருப்பிப் பார்த்தாள் அவள்.

அந்தப் பெரிய சோஃபாவுக்குள் புதைந்து விடுவாள் போல, ஒரு சிறுமி!

அவளது நாலைந்து வயதுக்குரிய ஆரோக்கியமோ, துறுதுறுப்போ தெரியவில்லை!

ஒரு துணிப் பொம்மையை அணைத்தபடி, தன் நீல நிறக் கண்களால், சந்தனாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்கள் அன்னியமாய் நீல நிறமாக இருந்த போதும், அறிமுகமான ஏதோ அவளிடம் இருப்பதாகத் தோன்ற சந்தனா அவளைப் பார்த்துப் புன்னகை செய்து, "ஹல்லோ?" என்றாள்.

பள்ளியில் புது மாணவிகளிடம் பேசி, இளக வைத்துப் பழக்கம் தானே?

ஆனால், இந்தச் சிறுமியின் பாணி வேறு மாதிரி இருந்தது! சந்தனாவை ஒரு தரம் சந்தேகமாக நோக்கிவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

ஆனால், அந்த சந்தேகமான பார்வையே, அவள் யாரென்று சந்தனாவுக்குக் காட்டிக் கொடுத்தது! அறிமுகமான சாயலும் புரிந்தது!

இவள் தீபனுடைய மகள்! மீனாட்சி ஆன்ட்டியுடைய பேத்தி!

தந்தையின் அதே சந்தேகத்தைச் சிறுமியின் கண்களில் பார்த்ததும், சந்தனாவின் முடிவு இன்னமும் வலுப்பெற்றது!

அவனுக்கு, இவள் ஒரு மகள் தானா? வேறு பிள்ளைகளும் இருக்கிறார்களா? மனைவி?

யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?


சாப்பாட்டு அறைக்குள் சென்று, மீனாட்சி அம்மாள் சொன்னதற்காக, இரண்டு பணியாரங்களைக் கொறித்து விட்டு, பரீட்சை நோட்டுகள் திருத்தும் வேலை இருப்பதாகச் சொல்லிக் கையில் காபியை வாங்கிக் கொண்டு சந்தனா மீண்டும் அவளது அறைக்குத் திரும்பும் வரை, வேறு யாரும் அவள் கண்ணில் படவில்லை!

ஆனால், அதற்குள் வேறு யாரும் குறுக்கிடாத அந்தத் தனிமையில், "சந்தனாம்மா, தீபன் என்ன சொன்னாலும், அதைப் பெரிதாக நினைக்காதே! இந்த நாட்டுப் புத்தியும், அந்த நாட்டுப் பழக்கமுமாக, அவனுக்குள் ஒரே குழப்பம்! அதில், யாரைப் பார்த்தாலும், சந்தேகம்! அவன் மனைவி பிரிந்துவிட்ட விவகாரம் விஷயத்தை... விஷத்தை என்று தான் சொல்ல வேண்டும்... அதை ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிறது! இந்தக் குழப்பத்தில் அவன் ஏதாவது உளறினால், அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதேம்மா! எனக்காக, இங்கே இருந்து விடும்மா! ப்ளீஸ்!" என்று மீனாட்சி, மிகவும் கெஞ்சலாகக் கேட்டுக் கொண்டாள்.


அப்படியே, வீட்டின் முன்புறமாக, அதட்டலாக மகனின் குரல் கேட்கவும், "அங்கேயே யாரைப் பார்த்துக் கத்துகிறானோ..." என்றவாறு அவசரமாக எழுந்து சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றாள்!

தீபனோடு வேறு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று மீனாட்சி சொல்லவே இல்லை!

அப்படியே யார் யார் வந்திருந்த போதும், ஆன்ட்டி அறிமுகம் செய்து வைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு, சந்தனா அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு உணவை மீனாட்சியுடனே சேர்ந்து உண்பது, அங்கே வந்த பின் அவளது வழக்கம்!

இருவரும் அன்றைய நிகழ்வுகள் பற்றிக் கலகலப்பாகப் பேசியபடி, உண்ணும் அந்த நேரத்தைச் சந்தனா ஆவலாக எதிர்பார்ப்பாள்!

ஆனால், இன்று தயக்கமாக இருந்தது!

சாப்பாட்டு மேஜையில் அவளை வீட்டை விட்டு வெளியேற்றச் சொன்ன மகனும் இருப்பானே!

தந்தையின் மனதைப் பிரதிபலிக்கும், அவனுடைய மகளும் கூட இருக்கலாம்!

இவர்களோடு சேர்ந்து அமர்ந்து உண்பது, எவ்வளவு சங்கடமாக இருக்கும்!

சங்கடம் அவளுக்கு மட்டுமல்ல!

மகனை எதிர்த்துப் பிடிவாதமாக அவளை வீட்டில் இருக்கச் சொன்ன மீனாட்சி அம்மாவுக்கும், கஷ்டம்தான்!

பசியில்லை என்று, பேசாமல் அறையில் இருந்து விடலாமா என்று கூட, ஒரு தரம் அவளுக்குத் தோன்றியது!

ஆனால், இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என்று யோசித்து, அறையில் கொஞ்சம் பிஸ்கட்டுகளைக் கூடச் சந்தனா வாங்கி வைத்திருக்கவில்லை!

பட்டினியும், அதன் விளைவாகச் சரியாகத் தூங்காமலும் இருந்துவிட்டு நாளைக்குப் பள்ளிக்குப் போனால், வாங்குகிற சம்பளத்துக்கு நியாயமாகப் பள்ளியில் உருப்படியாக என்ன வேலை செய்ய முடியும்?

அது மட்டுமல்ல!

மீனாட்சி ஆன்ட்டி முட்டாள் அல்ல!

எதற்காகப் பசியில்லை என்கிறாள் என்று புரிந்து, நிச்சயமாக வருத்தப்படுவாள்.

பட்டினியாக இருக்க விடவும் மாட்டாள்! அந்தப் பெரியவள் வந்து, அவளை வருந்தி அழைத்துச் சாப்பிட வைத்து, அதெல்லாம் வேறு ஆன்ட்டிக்குக் கஷ்டம்!

அத்தனையையும் யோசிக்கையில், கௌரவம் பாராமல், பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டு போய், இரண்டு வாய் எதையோ அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடுவது மேல் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!

ஒரு வேளை, தீபனே, அவனுடைய அன்னைக்காகச் சற்று இளகி, நல்லபடியாக நடந்துகொள்ளலாம்!

நல்லதே நினைக்கலாமே என்று எண்ணினால் கூட, அவளுக்கு அதில் நம்பிக்கை வர மறுத்தது! அவளது ஜன்னலை நிமிர்ந்து பார்த்த அவனது கோப முகம், அவ்வளவு எளிதாக மாறக் கூடியது அல்ல!

ஆனால், சந்தனா அஞ்சிய மாதிரி, அசம்பாவிதமாக, அவளை வாயிலில் வைத்து விரட்டியது போல, உணவருந்தும் போது, நிகழவில்லை! 'டேபிள் மானர்ஸ்' என்பார்களே, அது போல சாப்பிடுகையில் தீபன் உணவு வேலை நாகரிகம் கடைப்பிடித்தான் போலும்! சந்தனாவிடம் தனியாக எதுவும் பேசவில்லை என்றாலும், கடுகடுக்கவும் இல்லை!

அவன் தாயிடம் 'சுகம்' மருத்துவமனையைப் பற்றிய சில விவரங்களைக் கேட்டான்.


ஆனால் அப்படி அவன் விசாரித்தது, வெறும் உரையாடலுக்காக மட்டுமாகக் கேட்டது போலத் தோன்றாதது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பல ஆண்டுகளாக எட்டிக் கூடப் பாராத, என்னவென்று கேட்டுக் கூட இராத தொழில் மீது, அவனுக்கு எப்படி அக்கறை இருக்க முடியும்?

மீனாட்சி அம்மாவுக்கும் அதே ஆச்சரியம் இருந்ததோ என்னவோ, முதலில் சற்று விட்டேற்றியாகவே பதில் சொன்னவள், தொடர்ந்து மகனின் கேள்விகளில் வியப்பும், திருப்தியும் அடைந்து, விவரமாகவே விடை கூறலானாள்!

தொடர்ந்து, தாயும் மகனுமாக, மருத்துவமனை, அதில் புதிதாகத் தொடங்கி இருக்கும் சில துறைகள், அவற்றின் வேலை முறைகள் பற்றி, அலசி ஆராயத் தொடங்கினார்கள்.

விஷயம் எதுவும் புரியாததால், இந்த உரையாடல் போரடித்த போதும், ஒரு வகையில், சந்தனாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது! அவள் காரணமாகப் பிள்ளைக்கும் தாய்க்கும் இடையே, மனவேறுபாடு வந்து விடவில்லை! நல்லபடியாகப் பேசுகிற நிலையில் தான் இருக்கிறார்கள்! பெரு நிம்மதி!

ஆனால், இந்த நிம்மதி நிலைக்க வேண்டுமானால், ஆன்ட்டியின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடாது! அதை மீறி, அவளது திட்டத்தைச் செயல்படுத்தியே தீர வேண்டும்!

அதன் முதல்படியாக, மாலையில் மீனாட்சி அம்மா மருத்துவமனைக்கு வருவதாகத் திட்டம் இருக்கிறதா என்று விசாரித்தாள்.

மீனாட்சி விவரம் கேட்டதற்கு, "ஒரு சின்ன வேலை! கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கிறது! ஆனால், டெஸ்ட் நோட்டுகள் திருத்த வேண்டும். வெளியே போவதால், திரும்பி வருவதற்கு, வேனைப் பிடிக்க முடியாது! நீங்கள் வருவது தெரிந்தால், மருத்துவமனையில் வைத்து விட்டு என் வேலையைப் பார்க்கப் போவேன்! நீங்கள் வரும்போது, கொண்டு வந்துவிடலாம்! எனக்குச் சுமை மிச்சம்!" என்றாள் சின்னவள்!

"கொண்டு வந்துவிடலாம்! ஆனால், அவ்வ்...வ்ளோ நோட்டுத் திருத்துவாயே! நோட்டிகளின் பளு தாங்காமல், டயர் வெடித்துவிட்டால், என்ன செய்வது? அதுதான் கவலையாக இருக்கிறது!" என்றாள் மீனாட்சி சோகமாக!

"அதெல்லாம் வெடிக்காது, ஆன்ட்டி! குறைந்தது நூறு கிலோ கனத்தில், நான் உங்களோடு வரும்போதே வெடிக்காத டயர், வெறும் இந்த மூன்று கிலோ சுமையில் தானா வெடிக்கப் போகிறது? நடக்கவே நடக்காது! பயமே படாதீர்கள்!" என்று சிரித்தாள் சந்தனா.

வழக்கமாக, மீனாட்சியும் அவளும் பேசிக் கொள்கிற தினுசில்தான்!

ஆனால், "நூறு கிலோவா? சேச்சே! அவ்வளவு மோசமாகக் கற்பனை கூடப் பண்ண முடியாது!" என்று விட்டு, அவளை ஏற இறங்க அளவிடுபவன் போலப் பார்த்து, "மிஞ்சி மிஞ்சி அறுபது கிலோ சொல்லலாம்! அதுவும் உயரத்தைக் கொண்டுதான்!" என்று தீபன் கூறவும், பிரமிப்பை மீறிக் கொண்டு, அவனது அளவிடும் பார்வையில், சந்தனாவி
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ....6

Post by udhayam72 Fri May 10, 2013 3:32 pm

அதை மட்டுமே நம்பிச் செல்லவில்லை அவள்!

உடன் வேலை செய்வோர், இன்னும் தெரிந்தவர்களிடம் கேட்டுச் சென்று, வேறு சில இடங்களில் விசாரித்ததிலும், அவளுக்குத் தோல்விதான் கிடைத்தது!

இல்லை, இல்லை என்று கேட்கக் கேட்க, அவளுக்குத் தன் மீதே ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது!

தும்பை விட்டு வாலைப் பிடிக்க ஓடுகிற கதையாக அண்ணன் அலைந்து திரிந்து ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தை அலட்சியமாக விட்டுத் தொலைத்து விட்டு, இப்போது இப்படி அலைகிறாளே!

எவனோ ஒரு மடத் திருடன் உருப்படியாய் ஒன்றும் இல்லாத வீட்டுக்குத் திருட வந்தான் என்றால், அவன் மீண்டும் வருவானோ என்று பயப்படுகிறவள், அவனை விடவும் எவ்வளவு பெரிய மடச்சி!

அப்படிப் பயந்து, அடுத்தவர் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு, இடம் கொடுத்த நல்ல பெண்மணிக்கு, இப்போது எவ்வளவு தொல்லை!

தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி, அவள் சோர்வுடன் வீடு திரும்பினால், கண்ணில் ஆவல் மின்ன, அவளைத் தேடி வந்தாள், தீபனுடைய மகள் மித்ரா!

பிரியமாக அழைத்த போது முகத்தைத் திருப்பிக் கொண்ட மித்ராவிடம், நட்பு, பாசம், பிரியம் என்று சந்தனா பெரிதாக எதையும் எதிர்பார்த்து விடவில்லை!

முக்கியமான காரணம், அவள் தீபனுடைய மகள்!

தன் மனதில் இருக்கும் விஷத்தில், எத்தனை சதவீதத்தை, மகள் மனதிலும் அவன் புகுத்தி வைத்திருக்கிறானோ!

சின்னப் பெண்! உடனடியாகப் புதியவளான சந்தனாவிடம் சிரிக்க வேண்டும் என்றோ, அவளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியாதுதான்!

ஆனால், அப்படித் தயங்குகிற குழந்தைகள் வெட்கப்படுவார்கள்... அல்லது பயத்துடன் பார்ப்பார்கள்!

இரண்டும் இல்லாமல், குழந்தை முகம் திரும்பியதே விசித்திரம் தான்! கூடவே, அந்த சந்தேகமான பார்வை வேறு!

அதிலும், உணவருந்தும் போது, சந்தனாவை மித்ரா கண்டு கொள்ளவே இல்லை எனவும், தந்தையின் வெறுப்பு, சிறுமியின் மனதிலும் ஏறியிருப்பதாகவே, அவள் எண்ணியிருந்தாள்!

ஒரு சின்னக் குழந்தையின் மனதைக் கெடுத்து வைத்திருக்கிறானே என்று உள்ளூர, வருத்தமும் இருந்தது!

ஆனால், மித்ராவே அவளைத் தேடி வரவும், ஆச்சரியத்தோடு, சந்தனாவுக்குச் சந்தோஷமும் உண்டாயிற்று!

வீடு வரும் போது இருந்த சோர்வு மறைந்துவிட, முறுவலோடு அவளை வரவேற்றாள்.

மித்ராவின் மனதில் மிச்சமிருந்த தயக்கத்தை நீக்கும் முயற்சியாக, "உன் பாப்பா ரொம்ப அழகாக இருக்கிறாளே! இவள் பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் விசாரித்தாள்.


சந்தனா நினைத்தபடியே, மித்ராவின் முகம் மலர்ந்தது! "பாப்பா பெயர் ஜேடி!" என்று சந்தோஷமாகச் சொன்னவள், சந்தனாவை ஆச்சரியமாகப் பார்த்து, "உனக்கு இங்கிலீஷ் தெரிகிறதே! சமையல் லேடி, தோட்டக்காரன் ஒருத்தருக்கும் தெரியலை! கிராண்ட்மா மட்டும் பேசுது! அதுவும், கோயிலுக்குப் போயிருக்குது! அப்பாவும் வேலை செய்கிறப்போ, வேறே யார்கிட்டேயும் பேச முடியலை! ஒரே போர்!" என்று மனதில் உள்ளதைக் கொட்டினாள்.

பாவம்! தனிமையில் போரடித்துப் போயிருக்கிறாள்.

இன்று, ஆன்ட்டி கோயிலுக்குப் போகிற நாள்!

தந்தையும், ஏதோ வேலை செய்யப் போய்விடவே, இவளோடு பேச ஆள் இல்லை!

பாட்டியோடு கோயிலுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அங்கே யாரும் துப்புத் துலக்க வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், தந்தை அனுமதித்திருக்க மாட்டான்!

என்ன பயம்?

அப்படி என்ன பெரிய மனிதன்... அல்லது, குற்றவாளியேதானா?

சேச்சே! அப்படியெல்லாம் இராது! மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன், கிரிமினலாக இருக்க முடியாது!

தலையை உலுக்கி விட்டுக் கொண்டு, சிறுமியோடு உரையாட முயன்ற சந்தனா திகைத்தாள்!

அங்கே வீட்டில் என்ன செய்வாய்? எப்படிப் பொழுதைப் போக்குவாய் என்று, புதிதாக அறிமுகமான ஒரு சிறுமியிடம் கேட்கும் எந்தக் கேள்வியை மித்ராவிடம் கேட்டாலும், அவளுடைய தந்தை குற்றம் சாட்டியது போல, அவளைப் பற்றித் துப்புத் துலக்குவதாகவே அமைந்தது!

ஆனால், அவளைப் பற்றி எதுவும் தெரியாமல், அவளோடு இணைந்து பேசுவது எப்படி?

யோசித்து விட்டு, "அங்கே உனக்குப் பிடித்த மாதிரி, டீவி நிகழ்ச்சிகள் நிறைய உண்டா? என்று வினவினாள்.

அப்பாடா! குடைவது போல இல்லாத ஒரு கேள்வியைக் கண்டு பிடித்துவிட்டாள்!

தோள் வரை கிடந்த, அடர்ந்த கூந்தல் துள்ளிவிழ, "ஆமாம்! ஆனால் எனக்கு என் கம்ப்யூட்டரில் சிடி போட்டுப் பார்ப்பதுதான் ரொம்பப் பிடிக்கும்!" என்று மித்ரா உற்சாகத்துடன் பதில் சொன்னது மிக அழகாக இருந்தது!

அவளை அள்ளி அணைக்கும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஹாரிபாட்டர் பார்ப்பாயா? ஹாரிபாட்டரில் எது ரொம்பப் பிடிக்கும்?" என்று மேலே விசாரித்தாள் சந்தனா.

"பறக்கும் கார் வருமே! அதுதான் ரொம்ம்...பப் பிடிக்கும்!"

"அப்புறம்?"

"நார்னியா... அது கூட மாஜிக்தான்! அப்புறம் 'டிஜிமோன்'... டிஜிமோன் தெரியுமா?"

நல்லவேளையாக, அந்த ஜப்பானியக் கார்ட்டூன் பற்றி சந்தனா அறிந்து வைத்திருந்தது, மித்ராவின் மனதில், சந்தனாவிடம் மதிப்பை ஏற்படுத்தியது!

இன்னும் பல்வேறு டீவி நிகழ்ச்சிகள், அவற்றுள் நான்சிக்குப் பிடித்தது, மிச்சிக்குப் பிடித்தது என்று இருவரும் அரட்டையில் ஈடுபட்டனர்!

இடையே எப்படியோ மித்ரா, சந்தனாவின் மடிக்கு வந்து சேர்ந்திருந்தாள்!

"மிச்சி வீட்டிலே பகல்லே யாரும் கிடையாதா? அவன் பெரியவர்களோட..." என்று சந்தோஷமாக அளந்து கொண்டிருந்த சிறுமியின் குரல் சட்டென நின்று விட, அவசரமாகச் சந்தனாவின் மடியிலிருந்து குதித்துக் கீழிறங்கினாள் அவள்!

"மித்ரா!" என்ற அதட்டலும், மாடிப்படியில் கேட்ட அழுத்தமான காலடிச் சத்தமும் காரணத்தை விளக்கிவிட, அதுவரை மறக்கப்பட்டுப் பக்கத்தில் கிடந்த பொம்மையைத் தூக்கிச் சிறுமியின் கையில் கொடுத்தாள் சந்தனா.

அவசரத்தில் தடுமாறிப் பொம்மையைத் தவற விட்டு, மீண்டும் எடுத்துக் கொண்டு அவள் விரைகையில், அவளுடைய தந்தை அங்கேயே வந்துவிட்டான்!


"இங்கே என்ன வேலை உனக்கு?" என்று அவன் அதட்டிய போது, சந்தனாவுக்கே திக்கென்றது!

அச்சத்தில் கண்கள் விரிய விழித்த மித்ரா, சட்டென, சந்தனாவைக் கை காட்டினாள்!

"இ...இந்த ஆன்ட்டிதான்... ஆன்ட்டிதான் வா வா என்று, என்னைக் கூப்பிட்டு..." என்று குரல் நடுங்கக் கூறினாள்.

ஒரு கணம் பிரமித்த போதும், சந்தனாவுக்கு உடனே விஷயம் புரிந்தது!

தந்தையின் கோபத்துக்கு அஞ்சிய சிறுமி, தான் தப்பிப்பதற்காகப் பொய் சொல்லியேனும், அதைத் திசை திருப்பப் பார்க்கிறாள்!

சந்தனாவின் திசைக்கு!

ஆனால், 'சும்மா ஆடுகிற ஒன்று, கொட்டுக் கண்டால்...' என்று சொல்வார்களே என்று எண்ணியவாறே சின்னவளைப் பார்த்தாள் சந்தனா.

மித்ராவின் பெரிய விழிகளில் கலக்கத்தைக் காணவும், சட்டென சுதாரித்து, "ஆமாம் மிஸ்டர் தீபன், உடன் விளையாட யாரும் இல்லாமல், குழந்தை கீழே போரடித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். அதனால் தான் கொஞ்சம் விளையாட்டுக் காட்டலாம் என்று கூட்டி வந்தேன்!" என்று பழியைத் தன் பேரிலேயே போட்டுக் கொண்டாள்!

மித்ராவின் பெரிய கண்கள் மீண்டும் விரிந்து, இப்போது தந்தையையும், சந்தனாவையும் மாறி மாறிப் பார்த்தன.

மித்ராவை விடப் பெரியவர்கள் என்றாலும், வகுப்புப் பிள்ளைகளோடு நன்றாகவே பழகும் வழக்கத்தால், அவளது மனதில் இருப்பதைச் சந்தனாவால் ஊகிக்க முடிந்தது!

சந்தனா காட்டிக் கொடுக்காததால், அவளைப் பற்றி நன்றியுணர்ச்சி! அவளைப் பொய்யாக மாட்டி வைத்த கூச்சம்!

கூடவே தந்தை இதை நம்புவானோ, மாட்டானோ என்ற கலக்கம்!

தீபனோ, "அடடா! என்ன இரக்க குணம்! அப்படியே தெருவில் இறங்கிப் போய், அங்கே பிச்சையெடுத்துத் திரிகிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவதுதானே?" என்றான் இளக்காரமாக!

பழமொழி ரொம்பவே சரிதான்! ஓர் இணுக்குக் கிடைத்ததும், எவ்வளவு அவமதிப்பாகப் பேசுகிறான்! மித்ராவைக் காட்டிக் கொடுக்காமல், இவனை உணர வைப்பது எப்படி என்று சந்தனா யோசிக்கையிலேயே, அவன் தொடர்ந்தான்.

"குழந்தைக்குப் போரடிக்கிறதே என்று இந்தம்மா விளையாட்டுக் காட்டினாளாமே! யாரிடம் இந்தக் கதை! தனியே இருந்த பிள்ளையை, யாரும் அறியாமல் பிடித்து வந்து, என்னைப் பற்றித் தூண்டித் துருவி, விசாரித்துக் கொண்டிருக்கிறாய்! இப்போது, கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன் என்பதால், இந்தக் கதை விடுகிறாய்! இந்த மாதிரிப் புளுகு மூட்டைகளை நம்புவதற்கு, நான் ஆளல்ல! அதை முதலில் தெரிந்து கொள்!" என்றான் கடுமையான குரலில்!

ந்தனாவுக்கும் சீற்றம் மிகுந்துவிட, "அப்படி எதை விசாரித்து அறிந்து விடுவேன் என்று இந்தப் பயம்? அங்கே யுஎஸ்சில் அடுக்கடுக்காய்ச் செய்துவிட்டு வந்த கொலைகளைப் பற்றியா? அல்லது, கொள்ளைகள் பற்றியா? எதற்காக இப்படிப் பயந்து நடுங்குகிறீர்கள்?" என்று ஆத்திரத்துடன் கேட்டு விட்டாள்.

ஒரு கணம் திகைத்துப் பேச்சிழந்து நின்ற தீபன், சட்டெனத் தலையைப் பின்னே தள்ளி, வாய்விட்டு நகைத்தான்!

மண்ணைத் தின்ற கண்ணனின் வாய்க்குள் உலகத்தைப் பார்த்த யாசோதைக்குக் கூட, இவ்வளவு பிரமிப்பு ஏற்பட்டிராது!

வரிசைப் பற்கள் பளிச்சிட, கனைப்போ காட்டுத்தனமோ இல்லாமல், இவனுக்குப் போய், இப்படி ஒரு சிரிப்பா?...

சந்தனா வியந்து நிற்க, மித்ரா மகிழ்ச்சியோடு கையைக் கொட்டிக் குதித்தாள்.


"ஹைய்யா! அப்பா சிரிச்சாச்சுது! அப்பாவுக்குக் கோபம் போயாச்சுது!"

'அப்பா' வை மட்டும் தமிழில் சொல்லி அவள் குதித்தது, சந்தனாவிடமும் புன்னகையை வரவழைத்தது!

அவன் சிரிப்பு மறைய, சந்தனாவைக் கூர்ந்து ஆராய்ந்தான்.

அதன் பின் "நடிப்பு பிரமாதம்!" என்றான்.

"என்ன நடிப்பு?" என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்டாள் சந்தனா.

பெரியவர்களின் குரல் மாறுபடுவதைக் கவனித்த மித்ரா, அவர்கள் இருவரும் வெட்டுவது போலப் பார்த்து நின்ற அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்!
"என்ன நடிப்பா? அது தெரியாமலா நிஜம்போல, அப்படி நடித்தாய்? அடேயப்பா! ஊகூம்! இவ்வளவு கெட்டிக்கார நடிகையை வீட்டில் வைத்துக் கொண்டு, என்னால் நிம்மதியாக இருக்கவே முடியாது! அதனால், சீக்கிரமே வேறு இடம் பார்த்துக் கொண்டு, இங்கிருந்து போய்விடு தாயே!" என்றான் தீபன்!

வேறு இடம் பார்ப்பதா?

அன்று அடைந்த தோல்விகள் சந்தனாவின் மனதில் பவனி வந்தன!

இவன் வேறு, சும்மாச் சும்மா போ போ என்று கொண்டு!

அப்படிச் சொல்வதைக் கேட்க நேரும் போது, அடுத்தவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று யோசிக்கவே தோன்றாதா?

வருத்தத்தை மறைத்து, எரிச்சலைக் காட்டி, "அதை என்னை இங்கே அன்போடு அழைத்து வந்த உங்கள் அம்மா சொல்லட்டும் போய்விடுகிறேன்!" என்றாள் அலட்சியமாக!

தீபனின் முகம் கன்றியது!

அவனுடைய அம்மாவாவது இவளைப் போகச் சொல்வதாவது! நடக்கிற காரியமா?

"அம்மாவைத்தான் நன்றாக மயக்கி வைத்திருக்கிறாயே!" என்றான் அவன் கைத்த குரலில்.

"ஆமாம்! மீனாட்சி ஆன்ட்டி பச்சைக் குழந்தை! சாக்லேட்டைக் கொடுத்து மயக்கி விட்டேன்!" என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் சந்தனா.

"என்னது?"

நிமிர்ந்து, "இது ஆன்ட்டி எனக்குக் கொடுத்திருக்கும் அறை! இங்கிருந்து நீங்கள் வெளியே போனால், நான் என் வேலையைப் பார்க்க வசதியாக இருக்கும்!" என்றவள், அவன் இளக்காரமாக ஏதோ சொல்ல வாய் திறக்கவும், அவசரமாக, "இந்த வேலையை!" என்று, அருகில் அரை மீட்டர் உயரத்துக்குக் கட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளி நோட்டுப் புத்தகங்களைக் காட்டினாள்!


கட்டின் மேலே இருந்த காகிதத்தில் 'ஐந்தாம் வகுப்பு, மாதத் தேர்வுப் புத்தகம், தமிழ்' என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததை, அவன் உற்றுக் கவனிப்பதைக் கண்டதும், அவளுக்குச் சுருசுருவென்று, உள்ளே புகைந்தது!

எதிலும் சந்தேகமா? விட்டால், மேலே இருக்கும் காகிதத்தை எடுத்துவிட்டுக் கட்டில் இருக்கும் ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தையும் சோதிப்பான் போல!

"நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், நான் மனச்சாட்சிப்படி வேலை செய்கிறவள்! இந்தக் காலத்தில், தமிழ் நோட்டுகளைச் சரியாகத் திருத்த, நேரம் அதிகம் பிடிக்கும்! அதனால், தயவு பண்ணிச் சற்று சீக்கிரமாக இடத்தைக் காலி செய்தீர்கள் என்றால், நான் வேலையைத் தொடங்க வசதியாக இருக்கும்!" என்றாள் குரலில் சிறு எள்ளலை விரவி!

ஆனால், "சற்று முன், என் மகளை ஏமாற்றிக் குல்லாப் போட்டுக் கொண்டிருந்த போது, இந்த மனசாட்சி எங்கே...கொஞ்சம் ஓய்வெடுக்கப் போயிருந்தது போல!" என்று தீபன் அவளது குரலிலேயே திருப்பிக் கொடுக்கவும், அவளுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்தது!


ஆனால், இவன் கூடச் சேர்ந்து சிரிக்கிறவன் இல்லையே!

அல்லது சிரிப்பானோ?

இப்படித்தான் என்று நம்ப முடியாத பிறவி! எதற்கு வம்பு?

முகம் மாறாமல் காத்து, "என்ன செய்வது? சில பேரின் சகவாசத்தில், உலகமே மறந்து போகிறது! வேறு சில பேரைப் பார்க்கிற போது தானே, கஷ்டமான கடமைகள், அவசரமாக நினைவு வருகின்றன!" என்றாள் நக்கலாக அவள்.

இப்போது, அவளைக் கூர்ந்து நோக்கினான் தீபன்.

பிறகு, "கவனி! என் பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு! அளவு மீறி, அதைச் சோதிக்காமல் இருப்பது, உனக்கு நல்லது!" என்ற எச்சரிக்கையோடு அங்கிருந்து சென்றான்.

சந்தனா ஓரளவு எதிர்பார்த்தது போலவே, விரைவிலேயே ஒரு நாள், அவளுடைய தந்தை வேலையென்று அவனது அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டிருந்த நேரத்தில், மித்ரா அவளைத் தேடி வந்து நன்றி தெரிவித்தாள்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ. 7....

Post by udhayam72 Fri May 10, 2013 3:33 pm

"அன்றைக்கு அப்பாவுக்குக் கோபம் என்றதும் ரொம்பப் பயந்துவிட்டேன், ஆன்ட்டி! பெரியவர்கள் யார் கிட்டேயும், நான் பேசினால் அப்பாவுக்குப் பிடிக்காது! ஒரு தரம் போனிலே பேசினதுக்கே, அப்பா போனையே உடைச்சிட்டார்! இப்போ, போன் இல்லையே, என்னையே உடைச்சிடுவாரோன்னு பயமாய் இருந்தது..."

முகத்தில் பாவனை காட்டி அவள் பேசிய தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!


அதைக் காட்டிக் கொள்ளாமல், "அதனாலே, ஆன்ட்டியை உடைத்தால் பரவாயில்லை என்று, என் தலையில் பழியைப் போட்டுவிட்டாயாக்கும்!" என்றாள் கிண்டலாக.

ஒரு கணம் பேந்த விழித்துவிட்டு, "நீ பெரிய ஆள் இல்லையா? பெரியவர்களை உடைக்கவே முடியாது, அடித்தாலும் திருப்பி அடிப்பாங்களோன்னு பயந்து, அடிக்க மாட்டாங்கன்னு, மிச்சி சொன்னானே! அதனாலேதான், அப்படிச் சொன்னேன்!" என்றவள் சந்தனாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "உன்னை உடைக்கலை! ஆனால், அப்பா உன்னை அடித்தாரா?" என்று கண்கள் விரியக் கவலையுடன் கேட்டாள் குழந்தை.

இல்லை என்பது போலத் தலையசைத்தவளுக்கு, சின்னப் பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. காரணகாரியம் கண்டுபிடித்து, இப்படித்தான் என்று முடிவு வேறு!

ஆனால், கோபத்தில் போனை உடைப்பது என்றால்?

யார் மீதோ உள்ள கோபத்துக்கு போன் பலியாகியிருக்க வேண்டும்!

யார் மீது? என்ன கோபம்?

அர்த்தமற்று, அவளிடம் ஆத்திரப்படுகிறானே, அது போலத்தானா?

அல்லது, அதற்கு அர்த்தம் இருக்கிறதா?

தீபனின் திருமணமும், மனைவியின் பிரிவும், பத்திரிகையாளர்களால், பெரிய பிரச்சினை ஆகியிருக்குமா?

அவனுடைய மனைவியின் பிரிவு பற்றி, ஒரே ஒருதரம் குறிப்பிட்டது தவிர, மீனாட்சி ஆன்ட்டியும், மகனின் வாழ்வு பற்றி எதுவும் சொன்னது இல்லை!

தன்னைப் பற்றி எதுவும், யாரிடமும் சொல்லக் கூடாது என்ற மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார் என்பது, சந்தனாவின் ஊகம்!

மனதை மறையாது அவளிடம் பேசும் ஆன்ட்டியே சொல்லாத போது, அதைத் துருவிக் கேட்டு, அவருக்குத் தருமசங்கடத்தை ஏற்படுத்தச் சின்னவளுக்கும் விருப்பம் இல்லை!

அத்தோடு, மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் என்பது தவிர, தீபனுக்கும் அவளுக்கும் என்ன இருக்கிறது?

ஆன்ட்டியே சொல்லுகிற மாதிரி, அவனது பணி பற்றிய அழைப்பு வந்ததும், திரும்பவும் யுஎஸ்சுக்கு ஓடப் போகிறான் என்பதும் நிச்சயம்! அப்படித் திட்டம் இல்லையென்றால் தான், மருத்துவமனை நிர்வாகத்தை தாய்க்கு உதவியாக நேரில் போய்ப் பார்த்திருப்பானே!

அவன் இங்கே தங்கப் போவதில்லை என்பதற்கு, இது ஒன்றே, நிச்சயமாக சான்று!

அப்படியே, இந்தியாவிலேயே அவன் இருப்பதானாலுமே, இங்கே உள்ள கோடிக் கணக்கான மனிதர்களில், அவனும் ஒருவனாக இருக்கப் போகிறான்!

அவனைப் பற்றி யோசித்து, மனதைக் குழப்பிக் கொள்ளுவானேன்?

அதை விடவும், நல்ல தங்குமிடம் ஒன்றைக் கண்டு பிடித்துப் போய்விட்டால், தீபனுக்கும் அவளுக்கும் தொடர்பே இருக்கப் போவதில்லை!

முதலில் அதைத்தான் பார்க்க வேண்டும்!

ந்தனா யோசித்து ஒரு முடிவுக்கு வருகையில், "என் மேலே கோபமா ஆன்ட்டி?" என்று கேட்டது ஒரு சின்னக் குரல்!

திகைப்புற்றுப் பார்த்தால், தன் பொம்மையை இறுகக் கட்டி அணைத்தபடி, அவள் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சிறுமி!

பொம்மையை அவள் அணைத்திருந்த விதம், சந்தனாவை ஒரு மாதிரித் தாக்கியது!

ஏதோ, தனக்கு வேறு துணையே இல்லாத மாதிரி...


இவளை என்ன செய்வது?
ஏதோ, தனக்கு வேறு துணையே இல்லாத மாதிரி...


இவளை என்ன செய்வது?

சட்டென மனம் உருக, அவளை அருகிழுத்து, "அப்படி யார் சொன்னது? மித்ராக் குட்டிகிட்டே கூட யாருக்காவது கோபம் வருமா என்ன? மித்ரா என்றாலே என்ன அர்த்தம் தெரியுமா? சினேகிதி! உலகத்தில் எல்லோருமே, உன்னிடம் நட்பாகத்தான் இருப்பார்கள்! அதாவது, நீ எனக்கு சினேகிதி. நான் உனக்குச் சினேகிதி!" என்றுரைத்து, சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டாள் சந்தனா!

சிறுமியும் சந்தோஷமாகப் பதிலுக்கு அவளை முத்தமிட, அவர்களுக்கிடையே, ஒரு ரகசிய ஒப்பந்தம் அமுலாகத் தொடங்கிற்று!

அன்றிலிருந்து சந்தனா வீட்டில் இருக்கும் சமயங்களில் தீபன் வேலை என்று அவனது அறைக்குள் புகுந்துவிட்டான் என்றால், மித்ரா விழுந்தடித்துக் கொண்டு, சந்தனாவிடம் ஓடி வந்து விடுவாள்.

அது, இது என்று சிறுமி ஏதாவது தன் யுஎஸ் தோழர்கள், அவர்களோடு சேர்ந்து விளையாடும் இடம், அங்கே இருக்கும் விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் பற்றிச் சொல்லுவாள்.

பொறுமையாகக் கேட்பதோடு, இங்குள்ளது பற்றி சந்தனா சொல்லுவாள்.

படக்கதைப் புத்தகங்களை வாங்கி வந்து, இதிகாசக் கதைகளைக் கற்றுக் கொடுத்தாள். அவளுடைய தந்தை செய்தது!

கிரேயான், க்ளே வாங்கி வந்து கொடுக்கவே, படங்கள் வரைவதும், உருவங்கள் செய்வதும், உற்சாகமான பொழுது போக்காயிற்று!

முதலில், மீனாட்சி அம்மாள் சத்தம் கேட்டாலும் மித்ரா ஓடி விடுவாள்.

ஆனால், விரைவிலேயே பாட்டி தன் பக்கம் என்று தெரிந்து விடவும், அவ்வப்போது, அவளையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டாள் பேத்தி!

ஆனால் எல்லாமே, எப்போதுமே வெகு சுமுகமாகவே இருந்தது என்று சொல்ல முடியாது!

பெரும்பாலும் தனித்திருந்து வளர்ந்தவள் என்பதால், சில பிடிவாதங்கள், முசுட்டுத்தனம், காட்டுக் கத்தல் எல்லாம் மித்ராவுக்கும் இருக்கவே செய்தது!

இவள் நம்மிடம் பிரியமாக இருக்கிறாளே, இன்னும் எவ்வளவு சலுகை எடுத்துக் கொள்ளலாம் என்று, குழந்தைகளுக்கே உரிய முறையிலும், மித்ரா நடந்துகொள்ளத்தான் செய்தாள்.

ஆனால், பள்ளி ஆசிரியை என்கிற முறையில், இந்த மாதிரிப் பிள்ளைகளையும் சமாளித்துப் பழகியிருந்ததால், மித்ராவைச் சமாளிப்பதும், சந்தனாவுக்குக் கடினமாக இருக்கவில்லை!

மீனாட்சிக்குச் சந்தனாவிடம் நம்பிக்கை இருந்ததால் இதில் தலையிடுவது இல்லை!

தீபன், அவனது கம்ப்யூட்டர் வேலையில் முழுகிவிட்டால், அவனை வெளியே பார்க்கவே முடியாது என்பதால், அவனது தலையீடும் இராது போகவே, கண்டிப்பும் கனிவுமாகச் சந்தனா, மித்ராவைக் கவனித்ததில், சிறுமியின் உடலும் தேறலாயிற்று!

அத்தோடு, ஒரே வீட்டில் இருக்கையில், ஒருவரோடு ஒருவர் பேசாமலே இருப்பது கடினம் என்று தீபனுக்குமே புரிந்திருந்ததால், சில பொதுவான நேரத்துக்கு உரையாடல்களை, அவனும் தடுக்க முயன்றதில்லை.

அதனால், தீபன் முன்னிலையிலும் கூட, ஒரேயடியாக அன்னியமாகக் காட்டிக் கொள்ளாமல், ஓரளவுக்குச் சந்தனாவும் மித்ராவும் சாதாரணமாகப் பேச முடிந்தது! ஆனால், அவன் அறியாமல் அறைக்குள் கொட்டமடிப்பதை மட்டும் இருவருமே அவன் அறியக் காட்டிக் கொள்வதில்லை!

அன்று இரு பெண்களும் மட்டுமாகச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம்!

தீபன் வேலையிலிருந்து வெளியே வரவில்லை!


மீனாட்சி, மருத்துவமனை வேலையாகச் சென்றவள், இன்னமும் திரும்பியிருக்கவில்லை!

அன்றையச் சிற்றுண்டி, புட்டு!

பொதுவாக இங்குள்ள சிற்றுண்டி வகைகளை பிடிக்காவிட்டால், ரொட்டியில் வெண்ணை, ஜாம் தடவிக் கொடுத்துவிட்டால், மித்ரா சந்தோஷமாகச் சாப்பிட்டு விடுவாள்.

அவளே, இப்படிச் சாப்பிடு நன்றாக இருக்கும் என்று சந்தனா சொன்னால், அவளிடமிருந்து வாங்கி ருசி பார்த்துவிட்டு, உரிய அளவு உண்ணவும் பழகி இருந்தாள்.

ஆனால், அன்றைக்கு என்னவோ, தனக்கு எதுவும் வேண்டாம், ஃபிரிஜ்ஜில் இருக்கும் சாக்லேட்டுகள் அத்தனையும் வேண்டும். பார்க்கவே நன்றாக இல்லாத புட்டுக்குப் பதிலாகச் சாக்லேட்டைத்தான் சாப்பிடப் போகிறேன் என்று அடம் பிடித்தாள் மித்ரா!

தானாகச் சொல்லிப் பார்த்துவிட்டு, சமையல்காரம்மா, சந்தனாவிடம் முறையிட்டாள்.

சந்தனா மென்மையாகச் சொல்லச் சொல்ல, மித்ராவின் பிடிவாதம் அதிகம் ஆயிற்று!

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, "இந்தப் புட்டைத் தான் சாப்பிட வேண்டும்! பிடிக்காவிட்டால், ரொட்டி, சாக்லேட் கிடையவே கிடையாது!" என்று சாவி கொண்டு பூட்டக் கூடிய, அந்தப் பழைய காலத்து ஃப்ரிஜ்ஜைப் பூட்டிச் சாவியைச் சமையல்காரம்மாவிடம் சந்தனா கொடுத்துவிட, மித்ரா அழத் தொடங்கினாள்!

"ஷ்! என்ன மித்ரா..." என்று சந்தனா அவளை அமைதிப் படுத்த முயலுகையில், "அவள் கேட்பதைக் கொடுத்துவிட வேண்டியதுதானே?" என்று தீபனின் குரல் கேட்கவும், திகைப்பில் சந்தனா துள்ளிக் குதிக்காத குறை எனலாம்!

தந்தையைக் கண்டதும், மித்ரா சலுகையாக, இன்னும் அழுதாள்.

"எலிசா ஆன்ட்டி, எனக்கு எவ்வளவு சாக்லேட் கேட்டாலும் கொடுப்பாளே! சந்தனாவையும் கொடுக்கச் சொல்லு!" என்று அழுதாள் சிறுமி!

சந்தனா முகத்தில் ஐயம் தெரிந்ததோ, என்னவோ, "உடனே, தப்பாக நினைக்க வேண்டாம்! எலிசா என் ஏஜண்ட்! என்னை விடப் பத்து வயது பெரியவளும் கூட!" என்று எரிச்சலுடன் மொழிந்தான் தீபன்!

அத்தோடு நிறுத்தாமல், "பெரிய ஒழுக்க சிகரம்! தன்னைத் தவிர, மற்ற எல்லோருமே, மோசம் என்று எண்ணிக் கொள்வது! அல்லது, தன்னைப் போல என்றோ, என்னவோ?" அவள் காதுகளில் விழுமாறு, தெளிவாகவே முணுமுணுத்தான்!

ஆத்திரமுற்று, "சாக்லேட்டை அள்ளி அள்ளிக் கொடுப்பாளாமா? அப்படியானால், ஆன்ட்டி அன்று சொன்னது போல, அவள் உங்களைக் கெடுப்பதோடு நில்லாமல், மித்ராவையும் கெடுக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்!" என்று சுள்ளெனச் சொல்லிவிட்டாள் சந்தனாவும்!

"ஏய், ஜாக்கிரதையாகப் பேசு! மித்ராவுக்கு விபத்து நடந்த போது, உடனே வந்து செயல்பட்டு, அவளது உயிரைக் காப்பாற்றியது, எலிசாதான்! அவளுக்கு இல்லாத அக்கறையும் அன்பும், உனக்கு இருக்க வாய்ப்பில்லை! வெறும் பந்தாக் காட்ட வேண்டாம்!" என்று கோபத்துடன் தூக்கி எறிந்து பேசினான் அவன்!

உண்மையான அக்கறையை, அவன் அலட்சியமாகப் பேசியது எரிச்சலூட்ட, "அப்படி அவள் வந்து காப்பாற்றுகிற நிலையில் மகளை விட்டுவிட்டு, நீங்கள் அப்படி என்ன வெட்டி முறித்துக் கொண்டு இருந்தீர்களாம்?" என்று குத்தலாகக் கேட்டு, அவனை மட்டம் தட்டினாள் அவள்.

அவள் மட்டந் தட்டத்தான் சொன்னாள்! ஆனால், உண்மை சுடும் அல்லவா?

சூடு தாங்காமல், அவளிடம் தப்புத் தேடினான் தீபன்.

"அப்படியானால், அதைத் தெரிந்து கொள்ளத்தான், இத்தனை முயற்சியுமா? என்னவோ, வேலை அது, இது என்று நிஜம் போல அளந்தாயே!" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன் விஷயம் மறக்கப்பட்டு விடப் போகிறதே என்று எண்ணிய மித்ரா "சாக்லேட், சாக்லேட்!" என்று, காலை உதைத்துக் கத்தினாள்!

"அதைக் கொடுத்துதான் தொலையேன்!" என்றான் அவன் எரிச்சலுடன்.


"நல்ல பொறுப்புள்ள தந்தை! இப்படி யாருக்குக் கிடைப்பார்!" என்று ஏளனமாகச் சிலாகித்துவிட்டு, மித்ராவிடம் திரும்பினாள்.

தீபன் ஆத்திரத்துடன் முறைத்ததை, அவள் கண்டுகொள்ளவே இல்லை!

அவனுக்கு முதுகு காட்டித் திரும்பியவள், பள்ளி அனுபவம் கைகொடுக்க, கண்டிப்பான குரலில், "மித்ராம்மா, நீ எவ்வளவோ நல்ல பெண் என்று நினைத்தேன்! இப்படிக் காலை உதைத்துக் கத்துவது, நல்ல பெண்கள் செய்வதா? சொல்லு!" என்று அதட்டிக் கேட்டாள்.

"அது..." என்று ஒரு கணம் தடுமாறிவிட்டு, "ஆனால், நீ சாக்லேட் தரமாட்டேன் என்கிறாயே!" என்று காரணம் சொன்னாள் சிறுமி!

"எப்படித் தருவது? நீ நல்ல பெண்ணாக இருந்தால், அதற்குப் பரிசாகச் சாக்லேட் மாதிரி இனிப்புகளைத் தரலாம்! ஆனால், ஒழுங்காகச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போது, எப்படிப் பரிசு கொடுப்பது? அதற்கும் மேலாக, இப்போது மோசமாக வேறு நடக்கிறாயே! இந்த வீட்டில் வேறு யாரும் சாக்லேட் சாப்பிடுவதில்லை! மித்ரா நல்ல பெண். அவளுக்குப் பரிசு கொடுத்துக் கொண்டே இருக்கலாம் என்று நல்ல நல்ல சாக்லேட் எல்லாம் வாங்கி வைத்தால், அதை உனக்குக் கொடுக்க விடாமல், நீயே பண்ணுகிறாயே!"

சற்று விழித்து விட்டு, "ஆனால், எனக்குச் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதே!" என்றாள் சிறுமி.

"சாப்பிடு! முதலில் இந்தச் சிற்றுண்டி எவ்வளவு ருசி தெரியுமா? புட்டரிசி என்று இதற்கென்றே தனியாக உள்ள புட்டரிசி என்ற ஒரு தினுசு அரிசியில் மாவு செய்து, தேங்காய்ப் பூ, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய், இனிப்பு எல்லாம் போட்டு, மிகவும் நன்...றாக இருக்கிறது! இந்தப் பலகாரத்தில், நீ இவ்...வளவு வளருவதற்கு வேண்டிய எத்தனை சத்துக்கள் இருக்கிறது, தெரியுமா? இதெல்லாம் சாப்பிட்டால், சீக்கிரமே... உன் அப்பா மாதிரி, உயரமாக வளர்ந்து விடலாமே! சீக்கிரமாகச் சாப்பிட்டு விட்டு, சாக்லேட்டை வாங்கிக் கொள்! வா! சீக்கிரம்!" என்று, சந்தனா நிறைய ஆசை காட்டவும், மித்ரா யோசித்தாள்.

அவளும் வெறும் அழும்பு பிடிக்கும் பெண் அல்ல என்பதால், "அப்படியானால், சாப்பிட்டதும் சாக்லேட் தரணும்!" என்ற நிபந்தனையோடு புட்டை உண்ண வந்தாள்.

"மித்திக் குட்டி நல்ல பெண் என்பதுதான் எனக்குத் தெரியுமே!" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, "கட்டாயம் தருவேன்! ஆனால், இன்னொரு தடவை இப்படிக் காலை உதைத்து அசிங்கமாகக் கத்தினால் அப்புறம், இரண்டு நாட்களுக்குச் சாக்லேட்டே கிடையாது!" என்று அதையும் பிள்ளை மனதில் பதிய வைத்தாள் சந்தனா!

கிண்ணத்தில் தனக்கென்று கொஞ்சம் புட்டை எடுத்து வைத்த தீபன், கீழ்க் கண்ணால் அவர்கள் இருவரையும் ஒரு தரம் பார்த்து விட்டுக் கிண்ணத்துடன் அங்கிருந்து அகன்றான்!

தீபனின் பார்வையைச் சந்தனா பெரிதாக நினைக்கவில்லை!

அவனைப் பொறுத்தவரையில், சந்தனா கெட்டவள்! அவனைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து, அதாவது அவனைப் பற்றிய மோசமான விவரங்களைக் கண்டறிந்து, ஏதோ அமெரிக்கப் பத்திரிகைக்கு அனுப்புவதற்காகவே, வேறு ஏதோ காரணத்தைக் காட்டி அவனுடைய அன்னையை ஏமாற்றி, இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள்!

யார் என்ன சொன்னாலும், இந்த எண்ணத்தை அவன் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை!

போகட்டும்! அவனது கருத்து அவனோடு என்று சந்தனாவும் அதைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டாள்!

எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை அவனாக ஏற்படுத்தியதோடு, அதையே குரங்குப் பிடியாக ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தால், அதைப் பற்றி நினைப்பதே, நேர விரயம் தானே?


தன்னை ஒருவர் தப்பாக நினைப்பது, அதுவும் மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் அப்படி எண்ணுவது அவளுக்கு வருத்தம் தான்!

ஆனால், ஆன்ட்டியின் அபிப்பிராயப்படியே, தீபன் இன்னும் சில நாட்களில், தன் மாபெரும் சொர்க்கம் அமெரிக்காவுக்குப் பறந்துவிடப் போகிறான்! அங்கே போய், அவன் என்ன நினைத்தாலும், அது அவளைப் பாதிக்கப் போவது இல்லையே!

இங்கேயே, அப்படித்தான், பாதிப்பின்றி தான் இருக்க வேண்டும்! ஆனால், ஏனோ அவளால் ஒரேயடியாக அப்படி அலட்சியப் படுத்த முடியவில்லை!

அதனாலேயே ஒருவேளை, அவன் இங்கேயே இருந்து விடக் கூடுமோ என்ற எண்ணத்தில், தங்குவதற்கான இடத்துக்காக, நல்ல விடுதி ஒன்றைத் தேடிக் கொண்டேதான் இருந்தாள்!

ஆனால் மித்ரா?

அவளைப் பற்றிய கவலை, சந்தனாவுக்கு இருந்தது!

தந்தை சங்கமித்ரனின் பெயரில் பாதியை மகளுக்கு வைத்ததோடு மகள், தந்தை இருவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டதாகத் தீபன் எண்ணுகிறான் என்பது, சந்தனாவின் அபிப்பிராயம்!

மற்றபடி, தந்தை விட்டுச் சென்ற தொழிலையும் அவன் பார்க்கவில்லை!

பெற்ற மகளுக்கு வேண்டியதையும் செய்யவில்லை!

இந்த வயதில் அவள் அங்கே தனிக் குழந்தையாக வளர்வது போலத்தானே தெரிகிறது!

எப்போதோ ஒரு முறை சந்திக்கும் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் தவிர, அங்கே மித்ரா தனிமைச் சிறையில் தான் இருந்திருக்கிறாள்!

அவனுக்குப் பிடிக்காதுதான்! ஆனாலும், குழந்தையின் தனிமை ஏக்கம் பற்றித் தீபன் கிளம்பும் முன், அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று, சந்தனா தீர்மானித்திருந்தாள்!

மித்ராவிடம் இருந்த பரிதாபத்தினாலேயே அவளுடைய தந்தைக்கு மறைத்து, அவளுடன் நெருங்கிப் பழக, சந்தனாவுக்குத் தயக்கமே வரவில்லை!

இங்கே இருக்கும் வரையேனும், மித்ராவுக்கு ஒரு துணை இருக்கட்டுமே!

இந்த எண்ணத்தினால், தீபன் அறியாமல், மித்ரா அவளது அறைக்கு வருவதும், பேசிப் பழகுவதும், தொடர்ந்து நடந்தது!

தீபன் அறியாமல் இது நடப்பதாகத்தான் சந்தனா நினைத்திருந்தாள்!

ஆனால், சில நாட்கள் கழித்து, ஒரு விடுமுறை தினத்தன்று, மீனாட்சியும், மித்ராவும் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்த பிறகு, அவளது அறைக் கதவைத் தட்டி, அறைக்குள் வந்த தீபன் வேறு சொன்னான்!

அந்த நேரத்தில், அவனை, அதுவும் அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றவளின் தோளைப் பற்றி நகர்த்திவிட்டு, அறையினுள் வந்து, தன் மகள், சந்தனாவின் அறைக்கு அடிக்கடி வருவது, தனக்குத் தெரியும் என்றவன், "நீ எதற்காக என் மகளுக்கு இப்படி வலை விரிக்கிறாய் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்" என்றும் சேர்த்துச் சொன்னான்!

வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா என்ன, மீனா? என்ன உளறல் என்று தோன்றியது சந்தனாவுக்கு! அத்தோடு, எப்போது பார்த்தாலும், ஏதாவது இல்லாத பொல்லாத குறை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று அவளுக்குக் கோபமும் வந்திருந்தது!

"வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா மீனோ, மானோ அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! ஆனால், உங்களுக்கு என்னவோ தெரியும் என்றீர்களே, அது என்னது, என் மனதுக்குள்ளே எனக்கே தெரியாமல் ஒளித்து வைத்திருந்தது, நீங்கள் கண்டுபிடித்துவிட்ட சிதம்பர ரகசியம்?" என்றாள் கிண்டலாக. "சொன்னால், அய்யோ பாவம், எதையும் அறியாத நானுமே அதைத் தெரிந்து கொள்ளுவேனே!"

"ஓகோ! இப்படி ஏளனமாகப் பேசினால், உண்மை, பொய்யாகிவிடும் என்கிற எண்ணமா?"


"அந்த உண்மை எது என்று சொன்னால் தானே, அது உண்மையா, பொய்யா என்பது தெரியும்?" என்று, மீண்டும் மட்டம் தட்டும் குரலிலேயே கேட்டாள் சந்தனா!
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ. ..8

Post by udhayam72 Fri May 10, 2013 3:35 pm

நல்லவேளை, ஆன்ட்டி இங்கே இல்லை! அவர்கள் எதிரில், அவர்களுடைய மகனை இப்படி மட்டம் தட்ட மனம் வராது!

"எது உண்மை என்று எனக்குத் தெரியும்! உன் சர்டிஃபிகேட் அவசியம் இல்லை!" என்றான் அவன் உதாசீனமாக.

"சந்தோஷம்! ஆனால், உண்மை உண்மை என்கிறீர்களே, அந்த உண்மை என்னவென்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களே! உண்மை சொல்வது, உங்களுக்கு அவ்வளவு கடினமா?"

இது நிஜமாகவே, நன்றாகத் தைக்கும் என்று எண்ணுகையில், சந்தனாவுக்கு உற்சாகமாகக் கூட இருந்தது!

தானுண்டு, தன் வேலையுண்டு என்று சும்மா இருக்கிறவளை, எத்தனை முறை இப்படி வலிக்கப் பேசியிருப்பான்! இப்போது, அவன் முறை! படட்டுமே என்று எண்ணும்போதே, இதற்காக வேறு தன் மீது ஆத்திரப்படுவானே என்று, அவளுக்குப் பெருமூச்சும் வந்தது!

"என்ன? கிண்டலாகப் பேசினால், சமாளித்து விடலாம் என்று எண்ணமா?"

"நீங்கள் தான், என்னவென்று சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே!"

"சொல்லாமலேதான், தெரியுமே என்று நினைத்தேன்! காது குளிரக் கேட்கத்தான் ஆசை என்றால், இதோ சொல்கிறேன், கேட்டுக்கொள்! அம்மாவை ஏமாற்றி, இந்த வீட்டுக்குள் வந்தாய்! அடுத்துச் சின்ன குழந்தையை மயக்கி, அவள் மூலமாக, என்னையும் வளைத்துப் போட்டு விடலாம் என்பது உன் திட்டம்...!"

சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை!

வந்ததில் இருந்து, அவளிடம் கடுமையாக மட்டும் தான் பேசியிருக்கிறான்! நல்ல வார்த்தையே.. நல்ல வார்த்தை இருக்கட்டும், மனிதனுக்கு மனிதன் காட்டும் சுமுகம் கூடக் கிடையாது. இருந்திருந்து, இவனை வளைத்துப் போடுவதா?

எதற்கு?

அருகில் இருந்து கொத்திப் பிடுங்கிக் கொண்டே இருப்பதற்கா?

என்ன மடத்தனம்!

அவனிடமே கேட்டாள், "அப்படி உங்களை எதற்காக சார், நான் வளைத்துப் போட்டாக வேண்டும்?" என்று, புருவம் உயர்த்தி விசாரித்தாள் அவள்.

எதையோ சொல்ல வாயெடுத்துவிட்டு, அவளை ஊடுருவுவது போலப் பார்த்தான் தீபன்.

பிறகு, "எத்தனையோ காரணங்கள்! முக்கியமாக யுஎஸ் மோகம்! அதுதானே, உங்களுக்கெல்லாம் தலையாய குறிக்கோள்! அதை அடைவதற்குத்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாமே!" என்றான் ஏளனமாக.

"இதை, நீங்கள் சொல்லுகிறீர்களா? தன் முதுகு தனக்குத் தெரியாது என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்! என்னவோ படிக்கப் போய், அந்த நாட்டிலேயே ஐக்கியமானவர்!..."


மீண்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நான் உன்னைப் பற்றிச் சொன்னேன்! அதற்குப் பதில் சொல்!" என்றான் அவன்.

"தாராளமாகச் சொல்லுகிறேன்!" என்று நிமிர்ந்தாள் சந்தனா. "யுஎஸ் ஒன்றும், யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத பூலோக சொர்க்கம் அல்ல. அதை அடைவதற்காக என்னத் தியாகம் வேண்டுமானாலும் செய்வதற்கு! இப்போது, என் அண்ணனே அங்கேதான் இருக்கிறான்...!"

"யாரை மோப்பம் பிடிக்க?" என்று குறுக்கிட்டுக் கேட்டான் தீபன்!

எரிச்சலுற்று "சே!" என்றாள் சந்தனா.


"எப்போது பார்த்தாலும், இதே பேச்சா? என் அண்ணனை, அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து அங்கே அனுப்பியிருக்கிறார்கள்! எனக்காகவே, அண்ணன் திரும்பி வந்து விடுவதாக இருக்கிறான். அவனே இங்கே திரும்பி வந்துவிடும் போது, நான் எதற்காக அங்கே போக ஆசைப்பட வேண்டும்?"

"இதை, நம்பச் சொல்லுகிறாயா?" என்றான் அவன் பதிலுக்கு.

இதைவிட, நம்ப மாட்டேன் என்று நேராகவே சொல்லியிருக்கலாம்!

அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள் சந்தனா.

"நான் நிஜத்தைச் சொன்னேன்! நம்புவதும், நம்பாததும், உங்கள் விருப்பம்! குதிரையைத் தண்ணீரிடம் கொண்டு போய் நிறுத்தத்தான் முடியும்! குடிக்க வைக்க முடியுமா? அது போலத்தான் இதுவும்! சொல்ல மட்டும் தான் முடியும்! ஆனால் ஒன்று! உங்களைப் போல, உண்மை சொல்லுவது, எனக்குக் கடினம் அல்ல!" என்றாள் அவள்.

சற்று அதிகப்படியாகப் பேசிவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றத்தான் செய்தது!

ஆனால், அவனுக்கு இது அவசியம்! எப்போதோ செய்திருக்க வேண்டியது என்றும் தோன்றிவிட, சற்று அலட்சிய பாவனையுடனேயே நின்றாள்.

மறுபடியும் அவளை வெறித்துப் பார்த்துவிட்டு, "ஆசிரியர் மகள் என்றாயில்லையா? அதற்கு ஏற்பப் பிரமாதமாகப் பேசுகிறாய்! அந்த வகையில், உன்னைப் பாராட்டத்தான் வேண்டும்! ஆனால், உன் நோக்கம் எனக்குத் தெரியும்!" என்று தீபன் கூறவும், சந்தனாவின் மனம் சோர்ந்தது!

இவனிடம் பேசியது எல்லாம் வீண்!

விடையை வைத்துக் கொண்டு கணக்கு எழுதுவது போல, இவன் முடிவு செய்துவிட்டு, அதற்காக ஆதாரங்களைச் சேகரிக்கிறான். அவள் என்ன சொன்னாலும், செய்தாலும், அவன் விரும்பிய விதமாகத்தான், அதைச் சித்தரிக்கப் போகிறான்!

எனவே, இவனிடம் என்ன சொன்னாலும், எந்தப் பயனும் இராது!

எப்போதும் இப்படித்தானே, போகிறான் என்று அலட்சியப்படுத்த முடியாமல் உள்ளே வலித்தது!

ஆனால், அதைக் காட்டிக் கொள்ளாமல், தலையைத் திருப்பிக் கொண்டு, "தெரிந்து விட்டதல்லவா? ரொம்பவும் சந்தோஷம். இனி வெளியே போங்கள்!' என்று அசட்டை காட்ட முயன்றாள் அவள்.

"போவதா? உன் நோக்கம் தெரிந்து விட்ட பிறகும், அதற்கு வேண்டியதைச் செய்யாமல் வெளியே போனேன் என்றால் என்னைப் பற்றி என்ன நினைப்பாய்?" என்றதோடு, கதவைத் தாளிட்டான் அவன்!

"என்ன..." என்று அவள் திகைப்புற்றுத் திரும்பவும், "திருமணத்துக்கு மட்டும் ஆசைப்படாதே! ஒரு சூடு எனக்குப் போதும்! ஆனால், மற்றபடி உனக்கு ஏமாற்றம் இராது! பண விஷயத்தில், நான் எப்போதுமே தாராளமாகத்தான் இருப்பேன்!" என்றபடி, அவளைப் பற்றி அணைத்தான் தீபன்!

தீபன் இப்படிச் செய்யக்கூடும் என்ற எண்ணம் சற்றும் இல்லாததாலோ என்னவோ, சந்தனா சில வினாடி நேரம் செயலற்றுப் போனாள்!

ஆனால், அதைச் சம்மதமாக எண்ணி, அவன் செயல்பட்ட விதத்தில் வெகுண்டு, இரு மடங்கு பலத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டு, அவனைப் பிடித்துத் தள்ளினாள்.

சற்றுத் தடுமாறியபோதும், இலகுவாகவே சமாளித்துக் கொண்டு, "ரொம்பவும் பிகு பண்ண வேண்டாம், சந்தனா!" என்றான் தீபன்! "அப்புறம், அதை நிஜம் என்று நான் நம்பிவிட்டால், உனக்குத்தான் நஷ்டம்!"

என்ன மனிதன் இவன்...?

நிஜத்தை, நிஜம் என்று நம்பிவிட்டால் என்கிறான்!

உண்மை, பொய் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத...

ஒரு கணம் தயங்கிய போதும், 'அடிமுட்டாள்' என்று வாக்கியத்தை, மனது முடிக்கத்தான் செய்தது!


பட்டப் பகலில்! அவனுடைய தாய் வீட்டில்! அந்தத் தாயும், அந்த வீட்டிலேயே இருக்கையில்!

இதிலெல்லாம் நீக்குப் போக்காக இருக்கிற நாட்டில் இப்போது வாழ்ந்தாலும், இவன் பிறந்து வளர்ந்தது, இங்கே தானே?

அப்படியென்ன ஒரு வெறி, அவளை நம்பவே கூடாது என்று?

ஏன் இப்படி?

ஏன், எப்படி என்று யோசிக்கிற நிலையெல்லாம் முடிந்து போயிற்று!

என்னதான் வெறி என்றாலும், கடைசி எல்லையையும், தீபன் தாண்டிவிட்டான்.

இனி...

எஃகு நாணின் விறைப்புடன் நிமிர்ந்து நின்று, கை நீட்டிக் கதவைக் காட்டினாள் சந்தனா. "போங்கள் வெளியே!"

"சந்தனா..."

"உடனே வெளியே போங்கள்! அல்லது... மூன்றாம் அறையில் உங்கள் அம்மா தூங்கிக் கொண்டு இருப்பது, உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்! இந்தப் பிற்பகல் தூக்கம், திடுமெனக் கலைந்து, பதற்றத்துடன் எழுவது, ஆன்ட்டியின் உடல் நிலைக்கு நல்லதல்ல என்பதும் தான்! இதற்கு மேல், நீங்கள் இங்கே நின்றால், அப்படி அவர்கள் விழித்தெழும்படியாக, நான் கத்திக் கூச்சலிட வேண்டியிருக்கும்! அதற்கு, ஒரு கணம் கூடத் தயங்க மாட்டேன். அதனால்... ம்! கெட் அவுட்!" என்றாள் உறுதியான குரலில், அழுத்தம் திருத்தமாகச் சந்தனா!

ஒரு வினாடி, அவள் முகத்தில் எதையோ தேடுவான் போலப் பார்த்தான் அவன்.

கருங்கல் சிலை மாதிரி, கதவைக் காட்டிய கை கூட இறங்காமல், அவள் அப்படியே நிற்கவும், சட்டெனத் திரும்பி வெளியே சென்றான்.

மாடிப் படிகளில், அவனது காலடியோசை தேய்ந்து மறையும் மட்டும், சந்தனா நின்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை!

அப்புறம் கூட, சில பல நிமிஷங்கள் அவளிடம் அசைவே இல்லைதான்.

அறை ஜன்னலின் அருகருகாகப் பறந்து சென்ற, அந்த விட்டு மாமரக் கிளியின் கீச்சிடல் மட்டும் அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வரவில்லை என்றால், இன்னும் எவ்வளவு நேரம், அப்படியே நின்றிருப்பாளோ!

பசிய நிறத்தில் அம்புகளாய் வானத்தில் பாயும், அந்தக் கிளிகளை, ஆன்ட்டியும், அவளும் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பார்கள்!

ஆனால், இனி, அது முடியாது!

ஒரு போதும்!

சட்டென சுற்றுப் புறம் புரிந்தவள் போன்று, சந்தனா ஓடிச் சென்று கதவைச் சாத்தி, உட்புறம் தாளிட்டாள்.

இந்தத் தாளிடலை, அந்த வீட்டில், அவள் முக்கியமாக நினைத்தது கிடையாது!

அதுவரை!

ஆனால், இனி இது முடியாது!

அந்தத் தேவையோடு, அவள் அங்கே இருப்பதே கூடாதே!

இருந்தால், அவளது மறுப்பு வெறும் பிகுதான் என்று, அவன் நிச்சயமாக நினைப்பான்!

அப்புறம்... சே!

தலைமை ஆசிரியருடைய மகள் என்பதாலோ, என்னவோ, சந்தனாவுக்கு, இந்த மாதிரியான அவமதிப்புகள் நேர்ந்ததே இல்லை எனலாம்!
எப்போதுமே மதிப்பும், மரியாதையும் தான்! பண்பும், பிரியமும் தான்!

எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வைத்து, இன்று...

சேசே! அதைப் பற்றி நினைக்கக் கூடாது! இனி என்ன செய்வது என்று மட்டும் தான்...

'விண் விண்' என்று தெறித்த தலையைப் பிடித்தபடி, சந்தனா யோசிக்க முயன்றாள்.

எப்படியும், இந்த வீட்டை விட்டுப் போயாக வேண்டும்! எங்கே, எப்படி என்று மட்டும் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்!

சிரமப்பட்டு, வலியை ஒதுக்கி யோசித்ததில், உடனடித் தீர்வுக்கு, ஒரே ஒரு வழி அவளுக்குத் தென்பட்டது!

அன்றைய மதியத் தூக்கம் முடிந்து, மாலைக் காபிக்காக மீனாட்சி அம்மாள் கீழே வந்து உட்கார்ந்த போது, மகன் தீபனும் உடன் வந்து அமர்ந்தான்.

எப்போதேனும் வேலை இல்லாத சமயங்களில், அவன் அப்படி வருவது உண்டுதான் என்பதால், மீனாட்சிக்கு அதில் அதிசயம் ஏதும் தோன்றவில்லை!

ஆனால், "சந்தனாவுடைய அண்ணன் எங்கேம்மா இருக்கிறார்?" என்று கேட்டது ஆச்சரியமாகத்தான் இருந்தது!

சந்தனாவின் பெயரைக் கேட்டாலே, எண்ணெயில் விழுந்த அப்பமாகக் குதிக்கிறவன், அவளுடைய உறவைப் பற்றியெல்லாம் விசாரிக்கிறானே!


வியப்புடன் நோக்கி, "ஏன் கேட்கிறாய்?" என்று பதில் கேள்வி கேட்டாள் அன்னை!

"என்னம்மா நீங்கள்? அதிகப் பழக்கம் இல்லாத பெண்! அவளை வீட்டுக்குக் கூட்டி வந்து வைத்திருக்கிறீர்கள்! அவளுடைய உற்றம், சுற்றம் எப்படி, எங்கே என்று விசாரிக்கக் கூடாதா?" என்று குறையோடு கேட்டான் மகன்.

பழக்கம் இல்லாத ஒருத்தியைத் திருமணமே செய்தவன், என்னைக் கேட்கிறாயா என்று எழுந்த கேள்வியை உள்ளேயே அடக்கினாள் அன்னை!

அவனே, அதில் நொந்துவிட்டவன்! அதை, இப்போது குத்திக் கிளறுவதில் என்ன லாபம்?

ஒருவேளை, அவளை வைத்து எடை போடுவதால் தான், சந்தனாவிடம், இப்படிக் காய்கிறானா?

அத்தோடு, இந்தப் பத்திரிகைப் பிரச்சினை வேறு!

மகனை நியாயப் படுத்துகிறோம் என்று உணர்ந்து, அந்த வகை எண்ண ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக் கொண்டு, அவன் கேட்ட விவரங்கள் அனைத்தையுமே தாயார் தெரிவித்தாள்.

"தாய் இல்லாததால், உறவுகள் பழக்கம் ரொம்பவே விட்டுப் போயிற்று போல! ஆனால், அண்ணன் தங்கைக்குள் பாசம் அதிகம்! தந்தை இறந்த பிறகு, தங்கையைத் தனியாக இங்கே விட்டுவிட்டு, யுஎஸ் போகவே அவனுக்கு மனமில்லை. ஆனால், போக மறுத்தால், தந்தை இவ்வளவு காலம் சேர்த்து வைத்தது அனைத்தையுமே கட்ட வேண்டிய நிலைமையாம்! அதனால் சந்தனா தான், அண்ணனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறாள்! மொத்தத்தில், ஆறு மாத வேலை என்றாலும், முடிந்தவரை, அதைச் சீக்கிரமே முடித்துவிட்டுத் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறானாம்!"

எல்லாமே, சந்தனாவாகச் சொன்னவையாகத்தான் இருக்கிறது!

"அந்த அண்ணனின் முகவரி உங்களிடம் இருக்கிறதாம்மா?"

திரும்பி மகன் முகத்தைப் பார்த்தாள் பெற்றவள். "என்னடாப்பா சந்தேகமா? பூபாலன் வந்துவிட்டால், சந்தனாவைக் கூட்டிப் போய்விடுவானே, அவளைப் பிரிய நேருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! நீயானால்..."

"ஐயோ, என்னம்மா நீங்கள்! ஓர் அன்னியப் பெண்! நம் பொறுப்பில் இருக்கிறாள்! ஏதோ ஓர் அவசரம் என்றால், ஒரு காய்ச்சல் என்றால் கூடத் தகவல் தெரிவிக்கவேனும், அவளுடைய உறவினர் முகவரி வேண்டாமா? அதற்காகக் கேட்டால், என்னென்னமோ சொல்லுகிறீர்களே!

"அவள் இங்கே என்னோடு தங்க வந்தபோது, தங்கை தனியே தவிக்க நேராமல், உடன் வைத்திருப்பதற்காக நன்றி தெரிவித்து, அந்தப் பையன் யுஎஸ்சில் இருந்து ஒரு கடிதம் எழுதினான். அதில் அவனது விலாசம் முழுதாக இருக்கிறது! பாவம்! தாயில்லாவிட்டாலும், பெரியவர், பிள்ளைகளைப் பண்போடு வளர்த்திருக்கிறார்!"

"அந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டும்!" என்று தீபன் கேட்கவும், "கேட்பாய் என்று நினைத்தேன்!" என்றாள் தாய் ஒரு மாதிரிக் குரலில்! "நல்ல மனிதர்களைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சந்தேகப்படுகிறாயே!" என்று சற்று வருத்தமும் பட்டாள்!

இப்போது, மகன் தன்னை மறைக்க முயற்சிக்கவில்லை! "என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தாலும், போதாது என்று தான் சொல்வேன், அம்மா! அத்தோடு, எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவரை, நம்பாமல் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஏமாற்றத்துக்கு இடமிராது! அந்த முகவரியைத் தருகிறீர்களா?"



யாரை நம்பலாம் என்று கூட அறிந்து கொள்ளத் தெரியாமல், இவன், அங்கே என்ன தான் வாழ்க்கை நடத்துகிறானோ என்று உள்ளூர அலுத்தபடி, "தாராளமாகத் தருகிறேன்! அவர்கள் யாருமே, தங்கள் முகவரியையோ, டெலிபோன் எண்ணையோ யாருக்கும் தரக்கூடாது என்று சொன்னதே இல்லை!" என்று மகனுக்கு ஒரு சிறு குட்டுக் கொடுத்துவிட்டு, பூபாலனின் முகவரியை எடுத்து வந்து மகனிடம் கொடுத்தாள் அன்னை!

தாயின் செல்லை வாங்கி, எலிசாவோடு தொடர்பு கொண்டு, பூபாலனின் முகவரியை அவளிடம் சொன்னான் தீபன்.

"இந்த முகவரி சரிதானா என்று செக் பண்ண வேண்டும், எலிசா!" என்றான்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ. 9...

Post by udhayam72 Fri May 10, 2013 3:36 pm

எதிர் முனையில் அவள் ஏதோ கேட்கவும், "என் அம்மா மிகவும் பிரியம் வைத்திருக்கும் பெண்ணுடைய அண்ணன்! அம்மா ஏமாந்துவிடக் கூடாதே என்று தான்! என்னது? நான் வருவதா? பா...ர்க்கலாம்! கொஞ்ச நாள் ஆகட்டும்! அதன் பிறகு சொல்கிறேன்! வைத்துவிடு...பை!" என்று செல்லை அணைத்தான் தீபன்!

"என்ன? கூப்பிடத் தொடங்கிவிட்டாளா? என்றைக்கு டிக்கெட் எடுக்கப் போகிறாய்?" என்று மீனாட்சி எரிச்சலோடு கேட்க, "இப்போதைக்கு இல்லைம்மா! நிஜம்!" என்று அழுத்திச் சொன்னான் அவன்.

தன் பொம்மையோடு வந்து, "பசி!" என்றாள் மித்ரா. "இன்றைக்கு ஏன் கிராண்ட்மா, சந்தனா சிற்றுண்டி சாப்பிட வரவில்லை? என்னை மட்டும், கட்டாயம் சாப்பிடணும் என்பாளே?" என்று, சந்தனாவைத் தேடினாள்.

"ஆமாம், அவள் ஏன் இன்னும் வரவில்லை?" என்றாள் மீனாட்சியும்!

சமயத்தில் சமையல்காரம்மாவும் வந்து, "அவங்க அறைக் கதவு சாத்திருக்கம்மா! நானும், கூப்பிட்டுப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்! சந்தனாப் பொண்ணு, பதிலே சொல்லவில்லை! பாத்ரூமிலே இருக்கிறாளோ என்று வந்துவிட்டேன்!" என்றாள்.

ஆட்டம் காட்டுகிறாளா, அல்லது அவனைச் சந்திக்கக் கூடாது என்று எண்ணுகிறாளா?

எதுவானாலும் வயிறு காய்ந்தால், தானாக வருவாள் என்று நினைத்த தீபன், "ஏதாவது முக்கியமாக முடிக்க வேண்டிய வேலையாக இருக்கும், அம்மா! நோட்டுத் திருத்துவது, பாடம் தயார் பண்ணுவது என்று நீங்கள் தான் கடமை, கண்ணியத்தோடு வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே! ஆனால், அப்படி ஒன்றும், ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யமாட்டாள் என்று நினைக்கிறேன்! பசித்தால், தானாக வந்து சாப்பிடுவாள், நீங்கள் முதலில் சாப்பிட வாருங்கள்!" என்று, தாயையும் மகளையும் உண்ண அழைத்துப் போனான்.

மகனோடு பேசிக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் அவனோடு உணவருந்தச் சென்றாலும், உள்ளூர ஏதோ நெருட சந்தனாவை அழைத்து வருமாறு, சமையல்காரம்மாவை மீண்டும் அனுப்பி வைத்தாள் மீனாட்சி.

மீண்டும் பதில் இல்லை என்றானதும், சந்தனா யாரையும் அலட்சியம் செய்கிற பெண் இல்லையே என்று எண்ணி சமையல்காரி, என்னவோ என்று, சட்டெனப் பதறிப் போனாள்.

கீழே விழுந்து, கிழுந்து அடி ஏதும் பட்டிருந்தால்?

கதவுக் குமிழைத் திருகினால், கதவு உடனே திறந்து கொண்டது! உட்புறம் தாளிடவே இல்லை!

அறையின் உள்ளேயோ, குளியல் அறையிலோ சந்தனா இல்லை என்றானதும், சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு, படுக்கையை ஒட்டியிருந்த முக்காலி மீது மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதம் கண்ணில் பட்டது!

அதைப் பிரித்துப் படிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று உணர்ந்து, கடிதத்தை அப்படியே எடுத்துப் போய், மீனாட்சியிடம் கொடுத்தாள்.

"அறையில் சந்தனா இல்லையம்மா! இந்தக் கடிதாசி மட்டும் முக்காலி மேலே இருந்தது!"

ராட்சசி! எல்லாவற்றையும் எழுதியிருப்பாளோ என்று, சட்டென தீபனின் முகம் கன்றிவிட்டது!


அன்னையின் ஒழுக்க விதிகளே வேறாயிற்றே!

"என்னது?" என்று பதட்டத்துடன் மீனாட்சி கடிதத்தைப் பிரிக்கையிலேயே, "நான் படிக்கிறேன் அம்மா! நீங்கள் அமைதியாக இருங்கள்!" என்று பிடுங்காத குறையாகக் கடிதத்தை வாங்கிப் பார்த்தவனுக்கு, அப்பாடி என்றிருந்தது!

சந்தனாவின் சுருக்கமான கடிதத்தில், அவனது பெயரே இல்லை!

அவளுக்குத் தங்குவதற்கு, ஒரு நல்ல் விடுதியில் இடம் கிடைத்துவிட்டது! இன்றே வந்தால் தான், இடம் உறுதி என்பதால், ஒரே செடி மாற்றுடையோடு போவதாகவும், பிறகு வந்து மற்றவைகளை எடுத்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.


"உங்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்புவதுதான் சரியான முறை, ஆன்ட்டி! ஆனால், என் மீதுள்ள அன்பினால், தடுக்கப் பார்ப்பீர்கள்! உங்களை மீறிச் செல்ல நேருமே என்றுதான், இப்படிக் கிளம்புகிறேன், ஆன்ட்டி! நீங்கள் எனக்குச் செய்திருக்கும் அனைத்துக்கும் மிக்க நன்றி!" என்றவள், அந்த வீட்டில் இருக்கையில் தன் மீது அன்பு காட்டிய சமையல்காரம்மா, ராசையா, பணிப்பெண் எல்லோருக்குமே நன்றி தெரிவித்ததோடு, 'மித்திக் குட்டிக்கு அன்பைச் சொல்லவும்' என்று முடித்திருந்தாள்!

கடிதத்தை உரக்கப் படித்து முடித்த போது, அவனது பெயர் விடுபட்டிருந்ததே, இப்போது முகத்தில் அறைந்தது போலத் தீபனுக்குத் தோன்றியது!

அவனால் தான் போயிருக்கிறாள் என்று காட்டியிருக்கிறாள்!

அவளது இந்தியப் பண்பாட்டுக்கு, அவனது செயலைச் சாதாரணமாக எடுத்து, உரிய மதிப்புக் கொடுத்து, ஒன்றுமில்லை என்று விட்டுவிடத் தெரியவில்லை!

அப்படி, அவன் என்ன முரட்டுபலம் காட்டி, அவளை பலாத்காரமா பண்ணிவிடப் போகிறான்? முட்டாள், என்று எண்ணியவனுக்குத் தாயின் முகத்தில் வருத்தத்தைப் பார்க்கையில், சந்தனா மீது கோபமும் வந்தது!

ஏதோ, சரியாக இதே சமயத்தில், அவளுக்கு ஒரு விடுதியில் இடம் கிடைத்திருக்கிறது! இல்லாவிட்டால் முழுங்கிக் கொண்டு சும்மாதானே இருந்திருப்பாள்! இப்போதும், அப்படியே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே என்று எரிச்சலுடன் நினைத்தான்!

அழத் தயாராக இருந்த மகளையும், முகம் வாடியிருந்த தாயையும் சமாதானம் செய்து, வேடிக்கையும் விளையாட்டுமாகப் பேசி உற்சாகப் படுத்துவதிலேயே, அன்றைய மாலை முழுவதையும் தீபன் செலவிட நேர்ந்தது!

அப்போதும், அதில் முழு வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாத நிலைதான்!

இபப்டி வீட்டை விட்டுப் போவாள் என்று தெரிந்திருந்தால் எப்போதும் போல ஒதுங்கியே இருந்திருப்பான்!

சந்தனா, இவ்வளவு அழகாக இல்லாமல் இருந்து தொலைந்திருந்தாலும், இந்தப் பிரச்சினை நேர்ந்திராது!

பளிச்சென்று கண்ணைக் கவர்கிற அழகோடு, வீட்டில் ஒருத்தி வளைய வந்தால், ஓரிரு சமயம் இப்படியும் நடக்கக்கூடும் தானே?

இதற்குப் போய், இப்படி வீட்டை விட்டே வெளியேறி விட்டால், எத்தனை பேருக்கு மனது கஷ்டப்படும் என்று யோசிக்க வேண்டாமா என்று, சந்தனா மீதே எரிச்சல் பட்டான் தீபன்!

இந்த அழகில் அவள் ரொம்பத்தான் பாசம் உள்ள பெண் என்று உருகுகிறார்கள், இந்த அம்மா! அப்படிப் பாசம் இருக்கிறவள் என்றால், தன் பிரிவால் ஒரு முதியவளும் குழந்தையும் பாதிக்கப் படுவார்களே என்று, வீட்டை விட்டு வெளியேறு முன் யோசித்திருக்க மாட்டாளா என்ன?

என்னதான் முயன்றும், வீடு களையிழந்து தெரிந்தது!

மித்ரா, தன் பழைய வழக்கப்படி, பொம்மையை அணைத்துப் பிடித்தபடி, ஒரு சோபா மூலையில் முடங்கி விட்டாள்.

மீனாட்சி அம்மாள், மருத்துவமனைக் கணக்குகளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தவள், கண்ணாடி கூடப் போடாமல், விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்!

ஹால் டீவி ஓடிக் கொண்டிருந்தபோதும், அதைப் பார்ப்பார் இல்லாமல், சமையல்காரம்மா கூடத் தலையைப் பிடித்துக் கொண்டு கண் மூடிக் கால் நீட்டி அமர்ந்திருந்தாள்!

தன் எழுத்து வேலையைத் தொடங்கிய தீபன், அதில் மனம் ஒன்றாமல் எழுந்து வெளியே வந்தபோது, கண்ட காட்சி இதுதான்!

என்ன இது?

எவளோ ஒருத்தி, ரத்த சம்பந்தமே இல்லாதவள், சில மாதங்கள் இருந்துவிட்டு, அவளுடைய அண்ணன் வந்ததும் அவனோடு இந்த வீட்டை விட்டுப் போய்விடப் போகிறவள்! அவள் இல்லை என்பதற்காக, எல்லோரும் ஏதோ வீடு மாதிரித் துக்கம் காக்கிறார்கள்!

இத்தனைக்கும், சந்தனா நல்லவளா, கெட்டவளா என்பது கூட, இன்னமும் நிச்சயமில்லை!


எரிச்சலோடு நடந்து போய், டீவியை ஆஃப் செய்தான் தீபன்!

என்ன என்பது போல, வெறுமனே அவனைப் பார்த்தாள் அவளுடைய அன்னை!

தூக்கம் கலைந்த மாதிரி, வாரிச் சுருட்டி எழுந்து, "நேரமாகிவிட்டதா, தம்பி? டிபன் எடுத்து வைக்கட்டுமா?" என்று வினவிய சமையல்காரம்மா, ஹாலின் பழைய காலத்துக் கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.

"இன்னும் நேரமாகவில்லையே! தம்பிக்குப் பசித்து விட்டதா? பலகாரமே வைத்து விடட்டுமா, அல்லது, கொறிக்கிற மாதிரி ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று மீண்டும் கேட்டாள்.

"ஒன்றும் வேண்டாம்! ஆனால், நீங்கள் எல்லோரும், ஏன் இப்படி ஒரேயடியாக டல்லடிக்கிறீர்கள்? அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, சாதாரணமாக இருங்களேன்!" என்றான் அவன் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்!

'உச்சு'க் கொட்டினாள் மீனாட்சி அம்மாள்.

"என்னவோ, சந்தனா இங்கே இருந்தால், பள்ளியில் நடந்தது, பேப்பரில் வந்தது என்று ஏதாவது சொல்லுவாள்! நாம் சொல்லுவதையும் கேட்பாளா, அவள் இல்லாதது, கையொடிந்த மாதிரி, வேலையே ஓட மாட்டேன் என்கிறது! நாலைந்து நாட்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! போகட்டும் போ! நாங்கள் எப்படியோ சமாளிக்கிறோம்! நீ போய், உன் வேலையைக் கவனி!" என்று தாயார் சொல்லவும் தான், தீபனுக்குச் சுரீலென உறைத்தது!

அவனும் வேலை ஓடாமல் தான் எழுந்து வந்தான்!

அப்படியானால், அவனும், சந்தனா வீட்டில் இல்லாததை உணர்கிறானா?

எப்படி?

நம்ப முடியவில்லை அவனால்!

சந்தனா வீட்டை விட்டுப் போனதற்கும், அவனுக்கு வேலையில் மனம் ஈடுபடாததற்கும் எந்த விதமான தொடர்பும் இருக்கக் கூடும் என்று, தீபனால் மெய்யாகவே நம்ப முடியவில்லை!

அவனுடைய மனைவி, அவனுடைய குழந்தையைப் பெற்றவள் பிரிந்து போன போது கூட, அவனது வேலைக்கு எந்த விதமான தடையும் நேரவே இல்லை!

அவளுக்கு விமான நிலையத்துக்குப் போவதற்குக் கார் அனுப்பும்படி எலிசாவிடம் சொல்லிவிட்டு, எழுதிக் கொண்டிருந்த காட்சியை முழுதாக முடித்து விட்டுத்தானே, அறைக்குள் இருந்து அவன் வெளியே வந்ததே!

வந்து, பத்திரிகைகளுக்குப் பேட்டி, போஸ் எல்லாம் கொடுத்து, "ஓர் அத்தியாயம் முடிந்தது" என்று சொன்னது எல்லாமே, அவனுக்கு நன்றாகவே நினைவிருக்கிறதே!


இரவில் 'காஸ்டிங்' டைரக்டரோடு டின்னர் பேச்சு கூட!

எதிலுமே, அவனுக்கு எந்தத் தடையும் நேரவே இல்லை!

மனைவியே அப்படி என்றால், யாரோ ஒருத்தியான சந்தனா இல்லாதது அவனைப் பாதித்திருக்க வாய்ப்பில்லை!

ஆனால், தன்னால் தான், அந்த முட்டாள் பெண் வீட்டை விட்டுப் போனாளோ என்ற குற்ற உணர்ச்சி... ஒரு வேளை, அது காரணமாக இருந்திருக்கலாம்!

சொல்லப் போனால், சந்தனா வீட்டை விட்டு வெளியேறியதால், ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகி விட்டதில், அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்.

சந்தனா பத்திரிகைக்காரி அல்ல என்ற முக்கியமான விஷயம்!
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ...10

Post by udhayam72 Fri May 10, 2013 3:37 pm

அவனைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக வந்தவள் அவள் என்றால், இப்படி இடையில் வீட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டாள்.

செய்தி கிடைக்கும் வரை, உடும்பாய் ஒட்டிக் கொண்டு, அங்கேயே இருந்திருப்பாள்.

அந்த வகையில், அவனது சந்தேகம் நிவர்த்தியாகி, அங்கங்கே வீட்டில் அவளைப் பார்க்கும் போது, என்ன குறிப்பு எடுக்கிறாளோ என்ற எரிச்சல் இல்லாமல் இருக்க முடிவது, அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்!

மாரீட்டா பிரிந்து போனதும் நிம்மதியாக இருந்த மாதிரி!

ஆனால், அப்போது போல, இப்போது ஏன் எழுத முடியவில்லை?

ஒரு வேளை, தாய், மகள் இருவரின் வாடிய முகங்களும் அவனது எழுத்தைக் கெடுத்தனவோ என்று எண்ணி முடிக்கப் பார்த்தால், அந்த எண்ணத்திலும் ஒரு பெரிய பிழை இருந்தது!

வேலை ஓடாமல் அறையை விட்டு வெளியே வந்த பிறகுதான், வீட்டினரின் வாடிய முகங்களை அவன் பார்த்ததே! எனவே, அவனது வேலை கெட்டுப் போனதற்கு, அதைக் காரணம் காட்ட, அடியோடு முடியாது!

பின்னே?

காரணம் கண்டுபிடிக்க முடியாததால், எரிச்சல் இன்னமும் அதிகமாக, அதை யாருக்கும் காட்ட மனமற்று, தீபன் மீண்டும் அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.

குறைந்த பட்சமாய் வெளியே இருந்தவர்களாவது, அவன் மும்முரமாய் வேலை செய்வதாக நினைக்கட்டுமே!

சந்தனா சென்றது, அவனைப் பாதிக்கவில்லை என்றும்!

இரவு உணவும் ஏனோ தானோ என்று, எப்படியோ முடிந்தது!

"எந்த விடுதி? அது எங்கே இருக்கிறது என்று, சந்தனா ஒன்றுமே குறிப்பிடவில்லையே! என்ன, இப்படி செய்து விட்டாள்! எதற்காக என்று, உனக்கு ஏதாவது புரிகிறதா, தீபு?" என்று வருத்தத்துடன் மீனாட்சி அம்மாள் முனகவும், தீபன் பொறுமை இழந்தான்.

"என்னைக் கேட்கிறீர்கள்! இத்தனை நாளும், அவளைக் கொஞ்சிக் குலவிக் கொண்டு இருந்தது நீங்கள் தான்! உங்களையே மதிக்காமல் கிளம்பிவிட்டாள்! போகிறாள் என்று அவளை மறக்க முயற்சிப்பீர்களா, அதை விட்டு... விடுங்கள், அம்மா!" என்றான் அவன்.

"அதில்லைப்பா! என்னவோ, இது அவள் குணத்தோடு ஒத்துப் போகவில்லை!... சரி சரி, விடு. உனக்குத்தான் அவளை எப்போதுமே பிடிக்காதே!"

"கிராண்ட்மா, எனக்கு சந்தனா ஆன்ட்டி பிடிக்கும்!" என்றாள் மித்ரா கண்ணீருடன். "இப்போது யார் எனக்கு கதை சொல்வது?" என்று அழுதபடியே பாட்டியிடம் சென்று, அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள் சிறுமி!

பாட்டியும் பேத்தியும் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து, செய்கையற்று நின்றான் தீபன்.


அந்த வேளையில், பக்கக் கதவைக் கைவிட்டு திறந்து கொண்டு வந்த ராசையா, பின்புறமாய்ச் சாப்பிட போகாமல், வீட்டினுள் குடும்பத்தார் அமர்ந்திருந்த ஹாலுக்கு வந்தான்.

அவனைப் பார்த்ததும், "என்ன ராசையா, உன் தங்கை குடும்பத்தை வழியனுப்பி விட்டாய் அல்லவா? ரயில் சரியான நேரத்துக்குக் கிளம்பியதா?" என்று, அவனிடம் பொதுவாக விசாரித்தாள் மீனாட்சி.

கிராமத்துப் பக்கம் போக முடிவு செய்து கிளம்பிய தங்கை குடும்பத்தை ரயிலேற்றி விடுவதற்காக, ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தான் அவன்.

திரும்பி வந்துவிட்டதைத் தன்னிடம் சொல்லவே, அவன் அங்கே வந்திருப்பதாக எண்ணிய மீனாட்சி, அதற்குத்தக பணியாளரிடம் விசாரித்தாள்.

"ஆமாம்மா, பிள்ளை குட்டியோட, மூட்டை முடிச்சு எல்லாம் ஏற்றி அனுப்பி விட்டேம்மா! ஆனா... நான் சொல்ல வந்தது, வேறேம்மா! அங்கே..." என்று குழப்பத்துடன் இழுத்தான் அவன்.

"அங்கே என்ன?"

"அங்கே... நம்ப சந்தனாம்மா வீட்டிலே இல்... வந்து, சந்தனாம்மா, எங்கயாச்சும் வெளியூரு போறாங்களாம்மா?" என்று அவன் கேட்கவும், எல்லோருமே ஷாக் அடித்தது போலத் திகைப்புடன் அவனைப் பார்த்தனர்!

இரண்டெட்டில் அவன் அருகே வந்து, "சந்தனாவை அங்கே பார்த்தாயா?" என்று ராசையாவின் தோளைப் பற்றிக் கேட்டான் தீபன்!

"விடுதிக்குப் போனவள், ரயில் நிலையத்திலா? அதுவும் இந்த நேரத்தில் எப்படி? நீ சரியாகத்தான் பார்த்தாயா, ராசையா?" என்று கேட்டாள் வீட்டுத் தலைவி.

"சொல்லு! நீ, சந்தனாவைத்தான் பார்த்தாயா?" என்று மறுபடியும் கேட்டான் தீபன்.

"ஆமாங்கய்யா! அவங்க மாதிரியேதான் இருந்தது! ஆனா, ரயிலுக்கு வெளியிலே நிக்கலை! ராவு ரயிலுக்குக் காத்திருப்பாங்களே, அந்த ரூம்புக்குள்ளார ஒரு மாதிரித் தலையைப் பிடித்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க! நம்ப அம்மா, எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்களே, அப்படி இல்லையேன்னு, எனக்கு சந்தேகமாப் போயிட்டுதும்மா. முக்காடும் போட்டிருக்க மாட்டாங்களே! சரி பொம்பளைங்க உட்கார்ந்திருக்கிற ரூம்பு! ஆள் அம்பு சரியாத் தெரியாம, உள்ளே போனா வம்பாப் போகுமோன்னு பயந்து விட்டேன்! அம்மா, வீட்டிலே இருக்கிறாங்களா இல்லியா?" என்று கவலையுடன் விசாரித்தான் வேலையாள்.

"என்னவோ நடந்திருக்கின்றது..." என்று மீனாட்சி சந்தேகமாகக் குழம்புகையில், தீபனுக்கு விஷயம் புரிந்து போயிற்று!

ஏனெனில் தொடங்கி வைத்தவன் அவன் அல்லவா?

இப்போது, அவனுக்கு இரண்டு பொறுப்புகள்!

சந்தனாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வருவதோடு, நடந்தது எதுவும் அன்னையின் காதுக்குப் போய் விடாமல் சமாளிப்பதும்!

"ஏன் தீபு, நீ சந்தனாவை ஏதேனும் சொன்னாயா?" என்று பெற்றவள் திடுமென, அவனை நேரடியாகக் கேட்கவும், ஒரு கணம் தீபன் தடுமாறிப் போனான்.
"என்னம்மா நீங்கள்? இப்படி கேட்கிறீர்கள்!" என்று சும்மா சமாளிக்க முயன்றான்.

"பின்னே? இங்கே அவளிடம் ஏதாவது தகராறு பண்ணுகிற ஒரே ஆள் நீதானே?"

"அன்னம்மா, என் கைப்பையை எடுத்து வாருங்கள். ராசையா? டிரைவர் வீடு பக்கம் தானே? நீ அவனை அழைத்து..." என்று எழுந்த தாயின் பேச்சில் குறுக்கிட்டு, "அம்மா, இந்த நேரத்தில் நீங்கள் அலைய வேண்டாம்! நான் போய் அவளைக் கூட்டி வருகிறேன்! ராசையா, எழும்பூர் தானே?" என்று, கார் சாவியை எடுத்தான் தீபன்.

தாயார் சஞ்சலத்தோடு பார்க்கவும், "நம்புங்கள், அம்மா! சந்தனாவை கட்டாயமாக கூட்டி வருவேன்! நான் வழக்கம் போல ஏதோ சொன்னேன் தான்! ஆனால், சந்தனா, இவ்வளவு தூரம்... வீட்டை விட்டுப் போகும் அளவுக்குப் பெரிதாக, அதை எடுத்துக் கொள்வாள் என்று எதிர் பார்க்கவில்லை! அவள் கையில், காலில் விழுந்தேனும், மன்றாடிக் கூட்டி வருகிறேன்! உங்களுக்காகவும், மித்ராவுக்குமாக அவளைத் திரும்ப அழைத்து வந்தே தீருவேன்! நிச்சயம்!" என்று விட்டு, வேகமாகக் கிளம்பிச் சென்றான் அவன்!


சந்தனாவை அழைத்தும் வரவேண்டும்! அதற்கு முன், அவளிடம் தனியாக பேசவும் வேண்டும்!

நல்லவேளை! சந்தனா ஒரு மாதிரிப் பழி வாங்குகிற தினுசில்லை!

"ராசையாவை..." என்று தாயார் தொடங்கியதை கேட்க, அவன் அங்கே இருக்கவில்லை! அதற்குள் வேகமாக வெளியே சென்றுவிட்டிருந்தான்.

காரை வேகமாக ஓட்டிச் சென்ற போது, அவனது கவலையெல்லாம் சந்தனா எழும்பூரில் இருந்து, எங்கேயும் போய்விடக் கூடாதே என்பதுதான்.

காரை நிறுத்திவிட்டு, வெயிட்டிங் ரூம் எங்கே இருக்கிறது என்று பார்வையால் துழாவிய போது, யாரோ பேசும் குரல் கேட்டது!

"தனியாதான் இருக்குதுபா! எப்படியாவது, அறையை விட்டு வெளியே கொண்டு வர்றது என் பொறுப்பு! அப்புறம் நீதான் பார்த்துக்க வேணும்! இன்னா சொல்ற?"

பதைப்புடன் பார்த்த போது, வெயிட்டிங் ரூம் கண்ணில் பட்டது!

உள்ளே தலை தாங்கி அமர்ந்திருந்த அவளும்!

அந்த அறையின் பொறுப்பாளர் போலத் தோன்றிய பெண்ணிடம் அனுமதி கேட்டுக் கொண்டு, அருகில் வந்தவனைப் பார்த்ததுமே சந்தனா எழுந்துவிட்டாள்.

"வெளியே வா! உன்னிடம் பேச வேண்டும்!" என்ற போதும், மறுக்காமல் உடன் சென்றாள்.

ஓரளவு ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்துக்குப் போனதும், அவ்வளவு நேரம் இருந்த பதைப்பு முழுவதும் கோபமாக மாற, "பெரிய கதாநாயகி என்ற எண்ணமாக்கும்?" என்ற தீபன், ஆத்திரத்தோடு சீறினான்.

"வில்லனாக நடந்தது, நீங்கள் தானே?" என்றாள் அவள் பதிலுக்கு!

"அதற்கு? இப்படி எங்கோ வந்து மாட்டிக் கொள்வதா? உன்னை வெயிட்டிங் ரூமில் இருந்து வெளியே கொணர்ந்து, எப்படி அழைத்துக் கொண்டு போவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள், தெரியுமா? அப்படி நான் என்ன செய்திருப்பேன் என்று நினைத்தாய்? மூன்றாம் தர சினிமா வில்லன் மாதிரிக் கதறக் கதறக் கற்பழிப்பவன் என்றா? அம்மா இருக்கும் இடத்தில், அப்படி நடப்பேனா? நான் கெட்டவனாக இருந்தால் கூட, அங்கே அம்மா இருப்பதே உனக்குப் பாதுகாப்பு அல்லவா?" என்று படபடத்தான் அவன்.

அவன் வெளிப்படையாக பேசியது, அவளது முகத்தைச் சிவக்க வைத்த போதும், "மூன்றாம் அறையில் ஆன்ட்டி இருக்கும் பொழுதுதான், வந்தீர்கள்!" என்று குத்திக் காட்டினாள் அவள்.

"அது வேறு! உன்னைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தது! என்ன விரட்டினாலும், அட்டைப் போல ஒட்டிக் கொண்டு, இங்கேயே இருக்கிறாய். மித்ராவை வேறு வசியம் செய்து வைத்திருக்கிறாய். காரியம் நடப்பதற்காக, எதுவும் செய்வாய் என்று நினைத்தேன்! அழகாகவும் இருந்தாயா? ஒரு முயற்சி செய்யலாமே என்று தோன்றியது... அப்போதுமே, உண்மையிலேயே மறுக்கிறவளை விரட்டுவேனா?"

என்னவெல்லாம் பேசுகிறான்!

சிவந்த முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள் சந்தனா.

"அந்த மாதிரி, நீ நினைக்கும்படியாக, நான் நடந்திருந்தால் சாரி. தயவு பண்ணி, என்னை மன்னித்துவிடு! ஆனால், நீ வீட்டை விட்டு வெளியேறியதும், ஒரு வகையில் நல்லதாயிற்று! உன்னைப் பற்றிய என் சந்தேகம் அடியோடு தீர்ந்து போயிற்று! ஆனால், இந்த மாதிரி, எந்த விதமான ஏற்பாடும் இல்லாமல் தனியே பெண்கள் கிளம்புவது, எந்த நாட்டிலுமே நல்லதில்லைதான்! சரி! வா, வீட்டுக்குப் போகலாம்!" என்று அழைத்தான் தீபன்.


அசையாமலே நின்று, "நான் இங்கே இருப்பது எப்படித் தெரியும்?" என்று கேட்டாள் அவள்.

நடந்ததைச் சொன்னான் அவன்.
. "ஓ! தங்கைக்காக ராசையா இரண்டு நாட்கள் லீவு கேட்டிருந்தான். இன்றைக்குத்தான் அனுப்பி வைத்தானா?" என்றாள் சந்தனா.

இல்லாவிட்டால் என்ற வார்த்தை இருவர் மனதிலும் தோன்றியது!

"முதலில் காருக்குப் போகலாமா? காரில் போய்க் கொண்டே பேசலாம்!" என்றவன், அவள் ஒரு வினாடி தயங்கவும், "என்னை முழுதாக நம்பலாம்! இனி, அது போல நடக்க மாட்டேன், காட் ப்ராமிஸ்!" என்றான் தீபன்.

காரில் ஏறியதும், "உன்னைச் சீக்கிரமாக வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்! இல்லாவிட்டால், மித்ரா அழுது கரைந்து விடுவாள்! அம்மாவும் தவிப்பில், உடம்பைக் கெடுத்துக் கொள்வார்கள்!" என்றான் தீபன்.

"அவர்களுக்காகத்தான் கூட்டிப் போகிறீர்களா?" என்ற கேள்வி, தன்னை அறியாமல் அவள் வாயிலிருந்து வந்தது.

நெரிசலில் காரைக் கவனமாகச் செலுத்திவிட்டு, "எல்லோருக்காகவும்தான்! எனக்காகவும் தான்! என்னால், வீட்டை விட்டுப் போனாய் என்பது, நினைப்பதற்குச் சுகமாக இருக்கும் என்றா நினைத்தாய்?" என்று கேட்டான் தீபன்.

தொடர்ந்து அவனது முறையாக, "ஆனால், நீ என்ன, திடுமென இப்படிச் செய்து விட்டாய்? அங்கே ஏதோ எழுதி வைத்துவிட்டு, இங்கே வெயிட்டிங் ரூமில் வந்து இருந்து, என்ன இது?" என்று கேட்டான் தீபன்.

"என்ன செய்வது?" என்றாள் அவள்! "நீங்கள் அப்படி நடந்த பின், அங்கே தொடர்ந்து இருப்பது, மறைமுகமாக ஒப்புக் கொள்வது போலத் தோன்றும் என்ற பயம்! ஏற்கனவே, தங்குவதற்குக் கௌரவமான இடமாக்த் தேடித் தேடி அலுத்திருந்த சமயம். இன்றிரவுக்கு இங்கே பெண்கள் அறையில் தங்கி விட்டால், நாளைக்கு ஏதாவது இரண்டாம் தர விடுதியிலாவது சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன்..."

"நன்றாக நினைத்தாய்! அசட்டுத்தனமாய்!"

சிறு அமைதியின் பின் "சற்று நேரமாக, எனக்கும் அப்படித்தான் தோன்றத் தொடங்கியிருந்தது!" என்றாள் அவளும். "சும்மா உள்ளே வருவதும், போவதுமாக ஆண்கள் நடமாட்டம் தெரிந்தது! டிக்கெட் இருக்கிறதா என்று கேள்வி வேறு! கொண்டு வருவார்கள் என்று சொல்லி, அப்போதைக்குச் சமாளித்தேன்..."

"அதனால் தான், உன்னிடம் பேசவேண்டும் என்றதும், டிக்கெட் கொண்டு வந்தீர்களா என்கிற மாதிரி, ஏதோ கேட்டார்கள் போல! நான் சும்மா தலையாட்டிவிட்டு வந்தேன். ஆனால், இனி இந்த அசட்டுத்தனம் வேண்டாம். தேவையிராது" என்றான் தீபன்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ. 11

Post by udhayam72 Fri May 10, 2013 3:39 pm

யோசனையோடு அவனைப் பார்த்தாள் சந்தனா


பார்வையை உணர்ந்து, "நம்ப வேண்டும் சந்தனா. இங்கே பிறந்து வளர்ந்தவன் தான் என்றாலும், எனக்கு ஏழு ஆண்டுகளாக, அங்குள்ளதே பழகி விட்டதால், அனுசரிப்பது கொஞ்சம் கடினம். தற்செயலாகக் கை பட்டால் கூட உனக்கும் சட்டென சந்தேகம் தான் வரும்! எனவே, ஒன்று செய்வோம். பொதுவாகப் பார்த்துப் பேச வேண்டிய தருணங்கள் தவிர, இருவருமே, அடுத்தவர் பாதையில் குறுக்கிடாமல் ஒதுங்கிப் போய்விடலாம்! மித்தி, அம்மாவுக்காகத் தயவு செய்து, நீ இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்" என்றான் தீபன்.

ஏதோ யோசித்து, "ப்ளீஸ்!" என்று சேர்த்துச் சொன்னான்!

வேறு வழியும் தான் இல்லையே என்று யோசிக்கும் போதே, தனக்குமே, அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை என்று சந்தனா உணர்ந்தாள்!


அந்த வீட்டு வசதிகளுக்குப் பழகி விட்டதாலா என்று உள்ளூரக் கூசியவளுக்கு, அன்று, அவள் வீட்டை விட்டு வெளியேறிய போதும், அதே வசதிகள் இருக்கத்தானே செய்தன என்பது நினைவு வந்தது ஆறுதலைத் தர, "உம்" என்று சிக்கனமாய் சம்மதித்தாள்!

சற்று நேரம் பேசாமலே காரை ஓட்டிவிட்டு லேசாகத் தொண்டையைச் செறுமி, "வழக்கம் போலவே கடுமையாகப் பேசிவிட்டதாக அம்மாவிடம் சொன்னேன்..." என்று இழுத்தான் தீபன்.

அவன் மேலே பேசுமுன், "அப்படியே இருக்கட்டும்!" என்றாள் சந்தனா.

மற்றபடி, இதைப் போய், மீனாட்சி ஆன்ட்டியிடம் விலாவாரியாக விளக்குவாளா என்ன? கண்ராவி!

அதுவும், அவர்களுடைய பிள்ளையைப் பற்றி!

அத்தோடு, தீபனும்தான், ஒரு மாதிரியாக மன்னிப்பும் கேட்டுவிட்டானே!

"தாங்க்ஸ்!" என்றபடி, காரை வீட்டினுள் செலுத்தினான் தீபன்!

ஆவலும், ஆர்வமுமாக எல்லாரும் அவளை வரவேற்ற விதத்தில், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, அங்கிருந்து சென்றோமே என்று, சந்தனாவுக்கு உள்ளூர மனம் நெகிழ்ந்தது. உருகிப் போயிற்று!

தீபன் சொன்ன மாதிரி, என்னிடம் இந்த வேலை வைத்துக் கொள்ளாதே என்று அவனிடம் கண்டிப்பாக சொல்லியிருந்தால் போதுமா?

பழைய காலக் கதாநாயகி போல வீட்டை விட்டு ஓடி, படாத கஷ்டத்தில் மாட்டி... சரியான சமயத்தில் தீபன் வந்திராவிட்டால், அப்படியும் கூட நேர்ந்திருக்கலாம்!

மற்றவர்கள் எப்படி உணர்வார்கள் என்றும் எண்ணிப் பார்க்கவில்லை. தனக்கு என்ன நடக்கக் கூடும் என்றும் யோசிக்கவில்லை!

அதையெல்லாம் யோசியாது செல்வது, எந்த நாட்டிலும் பெண்களுக்கு நல்லதில்லை, என்றானே!


எண்ணிப் பார்க்கையில், அது எவ்வளவு சரியாகத் தோன்றுகிறது!

கடைசியில் சற்று நேரம் மனது என்னமாகப் பதறிப் போயிற்று!

இருந்திருந்து தீபனின் பேச்சு சரியாக இருப்பதாக, அவள் எண்ணுகிற காலம் கூட வரும் என்று அவள் கனவிலும் கருதியது இல்லை!

தன்னை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக... மீனாட்சி ஆன்ட்டி என்ன சொன்னாள்... அவளது கையில் காலில் விழுந்தேனும் அழைத்து வருவதாகச் சொன்னானாமே! அப்படி அவன் வந்து அவளை அந்த வீட்டுக்கு அழைத்து வருவான் என்பதும், கற்பனைக்கு எட்டாத விஷயமே!

ஆனால், எதிர்பாராதது நடப்பதுதானே வாழ்க்கை!

அவளுடைய தந்தையின் மறைவைப் போல!

சட்டென அதிர்ந்து, படுக்கையில் இருந்து, எழுந்து அமர்ந்தாள் சந்தனா!

'எஸ்கேப்பிஸம்' என்று கூடச் சில பேர் சொல்லலாம்!

ஆனால், சந்தனா அவளுடைய தந்தையின் மறைவு குறித்து நினைத்துப் பார்ப்பதே கிடையாது!

அருமையான தந்தையான அவரை தினந்தோறும் நினையாதிருக்க அவளால் முடியாதுதான்! ஆனால், அவரைப் பற்றிய பலப்பல மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை நினைவுக்குக் கொணர்ந்து பார்த்து, உருகிப் போவாளே தவிர, அவரது முடிவை, கடைசிப் பகுதியை அப்படியே மனதில் இருந்து ஒதுக்கியே தான் வைத்திருந்தாள்.

பூஞ்சை மனம் படைத்தவள் அல்ல என்பதால், அவளால், அது முடிந்தது!

ஆனால், இன்று திடுமென, ஏன் இந்த நினைவு வந்தது?

அன்று அனுபவித்த பல்வேறு உணர்ச்சிகளால் அவள் மனம் பலவீனப்பட்டு விட்டிருந்ததா?

அப்பாவின் மரணமும், அதற்கு முன்னிருந்த...

மனம், அதைத் தொடர்ந்து நினைப்பதைத் தவிர்க்க எண்ணி, அவசரமாகப் படுக்கையை விட்டு இறங்கினாள் சந்தனா.

முக்காலியின் மீது இருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த தண்ணீரை குடித்தாள்!

வழக்கமாக இரவு உணவுக்காகச் செல்லும் போது, இந்த பாட்டிலை எடுத்துப் போவாள். தூங்குவதற்காக மீண்டும் மேலே வரும் போது, பாட்டிலை நிரப்பிக் கொண்டு வருவாள்.

இன்று என்னென்னவோ நடந்து, கீழேயே இருந்து விட்டுப் படுப்பதற்காக மட்டுமே, அறைக்கு வந்தததில், வழக்கம் விட்டுப் போயிற்று!

அப்போதும், அதில் அருந்த தண்ணீர் போதுமானதாக இருந்ததால், அதைக் குடித்துவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க முயன்றாள்.

மனம் அதில் பதியாததோடு, உடலும் அயர்ந்திருந்ததால், சற்று நேரம் படிப்பதற்குள் கண் சொக்கிவிட, விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கிவிட்டாள்.

நல்ல அயர்ந்த உறக்கம்!

திடுமென, சந்தனா படுக்கையில் உருண்டு புரளலானாள்!

கடற்கரையில் கூட நடந்து கொண்டிருந்த தந்தை, திடுமென வீசத் தொடங்கிய சூறாவளியில், அவளை விட்டு விலகி எங்கே போனார்?

இங்கும் அங்கும் ஓடி ஓடித் தேடினால், நுரைத்துக் கொண்டு உயரே எழும்பிய அலை, முகத்தில் ரத்த காயத்துடன் அவரது முகம்!


அலை, அவரை இழுத்துப் போய்விடாமல் பிடிப்பதற்காக ஓடினாள், கால் தடுக்கிக் கீழே விழுகிறாள்!

தவிப்புடன் அலை நீரின் இழுப்பைச் சமாளித்து எழ முயலும்போதே, நடந்ததெல்லாம் கனவு என்பது, சந்தனாவுக்குப் புரியத் தொடங்கிவிட்டது.

என்னதான் முயன்றும், உடனடியாக முழு விழிப்பை கொண்டு வர முடியாமல், உடல் சண்டித்தனம் செய்தது!

சிரமப்பட்டு எழுந்து, குளியலறைக்குப் போய், வியர்த்து வடிந்த முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து, தண்ணீர் பாட்டிலுக்காகக் கையை நீட்டும் போதுதான், பாட்டிலில் தண்ணீர் இல்லை என்பது, அவளுக்கு நினைவு வந்தது!

அதொன்றும் பெரிய விஷயம் இல்லை!

வியர்த்துக் கொட்டியிருந்ததால், சற்றுக் குளிர்ச்சியாகக் குடிக்க வேண்டும் போலத்தான் சந்தனாவுக்கும் இருந்தது! எப்படியும், கீழே போய் ஐஸ் வாட்டரைத்தான் குடித்திருப்பாள்.

கூடவே, எப்போது விழித்தாலும், மீண்டும் உறங்குமுன் அவளுக்கு ஒரு மிடறேனும் தண்ணீர் குடிக்க வேண்டும்!

!
மீண்டும் தூக்கம் கலைந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமே என்று காலி பாட்டிலையும் எடுத்துக் கொண்டு, மெல்லப் படியிறங்கி சாப்பாட்டு அறைக்குச் சென்றாள் அவள்.

ஃபிரிஜ்ஜைத் திறந்து, உள்ளிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறக்கும் போது, "சந்தனா?" என்று தீபனின் குரல் கேட்கவும், அவள் அதிர்ந்த வேகத்தில், பாதி திறந்த நிலையில், கையில் இருந்த தண்ணீர் பாட்டில், கீழே விழுந்து உருண்டது!

"என்ன சந்தனா?" என்றபடி, விளக்கைப் போட்டுவிட்டு, அவள் அருகில் வந்தான் அவன்.

இன்னமும் தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்த பாட்டிலை அவசரமாக எடுத்தவளின் கைகள் நடுங்குவதைக் கண்டதும், பாட்டிலை வாங்கிக் கொண்டு, சாப்பாட்டு அறை நாற்காலி ஒன்றை இழுத்து, அதில் அவளை உட்கார வைத்தான்!

அவள் வந்த நோக்கம் உணர்ந்து ஒரு தம்ளரில் குளிர்ந்த நீர் நிரப்பி அவளிடம் கொடுத்துவிட்டு, "என்ன சந்தனா? என் குரலைக் கேட்டதும் பயந்து விட்டயா?" என்று இதமான குரலில் வினவினான்.

இல்லை என்று தலையாட்டினாள் அவள். "அந்தக் க... கனவு! தி...திரும்பவும், இன்று வந்து விட்டது!" என்றாள் கலங்கிய குரலில்!

அருகிருந்த இன்னொரு நாற்காலியை இழுத்து, அதில் அமர்ந்து, "திரும்பவும், என்றால்? இதே கனவு முன்னேயும் வந்திருக்கிறதா?" என்று கேட்டான் தீபன்.

"இம்!" என்றாள் அவள் ஒப்புதலாக. "இது மூன்றாவது தடவை!"

"என்ன கனவு?" என்று கேட்டான் தீபன்.

அவனை ஒரு தரம் பார்த்துவிட்டு, அவள் பேசாதிருக்கவும், "தயங்க வேண்டாம், சந்தனா. ஒரே கனவு, திரும்பத் திரும்ப வந்தால், அதற்குக் காரணம் இருக்கும்! உன் நிலைமையைப் பார்த்தால், அது பயங்கரக் கனவு என்றும் தோன்றுகிறது! அதிலிருந்து உன்னை மீட்கும் முயற்சியாகத்தான் கேட்கிறேன் சொல்லு!" என்று, தீபன் மறுபடியும் கேட்கவும், ஒரு சிறு தயக்கத்தின் பின், சந்தனா தன் கனவுகளை விவரித்தாள்

"ம்ம்ம், எல்லாக் கனவுகளும் கடைசியில்... சந்தனா, உன் அப்பாவின் மறைவில் பிரச்சினை இருந்ததா?" என்று கேட்டான் தீபன்!

ஆம் என்பது போலத் தலையாட்டினாள் அவள்.

"என்ன அது?"

மடியில் கோத்திருந்த விரல்களைப் பார்த்தபடி, அவள் சொன்னாள், "திருட்டு! ஒரு... ஓர் ஒன்றாம் தேதி சமயம். பள்ளியில், ஸ்டாஃப் மீட்டிங் முடிந்து, அப்பா வர நேரம் ஆகும் என்று நான் முன்னதாக வந்து விட்டேன்! பிறகு பார்த்தால், வெகு நேரம் அப்பா வரவே இல்லை! கடைசியாக ஏழு மணிக்கு மேலே, கதவைத் தட்டிக் கொண்டு, அப்பா நிற்கிறார்! அவரிடமும் ஒரு சாவி உண்டு. பிறகு தான் தெரிந்தது, சாவி துவாரத்தில் சாவியை நுழைக்கும் அளவுக்கு, அவருக்குக் கை நிதானம் இல்லை! வீட்டு வாயில் வரை அப்பா எப்படி வந்தார் என்பதே அதிசயம்! அந்த அளவுக்கு அவரது தலையில் அடி! முகமெல்லாம்... ரத்தம்!


"ஒன்றாம் தேதி அல்லவா? சம்பளம் வாங்கி வந்திருப்பார் என்று, அவரைத் தலையில் அடித்துக் கீழே தள்ளி, எல்லாவற்றையும் பிடுங்கியிருக்கிறார்கள்...!" தொடங்கி விட்ட பிறகு, நிறுத்த முடியாதவள் போல, சந்தனா சொல்லிக் கொண்டே போனாள்.

அவனும் குறுக்கிடாமல் கேட்டான்.

"...ஆனால், அப்பா சம்பளத்தைச் செக்காக வாங்கி, பள்ளியில் இருந்த பாங்கில் கட்டி விடுவார் என்று தெரியாத முட்டாள்கள்!

"அப்படி, என் அப்பாவிடம் அவர்கள் திருடியது எவ்வளவு தெரியுமா? சுமார் முன்னூறு ரூபாயும், ஒரு வெள்ளி மோதிரமும் மட்டும்தான்!

"இதைப் பிடுங்க, என் அப்பாவின் உயிரையே எடுத்து விட்டார்கள்!

"எவ்வளவு நல்லவர் தெரியுமா, என் அப்பா! தேவை என்று கேட்டிருந்தால், அவரே கொடுத்திருப்பார்! அவரைப் போய், அநியாயமாய் அடித்துக் கொன்று விட்டார்களே!" என்று முடித்த போது, அவளது கண்களில், கண்ணீர் பொங்கி வழியலாயிற்று!

சற்று நேரம் குறுக்கிடாமல் அவளை அழ விட்டுவிட்டு, அதன் பின், "அந்தக் குற்றவாளிகளைப் பிடித்தார்களா?" என்று கேட்டான் தீபன்.

"இல்லை! இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்! ஆனால், அவர்களை எப்படியாவது பிடித்து முன்னூறு ரூபாயும் வெள்ளி மோதிரமும், நான் தருகிறேன். என் அப்பாவின் உயிரைத் திருப்பித் தருவாயாடா என்று கேட்க வேண்..." என்று ஆத்திரத்துடன் சொல்லும் போதே, அதன் பயனற்ற தன்மையை உணர்ந்து, உச்சிக் கொட்டினாள், சந்தனா! "என்ன பிரயோஜனம்? யாரை, என்ன கேட்டும் தான் என்ன பிரயோஜனம்?" என்றாள் சோர்வுடன்.

"உண்மைதான்!" என்றான் அவனும்!

சில வினாடி அமைதியின் பின், "இந்தக் கனவைப் பற்றி, யாரிடமும் சொன்னாயா, சந்தனா?" என்று வினவினான்.

"லேசாக ஒரு தரம், அண்ணனிடம் தொடங்கினேன். முதலில் வந்த படகுக் கனவு! ஆனா, டைட்டானிக் பார்த்ததின் பாதிப்பு என்று சொல்லிச் சிரித்தானா? அதற்குப் பிறகு, அண்ணனைப் பிடித்து வைத்துச் சொல்ல, மனது வரவில்லை! அத்தோடு, அவனும் என்னை இங்கே விட்டுவிட்டு வெளிநாடு செல்ல வேண்டிய நிலை! அவனும் வருத்தம்தானே படுவான் என்று..."

தன்னிச்சையாக எழுந்த கையை அடக்கிக் கொண்டு, "அதுதான் காரணம்!" என்றான் தீபன்.

சந்தனா ஏறிட்டுப் பார்க்கவும், "பெரிய இழப்பு, அநியாயமான முறையில் அது நேர்ந்த விதம், இவற்றால் ஏற்பட்ட துக்கம், ஆத்திரம் என்று எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே போட்டு அடைத்து வைத்ததுதான் இந்தக் கனவுகளின் காரணம் சந்தனா. எல்லாமே உள்ளே கிடந்து முட்டி மோதிக் கொண்டு இருந்திருக்கின்றன! உன் மனமோ, உடலோ களைப்படையும் போது, கனவாக வெளிப்பட்டிருக்கிறது! இன்றைய தினத்தை, அப்படிப்பட்ட நாளாக ஆக்கியதற்கு, சாரிம்மா! ஆனால், உள்ளே அடைத்து வைத்திருந்ததை எல்லாம் இப்போது கொட்டிவிட்டாய் அல்லவா? இனி, இந்தக் கனவுகள் வர வாய்ப்பில்லை! அதனால், இனிக் கவலையற்றுப் படுத்துத் தூங்கு!" என்றான் அவன்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ. 12

Post by udhayam72 Fri May 10, 2013 3:40 pm

என்னவோ, சர்வமும் அறிந்தவன் போல, தீபன் கூறிய விதம், சந்தனாவுக்கு வியப்பாக இருந்தது!

நம்ப முடியாததாகவும்!

அவளது கனவுகள் கூடவா, இவன் பேச்சுக்குக் கட்டுப் படும்? ஆனால், இவன் சொல்லும் போது, நம்ப முடியாததைக் கூட நம்பலாம் போலவும் தோன்றியது!

"என்ன? உன் கனவுகள் கூட, என் பேச்சுக்குக் கட்டுப்படுமா என்று யோசிக்கிறாயா?" என்று கேட்டு, அவளைத் திகைக்கச் செய்து விட்டு, "இது, சாதாரண மனோ தத்துவம், சந்தனா! வைத்தியத்தில், மனோ தத்துவம் ஓர் அங்கம்! உனக்குத் தெரியுமோ, என்னவோ, நான் வைத்தியம் படித்தவன் தான்! அதில் மேல் படிப்பையும் முடித்திருக்கிறேன்! யுஎஸ்சில்தான்!" என்றவன், அத்தோடு பேச்சை நிறுத்தி, தோளைக் குலுக்கினான்.


முதல் நாளே, 'சுகம்' மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கருவிகள், அவை தொடர்பான செலவுகள் பற்றித் தெரிந்தவன் போலத் தீபன் பேசியது, சந்தனாவுக்கு இப்போது நினைவு வந்தது!

பிறருக்கு உதவும் பணி என்று மருத்துவத் தொழிலைச் சொல்வார்கள்! அதைப் படித்து முடித்துவிட்டு, இங்கே சொந்த மருத்துவமனையும் வைத்துக் கொண்டு, இவன் ஏன், அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்கிறான்?

ஒரு வேளை, 'அரை வைத்தியன்...' என்று ஏதோ சொல்லுவார்களே, அது போல ஏதோ செய்து விட்டானோ?

அதுதான் மீடியாவுக்கு அப்படிப் பயப்படுகிறானோ?

மனோதத்துவம் பயின்றவனுக்கு, அவளது முகம் காட்டிய பாவம் பிடிக்கவில்லை போலும்!

சட்டென எழுந்து, "ஓகே! என் விஷயம் போதும்! இனியாவது போய், நிம்மதியாகத் தூங்கு! இரவுத் தூக்கம் ரொம்பவும் குறைவது, ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல! நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? கூடக் கொஞ்ச நேரம் சேர்த்துத் தூங்கு! குட்நைட்!" என்று விட்டு, அவனது அறைப் பக்கம் சென்றான் அவன்.

திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!

அதாவது, அவனைப் பற்றிய பேச்சோ, நினைப்போ கூட, அவனுக்குப் பிடிக்கவில்லை! ஆனால் ஏன்?

தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு, அவளது அறையை நோக்கி நடந்தவாறே சந்தனா யோசித்தாள்.

தீபனைப் பற்றிய ஒரு விவரமும், யாரும் சொல்வது இல்லை!

மீனாட்சி ஆன்ட்டியின் பர்சில் இருப்பது தவிர, அவனது புகைப்படங்கள் எதையுமே அந்த வீட்டில் அவள் பார்த்தது இல்லை! அவனது கட்டளையாகவே இருக்க வேண்டும்!

அவனது விருப்பப்படி அவனுடைய தாயாரே, அவனைப் பற்றிப் பேசுவது இல்லை எனும் போது, அவனைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது?

தெரிந்து கொள்வது பற்றி யோசிக்கும் போதே, சற்று முன் பேச்சை நிறுத்தி, அவன் திரும்பிப் பாராமல் சென்றது, அவளுக்கு நினைவு வந்தது!

அடுத்தவர் பாதையில் குறுக்கிடக் கூடாது என்று நேரடியாகவே சொன்னானே!

அவனைப் பற்றிய பேச்சு, கேள்விகள் எல்லாமே, அந்த வீட்டில், பெரும் குற்றங்களே!

கேட்கிறவர் குற்றவாளி என்பது குறைந்த பட்சமாய், அவனது கருத்து!

அதாவது, தீபனைப் பற்றிக் கேட்டு அறிய நினைப்பது, தீக்குள் விரலை வைப்பது போலத்தான்! சூடு பட்டுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால், அவனைப் பற்றி விசாரிக்கவும் கூடாது!

இருக்கிற நிம்மதியைக் கெடுத்துக் கொண்டு, அவளுக்கு எதற்கு வீண் வம்பு!

எப்படியும் அவள் இங்கே இருக்கப் போவதே, அண்ணன் பூபால் வருகிற வரையில் தான்! அது, ஒரு மாதமோ, இரண்டு மாதங்களோ!

அதன் பிறகும் சந்தோஷமாகவே மீனாட்சி ஆன்ட்டியை வந்து பார்த்துப் பேசுகிற மாதிரி, சுமுகமான உறவோடு இருக்க வேண்டாமா?


இவ்வளவு பழகிய பிறகு, மீனாட்சி ஆன்ட்டியின் உறவை அடியோடு விடுவது வேதனையாக இருக்கும்!

மித்ராவும் அப்படித்தான்! ஆனால், அவளை எப்போது வேண்டுமானாலும், அவளுடைய தந்தை, நாட்டை விட்டு அழைத்துச் சென்று விடலாம்! அதனால், அவள் மீது பாசத்தை வளர விடுவது, மித்ராவுக்குமே நல்லதல்ல!

அப்படிக் குழந்தையோடு தீபன் சென்று விடுகின்ற சமயத்தில், ஆன்ட்டிக்கு ஆறுதலாகக் கூட, சந்தனா இங்கே அடிக்கடி வர வேண்டியிருக்கும்!

எனவே, எந்த வகையிலும், இந்த சுமுகமான உறவைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது!

அதற்காக, தீபன் சம்பந்தப்பட்ட அனைத்திலிருந்தும் தூர...தூரமாய் ஒதுங்கிப் போய்விட வேண்டும்!
யோசித்துச் செய்த முடிவைச் செயலாற்றுகிறவளாக சந்தனா எப்போதும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டாள்.

தீபன் முன்னிலையை, முடிந்தவரை தவிர்த்ததோடு, அவனைப் பற்றிய கேள்விகளையும், மனதுக்குள்ளேயே மறைத்து வைத்தாள்!

மித்ராவிடம் இருந்தும் ஒதுங்கத்தான் முயன்றாள்.

ஆனால் ஒரு தரம் சொல்லாமல் கொள்ளாமல் போனாளே என்ற பயத்தில், சிறுமி அவளிடம் பசை போட்ட மாதிரி ஒட்டிய போது அவளால் விலக்க முடியவில்லை!

வீட்டின் மற்றவர்களிடம் எப்போதும் போல் நல்லுறவு தான்!


சொல்லப் போனால், அவளைச் சந்தோஷப்படுத்த முயன்றார்கள் என்றே சொல்லலாம்!

மீனாட்சி மட்டும், ஒரு தரம் அவளைத் தனியே அழைத்து, அவளுக்கு ஏதேனும் மனக்கஷ்டம் என்றால், தன்னிடம் நேரில் சொல்லும்படி கூறி, இனி இப்படிப் போவது இல்லை என்ற வாக்குறுதியும் வாங்கிக் கொண்டாள்!

மொத்தத்தில் வீடு பிரச்சினையற்று அமைதியாக இருந்தது!

அன்று காலை உணவு முடிந்ததும், "இன்று சாப்பிட்ட நூடுல்சை அன்னம்மா என்னவென்று சொன்னாள்?" என்று கேட்டாள் மித்ரா!

அன்று காலைக்கு அன்னம்மா இடியாப்பம் வைத்திருந்தாள். தொட்டுக் கொள்ள, இனிப்புக்குத் தேங்காய்ப்பூ சர்க்கரையும், காரத்துக்குக் குருமாவும்!

சுவை பிடித்துப் போகவே, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, அதன் பெயரைக் கேட்டாள் மித்ரா.

முறுவலோடு, "சொல்வதற்கு, உனக்குக் கொஞ்சம் கடினமாக இருக்கக் கூடும்! அதனால், இப்படிப் பிரித்து சொல்லிப் பார். இடி...யாப்பம்!" என்று பெயரை இலகுவாக உச்சரிக்கக் கற்றுக் கொடுத்தாள் சந்தனா!

மித்ராவும் அதே போலச் சொல்லிவிட, இருவரும் சந்தோஷமாகக் கைதட்டி மகிழ்ந்தனர்.

புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "மித்ராவுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கலாம் என்று பார்க்கிறேன் தீபு! சும்மா, வீட்டில் பேசும் அளவுக்கேனும் கற்றுக் கொடுக்கும்படி, யாரையேனும் ஏற்பாடு செய்யட்டுமா?" என்று மகனிடம் அனுமதி கேட்டாள் மீனாட்சி.

ஒரு வகையில், இது சற்றுத் துருவும் கேள்விதான்!

விரைவிலேயே யுஎஸ்சுக்குக் கிளம்புகிற திட்டத்தில் இருந்தால் எதற்கம்மா என்று மறுத்துவிடுவான் அல்லவா?

ஆனால், தீபன் இன்னொரு பதில் சொல்லி, எல்லோரையும் திகைக்க வைத்தான்! "அதென்னம்மா 'யாரையேனும்?' வீட்டிலேயே ஒரு டீச்சரம்மாவை வைத்துக் கொண்டு, இன்னொருவரை எதற்காக ஏற்பாடு செய்வது? பேசாமல் சந்தனாவையே கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள்! மித்ராவும், அவளிடம் முரண்டு பிடிக்காமல் படிப்பாள்!" என்றான் இலகுவாக!

சந்தனா பிரமித்துப் போனாள்!

'மித்ராவை வசியம் செய்கிறாய்' என்று குற்றம் சாட்டிய அதே தீபன்!

என்னதான், உன்மேல் இருந்த சந்தேகம் போய்விட்டது என்றாலும், விலகியிருக்குமாறும் சொன்னான் தானே?

அவன் வாயால், மகளுக்குக் கற்றுக் கொடுக்கச் சொல்வது என்றால்?

'வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப் பட்டம்' என்பது, இதுதான் போலும்!

அன்று முழுவதும், தரையிலேயே கால் பரவவில்லை அவளுக்கு!

மித்ராவுக்கும் ஆர்வம் இருந்ததால், உட்கார்ந்து இருக்கும் போதும், நடக்கும் போதும், சாப்பிடும் போதும், போக வர... ஓரொரு வார்த்தைகளாக, அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்ததே, சந்தனாவுக்கு சந்தோஷம்.


அதைத் தீபன் அவ்வப்போது கவனித்து, ஒப்புதலாக முறுவலித்தது, இன்னமும் ஆனந்தமாக இருந்தது!

முறுவலித்தது மட்டுமல்ல, கூடச் சேர்ந்து அவனும் ஏதாவது சொல்லுவான்.

சில சமயங்களில் ஓரோர் எழுத்துக்களை மாற்றிச் சொல்லி, மித்ரா இருவருக்குமே சிரிப்பு மூட்டுவாள்!

சாப்பிடுகிற சமயத்தில், தமிழில் சொல்லுகிறேன் என்று, 'அப்பா, செருப்பு சாப்பிடுகிறார்!' என்பாள்!


பருப்பு, செருப்பான விதத்தில் எல்லோருக்கும் சிரிப்பு பிய்த்துக் கொண்டு போகும்!

புத்திசாலிப் பெண் என்பதால், எதற்குச் சிரிக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, தானாகவே, இதுபோலத் தோசையையும் மீசையையும் குழப்பி, "ராசையா முகத்திலே 'தோசை' வளர்த்திருக்கிறார்" என்று விட்டு எல்லோரும் சிரிக்கையில் கண் சிமிட்டலோடு சேர்ந்து கொள்வாள், சிறுமி!

இது, இன்னமும் மகிழ்ச்சியைப் பெருக்கும்!

மீன் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்த பின், மீனாட்சி, 'ஃபிஷ்'மா ஆகிப்போனாள்.

அன்னம்மா, 'ரைஸ்மா'.

"என் பெயரை, இப்படிக் கெடுக்கக் கூடாதும்மா" என்று தீபன் சொன்ன பிறகுதான், மித்ராவின் இந்த விளையாட்டு நின்றது!

அவளோடு ஓடியாடி விளையாடுவதும், பெரும்பாலும் தீபனும் கூடவே இருந்ததும், பள்ளி முடிந்து, எப்போது வீட்டுக்குப் போவோம் என்ற துடிப்பை, சந்தனாவுக்கு ஏற்படுத்தின!
இடையில் ஒரு கலக்கமும் நேர்ந்தது!

சிதம்பரநாதனிடம் திருடி, அவரது மரணத்துக்குக் காரணமானவர்களைப் பிடித்துவிட்டதாகவும், அவர்களிடமிருந்து கைப்பற்றிய, அவளுடைய தந்தையின் பேனா, மோதிரம், பர்ஸ் முதலியவற்றை அடையாளம் காட்ட வருமாறும், சந்தனாவைப் போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்தார்கள்!

சந்தனாவின் கலக்கம் புரிந்து, தீபனே, அவளை அழைத்துச் சென்றான்!

அவன் தாய்க்கு, அதுவே அதிசயம்!

யாராவது பத்திரிகைக்காரர்கள் மோப்பம் பிடித்து விடுவார்கள் என்று சென்னையில் தீபன் வெளியே போகவே மாட்டான்!

அன்று ரயில் நிலையத்துக்குச் சந்தனாவை அழைத்து வர அவன் போனதே மீனாட்சிக்கு ஆச்சரியம்தான்!

ஏதோ மடத்தனமாகச் சொல்லி, அவளை விரட்டிவிட்டுப் பிறர் அறியாமல் மன்னிப்பு கேட்கப் போகிறான் என்பது, அவளது ஊகம்!

அத்தோடு, அப்போது இரவும் கூட!

ஆனால், இப்போது பட்டப்பகலில் சந்தனாவோடு கிளம்புகிறான் என்றால், அவளது ஆறுதல் மற்ற எதையும் மறக்கடிக்கிறது என்று தானே அர்த்தம்?

அப்படியானால்... அதற்கு மேல் யோசிக்கக் கூடாது. நடப்பது நல்லதாக இருந்தால், அவளுக்கு மகிழ்ச்சியே! ஆனால், வெறும் ஊகத்திலேயே கோட்டை கட்டுவது கூடாது என்று மீனாட்சி அம்மாள், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.

காவல் நிலையத்தில், தீபனின் கைப்பிடியிலேயே நிற்பதை, சந்தனா உணரவே இல்லை!

வெறும் முந்நூறு ரூபாய்க்கும், ஒரு வெள்ளி மோதிரத்துக்குமாக, என் தந்தையைக் கொன்றுவிட்டாயே என்ற தவிப்பில், அவளது உள்ளத்தோடு, உடலும் பதறியது! தீபனின் கைப்பிடி இல்லையென்றால், என்ன ஆகியிருப்பாளோ?


ஆனால், திருடர்களைப் பிடித்து வைத்திருந்த இன்ஸ்பெக்டர் வேறு சொன்னார்!

"உங்கள் அப்பா காந்தி மாதிரிம்மா! சாவில் கூடப் பிறருக்கு நல்லது செய்கிற விதம்! இந்த மூவரும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள். மற்றவர்களின் உயிர் இவர்களுக்குத் துச்சம்! இவர்கள் கணக்கில், ஆறு கொலைகள் இருக்கின்றன. இவ்வளவு நாள் இவர்களைப் பிடிக்கச் சரியான ஆதாரம் கிடைக்காமலே இருந்தது! இப்போது இந்த வெள்ளி மோதிரத்தைப் பிளாட்டினம் என்று நினைத்து விற்கப் போய், மாட்டிக் கொண்டார்கள்! பெரிய தலைமை ஆசிரியர், பாஸ் பண்ணிவிட, பள்ளியில் சேர்க்க என்று நிறைய வாங்கியிருப்பார். இருந்திருந்து வெள்ளியிலா போடுவார் என்று எண்ணினார்களாம்! மாட்டிக் கொண்டார்கள் அல்லவா? சிதம்பரம் சார் விஷயத்தில், நேரில் பார்த்த சாட்சிகளும் இருப்பதால், இனி இவர்கள் ஜெயிலை விட்டு வெளியே வராதபடி, நான் பார்த்துக் கொள்கிறேன்! சமூகத்துக்கு ஒரு பெரிய சாபக்கேடு தீர்ந்தது! உங்கள் அப்பா, தன் உயிரைக் கொடுத்துத் தீர்த்து வைத்திருக்கிறார்!" என்றார் அவர் நன்றியோடு!


கண்ணைக் கரித்தபோதும், இதை எங்கேயோ இருந்து கேட்டிருந்தால், அப்பாவும் சந்தோஷப்பட்டிருப்பார் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!

திரும்பி வரும்போது கண்மூடி அமர்ந்திருந்தவளை மென்மையாக இழுத்து தன் தோள்மீது சாய்த்துக் கொண்டான் தீபன்.

வீடு வந்த பிறகு, காவல் நிலையத்தில் நடந்ததை மீனாட்சியிடம் விவரிக்கும் பாவனையில், சிதம்பரநாதனைப் பற்றி மிக உயர்வாகத் தீபன் பேசவும், உள்ளிருந்த வருத்தம் குறைந்து, பெருமையாக உணர்ந்தாள் சந்தனா!

அதன் பிறகும், சந்தனாவிடம் ஒரு கனிவுடனேயே அவன் நடந்த கொள்ள, அதைக் கவனித்த மித்ராவும், அவளைத் தடவிக் கொடுப்பதும், கொஞ்சுவதுமாக தன் அன்பைக் காட்ட, விரைவிலேயே, சந்தனாவின் முகத்தில் புன்னகையே மலரத் தொடங்கியது!

உள்ளூர அஞ்சியிருந்த போதும், அன்றிரவு, பழைய கனவு வராதது, சந்தனாவிற்குப் பெரும் ஆறுதலாக இருந்தது!

அதையே யோசித்தவன் போலத் தீபனும் அவளிடம் விசாரிக்க, அதில் தொடங்கி, இருவருமாகத் தனியே பேசிக் கொண்டிருப்பதும், இயல்பாகவே நடக்கலாயிற்று!

பாராதது போல, இதைப் பார்த்திருந்த மீனாட்சி அம்மாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியே!

தாயின் இந்த மகிழ்ச்சியை, மேலும் அதிகப்படுத்தும் விதமாக, இன்னொன்று நடந்தது!
அன்று, யுஎஸ்சில் இருந்து தீபனுடைய ஏஜெண்ட் எலிசா போன் செய்தாள்.

"ஹல்லோ எலிசா..." என்று தீபன் சொன்னதுமே, மீனாட்சியின் முகம் மாறிவிட்டது!

தாய்நாட்டில் பெற்றவளோடு இருப்பதற்கு, மகனே விரும்பினால் கூட இவள் விடமாட்டாள் போல இருக்கிறதே என்று கலக்கமும் கடுப்பும்!

இவள் போன் செய்தால், தீபன் கிளம்பி விடுவான்! அப்புறமாக, அவன் திரும்பி வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

சலிப்புடன் பெற்றவள் திரும்பும்போதே, "எலிசா ஆன்ட்டியாப்பா?" என்று மகள் ஆவலோடு ஓடிவந்தாள்.

"நான் பேசணும்பா! ஆன்ட்டி கிட்டே, நான் தமிழ் படிப்பது சொல்லணும்!" என்று அவள் கேட்கவும், புன்னகையோடு போனை மித்ராவிடம் கொடுத்தான் தந்தை.

"ஆன்ட்டி நான் இங்கே தமிழ் படிக்கிறேன்! என் கிராண்ட்மா, சந்தனா ஆன்ட்டி, அன்னம்மா, ராசையா எல்லோரும் பேசுகிற பாஷை! நான்சி, மிச்சிகிட்டே எல்லாம் சொல்லு! என்ன? சந்தனா ஆன்ட்டிதான் சொல்லித் தருகிறான்னும் சொல்லு! சந்தனா ஆன்ட்டி ரொம்ப ஸ்வீட் தெரியுமா? ஆனால், உன் மாதிரி சாக்லேட்லாம் நிறையத் தரமாட்டாள்! என் உடம்புக்கு நல்லதில்லையாம்! அப்புறம், ஜேடி, இப்போதெல்லாம் ரொம்பத் தூங்கிப் போகுது. என்னோட விளையாடவே வராமல், என்னைத் தமிழ் படிக்க விடுது!" என்று மனதில் நினைத்ததை எல்லாம் அளந்தாள்.

"அப்போ சரி ஆன்ட்டி, எழுப்பி விளையாடுறேன். இதோ, உடனே அப்பாவிடம் கொடுத்து விடுகிறேன். பை ஆன்ட்டி!" என்று போனைத் தந்தையிடம் கொடுத்தாள்.

எதிர்முனையில், எலிசா என்ன சொன்னாளோ, "சேச்சே! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை! இது, என் அம்மாவின் வீடு! இப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேச வேண்டாம் எலிசா!" என்றான் ஒரு மாதிரியான குரலில்!

மீண்டும் அவள் பேச்சைக் கேட்டுவிட்டு, "அப்படியா! ஆனால், இது நான் சில நாட்களாக எதிர்பார்த்ததுதான்! உன்னிடம் பார்க்கச் சொல்லியிருக்கவே கூடாது! பழைய பழக்கத்தில், எதையும் நம்பாமல்... இல்லையில்லை! வேண்டாம், எலிசா. இதற்கு மேல் அவசியம் இல்லை! சந்தேகம் எல்லாம் ஏற்கெனவே இங்கேயே தீர்ந்துவிட்டது! விட்டுவிடு! நான் வருவதா? இருக்கட்டும்! கொஞ்ச நாள் ஆகட்டும். அப்புறம் பார்ப்போம்! ஊகூம்! இப்போது வருவதற்கு இல்லை. வைத்து விடுகிறேன்!" என்று ரிசீவரைக் கீழே வைத்தான்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ. 13...

Post by udhayam72 Fri May 10, 2013 3:41 pm

சற்று விலகி நின்றிருந்த தாயின் முகம் ஓரளவு மலர்ந்திருந்தது!


"அடுத்தவர் போன் பேச்சைக் கவனிப்பது அநாகரீகம் என்று எனக்குத் தெரியும்! ஆனால், இந்தப் பேச்சைக் கேளாமல் விட்டுவிட்டுப் போக முடியவில்லை! இந்த முறை வரவில்லை என்று விட்டாய்! இனித் தினமும் யுஎஸ் போனை எதிர்பார்க்கலாமா? எத்தனை தரம் தாக்குப் பிடிப்பாய்?" என்று புன்னகையும் கலக்கமுமாகக் கேட்டாள்.

"இல்லைம்மா! எனக்கே, இங்கே வந்து விடத்தான் இப்போது விருப்பம்! அதற்குத்தான் பெரிதும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்! கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பார்ப்போம்! அப்புறம், எலிசா இப்போது போன் செய்தது, என்னை அங்கே வருமாறு அழைப்பதற்காக இல்லை! சந்தனாவுடைய அண்ணன் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் விஷயம் எல்லாம் சரிதான், தப்பாக எதுவும் இல்லை என்று... அதைத் தெரிவிப்பதற்காகத்தான்!"

"சந்தனாவுடைய அண்ணன் என்ற பிறகு, அந்தப் பையன் மேல், நீ சந்தேகப்பட்டதே தப்பு! நல்லவர்கள் இருப்பார்கள் என்று நம்பவும் வேண்டும்!" என்றாள் தாய்!

ஆனால், "இங்கே இருந்து கொண்டு, இலகுவாகச் சொல்லலாம்!" என்றான் பிள்ளை!

"அப்போது, அங்கே போகாதே!" என்றாள் அன்னை பதிலுக்கு!

"அம்மா, ப்ளீஸ்! அதிலேயே நில்லாதீர்கள்! நான் தான் முயற்சி செய்வதாக சொன்னேன் இல்லையா?"

"எப்போதும் இப்படித்தான்" என்றாள் தாயார், அவன் பேச்சில் அவ்வளவாக நம்பிக்கையற்று.

"ப்ராமிஸ், அம்மா! இந்த முறை, எல்லாம் வேறு! முன்பெல்லாம், அவ்வளவாக விருப்பமற்று, உங்களைச் சமாதானப்படுத்த மட்டுமே சொன்னேன். ஆனால் இந்தத் தடவை, நூறு சதவீதமாக என் மனதிலேயே நிச்சயமாக இருக்கிறேன்! எனக்கே சிலதிற்கு மிக அதிக விலை கொடுத்து விட்டதாக எண்ணம்! ஆனால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட என்னால் முடியாது! அது, உங்களுக்கும் தெரியும்! அதனால் இப்போதைக்கு, இது பற்றி யாரிடமும், குறிப்பாகக் கூடச் சொல்லி வைக்காதீர்கள்!" என்றான் தீபன்.

"இத்தனை ஆண்டுகளாக, உன்னைப் பற்றி, எதை யாரிடம் சொன்னேன்? சின்னப் பிள்ளைப் படம் தவிர, ஒரு போட்டோவேனும் வெளியே இருக்கிறதா, பார்! பின்னிப் பின்னிக் கேட்கிறார்கள் என்று சொந்த பந்தங்களைக் கூட விட்டுவிட்டேன்! என்னிடம் வந்து, இன்னமும் சொல்கிறாயே!" என்று குறைபட்டாள் அவள்.

"சாரிம்மா! உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்! ஆனால், இன்னும் கொஞ்ச காலம், இப்படியே இருந்து விடுங்கள், என்றேன். அவ்வளவுதான்!" என்றான் அவன்!

அப்படியே, வீடு சந்தோஷமாக நடந்து கொண்டும் இருந்தது!

இந்தச் சமயத்தில், வானில் மிதந்து கொண்டிருந்த சந்தனா, தரைக்கு இறங்கி வருகிற மாதிரி ஒன்று நடந்தது!
அன்று ஓர் அரசாங்க விடுமுறை தினம்.

நன்றாக தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளித்துவிட்டு வந்த சந்தனா, வெளியே போர்டிகோவில் நின்று, ராசையாவுடன் தீபன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபடி ஹால் சோஃபாவில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் அருகில் அமர்ந்தாள்.

ஆனால், சிறுமி "அச்சச்சோ!" என்று கத்தவும் பதறி, "என்னம்மா?" என்று விசாரித்தாள்!

"என் ஜேடி!" என்று சோஃபாவை காட்டினாள் மித்ரா.


சோஃபாவின் இடுக்கில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பொம்மையின் கால் பகுதி, சந்தனாவின் கீழே இருந்தது!

குழந்தையின் உணர்ச்சியை புரிந்து கொண்டு, "அடடா! உன் ஜேடிப் பாப்பாவின் கால் மீதா உட்கார்ந்து விட்டேன்! பாப்பாவுக்கு வலித்திருக்குமே!" என்று பொம்மையின் கால்களை வருடிவிட்டாள் சந்தனா!

ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், "ஊகூம்! பாப்பா கால் உடைந்தே போய்விட்டதே! கட்டுப் போடணும்! எனக்குப் போட்ட மாதிரி!" என்றாள் மித்ரா!

எப்போதேனும் ஒரு தரம், தனக்கு நேர்ந்த விபத்துப் பற்றி, மித்ரா, இப்படிக் குறிப்பிடுவது உண்டு! முதலில் சாதாரணமாகவே குறிப்பிட்டாலும், தொடர்ந்து உடம்பு சரியாகாதது போலக் காலைத் தாங்கி நடப்பாள், அவள்.

அது அடியோடு மறக்கும் வரை, நடை அப்படியே இருக்கும்.

இந்த முறை அந்த நடையை தவிர்க்க எண்ணி, "பாப்பாவைப் பார்த்துக் கொள்!" என்று, மித்ராவின் மடியில் பொம்மையை வைத்துவிட்டு ஓடிப் போய், ஒரு துண்டு துணியை எடுத்து வந்தாள், சந்தனா.

பொம்மையின் காலில் அதைக் கட்டி, "இனிமேல் சரியாகிப் போகும்! எங்கள் மித்திச் செல்லத்துக்கு கட்டுக் கட்டியதும் குணமாகிப் போய், இப்பல்லாம் அவள் ஆன்ட்டியோடு ஓடி விளையாடுகிற மாதிரி, ஜேடிப் பாப்பாவுக்கும், சீக்கிரமாக சரியாகிவிடும்! இதோ, இதே மாதிரி, சுத்தமாகக் குணமாகிவிடும்!" என்று மித்ராவின் காலைத் தொட்டுக் காட்டினாள்.

"ஆமாம், நல்லாயிட்டது!" என்று காலை நீட்டிப் பார்த்துவிட்டு, "ஆமாம் ஜேடி. ஆன்ட்டி சொல்லுகிற மாதிரி, உனக்கும் நிஜம்மாக நல்லாயிடும்!" என்று பொம்மையை மறுபடியும் சோஃபாவில் கிடத்தப் போனவள், "ஊகூம்!" என்று அதைத் தூக்கிக் கொண்டாள். "திரும்பவும், யாராவது ஜேடி மேலே உட்கார்ந்திட்டால்? பாவம்! இன்னொரு காலும் உடைந்து, இன்னொரு காலும் வலிக்கும்!" என்று அவள் யோசித்து சொன்ன தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!

காட்டிக் கொள்ளாமல், "அது சரிதான்!" என்று அவள் தலையாட்டவும், பொம்மையை மடியில் போட்டுக் கொண்டு, "என்னோட ஜேடிக்குத்தான் இப்படி வலிக்கும்! அப்பாவோட பொம்மைக்கு வலிக்கவே வலிக்காது!" என்றாள் சிறுமி!

அதிசயப்பட்டு, "அப்பாவின் பொம்மையா?" என்று கேட்டுவிட்டாள் சந்தனா!

தீபனைப் பற்றி கேட்பது, பேசுவது எல்லாமே, அந்த வீட்டில் பெருங்குற்றமாகக் கருதப்படுவது, சந்தனாவுக்கும் தெரியும்!

ஆனால், ஒரு முழு மனிதனோடு, பொம்மையை சம்பந்தப்படுத்தி, அவனுடைய மகளே பேசவும், திடுக்கிட்டுக் கேட்டுவிட்டாள்!

அவ்வளவே!

அதற்குள் தீபன் அங்கே வந்துவிட்டான்!

மகளை எழுப்பி, "மித்தி, சும்மா பாப்பாவைத் தொந்தரவு பண்ணக் கூடாதுடா! அசந்து மறந்து, எங்கேயாவது வைத்துவிட்டால், இப்படி அடிபட்டுக் கொண்டே இருக்கும்! போய் அவளது தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வா!" என்றவன், மேலே பேசவிடாமல், மித்ராவின் கையைப் பிடித்து அங்கிருந்து கூட்டிப் போனான்!

முகத்தில் அறை வாங்கியது போல, அப்படியே உட்கார்ந்து விட்டாள்.


மித்ராவும் அவளும் பேசிக் கொண்டிருக்கையில், பேச்சின் நடுவே புகுந்து, மகளைக் கூட்டிப் போகிறான் என்றாள், அதற்கு என்ன அர்த்தம்?

தொடர்ந்து மகளை அவளோடு பேசவிடக் கூடாது என்று தானே?

அதற்கு முன்னரும், போர்டிகோவில் நின்றவாறே, சந்தனாவும் மகளும் பேசுவதை... இல்லை, சந்தனா மகளிடம் என்ன கேட்கிறாள் என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான்!

அதுதான், அந்த ஒரு கேள்வியில் ஓடி வந்து விட்டான்!

அப்படி என்ன நம்பிக்கையில்லாத்தனம்?

ஒரு சாதாரணக் கேள்வியைக் கூட சந்தேகப்படுவது என்றால், அந்த முதல் நாள் ஐயம் அப்படியே இருக்கின்றது என்று தானே பொருள்!


சந்தேகம் போய்விட்டது என்றதெல்லாம் சும்மா! பொய்! அவன் அம்மாவுக்காக, இப்படிச் சொன்னால்தான் வீட்டுக்கு வருவாள் என்று கூறிய பொய்!

என்ன முயன்றும் கொதிப்பை அடக்க, சந்தனாவால் முடியவில்லை!

என்ன இலகுவாக, தீபனின் பேச்சை நம்பிவிட்டாள்!

நம்பி, என்னென்னவோ நினைத்து...

அதுதான் அவளால் தாள முடியாது போயிற்று!

அறையின் தனிமையில், சற்று நேரம் கண்ணீருகுத்த பிறகே, அவளால் யோசிக்க முடிந்தது!

ஏதோ, அவளது நல்ல நேரம்! மயக்கம் ஒரேயடியாகத் தலைக்கேறு முன், ஒரு சிறு செயலில், தீபன் தன்னைக் காட்டிக் கொண்டு விட்டான்!

அண்ணன் வந்ததும், இந்த வீட்டை, வீட்டில் உள்ளவர்களை விட்டுக் கிளம்ப நேருமே என்று, வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்! இனி, அந்த வருத்தம் இல்லாமல் நிம்மதியோடு கிளம்பலாம்!

அதுவரை... மீனாட்சி ஆன்ட்டிக்கு வாக்குக் கொடுத்திருப்பதால், அதுவரை இங்கே தானே இருந்தாக வேண்டும்! அப்படி இந்த வீட்டில் இருக்கும் காலத்தில், முதலில் இருந்தது போலவே, முடிந்தவரை ஒதுங்கி விட வேண்டும்!

ஆனால், அப்படி அவள் இரண்டு நாட்கள் ஒதுங்கு முன், தீபன் அவளைத் தேடி வந்தான்!

அப்போது அவள் மீனாட்சி அம்மாளுடன் தான் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ. 14............

Post by udhayam72 Fri May 10, 2013 3:43 pm

மித்ராவுக்கென, வெளேர் துணியில் சிறுத்தைத் தோல் போல பிரின்ட்! அதைப் பார்த்ததும் வாங்கி வந்து, உடம்போடு ஒட்டினாற் போல டிசைன் கொடுத்து, தைத்து வந்திருந்தது!

அதில், ஒவ்வொரு சிறுத்தைப் புலிக்கும் நடுவே, நகம் அளவில் பிரௌன் கலர் கல்லை ஒட்டிக் கொண்டிருந்தாள் சந்தனா!

"அவளை ஃபேஷன் ஷோ மாடல் மாதிரி ஆக்கி விடுவாய் போல இருக்கிறது!" என்று மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கையில், டெலிபோன் மணி அடித்தது!

வெளிநாட்டு அழைப்புச் சத்தம்!

எலிசாவா?

இரு பெண்களுமே, ஒரு திகைப்புடன் டெலிபோன் கருவியை பார்த்தனர்!

முதலில் போல அல்லாமல், இப்போதெல்லாம் தீபனே நேரடியாக, போனை எடுக்கத் தொடங்கியிருந்தான்.

அன்றும் அதுபோலவே, அவனே எடுத்துப் பேசினான்.

ஒரு முறை மட்டும், "வீட்டில் இந்த போன் இருக்கும் போது செல் எதற்கு? அதனால் தான் அணைத்துப் போட்டிருக்கிறேன். சும்மா இதிலேயே பேசு!" என்றான், ஒரு விளக்கம் போல.
மற்றபடி வெகு நேரம் வெறுமனே "ஊம்" கொட்டிக் கொண்டிருந்தது தவிர, அவன் வேறு எதுவும் பேசவே இல்லை!

"சரி யோசித்து சொல்கிறேன்!" என்று ரிசீவரை வைத்தவன், நேரே, தாயும் சந்தனாவும் இருந்த சிட் அவுட்டுக்கு வந்தான்.

"மித்ராவுக்குக் கொஞ்சம் துணிமணி வாங்க வேண்டும்! தேர்ந்தெடுப்பதற்கு, என்னோடு வருகிறாயா? ப்ளீஸ்!" என்று சந்தனாவை அழைத்தான்!

"நான்... இது..." என்று கையில் இருந்த துணியைப் பார்த்தாள் அவள்.


துணி வேலை முடியவில்லை என்று, அதைச் சாக்கிட்டு இருந்து விடலாம் என்று நினைத்தாள் சந்தனா!

ஆனால் மீனாட்சி குறுக்கிட்டு, "இந்த வேலைதான் முடிந்துவிட்டதேம்மா! போய் வாங்கி வா! அவள் அளவு தான் உனக்கேத் தெரியுமே! சீக்கிரமாக முடித்துக் கொண்டு, மித்ரா விழிக்கு முன் வந்து விடுங்கள்!" என்று சொன்னபோது, சந்தனாவுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை!

அத்தோடு, இந்த உடை வாங்குகிற பேச்செல்லாம் சும்மா என்பது, அவளுக்குப் புரியாமல் இல்லை! புரிந்தது!

ஆனால் அப்படி தீபன், அவளிடம் என்ன தான் சொல்லப் போகிறான்? மகன் சந்தனாவிடம் ஏதோ சொல்லப் போகிறான் என்று எண்ணித்தான், மீனாட்சி ஆன்ட்டியும் அவளை அனுப்புகிறாள்!

என்ன என்று தான் அறிந்து கொள்ளலாமே!

முகத்தை மட்டும் கழுவித் துடைத்துக் கொண்டு, சந்தனா அவனோடு கிளம்பினாள்!

சற்றுத் தூரம் சென்றதுமே, காரை ஓரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு, இருக்கையில் லேசாகத் திரும்பி, சந்தனாவைப் பார்த்தாற் போல அமர்ந்தான் தீபன்.

அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு, "இரண்டு நாட்களாக என் மேல் கோபம் என்று தெரிகிறது" என்றான் அவன்.

அவள் பேசாதிருக்கவும், "இப்போது, என்னால் எதையும் விளக்கமாகச் சொல்ல இயலாது, சந்தனா! ஆனால் இப்போது, மித்தியை நான் விலக்கி, அழைத்துப் போனதற்குக் காரணம் இருக்கிறது" என்றான் தொடர்ந்து.

மௌனம் கலைந்து, "நாங்கள் பேசும்போது, வெளியே நின்று ஒட்டுக் கேட்டதற்குக் கூடவா?" என்று சற்றே ஏளனமாகக் கேட்டாள் சந்தனா.

"ஒட்டுக் கேட்டேனா? எப்... ஓ! நீயும், மித்தியும் பேசியதை, மகிழ்ச்சியோடு கேட்டு ரசித்ததற்குப் பெயர் ஒட்டுக் கேட்பதா? சரியாகச் சொல்வதானால், சற்று முன் நானும், எலிசாவும் போனில் பேசியதை, நீயும் அம்மாவும் கவனித்தீர்களே, அதைத்தான் ஒட்டுக் கேட்டல் என்று சொல்ல வேண்டும்!" என்றான் அவன், சிறு கண்டிப்பும், கிண்டலும் கூடிய குரலில்!

லேசாக முகம் சிவந்த போதும், அதை மீறி, "எலிசாதான், இல்லையா?" என்று கவலையுடன் கேட்டாள் சந்தனா!

கையை நீட்டி, அவளது நெற்றியில் புரண்ட கூந்தலை, மென்மையாக ஒதுக்கி விட்டான் தீபன்.

அந்தக் கையைப் பற்றிக் கன்னத்தில் அழுத்திக் கொள்ள வேண்டும் போலத் தோன்றிய ஆவலை அடக்கிக் கொண்டு அசையாமல் வீற்றிருந்தாள் அவள்!

ஒரு பெருமூச்சுடன், "ஆமாம்! உடனே கிளம்பி, அங்கே வரச் சொன்னாள்! அதை, அப்புறம் பார்ப்போம்! ஆனால் நான் கிளம்பும் முன், உன்னிடம் ஒன்று சொல்லியாக வேண்டும், சந்தனா! நான் மித்ராவுடைய தந்தை! ஒருத்தியை மணந்து, மணவிலக்கும் வாங்கியவன்! அது மட்டுமல்ல! அதற்கு மேலும்... நான் அவ்வளவு நல்லவனாக நடக்கவில்லை சந்தனா! அங்கே... அந்த நாட்டில், அது எனக்குத் தப்பாகத் தெரியவில்லை என்றாலும், இங்கே, உன் முன்னிலையில் தலை குனிவாகத்தான் இருக்கிறது! உனக்கும் வெறுப்பாக இருந்தால், சொல்லிவிடும்மா!" என்று குரலில் வருத்தத்துடன் கேட்டான் தீபன்!

வெறுப்பா? அவனிடமா?


இல்லை என்பது போலத் தலையை அசைத்தாள், சந்தனா!

"அன்று... மித்ராவின் விபத்தின் போது கூட... அரை நினைவில், என்னைத் தேடியிருக்கிறாள் குழந்தை! யாராலும், என்னோடு தொடர்பு கொள்ளக் கூட முடியாத நிலை! அப்போதுதான், அங்கே எல்லாம் வெறுத்துப் போயிற்று! எந்த நிலைக்குப் போயிருக்கிறேன் என்று புரிந்தது! விழுந்தடித்துக் கொண்டு, மித்திக்குக் கொஞ்சம் குணமானதும் இங்கே அழைத்து வந்துவிட்டேன்! இங்கே உன்னைப் பார்த்ததும்..."

சந்தனாவின் பார்வையில் கூர்மை ஏறிற்று!


"முதலில், அங்கே நான் ஒதுக்கிவிட்டு ஓடி வந்த கூட்டம் தான் நினைவு வந்தது! நீ கதவைத் திறந்த விதம் வேறு! மேலும், உடல் ரீதியான உணர்வுகளை உன் கவர்ச்சி தூண்டி விடுவது போல... அதை, நீ தெரிந்தே ஒரு நோக்கத்துடன் செய்வது போல... உனக்கு இப்போது புரிகிறது இல்லையா? அப்போதே, என் மனம் உன்னிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறது! ஆனால், அதை நான் புரிந்து கொண்ட விதம் தான் வேறு! அதை வெறுத்து ஓடி வந்தவன், அந்த ஈர்ப்பை எதிர்க்கச் செய்த முயற்சி! ஆனால், எப்படியும் நான் அவ்வளவு பேசியிருக்கக் கூடாது... அப்படியெல்லாம் குதறிவிட்டு, உன்னிடம் இதைக் கேட்க எனக்குத் தயக்கம் தான்! ஆனால், அதை முழுதாக மறந்து, என்னை ஏற்பாயா சந்தனா?" என்று கேட்டான் தீபன்.

ஒரு கணம், சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியாது போயிற்று!

ஆனால், உச்சி முதல், உள்ளங்கால் வரை, ஒரு பூரிப்பும், பொலிவும் ஏற்படுவதை, அவளால் உணர முடிந்தது!

முகம் பிரகாசமுற, "நி... நிஜமாகவா, கேட்கிறீர்கள்? ஆனால்..." என்று கேட்டாள்.

"ஆனால் இன்னும் நிறைய விஷயம், உனக்குத் தெரியாது! அதையெல்லாம் உன்னிடம் சொல்லுகிற நிலையில் இப்போது நானும் இல்லை! இப்போது உடனே நான் யுஎஸ்க்குப் போயாக வேண்டியிருக்கிறது, கண்ணம்மா! முடிந்த அளவு சீக்கிரமாக அங்கே எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு, இங்கே வந்து விடுவேன்! இடையிடையே இரண்டு மூன்று நாட்கள் கிடைத்தாலும், கிளம்பி வந்து விடுவேன்! அப்போது, எனக்காக, இங்கேயே காத்திருப்பாயா, சது?"

சது!

இப்படி யாரும் அவளைச் செல்லமாக அழைத்தது இல்லையே!
"நிச்சயமாய்!" என்றாள் அவள்.

தீபன், மகளோடு யுஎஸ்சுக்குத் திரும்புகிறான் என்பது, மீனாட்சி அம்மாவுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது!

ஆனால், "அவர் சீக்கிரமாவே, மித்ராவோடு திரும்பி வந்து விடுவார், ஆன்ட்டி!" என்று ஒரு விதமான உறுதியோடு கூடிய குரலில் சந்தனா கூறியது, அவளுக்கு ஆச்சரியத்தோடு ஆறுதலையும் அளித்தது!

ஆயினும், "மித்ராவையாவது விட்டுப் போகக் கூடாதா?" என்றாள் தாய்.

"ஒரேயடியாகத் திரும்பி வருவதற்காக, நிறைய விதிமுறைகளை, அனுசரித்தாக வேண்டியிருக்கிறது! அவளும் கூட இருப்பது, தேவை" என்றான் தீபன்!

மித்ராவுக்கும், இந்தப் பயணம் பிடிக்கவில்லைதான். அவளுடைய யுஎஸ் நண்பர்களை நினைவுபடுத்தி, அவளை ஓரளவு சமாதானப்படுத்தி அழைத்துப் போனான் தீபன்!

கிளம்புவதற்கு முன்பாக, இன்னும் சிலது சொன்னான் அவன்.

"அங்கே எனக்கு வேலைக்கு நேரக் கணக்குக் கிடையாது என்பதோடு, அங்கிருந்து நான் பேசுவதும் கடினம், சந்தனா! அது பற்றி, அம்மாவுக்கும் தெரியும். அதனால் பேசக்கூட இல்லையே என்று எண்ண வேண்டாம்! நீயும் அப்படி இருப்பதே நல்லது! மிகமிக முக்கியம் என்றால், என் ஏஜெண்ட் எண்ணைத் தருகிறேன். அதற்கு போன் செய்தால், விஷயத்தை அவள் என்னிடம் சொல்லுவாள்... எப்படியும் விரைவில் வருவேன். வரும்போது..." என்று முடிக்காமலே, அவளைப் பார்த்து தலையசைத்து, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.


கண்ணீருடன் தன் பொம்மையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மித்ரா கிளம்பியது, இன்னும் வேதனையாக இருந்தது!

இரண்டு நாட்கள் கழித்து, "விமானம் பயணிகளைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தது!" என்று எலிசாவிடம் இருந்து சுருக்கமான ஒரு செய்தி மட்டும் வந்தது!

சந்தனாவின் முகத்தில் ஏமாற்றத்தைக் கண்டதும், ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு, "அங்கே இப்படித்தானம்மா! அதிலும், அந்த எலிசா, ரத்தினச் சுருக்கம் தான்! விடு! ஏதோ உன் பள்ளியில், பரீட்சை சமயம் தானே? ஒரு நாள் லீவு போட்டுவிட்டு, சினிமா, ஷாப்பிங் என்று எங்காவது போய் வாயேன்!" என்றாள் மீனாட்சி!


தாயின் தவிப்பும் பெரிதுதானே? அதை அடக்கிக் கொண்டு, தன்னைப் போகச் சொல்லுகிறாளே என்றிருந்தது சந்தனாவுக்கு!

"இல்லை ஆன்ட்டி! தேர்வு அரைநாள் தானே? போய்விட்டு வந்து, அறையில் என் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டு, நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்!" என்று முடித்தாள் சந்தனா.

மார்ச் மாதம் முடிவதால், மருத்துவமனைக் கணக்கு வழக்குகளைப் பார்த்து முடிப்பதற்காக, மீனாட்சி பகலில் பெரும்பான்மை நேரம் மருத்துவமனையில் இருக்கும்படி ஆயிற்று!

வீடு திரும்பிய சந்தனாவுக்குப் போரடித்தது!

சரிதான் என்று, டீவியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.

ஏதோ சானலில், வெளிநாட்டுப் படங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ. 15...

Post by udhayam72 Fri May 10, 2013 3:44 pm

புதிய படம் ஒன்றின் தொடக்க விழா.

கதாநாயகி அழகாக இருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தீபன் சிரித்தவாறு திரையில் வந்தான்!

மருத்துவம் படிக்க போனவன்! மருத்துவத்துக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?

இமைகளைத் தட்டக் கூட முடியாமல், விழித்த கண் விழித்தபடி சந்தனா பார்த்திருக்கையில், புதிய திரைப்படத்தின் டைரக்டர் என்று அவனைச் சொன்னார்கள்! கதை வசனமும் அவன் தானாம்!

பெயர்... தீபன் லைட் மித்ரன் என்றார்கள்! திரைக்கான புனைப் பெயரை நன்றாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறான்! தீபன் என்றால் வெளிச்சம் - லைட்! கூடத் தந்தையின் பெயரையும் விடவில்லை! தீபன் லைட் மித்ரன்!

ஓகோ! என்ன கவனம்!

ஆனால், கவனம் இதில் மட்டுமா?

அவனது முந்தைய படத்துக்கு, 'ஆஸ்கார்' பரிசு கிடைத்தது என்றார்கள்!

மித்ரா சொன்ன அப்பாவின் பொம்மை ஆஸ்கார் சிலை!

தலை சுழன்ற போதும், அந்த வீட்டில் இருந்த ரகசிய சூழ்நிலை, பத்திரிகை, மீடியா அச்சம், ஒதுக்கம், யாரிடமும் சந்தேகம், அவளை நம்பாதது... எல்லாமே சந்தனாவுக்கு இப்போது புரிந்தது!

அனைத்தும் புரிந்த போதும், அவற்றுள், அவளை நம்பாததுதான் நெஞ்சில் வெகுவாக வலித்தது!

அவன், கடைசிவரை அவளை நம்பவே இல்லையே!

நம்பியிருந்தால், சொல்லியிருக்க மாட்டானா?

எப்படிச் சொல்லுவான்?

சொன்னால், அந்த உலகத்தை விட்டு, எப்படி எப்போது திரும்பி வருவான் என்றும் சொல்ல வேண்டுமே!

கோடிக் கணக்கில் புரளும் பணம்!
அதோ, இறுக அணைத்து உதட்டிலேயே முத்தமிடுகிறாளே, அவளைப் போன்ற எத்தனை எத்தனையோ பெண்கள்! விட்டுவிட்டு, எப்படி வர முடியும்?

சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தாள் சந்தனா!

ஒரு போதும், இங்கே வந்துவிடப் போவது இல்லை என்றால், அவன் வாழ்வில், அவளுக்கு என்ன இடம்?

அதுதான் சொன்னானே, இடையிடையே இரண்டு மூன்று நாட்கள் கிடைத்தாலும் வருவான். அப்படி வரும்போது, அவனுக்காகச் சந்தனா இங்கே காத்திருக்க வேண்டும் என்று!


காத்திருப்பது என்றால்?

தீபன் இந்தியாவுக்கு வரும்போது, அவனது விருப்பப்படி ஆடுகிற இரண்டு நாள் மனைவியா?

மனைவியாவது மண்ணாங்கட்டியாவது?

அதற்குத்தான் இப்போதெல்லாம் மகா கௌரவமாக ஓர் அருமையான பட்டம் உண்டே, 'பெண் சினேகிதி'!

சிதம்பரநாதன் சாருடைய மகள் சந்தனாவை, அந்தத் தீபன் என்னவென்று நினைத்துக் கொண்டான்?

பொங்கிச் சீறும் ஆத்திரத்துடன் அவள் எழுந்த போது, "சந்தனா..." என்ற குரல் கேட்டுத் திகைப்புற்றுத் திரும்பிப் பார்த்தாள்!

மெய்யாகவே, அங்கே நின்றவன், அவளுடைய அண்ணன் பூபாலன் தான்!

அண்ணன் இங்கே எப்படி வந்தான் என்பதே தோன்றாமல், அடிப்பட்ட குழந்தை போல, அவனை நோக்கி ஓடப் போன போதுதான், கூடவே ராசையாவும் நிற்பது தெரிந்தது.

"உங்க அண்ணாருன்னு சொன்னாங்கம்மா! அதான் கூட்டியாந்தேன். உள்ளாரப் போங்க சாரு!" என்று விட்டு, மீண்டும் தன் இடத்துக்குச் சென்றான் அவன்.

"உள்ளே வாண்ணா!" என்றாள் தங்கையும்! "ஆனால் இப்போது நீ எப்படி..." என்ற தங்கையின் பேச்சில் குறுக்கிட்டு, "இது யார் வீடு, சந்தனா? என்னிடம், அதை ஏன் சொல்லவில்லை?" என்று சினந்து கேட்டான், அவன்.

டீவியைக் காட்டினாள் சந்தனா.

ஹாலிவுட் படத் தொடக்க விழா முடிந்து கொண்டிருந்தது!


"எனக்கே, இ...இப்போதுதான் தெரியும்!" என்றாள் அவள் வாடிச் சுண்டிய முகத்துடன்.

"வேண்டும் என்று மறைத்திருக்கின்றான், ராஸ்கல்!" என்றான் அண்ணன் ஆத்திரத்துடன்! "ரொம்ப மோசமானவன், சந்தனா! சரியான பொம்பளைப் பொறுக்கி! அங்கே அவனுக்கு மிகவும் கெட்ட பெயர்! கொஞ்ச நாளாக இந்தியாவில் இருக்கிறான் என்றதுமே, இங்கே எவளைப் பிடித்தானோ என்றுதான் பேச்சு! அது... அது, நீயாக... நீயில்லையே, சந்தும்மா" என்று தவிப்புடன் கேட்டான். "நீ ஒன்றும் அவனிடம் ஏமாந்து போய்விடவில்லையே?"

மறுப்பாகத் தலையசைத்த போதும், சந்தனாவின் கண்கள் நீரைப் பொழிந்தன!

தங்கையின் முகத்தை ஒருதரம் கூர்ந்து பார்த்தான் பூபாலன். "சந்தனா?"

மீண்டும் தலையசைத்து, "மனம் கொஞ்சம் ஈடுபட்டிருப்பது உண்மைதான்! ஆனால் நான் உன் தங்கை! நம், அப்பாவுடைய மகள்! எந்தவித இழிநிலைக்கும் ஆளாக மாட்டேன்!" என்றாள் அவள்.

ஆறுதலும், வருத்தமுமான ஒரு பெருமூச்சுடன், "போகட்டும்! இனியும் இவன் வீட்டில் நீ இருப்பது நல்லதல்ல! வா! போகலாம்!" என்றான் அண்ணன். "ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறேன். இப்போதைக்கு, அங்கே போவோம். சீக்கிரமே வீடு பார்த்துக் கொள்ளலாம்!"

போய்விடலாம்! காலின் கீழ் தரையே எரிவது போலத் தான் இருக்கிறது! ஆனால், எந்த மாதிரி நிலையில் இங்கே வந்தாள்!

சற்று யோசித்துவிட்டு, "திடீரென்று, நீ எப்படிண்ணா வந்தாய்?" என்று கேட்டாள் தங்கை!

"அதாம்மா இன்னமும், உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்களுக்கு ஒரேயடியாகக் கெடுதல் நேர்ந்து விடாது என்று, நான் நம்புவது! பெயரைச் சொல்லாமலே ஓர் உதவி கிடைத்தது! கொஞ்ச நாட்களுக்கு முன்பாகவே, ஒரு சிறு குறிப்பு, சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டுப் போவது நல்லது என்று! சென்ற முறை வந்துவிட்டுப் போனதிலிருந்து, நீ தனியாக இருக்கிறாயே என்று நானுமே அதற்குத்தானே முயன்று கொண்டு இருந்தேன்! அசுர கதிதான். வேலை முடியவும், இப்படி இன்னார் வீட்டில் இருக்கிறாய், இவன் இப்படிப்பட்டவன் என்பதால், உனக்கு ஆபத்து என்று ஓர் எச்சரிக்கை! எதற்கும் இருக்கட்டும் என்று விசாரித்துப் பார்த்தேன்! பத்திரிகைகளில், என்னென்னவோ வந்திருக்கிறது! படித்ததும், பயந்தே போனேன்! இந்த வீட்டில் தங்குவதற்கு நானே ஒத்துக் கொண்டேனே என்று, அவ்வளவு கவலை! நல்லவேளையாக, வேலையும் முடிந்து விடவும், விழுந்தடித்துக் கொண்டு, கிடைத்த முதல் விமானத்தில் ஏறி வந்துவிட்டேன்! வாம்மா, சீக்கிரமாகப் போய்விடலாம்!" என்றான் அண்ணன்!

இவ்வளவு தூரம் எந்தப் பரோபகாரி, அண்ணனுக்கு எச்சரிக்கை தந்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால், அண்ணன் பத்திரிகைகளில் பார்த்தும் இருக்கிறான்!

பத்திரிகைகள் என்றாலே தீபனுக்கு அலர்ஜ்! அது, உண்மையை வெளிப்படுத்தியதாலா? அன்றி, பரபரப்புக்காகப் பொய்யைப் பரப்பியதாலா?

அவள் யோசிக்கையிலேயே, "பாவம்! அந்த டைரக்டர் நடிப்பை நம்பி, மகா நல்லவன் என்று நினைத்திருப்பாய்! அப்படியில்லை என்பதே, உனக்கு அதிர்ச்சியாக இருக்கும்!" என்று தங்கைக்காக இரங்கினான் பூபாலன்.

சட்டென உறுத்தியது!


இல்லையே! அவன் நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லையே! மோசமாக வாழ்ந்ததாகத்தானே சொன்னான்! அதுவும் மித்ராவின் விபத்தின் போது, தப்பாக நடந்ததை, மிகுந்த வருத்தத்துடன் கூறினானே!

அல்லது, அந்த வருத்தமே நடிப்பா?

எப்படியாயினும், ஒன்றுமே செய்யாமல், ஒரு கேள்வியேனும் கேட்காமல் போகக் கூடாது என்று தோன்றியது அவளுக்கு.

தப்புச் செய்யாதவள்! அவள் எதற்காகக் கோழையைப் போல ஓடி மறைவது?

அத்தோடு, பதில் சொல்ல, அவனுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்?


பூபாலனுக்கும் பிடிக்கவில்லைதான்!

ஆனால், கோழைத்தனம் கூடாது என்பதில் அவனுக்கும் ஒப்புதல் இருக்கவே, அரை மனதாய் அவன் சம்மதிக்க, தீபன் கொடுத்த எண்ணுடன் தொடர்பு கொண்டு, அவனுடன் பேச வேண்டும் என்றாள் சந்தனா.

"யார், சந்தனாவா? எப்படி இருக்கிறாய். வந்ததில் இருந்து, மித்ராவுக்கு உன்னைப் பற்றிய பேச்சுதான்! அவள் இல்லாமல், அங்கே போரடிக்கிறதா?" என்று சந்தோஷமாகக் குசலம் விசாரித்தாள் எலிசா.

ஆனால், தீபனுடன் பேசுவது பற்றி, சந்தனா மீண்டும் கேட்கவும், "சாரி!" என்று வருத்தம் தெரிவித்தாள் அவள். "இது லாஸ் ஏஞ்சலிஸ், சந்தனா! வேறே மாதிரி உலகம்! நேற்றுதான், தீபனின் அடுத்த படத்துத் தொடக்கவிழா நடந்தது! படத்துக் கதாநாயகியும், டைரக்டரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இப்போது, இங்கே இரவு நேரம்! வேண்டுமானால், நாளைக் காலையில் தீபனைச் சந்திக்கும் போது, நீ கூப்பிட்டாய் என்று சொல்லட்டுமா?"

எலிசா சொல்லாமல் சொன்னதில், சந்தனாவின் மனம் நொந்து போயிற்று!

காட்டிக் கொள்ள மனம் இன்றி, மித்ராவைப் பற்றி மட்டும் விசாரித்து விட்டு போனை வைத்தாள்!

ஒரு வேளை, இந்த எலிசா கெட்டவளாக இருக்கலாமோ?

ஆனால், அதற்குக் காரணமே இல்லையே! அவள் வெறும் ஏஜெண்ட்! சில ஆண்டுகளாகப் பழகியதில், மித்ராவைப் பார்த்துக் கொள்கிறாள்! மற்றபடி, தீபனின் சொந்த வாழ்வில் அவளுக்கு இடம் இல்லை என்பது, சந்தனாவுக்குத் தெரியும்.

தீபனுமே, வேறு எண் எதுவும் தரவில்லையே!

முழுக்கத் தோற்றுவிட்ட, உணர்வுடன், தன் பொருட்களை எடுத்து வைத்தாள் சந்தனா!

மீனாட்சி வந்ததும், அவளிடம் சொல்லிக் கொண்டு, அண்ணனும் தங்கையும் கிளம்பினர்.

ஒரு தரம் தடுத்த போதும், சின்னவர்கள் வெளியேறுவதில் பிடிவாதமாக இருந்தனர்.

சந்தனாவின் கண்களில் இருந்த நிராசையைப் பார்த்த பிறகு, மீனாட்சியும், அதற்கு மேல் அவர்களை வற்புறுத்தவும் இல்லை!

அவர்கள் சென்ற பிறகு, உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசித்தாள்!

அன்றிரவு 'லேட்நைட் டின்னர்!'

திரைப்படத்தின் கதைப் போக்கு, அதன் பாத்திரங்களின் மன நிலை போன்றவைகளை, நடிப்பவர்களுடன் பேசி முடித்துவிட்டு, தீபனும் எலிசாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்!

எலிசாவை அவளது கார் நிற்கும் இடத்தில் விட்டுவிட்டு, தீபன் தன் வீடு செல்ல வேண்டும்!

மறுநாளைய வேலைத் திட்டத்தைப் பேசியவாறே, இருவரும் சென்று கொண்டிருந்த போது திடுமென, "உன் மகளைத் தாய்க்குத் தாயாக, நான் பார்த்துக் கொள்கிறேன்! உடம்பு சுகத்துக்கும், இங்கே பிரச்சினையே கிடையாது! நல்ல, ஆரோக்கியமான பெண்களை, நானே ஏற்பாடு செய்து தருகிறேன் அனாவசியமாக மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே! நீ முழுக்கவனத்தையும், படம் எடுப்பதில் செலுத்து!" என்று அறிவுரை கூறினாள் எலிசா!

ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு!

திடீரென்று, இப்படி ஓர் அறிவுரை எதற்கு?

மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே என்றால், திருமணம் செய்யாதே என்றல்லவா கூறுகிறாள்!


அவனது திருமணத்தை எலிசா விரும்பவில்லை என்றால், அதன் அர்த்தம் சரியில்லையே!
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty இனி எல்லாமே நீயல்லவோ. 16

Post by udhayam72 Fri May 10, 2013 3:45 pm

ஆனால், நலபடியாகக் குடும்பம் நடத்துகிறவள் என்பதால், இவளுக்குத் தப்பான எண்ணம் இருக்க முடியாது!

ஆனால், ஏதோ இருக்கிறது!

உள்ளே குறுகுறுப்பு அதிகம் ஆகவும், "என்ன எலிசா, என்னவோ விஷயம் இருக்கிறாற் போலத் தெரிகிறதே! உனக்கே என் மேலே ஒரு கண்ணா?" என்று வேடிக்கைப் போலத் தீபன் கேட்டுவிட்டான்!

அவளது மேக்கப்பிலும் நிறம் மாறி, "ஓ, ஷட்டப், டீப்! ஒரு தமக்கையைப் போல, உன் மேல் உள்ள அக்கறையில், உனக்கு நல்லது சொன்னேன்! பிரச்சினை இல்லாத ஆரோக்கியமான எத்தனையோ பேர்..." என்று அதிலேயே நின்றாள் அவள்.
_____
இடையிட்டு, "நான் தான் பெண்களே வேண்டாம் என்கிறேனே. பிறகு எதற்கு, இந்த ஆரோக்கியமான... அல்லாத... எல்லாம்?" என்று கேட்டான் தீபன்.

"இல்லை, டீப்! அது இயற்கைக்குப் புறம்பானது! அவ்வப்போது அதுவும் இல்லாவிட்டால், உன்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது! அதனால் தான்..."

"அதற்காகத்தான் ஓர் ஏற்பாடு செய்ய எண்ணியிருக்..." என்றவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, "அதைத்தான் சொன்னேன்! முன்னைப் போல மாட்டிக் கொள்ளாதே என்று. சொன்னால், கேள்!" என்று கிரீச்சிட்டாள் எலிசா.

தீபன் வியப்புடன் திரும்பிப் பார்க்கவும், சட்டெனக் குரலைத் தணித்தாள்.

"சொன்னால் கேட்டு நட, டீப்! ஓர் அனுபவம் போதாதா? நிரந்தரத் திட்டம் எதுவும் உனக்குச் சரிப்பட்டு வராது! அதனால், சும்மா அவ்வப்போது..." என்று மீண்டும் பழைய பல்லவியையே அவள் பாடவும், அவன் பொறுமையிழந்தான்!

"இந்தப் பேச்சு இனி வேண்டாம்! விடு எலிசா!" என்று, மறுக்க முடியாத, ஓர் இறுகிய குரலில் கூறி முடித்தான் அவன்!

அவளை இறக்கி விட்டுவிட்டுத் தன் வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம், அவனுக்கு ஒரே யோசனை!

ஓர் உறவினரைப் போலப் பழகிய எலிசா, அவன் ஒழுங்காகத் திருமணம் செய்து வாழ்வதை விரும்பவில்லை என்பதை அறியும் போது, அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது!

அதுவும், இன்று அவள் இந்தப் பேச்சை எடுத்து, இவ்வளவு தீவிரமாகப் பேசுவானேன்?

என்னவோ நடந்திருக்கிறது!

பொதுவாகச் சென்னையில் தாயோடு, தீபனது தொடர்பு, எலிசாவின் செல் மூலமாகத்தான்!

பரபரப்பான செய்திக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதை அறிந்த பிறகும், தன் போனில் தாயோடு பேசி, அவளையும் இவர்கள் கொத்திக் குதற விட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில், அவன் செய்த ஏற்பாடு!


அதே கருத்தோடுதான், சந்தனாவிடமும் எலிசாவின் செல் எண்ணையே தந்திருந்தான்!

அவள் எதற்கேனும், அவனோடு தொடர்பு கொள்ள முயன்றிருப்பாளா என்று யோசிக்கும் போதே, அவனது நெஞ்சுத் துடிப்பு வேகமாயிற்று!

என்னவாக இருக்கும்?

அன்னைக்கு எதுவும் இராது என்று, அவனுக்குத் தெரியும்! அவனை பெற்றவளுக்கு ஏதேனும் சுகவீனம் என்றால், 'சுகம்' பெரிய டாக்டர், அவனை அப்போதே தொடர்பு கொண்டிருப்பார்! அதற்கு அவன் வேறு ஏற்பாடு செய்திருந்தான்!

இப்போது பார்த்தால், சந்தனாதான் எதற்கோ பேசியிருக்க வேண்டும் என்று, தீபனுக்கு நிச்சயமாகத் தோன்றியது!


திருமணம் பற்றி, எலிசா பேச வேண்டுமானால்...

சந்தனாவிடம், எந்தக் கழுகு மூக்குக்காரருக்கும் தெரியாமல் எப்படிப் பேசுவது என்று யோசித்தபடியே வீட்டை அடைந்தால், மித்ராவுடைய விளையாட்டுத் தோழனான மிச்சியும், அவனுடைய தந்தை நாகோட்டாவும், நள்ளிரவு தாண்டிய அந்த நேரத்திலும் அவனுக்காக, அங்கே காத்திருந்தார்கள்!

தீபன் புரியாது திகைக்கவும், முகம் கன்றிய நாகோட்டா, "இந்தப் பையனின் பிடிவாதம், சார்! உங்கள் அம்மா, எங்கள் வீட்டுக்கு போன் செய்தார்களாம்! தன்னுடன் உடனே பேசும்படி, உங்களிடம் சொல்லச் சொன்னார்களாம்! செய்தியை நேரில் சொன்னால் நூறு டாலர் கொடுப்பீர்கள் என்றார்களாம்! உங்களிடம் விஷயத்தை சொல்லாமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று இவன் ஒரேயடியாக நின்றுவிட்டான்! இல்லை, சார்! இவன் சொன்னான் என்பதற்காக, நீங்கள் பணம் கொடுக்கத் தேவையில்லை!" என்று, தீபன் கோட்டுப் பையிலிருந்து பணப்பையை எடுப்பதைப் பார்த்துவிட்டு, அவசரமாகச் சேர்த்துச் சொன்னார்.

தாயின் கெட்டிக்காரத்தனத்தை உள்ளூர மெச்சியவாறே முறுவலித்து, "அதற்காக மட்டும் அல்ல மிஸ்டர் நாகோட்டா! உங்கள் செல்லைக் கொஞ்சம் பயன்படுத்துவதற்கு, எனக்குத் தரவேண்டும்!" என்று இரண்டு நூறு டாலர் நோட்டுகளை எடுத்து கொடுத்தான் தீபன்.

செல்லை நீட்டியவாறு, "இந்த நேரத்திலா, மிஸ்டர் டீப்?" என்று கேட்டார் அவர்.

"இந்தியாவில் இப்போது பகல் தான் மிஸ்டர் நாகோட்டா!" என்று விட்டு, செல்லை வாங்கிப் பேசினான்.

தாய் சொன்னதைக் கேட்டுவிட்டு, "இங்கே ஒருத்தியை, உங்களுக்கு எப்போதுமே பிடிக்காது! அவளது வேலைதான் என்று நினைக்கிறேன். சந்தனா பற்றிக் கவலைப்படாதீர்கள். அவள் பொறுப்பற்றவள் அல்ல! பள்ளி வேலையை அவசரப்பட்டு விடமாட்டாள். அதுவும், அடுத்த மாதம் முழுப் பரீட்சை எனும் போது, நிச்சயம் மாட்டாள். அதனால் அவளை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்! அதனால் இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்! நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்! கவலைப்படாதீர்கள்! நான் பேசுவது, மிச்சி அப்பா போனில் தான். மித்தியிடம் இருந்து, அவன் எண்ணை நீங்கள் வாங்கி வைத்தது, ரொம்பவும் நல்லதாகிப் போயிற்று! உம்! கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தேன் என்று, என் மீது, இன்னமும் கோபமாக இருக்கிறாள்! சரியாகிவிடும் அம்மா! கவலை வேண்டாம். பை" என்று பேச்சை முடித்தான்.

மேலும் இரண்டு வார்த்தை பேசி, அவரை அனுப்பி வைத்தான்!

ஆக, எலிசாவிடம் பேசியது சந்தனாதான்!

அவளுடைய அண்ணனின் துணையோடுதான் இருக்கிறாள்!

ஒரு மாதம் முன்னதாக, அவளுடைய அண்ணன் போனதும்... அதற்கும் எலிசாதான் காரணமாக இருக்குமோ?

இங்கே தொடக்க விழாவை விரைவுப்படுத்தியது, அவளே!

அது, அவனை உடனே இங்கே வரவழைப்பதற்காக இருக்கலாம்!

ஆனால், எதற்காக உடனே வரவழைக்க வேண்டும்?
கண்மூடி யோசிக்கையில், உடனே புரிந்தது!

அன்று பூபாலன் பற்றிச் சொல்வதற்காக எலிசா போன் செய்த போது, மித்ரா அவளிடம் என்னவெல்லாம் சொன்னாள்!

வரிகளுக்கு இடையே தேடுவது என்பார்களே!

மித்தியின் பேச்சில், எத்தனையோ கண்டுபிடிக்கலாமே!


சந்தனாவுடைய அண்ணனைக் கிளப்பி அனுப்பியதும், அவளாகவே இருக்கக் கூடும்!

பூபாலனின் முகவரியைச் சொல்லி, அவளுக்கு வசதி பண்ணிக் கொடுத்ததே, தீபன் தான்...!

தொடக்க விழாவை முன்னே வைத்து, அவனை இங்கே கொணர்ந்து, பூபாலனை அங்கே அனுப்பி, அவன் தங்கையைக் கூட்டிப் போக வைத்து... எலிசா, எமகாதக வேலைதான் செய்திருக்கிறாள்!

வீட்டிலிருந்து யார் போன் பண்ணினாலும், தன் செல்லுக்குத்தானே பண்ணுவார்கள், சரியாகச் சொல்லாமல் படம் தொடங்கும் வரை, தள்ளிப் போட்டு விடலாம் என்று எண்ணியிருப்பாள்!

படம் தொடங்கிவிட்டால், இடையில் கிளம்புவது முடியாதுதானே?

ஆனால், அவனுடைய அன்னையின் அறிவுத்திறன் தெரியாமல், எலிசா திட்டம் போட்டுவிட்டாள்!

திறப்பு விழாவை முன்னே தள்ளியது, ஒரு வகையில் தீபனுக்கு வசதியாயிற்று!

படப்பிடிப்பு தொடங்குமுன் ஓர் இடைவெளி கிடைத்தது!

யாரிடமும், எதுவும் சொல்லாமல், தானே போய், டிக்கெட் எடுத்து வந்தான் தீபன்.

மீனாட்சி ஆன்ட்டியின் வீட்டை விட்டு சந்தனா வெளியே வந்து, இன்னமும் முழுதாக ஒரு வாரம் முடியவில்லை!

அதற்குள் மாதக் கணக்கில் நோய்ப்பட்டுக் கிடந்தது போன்ற உணர்வு அவளுக்கு!

அன்றும் அப்படித்தான்! பள்ளியில் இருந்து, சோர்வுடன் வீடு திரும்பினாள்.

அண்ணனின் அலுவலக கெஸ்ட் ஹவுஸ்! வேறு வீடு கிடைக்கும் வரை, தங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்! அவர்கள் வீடே கிடைக்கும் இன்னும் ஒரு மாதத்தில்! அதுவரை, இங்கேதான்...

சோர்வுடன் வீட்டைத் திறந்து உள்ளே சென்று கதவை மூட முயன்றால், கதவைத் தள்ளிக் கொண்டு, யாரோ உள்ளே வந்தார்கள்!

யாரோ அல்ல தீபன்!

உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் கட்டை விரலை விட்டு நின்றபடி, அவளை ஏற இறங்கப் பார்த்தான் அவன்!

"என்னம்மா, வெட்டிக் கொண்டு வந்தாயே! பிரிவு சந்தோ...ஷமாக இருக்கிறதா?"

குத்தலாகக் கேட்டபோதும், உடனேயே உருகி, அவளை இழுத்து அணைத்தான் அவன்!

"என்னடா இது? உடம்பை இப்படிக் காய விட்டிருக்கிறாயே! ஒரு வேளையாவது, ஒழுங்காகச் சாப்பிடுவாயா, இல்லையா?"

உண்மை அன்பு இல்லாதவனால், இப்படிக் கேட்க முடியுமா?

அவன் தோளில் சாய்ந்தபடியே நின்று, "நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்று ஒரு விசும்பலுடன் கேட்டாள்!

ஒரு கணம் திகைத்து, "ஓ தெரிந்து விட்டதா? ஆனால், அதற்காகவா... அதற்கும் நீ பிரிந்து வருவதற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டான் தீபன்!


என்ன சாதாரணமாகக் கேட்கிறான்!

"பின்னே? எத்தனையோ மில்லியன் டாலர் பட்ஜெட் படம் என்றார்களே! அத்தனை மில்லியன் செலவு செய்து படம் எடுக்கிறவர், அதை விட்டு, அந்தத் தகதக வாழ்க்கையை விட்டு, அவர் என்னைத் தேடி எப்படி வருவார் என்று..."

அவன் முகத்தில் கடுப்பு தெரிந்தது! "ஆனால், எத்தனை மில்லியன் டாலர் செலவு செய்து படம் எடுக்கிறவனுக்கும், மனைவி குழந்தை இருக்கலாம் தானே?" என்றான் கிண்டலும் எரிச்சலுமாக.

அவளுக்கும் ஆத்திரம் வந்தது! "இருக்கலாம், இருக்கலாம்! ஆனால், அந்த டைரக்டர் தான் யார் என்பதையே மனைவியிடம் மறைப்பாரா, என்ன?" என்றாள் வெடுக்கென.


அவளை ஆழப் பார்த்து, "ஆக மறைத்ததுதான் தப்பாகி விட்டதா? ஏன் மறைத்தேன் என்று யோசிக்கலாம் தானே அல்லது அப்படி யோசிக்கிற அசட்டுத்தனங்கள் எல்லாம், அங்கே இல்லையா?" என்று பழைய மாதிரியே கேட்டான் தீபன்.

அவனுள்ளே கோபம் இருந்தது! தன் குறைகளைக் கூட மறையாது சொல்லியும், தன்னை நம்பவில்லையே என்ற கோபம்! நம்பாமல், தாயையும் வருத்தி, தன்னையும் வருத்திக் கொண்டு இப்படி இருக்கிறாளே என்ற கோபம்!

"எல்லாம் யோசித்தேன்!" என்றாள் அவள் சுருக்கமாக!

"என்னவென்று?" என்று அவளை விடச் சுருக்கமாகக் கேட்டான் அவன்

சொல்லத் தயங்கினாள் சந்தனா!
எவ்வளவு மோசமாக நினைத்தாள்! அதைக் கூசாமல் எப்படிச் சொல்வது?

பதில் சொல்லாமல் அவள் தயங்கி நிற்கவும், "பரவாயில்லை! சொல்லிவிடு! என்ன நினைத்ததால், இந்தப் பிரிவு என்று எனக்குத் தெளிவாக தெரிந்தாக வேண்டும்!" என்று உந்தினான் தீபன்!

அப்போது, சந்தனா சந்தேகப் பட்டதில் தப்பு காண முடியாதுதான்! ஆனால், அவன் நேரிலே வந்து, இப்படிக் கேட்கும் போது, அந்த நினைப்பே, தப்பாகத் தோன்றியதே!

"சொல்லும்மா!"

ஒரு பெரிய மூச்செடுத்துக் கொண்டு, நினைத்ததை எல்லாம் சந்தனா சொன்னாள்.

தீபனின் உடல் இறுகுவதைச் சந்தனாவால் உணர முடிந்தது!

"சது, இவ்வளவு மோசமாக, என்னை நீயாகவே நினைத்தாயா? வேறு யாரும் எதுவும்... எலிசா... உன் அண்ணன் பங்கு... எப்படியும், என்னிடம் ஒரு வார்த்தையாவது கேட்க வேணுமா வேண்டாமா?" என்றான், கோபத்தை மீறிய வருத்தத்துடன்.

கேட்காமலா? அவனுக்குப் பதில் சொல்ல வாய்ப்புக் கொடுக்க எண்ணி முயன்றாள். அவனோடு பேசவே முடியாமல் போனதும் அப்போது பட்ட துன்பமும்...

"எல்லாம் கேட்டேன்" என்று சொல்லு முன், அவளுக்குத் தொண்டை அடைத்தது! "உங்களோடு பேச வேண்டும் என்றால், கதாநாயகி நடிகையோடு, அவளைப் புரிந்து கொள்ளப் போயிருப்பதாக... காலையில் வந்த பின் சொல்வதாகச் சொன்னாள்" என்று தவிப்புடன் தெரிவித்தவள், "அப்புறம் அண்ணனும்" என்று அவன் சொன்னதையும் கூறினாள்.

அவள் ஒன்றும், அவனைத் தப்பாக நினைக்க ஆசைப்பட்டு, அதைச் செய்யவில்லையே! எவ்வளவோ, வேதனையோடு... வேறு வழியின்றிதானே, அவனை மோசமாக எண்ணியதும், அவன் வீட்டை விட்டு வெளியேறியதும்?
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty Re: இனி எல்லாமே நீயல்லவோ.

Post by udhayam72 Fri May 10, 2013 3:46 pm

சற்றே ஆறுதலுற்றவன் போல, "இப்படி ஒன்றைத்தான், நானும் எதிர்பார்த்தேன். மற்றவர் பேச்சு வலுவாக இருந்திருக்கும் என்று எண்ணினேன்!" என்றான் தீபன். "ஆனால், அடிப்படைக் காரணம், நான் யார் என்று சொல்லாமல் போனதுதான் இல்லையா? மனம் ஒன்றுபட்ட பிறகும், ஏன் மறைத்தேன் என்பது? அதுதானே? அது ஏன் என்று, இப்போது சொல்கிறேன், கேள்!" என்று தொடங்கி, காரண காரியம் விளக்கினான் அவன். தன்னிலை விளக்கம்!

"பார் சந்தனா, தரமான பத்திரிகைகளில் பெயர் வருவது பெருமைதான்! ஆனால், புற்றீசல் போல, பெருகிவிட்ட கொஞ்சம் இரண்டாம் தரப் பத்திரிகைகள், நிலைத்து நிற்பதற்காகவே, பரபரப்பான செய்திகள் வெளியிட வேண்டியிருக்கிறது! பல டீவி சானல்களும் அப்படித்தான் செக்ஸ், கொலை, கொள்ளை, பலவித வக்கிரங்கள்... இவை போன்ற செய்திகள்! ஒரு சின்ன இணுக்குக் கிடைத்தால் போதும், அங்கே பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில், பாடாய்ப் படுத்தி விடுவார்கள்! என்ன மாதிரிக் கேள்விகள்! என்ன மாதிரி விளக்கங்கள்! நம்மைப் பார்க்க, நமக்கே வெறுத்துப் போகும்! போகுமிடம் எல்லாம், கண் கூச வைக்கும் ஃப்ளாஷ் ஒளி வெள்ளங்கள்! ஒரு வினாடி கூட, நாம் நாமாக இருக்க முடியாது! இதில் அதிகம் மாட்டிக் கொள்கிறவர்கள், திரைப்படம், டீவி நிகழ்ச்சிகள் போன்ற 'ஷோ' தொழிலில் இருப்பவர்கள்தான்!


"இங்கேயும், கிசுகிசு என்று, என்னவெல்லாம் எழுதுகிறார்கள் என்பதை நீயே எதிலாவது படித்திருப்பாய்தானே?

"உன்னிடம் விஷயத்தைச் சொல்லாததன் முக்கியமான காரணம் இதுதான்! பேச்சுவாக்கில், கவனமற்று, நீ ஒரு வார்த்தை விட்டுவிட்டால் கூட, வேண்டாத காதுகளில் அது விழ நேர்ந்தால், அப்புறம் உன்னைப் பந்தாடி விடுவார்கள்! உனக்கே தெரியாததைச் சொல்லவும் முடியாது அல்லவா? அதனால் தான் சொல்லாமலே போனேன்! அம்மா வீட்டில் எவ்வளவு எச்சரிக்கையோடு இருக்கிறேன், பார்த்தாய் தானே? அவர்கள் என் அம்மா என்பதே, வெளியே தெரியாது!"

ஆக, அவளுக்காகத்தான் யோசித்திருக்கிறான்!

"இதில் இவ்வளவு இருக்கிறது என்று தெரியாது!" என்றாள் சந்தனா. "அண்ணன் சொன்னதோடு, நீங்கள் நம்பி டெலிபோன் நம்பர் கொடுத்தவள் வேறு அப்படிச் சொல்லவும்..."

"எல்லாமே, எலிசாவின் வேலைதான்!" என்று பூபாலனை அவள் கிளப்பி விட்டதைச் சொன்னான் தீபன்.

"என்னக்கும், அப்படி யார், வேலை மெனக்கெட்டு, அண்ணனிடம் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்க முடியும் என்று யோசனை தான். ஆனால் அண்ணனும், அதை மட்டும் நம்பி வரவில்லை. விசாரித்து, பத்திரிகைகளில் பார்த்து..."

"சொன்னேன் இல்லையா? என்ன பத்திரிகை என்றும் பார்த்திருக்க வேண்டும்! அந்தப் பத்திரிகையின் தரம் பற்றியும், விசாரித்திருக்க வேண்டும்! அத்தோடு, மிஸ்டர் பூபாலனுக்குத் தகவல் கொடுத்துக் கிளப்பி விட்டது, எலிசாவாகத்தான் இருக்க முடியும் என்பது எனக்கு நிச்சயம். அவளுக்குத்தான், உன் அண்ணனைப் பற்றித் தெரியும்! என் பிரச்சினை தெரியும் என்பதால், இந்த விஷயத்தில், என் மீது கோபப்பட மாட்டாய் என்று நினைக்கிறேன்!" என்று பூபாலனைப் பற்றி விசாரிக்குமாறு எலிசாவிடம் சொன்னதைக் கூறினான்.
சற்று யோசித்துவிட்டு, சந்தனா தலையாட்ட, மேலே தொடர்ந்தான். "மித்ராவின் பேச்சில் உன் பெயர், அவளது தமிழ்ப் படிப்பு, நான் அதிக நாள் இங்கே இருந்தது எல்லாம் எலிசாவின் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது! நான் ஒரேயடியாக, இங்கேயே இருந்து விடுவேனோ என்று எண்ணி, அதைத் தடுக்க, எல்லா வகையிலும் முயன்றிருக்கிறாள்."

"ஒரு தரம் சொன்னீர்கள், அவளுக்குப் பத்து சதவீதக் கமிஷன் என்று! அது தடையின்றிக் கிடைப்பதற்காக, இவ்வளவு செய்வார்களா? எந்தத் தொழிலுமே, ஒன்று போனால், இன்னொன்று தானே? அதற்காக நம்பியவர்களின் வாழ்வைக் கெடுத்தால், மனம் உறுத்தாதா?"

"பத்து சதவீதத்தைக் குறைத்து மதிப்பிடாதே! மில்லியன் கணக்கில் செலவிடும் போது, அங்கே பலருக்கு அவள் எஜெண்ட் எனும் போது, அவளுக்கு எவ்வளவு கிடைக்கும் பார்! என்னைக் காட்டியே, என் படங்களின் மூலமாக எத்தனை பேரைப் பிடிப்பாள்? எலிசாவைப் பொறுத்தவரை, அவளது கொழுத்த சம்பாத்தியத்துக்கு, நான் ஒரு கருவி! அது தடையில்லாமல் வேலை செய்ய வேண்டும்! அவ்வளவே! அது போகட்டும்! அவளை விடு! நம் விஷயத்துக்கு வா! இப்போது நான் என்ன செய்யட்டும், சொல்லு?" என்று கேட்டான் தீபன்.


சந்தனா திகைத்தாள்!

அதுபற்றி, அவனே சொன்னான்.

"நான் திட்டமிட்டுச் சென்றது, இந்தப் படம் முடிகிற நிலையில், இந்தத் துறையில் இருந்து விலகுவது பற்றி அறிவிப்பது என்று! நான் மருத்துவம் படித்தவன் என்பது எல்லோருக்கும் தெரியும்! மருத்துவம் ஓர் உன்னதப் பணி என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை! அதையே தொடரப் போகிறேன் என்றால், மதிப்பாகவே விலகிவிடலாம் என்று நினைத்தேன்! அந்தப் பணத்தைக் கொண்டு, நம் மருத்துவமனையைப் பிரம்மாண்டமாகக் கட்டி, ஒரு பகுதியை இல்லாதவர்களுக்காக என்று... பல திட்டங்கள்! ஆனால், இங்கே உள்நாட்டுப் பிரச்சனையைப் பார்க்கும் போது... இப்போதே கூடப் படத்தில் இருந்து விலகிக் கொள்வது, நல்லதோ என்று தோன்றுகிறது! ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டதால், நிறைய இழப்பு ஏற்படும்! எல்லாவற்றையும் விட்டுவிட்டு, வெறும் கையை வீசிக் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கிறேன். கொஞ்சம் கடனும் ஏற்படலாம்! ஆனால் பெரிய பாதிப்பு இராது! பரவாயில்லை என்றால் சொல்லு! முடிவு உன்னதுதான்!"


பெரிய பொறுப்பைத் தலையில் தூக்கி வைக்கிறான்.

அதன் மூலம், அவனது அன்பின் அளவையும் காட்டுகிறான்!

இப்போது, அவளது அன்பின் அளவு எவ்வளவு?

"விலகாவிட்டால் எப்படி, தீபன்? ஒரு பெரிய இழப்போடு, நம் வாழ்வைத் தொடங்குவது என்றால், சஞ்சலமாக இருக்கிறதே! அத்தோடு, மருத்துவமனை..."

எதுவானாலும் உன் பொறுப்பு! சொல்லு என்பது போல, அவன் பேசாமலே நின்றான்.

"உங்கள் முதல் திட்டப்படி, இந்தப் படத்தை மட்டும் முடித்துவிட்டு வரலாம் என்றால் எப்படி, தீபன்? ரொம்ப நாள் ஆகுமா?"

"இந்தப் படத்துக்கான திட்டம், படப்பிடிப்புத் தொடங்கி, அறுபது நாட்கள்! மாறாது!"

"கட்டாயமாக அதற்குள் முடிந்துவிடுமா?"

"நிச்சயம்!

"இன்னொன்று தீபன், உங்களுக்கு ஆஸ்கார் வரை கிடைத்திருக்கிறதே! உங்கள் திறமை அதில் தான் என்றால், அதை விடுவது சரியா? உங்களுக்கே அதில் தான் ஈடுபாடு என்றால்...செய்யும் தொழிலில் திருப்தி இருக்க வேண்டும்! அது, என்னால் கெடுவது என்றால்..." என்று கலக்கத்துடன் இழுத்தாள் சந்தனா!

"ஊகூம்! அப்படி இல்லை, சது! கடந்த ஓர் ஆண்டாக... ஆஸ்காருக்குப் பிறகே, என்னுள் குழப்பம் தான்! அந்த விளக்கும், ஒளியும், பரபரப்பும்! ரசிக்க முடியாததோடு, வெறுப்பும் வரத் தொடங்கியிருந்தது! மித்ரா அடிப்பட்டதிலிருந்து, எப்போது விடுபடுவோம் என்பதுதான்! இது, ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தம்! அத்தோடு சரி! அதற்கு மேல், என் பணி, என் அப்பா போல, மருத்துவம் தான்! அது, எனக்கு நிச்சயம்!" என்றான் தீபன் தெளிவாக!

"அப்படியானால் சரி!" என்று பளிச்சென்று முகம் மலர்ந்தாள் அவள்! "அங்கே படப்பிடிப்புத் தொடங்கியதும், உங்களுக்கு அவகாசம், சரியாக அறுபதே நாட்கள்! அதற்கு மேல் போனால்..."

"அதற்கு மேல் போனால்?" என்று திரும்பிப் பார்த்துவிட்டு, என்ன என்பது போலக் கையால் சைகை செய்து கேட்டான் அவன்.

"அதற்கு மேல் பிரிந்திருப்பது, என்னால் தாங்காதுப்பா! அதனால், எதையும் லட்சியம் பண்ணாமல், உங்கள் காதைப் பிடித்து இழுத்துவர, நான் அங்கே வந்து குதித்துவிடுவேன், ஜாக்கிரதை!" என்று, கண்ணில் மையலுடன் எச்சரித்தாள் சந்தனா!

சந்தோஷமாகச் சிரித்தான் அவன்!


(முற்றும்)
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty Re: இனி எல்லாமே நீயல்லவோ.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 10, 2013 3:54 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இனி எல்லாமே நீயல்லவோ. Empty Re: இனி எல்லாமே நீயல்லவோ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum