தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

2 posters

Go down

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம் Empty பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Post by RAJABTHEEN Sun Mar 13, 2011 3:22 am

நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே LAASARAA இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதம் எழுதிக்கிறாள்!” என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத்திலடிக்காமல், தன் கன்னத்திலேயே இடித்துகொண்டு, ஏளனம் பண்ணலாம்! பண்ணினால் பண்ணட்டும், பண்ணட்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலை தீபாவளியதுமதுவுமாய், அவ்வளவு தூரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே? வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ?

இதென்ன முதல் கடிதமே முகத்தில் அறையற மாதிரி ஆரம்பிக்கிறது என்று தோன்றுகிறதோன்னோ? சரி, நான் அசடு, போங்கோளேன்; திருப்திதானே? நான் வெகுளி, எனக்கு மனசில் ஒண்ணும் வைத்துக்கொள்ளத் தெரியாது. அப்பாகூட அடிச்சுப்பார்; ”ஜகதாகிட்டே யாரும் அசதி மறதியாய்க்கூட ஒரு ரகஸ்யத்தைச் சொல்லிடாதேயுங்கள். ஒருத்தர்கிட்டேயும் சொல்லக்கூடாது என்றால் ஒரு கடிதாசுத் துண்டிலாவது அதை எழுதி எறிந்து விடுவாள். இல்லாவிடில் அவளுக்கு மண்டை வெடித்துவிடும். ஜகதா அவ்வளவு ஆபத்தான மனுஷி.” ஆமாம். அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்கள். நான் பின் யாரிடத்தில் சொல்லிக் கொள்வது, தலை தீபாவளிக்கு என் கணவர் என்னுடன் இல்லாத கஷ்டத்தை? என் அப்பா அம்மாவுக்கு எழுதலாமா? எழுதினால், புக்காத்து விஷயங்களைப் பிறந்த வீட்டுக்கு விட்டுக் கொடுத்தேன் என்கிற பொல்லாப்பைக் கட்டிக்கவா? நான் அசடாயிருக்கலாம்; ஆனால் அவ்வளவு அசடு இல்லை. அப்புறம் எனக்கு யாரிருக்கா; நீங்களே சொல்லுங்களேன்!

தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்னால் அம்மா வந்திருந்தாள், ஆசையா பெண்ணையும் மாப்பிள்ளையையும் தலை தீபாவளிக்கு அழைத்துப் போகணும் என்று. நீங்கள் ஊரில் இல்லை. இருக்கவும் மாட்டேள் என்று தெரிந்ததும் அவள் முகம் விழுந்ததைப் பார்க்கணுமே, எடுத்து மறுபடியும் சேர்த்து ஒட்ட வைக்கிற தினுசாய்த் தானிருந்தது.

”சரி, மாப்பிள்ளைதான் இல்லை, ஜகதாவைக் கூட்டிக் கொண்டு போகிறேனே! நாங்களும் பிரிஞ்சு கொஞ்ச நாளாச்சு. உங்களிஷ்டப்படியே கல்யாணமாகி நாலாம் நாளா கிருஹப்பிரவேசத்துக்கு விட்டதுதானே!” என்று சொல்லிப் பார்த்தாள்.

ஆனால் அம்மா (உங்கள் அம்மா - இப்போ எனக்கு இரண்டு அம்மான்னா ஆயிட்டா!) ஓரக் கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே, “என் பிள்ளை எப்போ அங்கே வர முடியல்லியோ உங்கள் பெண் இங்கேயே நாலு பேரோடு ஸல்லோபுல்லோன்னு இருந்துட்டுப் போறாள்! இனிமேல் எங்கள் பெண்ணும்தானே! அப்புறம் உங்களிஷ்டம். அவளிஷ்டம். இங்கே ஒருத்தரும் கையைப் பிடிக்கிறதாயில்லே!” என்றார்.

இதென்ன கன்றுக் குட்டிக்கு வாய்ப்புட்டை போட்டு பாலூட்டற சமாசாரமா? என்னை அம்மா ஆழம் பார்க்கிறது தெரியாதா, என்ன? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. இந்த வீட்டிலேயே யாரு பளிச்சுனு பேசறா? இங்கேதான் பேசினதுக்குப் பேசின அர்த்தம் கிடையாதே! எனக்குத் திடீர்னு சபலம் அடிச்சுண்டது. என் கையொட்டின தம்பி சீனுவைப் பார்க்கனும்னு. ஒரு நிமிஷம் என்னை பிரிஞ்சு இருந்ததில்லை. காலையில் கையலம்பி நனைஞ்ச சட்டையை மாத்தறதிலிருந்து, ராத்திரி தொட்டிலில் அவன் படுக்கையை விரிக்கிற வரைக்கும் அக்காதான் எல்லாம் பண்ணியாகணும். இப்போ குழந்தை என்ன பண்றானோ? ஆனால் நான் இங்கேயே இருக்கேன்னு சொல்லிவிட்டேன். அம்மா கண் தளும்பிற்று. அம்மா பேசாமே போயிட்டாள். நான் கொஞ்ச நாழி திக்பிரமை பிடிச்சு நின்றேன். அம்மா குறுஞ்சிரிப்புடன் என்னை ஒரு நிமிஷம் ஆழ்ந்து நோக்கி விட்டுக் காரியத்தைப் பார்க்கப் போயிட்டார். அவருக்கு உள்ளூற சந்தோஷம். எனக்குத் தெரியும், நான் பரீட்க்ஷையில் ஜெயித்து விட்டேன் என்று. என்ன பரீக்ஷை? பெண்ணாய்ப் பிறந்தபின் ஸ்வதந்திரம் ஏது என்கிறது தான்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம் Empty Re: பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Post by RAJABTHEEN Sun Mar 13, 2011 3:22 am

ஆமாம்; நான் கேட்கிறேன் - இதென்ன உத்தியோகம், ஒரு நாள் கிழமைக்குக் கூட பெற்றவர் உற்றவர் கூட இல்லாமல்படிக்கு? என்னதான் ‘காம்’பில் கிளம்பிப் போனாலும் சமயத்துக்கு லீவு வாங்கிக் கொண்டு திரும்பி வர முடியாதா?

ஆனால் எனக்கே தெரிகிறது; பெண்கள் என்ன, புருஷர்களுக்குத்தான், என்ன சுதந்திரம் இருக்கிறது? எங்களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம். பார்க்கப்போனால் யார்தார் விடுதலையாயிருக்கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக்கிறோமே, இந்த உலகத்தில்! பணக்காரன் தங்கக் கூண்டில். இந்த இரண்டு ஸ்திதியிலுமில்லாமல் நம்மைப் போல் இருக்கிறவர்கள் இதிலுமில்லை; அதிலுமில்லை; காலை ஊன்றக்கூட ஆதாரமில்லாமல், அந்தரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். இல்லாவிடில் இந்தச் சமயத்தில் நாம் பிரிந்து நீங்கள் எங்கேயோ இருப்பானேன்? நான் ஏங்கி உருகித் தவித்துக்கொண்டு? உத்தியோகத்தை உதறிவிட்டு ஓடிவந்துவிட முடிகிறதா? நான் ஒண்ணும் அவ்வளவு அசடு இல்லை. மனஸு வெச்சேன்னா எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ மனஸு வெச்சிருக்கேன்!

ஆனால் அதற்காக என்னோடு பேசக் கூடாது என்று இருந்ததா? போகிற சமயத்தில் என்னிடம் வந்து, ‘ஜகதா, நான் போயிட்டு வரட்டுமா?” என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால், தலையைச் சீவி விடுவார்களா? அதையும் தான் பார்த்து விடுகிறது; என்ன ஆகிவிடும்? சாந்தியைத்தைக்குத் தள்ளிப்போட்டு விட்டாலும் வாய் வார்த்தை கூட பேசிக்கக்கூடாது என்றால் பிள்ளைகள் கலியாணம் பண்ணிக் கொள்வானேன்? இந்த வீடே வேடிக்கையாய்த்தானிருக்கிறது. நீங்கள் எல்லாம் இப்படியிருக்கிறதால்தானே நாங்கள் எல்லாம் வெட்கம் கெட்டவர்களாகி விடுகிறோம்?

ஆனால் அம்மாவே சொல்லியிருக்கிறாள். கூட்டுக் குடித்தனம் என்றால் அப்படித்தானிருக்கும் என்று. அவளும் சம்சாரி வீட்டில்தான் வாழ்க்கைப்பட்டாளாம். இடம் போகாத வீட்டில் நாலு ஜோடிகள் வாசம் பண்ணுமானால் என்ன பண்றது? வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டால் கேட்கவே வேண்டாம். திடீர்னு ஒரு ஜோடியின் ஒரு படுக்கை தானாகவே திண்ணையில் வந்து விழுந்து விடுமாம். சீட்டைப் போட்டுக் குலுக்கினாற் போல் யார் படுக்கை என்று போட்ட பிறகுதான் தெரியுமாம். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது; திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி வாயை மூடிண்டிருக்க வேண்டியதுதான். அம்மா சொல்றப்போ எனக்கு சிரிப்பாய் வரும், இந்தச் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னால் அப்பா கூடச் சொன்னார்: “இதென்னடி, இது அவ்வளவு உசிதமோ? ஒரே சம்சார வீடாயிருக்கிறது. பையன் நாலு பேருக்கு நடுவே நாலாமவனாயிருக்கிறான். இன்னும் கலியாணத்துக்கு ஒன்று இரண்டு பெண்கள் காத்திருக்கிறாப் போலிருக்கிறது...”

“இருக்கட்டும், இருக்கட்டும், நிறையக் குடித்தனமாயிருந்து நிறையப் பெருகட்டும். நாளாவட்டத்தில் இது தான் நம் பெண்ணுக்கு நல்லதா விளையும், பாருங்கோ. இப்போ நமக்கு என்ன குறைஞ்சு போச்சு? எடுத்தவுடனே பிக்கு பிடுங்கல் இல்லாமல், கையை கோத்துண்டு போனவாளெல்லாம் கடைசியில், உலகம் தெரியாமல், எது நிலைச்சுது தெரியாமல், நாயும் பூனையுமா நாறிண்டிருக்கிறதை நான் பார்த்துண்டுதானே இருக்கேன்! பையன் நல்ல வேளையா நாலாம் பிள்ளையாத்தானே இருக்கான்? என் மாதிரி, என் பெண், வீட்டுக்கு மூத்த நாட்டுப்பெண்ணாய் வாழ்க்கைப்படவேண்டாமே?”

அம்மா அப்படிச் சொல்றப்போ நன்னாத்தானிருக்கு. நாவலில் கதாநாயகியாயிருக்க யார்தான் ஆசைப்பட மாட்டார்கள்? ஆனால் தனக்கென்று வரப்போத்தானே தெரியறது? நிஜம்மா, நீங்கள் அன்றைக்கு ஆதரவாய் எனக்கு ஒரு வார்த்தை கூட இல்லாமல் வண்டியிலேறிப் போயிட்ட பிறகு, எனக்கு அழுகையா வந்துவிட்டது. என் நெஞ்சின் பாரத்தை யாரிடம் கொட்டிக் கொள்வேன்? எல்லாரும் எனக்குப் புதிசு, வாயில் முன்றானை நுனியை அடைச்சுண்டு கிணற்றடிக்கு ஓடிப்போயிட்டேன்.

எத்தனை நாழி அங்கேயே உட்கார்ந்திருதேனோ அறியேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம் Empty Re: பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Post by RAJABTHEEN Sun Mar 13, 2011 3:23 am

என்னடி குட்டீ, என்ன பண்றே?”

எனக்குத் தூக்கிப் போட்டது. அம்மா எதிரே நின்னுண்டிருந்தாள். உங்கம்மா செக்கச் செவேல் என்று நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமமிட்டுக் கொண்டு கொழ கொழன்னு பசுப்போல் ஓரொரு சமயம் எவ்வளவு அழகாயிருக்கிறார்!

”ஒண்ணுமில்லையே அம்மா!” என்று அவசரமாய்க் கண்ணைத் துடைத்துக் கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை.

“அடாடா! கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணையும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே” (கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது!) “என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே; உன் உடம்பு எங்களுக்குப் பிடி படறவரைக்கும் உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ- அட; குட்டி இதென்ன இங்கே பாருடீ!”

அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த்தார். அவசரமாய் நானும் எழுந்து என்னென்று பார்த்தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

“ஏ குட்டி, எனக்குத்தான், கண்சதை மறைக்கிறதா? கிணற்றில் ஜலம் இருக்கோ?”

“இருக்கிறதே!”

“குறைஞ்சிருக்கா?”

”இல்லையே, நிறைய இருக்கே!”

”இருக்கோன்னோ? அதான் கேட்டேன்; அதான் சொல்ல வந்தேன். கிணற்று ஜலத்தை சமுத்திரம் அடித்துக் கொண்டு போக முடியாதுன்னு! நேரமாச்சு. சுவாமி பிறையின் கீழ் கோலத்தைப் போடு-” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.

நான் கிணற்றடியிலேயே இன்னும் சற்று நேரம் நின்றிருந்தேன். நெஞ்சில் சின்னதாய் அகல் விளக்கை ஏற்றி வெச்ச மாதிரியிருந்தது. மேலே மரத்திலிருந்து பவழமல்லி உதிர்ந்து கிணற்றுக்குள் விழுந்து கொண்டிருந்தது. தும்பையறுத்துக் கொண்டு கன்றுக்குட்டி முகத்தை என் கையில் தேய்த்துக் கொண்டிருந்தது.

இந்த வீட்டில் யார்தான் பளிச்சென்று பேசுகிறார்கள்? வெளிச்சம் எல்லாம் பேச்சில் இல்லை. அதைத்தாண்டி அதனுள்தான் இருக்கிறது.

ஆனால் ஊமைக்கு மாத்திரம் உணர்ச்சியில்லையா? அவர்களுக்குத்தான் அதிகம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் அசல் ஊமையில்லையே, ஊமை மாதிரி தானே! எனக்கு ‘ரெஸ்பெக்டே’ இல்லையோன்னோ? ஆமாம், அப்படித்தான். போங்கோ நான் உங்களுக்கு இப்போ கடிதம் எழுதவில்லை. உங்களுடன் கடிதத்தில் பேசி கொண்டிருக்கிறேன். இல்லை, கடிதாசியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் யோசனை என்னுடையது. அதை யாராலும் தடுக்க முடியாது. என்னாலேயே தடுக்க முடியாதே, நான் என்ன செய்வேன்? நான்தான் அப்பவே சொல்லிவிட்டேனே, என் நெஞ்சிலிருக்கிறதை அப்படியே கொட்டிவிடுவேன் என்று!

எனக்கு மாத்திரம் தெரியாதா, நீங்கள் நெஞ்சில் முள் மாட்டிண்ட மாதிரி, கண்டத்தை முழுங்கிண்டு, முகம் நெருப்பாய்க் காய, வாசலுக்கும், உள்ளுக்குமா அலைஞ்சது? அப்போ உங்களுக்கு மாத்திரம் என்னோடு பேச ஆசையில்லை என்று நான் சொல்ல முடியுமா? அதை நினைத்தால்தான் எனக்குத் துக்கம் இப்போகூட நெஞ்சை அடைக்கிறது. என்ன பேசவேண்டும் என்று நினைத்தீர்களோ? அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லை. இதற்கு முன்னால் நீங்கள் யாரோ, நான் யாரோ? பரதேசிக் கோலத்தில் படி தாண்டி உள்வந்து நீங்கள் என் கைபிடித்தும் ஜன்மேதி ஜன்மங்கள் காத்திருந்த காரியம் நிறைவேறி விட்டாற்போல் எனக்குத் தோன்றுவானேன்?

அப்படிக் காத்திருந்த பொருள் கைகூடிய பின்னரும், இன்னமும் காத்திருக்கும் பொருளாகவே இருப்பானேன்? இன்னமும் ஜன்மங்களின் காரியம் நிறைவேறவில்லையா? இப்பொழுது நெருப்பு என்றால் வாய் வெந்துபோய் விடாது. தாலி கட்டின வீட்டில் அடித்து விழுகிறாயே என்று கேட்காதேயுங்கள். இப்போ நான் சொல்லப் போவதைத் தைரியமாய்த்தான் சொல்லவேணும். நீங்கள் எங்கேயோ ‘காம்ப்’ என்று தூரதேசம் போய்விட்டீர்கள். இந்த நிமிஷம் எந்த ஊரில் எந்த ஹோட்டலில், சத்திரத்தில், எந்தக் கூரையை அண்ணாந்து பார்த்தபடி என்ன யோசனை பண்ணுகிறீர்களோ? நானும் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் திரும்பி வருவதற்குள் எனக்கு எதுவும் நேராது என்று என்ன நிச்சயம்? நினைக்கக்கூட நெஞ்சு கூசினாலும், நினைக்கத்தான் செய்கிறது. உங்களைப் பற்றியும் அப்படித்தானே? அந்தந்த நாள் ஒரு ஒரு ஆயுசு என்று கழியும் இந்த நாளில், நாமிருவரும், இவ்வளவு சுருக்க, இவ்வளவு நாள் பிரிந்திருக்கும் இந்தச் சமயத்தில், நம்மிருவரிடையிலும் நேர்ந்திருக்கும் ஒரு ஒரு பார்வையிலும், மூச்சிலும் தாஅழ்ந்த ஒன்றிரண்டு பேச்சுக்களும், நாடியோ, அகஸ்மாத்தாவோ, ஒருவர் மேல் ஒருவர் பட்ட ஸ்பரிசமோ, நினைவின் பொக்கிஷமாய்த்தான் தோன்றுகிறது. நாங்கள் அம்மாதிரி பொக்கிஷங்களைப் பத்திரமாய்க் காப்பாற்றுவதிலும் அவர்களை நம்பிக் கொண்டிருப்பதிலும் தான் உயிர் வாழ்கிறோம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம் Empty Re: பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Post by RAJABTHEEN Sun Mar 13, 2011 3:23 am

என் தகப்பனாருக்கு வாசலில் யாராவது வயதானவர்கள் போனால், அவரை அறியாமலே அவர் கைகள் கூம்பும். “என்னப்பா?” என்று கேட்டால் சொல்வார், “அம்மா இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு நிச்சயமில்லை. இந்த நாளில் இத்தனை வயசு வரைக்கும் இருக்கிறதே, காலத்தையும், வயசையும் இவர்கள் ஜயம் கொண்ட மாதிரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்குகிரேன்,” என்று வேணுமென்றே குரலைப் பணிவாய் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்கையில், ஏதோ ஒரு தினுசில் உருக்கமாயிருக்கும்.

ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? இந்தக் குடும்பத்திலேயே, ஆயுசுக்கும் ரணமாய், தீபாவளிக்குத் தீபாவளி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் திருஷ்டாந்தம் இல்லையா? நீங்கள் இப்போது நால்வராயிருப்பவர்கள், ஐவராயிருந்தவர்கள் தானே.

கடைசியில் எதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேனோ, அதுக்கே வந்து விட்டேன். நீங்கள் இல்லாமலே நடந்த தலை தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றித்தான்.

அம்மாவைப் பார்த்தால் ஒரு சமயம் ப்ரமிப்பாய்த்தானிருக்கிறது. அந்த பாரி சரீரத்துடன் அவர் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றுகிறார், எவ்வளவு வேலை செய்கிறார். ஓய்ச்சல் ஒழிவில்லை! சிறிசுகள் எங்களால் அவருக்குச் சரியாய்ச் சமாளிக்க முடியவில்லையே! மாடிக்குப் போய் அவர் மாமியாருக்குச் சிசுரூஷை பண்ணிவிட்டு, மலம் முதற்கொண்டு எடுக்க வேண்டியிருக்கிறது - வேறொருவரையும் பாட்டி பணிவிடைக்கு விடுவதில்லை - அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகிறது! ஒரு புளியோ, மிளகாயோ, துளி சமையலில் தூக்கி விட்டால், தாலத்தையும், சாமான்களையும் அப்படி அம்மானை ஆடுகிறாரே! அவரைக் கண்டாலே மாட்டுப் பெண்களுக்கெல்லாம் நடுக்கல். அழகாயிருக்கிறார், வழிந்த சுழி மாதிரி, ஒல்லியாய், நிமிர்ந்த முதுகுடன்; இந்த வயசில் அவர் தலையில் அவ்வளவு அடர்த்தியாய்த் தும்பை மயிர்! கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவேயிருக்கின்றன. அம்மா சொல்கிறார்: “என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ‘ரிடையர்’ ஆனபிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் அமுல் பண்ணுகிறார். ஆபிஸில் பண்ணிப் பண்ணிப் பழக்கம்! இனிமேல் அவரையும் என்னையும் என்ன செய்கிறது? எங்களை இனிமேல் வளைக்கிற வயசா? வளைத்தால் அவர் ‘டப்’பென முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசணிக்காய் ‘பொட்’டென உடைஞ்சு போவேன். நாங்கள் இருக்கிறவரைக்கும் நீங்கள் எல்லாம் ஸஹிச்சுண்டு போக வேண்டியதுதான். இந்த மாடியிலிருக்கிற கிழவியை வந்த இடத்துக்குச் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒண்ணு இருக்கு. அப்புறம்-”

“ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசறேள்?” என்பார் மூத்த ஓர்ப்படி.

”பின்னே என்ன, நாங்கள் இருந்துண்டேயிருந்தால், நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்போ இருக்கிறது?”

”இப்போ எங்களுக்கு என்னம்மா குறைச்சல்?”

அம்மாவுக்கு உள்ளூறச் சந்தோஷந்தான். ஆனால் வெளிக் காண்பித்துக் கொள்ள மாட்டார். “அது சரிதாண்டி, நீ எல்லோருக்கும் முன்னாலே வந்துட்டே. பின்னாலே வந்தவாளுக்கெல்லாம் அப்படியிருக்குமோ? ஏன், என் பெண்ணையே எடுத்துக்கோயேன்; அவளுக்குக் காலேஜ் குமரியா விளங்கணும்னு ஆசையாயிருக்கு. இஷ்டப்படி வந்துண்டு போயிண்டு, உடம்பு தெரிய உடுத்திண்டு... நான் ஒருத்திதான் அதுக்கெல்லாம் குந்தகமாயிருக்கேன். அவள் பிறந்ததிலிருந்தே அப்பா உடன் பிறந்தமார் செல்லம். நான் வாயைப் பிளந்தேன்னா முதன்முதலில் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பவள் அவள்தான். என் வயிற்றுப் பிண்டமே இப்படியிருந்தால், வீட்டுக்கு வந்தவா நீங்கள் என்ன என் பேச்சைக் கேட்டுடப் போறேள்?”

”இல்லேம்மா; நாங்கள் நீங்கள் சொன்னதைக் கேட்கறோம்மா..” என்று ஏகக் குரலில் பள்ளிப் பையன்கள், வாய்ப்பாடு ஒப்பிப்பது போல், கோஷ்டியாய்ச் சொல்லுவோம்.

“ஆமா என்னமோ சொல்றேள்; காரியத்தில் காணோம். என்னைச் சுற்றி அஞ்சுபேர் இருக்கேள். முதுகைப் பிளக்கிறது; ஆளுக்கு அஞ்சு நாள் - ஏன், நானும் செய்யறேன். என் பெண் செய்யமாட்டாள்; அவள் வீதத்தை நான்தான் செஞ்சாகணும். ஆளுக்கு அஞ்சு நாள் காலையிலெழுந்து காப்பி போடுங்களேன் என்கிறேன். கேட்டதுக்குப் பலன் எல்லோரும் இன்னும் அரைமணி நேரம் அதிகம் தூங்கறேள்.”

எங்களுக்கு ரோஸமாயிருக்கும். இருந்து என்ன பண்ணுகிறது? அம்மாவை எதிர்த்து ஒண்ணும் சொல்லமுடியாது. நாங்கள் 5 1/2 மணிக்கு எழுந்தால் அவர் ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பை மூட்டியிருப்பார். ஐந்து மணிக்கு எழுந்தால் அவர் 4 1/2 மணிக்கு எழுந்து காப்பியைக் கலந்து கொண்டிருப்பார். நாலரை மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு. இந்தப் போட்டிக்கு யார் என்ன பண்ண முடியும்?

“வாங்கோ, வாங்கோ; காப்பியைக் குடிச்சுட்டுப் போயிடுங்கோ, ஆறி அவலாய்ப்போய் அதை மறுபடியும் சுட வைக்காதபடிக்கு; அதுவே நீங்கள் பண்ற உபகாரம். நான்தான் சொல்றேனே; நான் ஒண்டியாயிருந்தப்போ எல்லாத்தையும் நானேதானே செஞ்சாகணும்; செஞ்சிண்டிருந்தேன். இப்போ என்னடான்னா கூட்டம் பெருத்துப் போச்சு; வேலையே ஏலம் போட்டாறது. ஊம், ஊம்... நடக்கட்டும்.. நடக்கட்டும். எல்லாம் நடக்கிற வரையில் தானே? நானும் ஒரு நாள் ஓஞ்சு நடு ரேழியில் காலை நீட்டிட்டேன்னா, அப்போ நீங்கள் செஞ்சுதானே ஆகணும்? நீங்கள் செஞ்சதை நான் ஏத்துண்டுதானே ஆகணும்? மடியோ, விழுப்போ, ஆசாரமோ, அநாசாரமோ-”

அம்மா அவர் காரியத்தைப் பற்றிச் சொல்லிக்கட்டும். எல்லாமே அவரே செஞ்சுண்டாத்தான் அவருக்குப் பாந்தமாயிருக்கிறது. எங்களைப் பெற்றவர்களும் ஏதோ தங்களுக்குத் தெரிஞ்சதை எங்களுக்குச் சொல்லித்தான் வைத்திருக்கிறார்கள். எங்களுக்குத் தெரிஞ்சதை, எங்களால் முடிஞ்சவரை நன்றாய்த்தான் செய்வோம். ஆனால் அவர் ஆசாரத்தைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வதில் கடுகளவு நியாயம்கூட கிடையாது. ஜலம் குடிக்கும்போது ஒரு வேளையாவது பல்லில் டம்ளர் இடிக்காத நாள் கிடையாது; இதை யாராவது சொன்னால்- இதற்கென்று கொஞ்சம் தைரியமாய் மூத்த ஓரகத்திதான் கேட்கமுடியும்- ஒப்புக்கொள்ள மாட்டார். “எனக்குக் காது கேட்கல்லையே!” என்று விடுவார். இதென்ன காதுக்குக் கேட்காவிட்டால் பல்லுக்குத் தெரியாதா என்ன?

உங்கள் தங்கை எங்கேயாவது திரிந்துவிட்டு, ரேழியில் செருப்பை உதறிவிட்டு காலைக்கூட அலம்பாமல் நேரே அடுப்பங்கரையில் வந்து, “என்னம்மா பண்ணியிருக்கே?” என்று வாணலியிலிருந்து ஒற்றை விரலால் வழித்துப் போட்டுக் கொண்டு போவாள். அதற்கு கேள்விமுறை கிடையாது. அதுக்கென்ன செய்வது? நான் அப்படியிருந்தால், என் தாயும் என்னிடம் அப்படித்தான் இருந்திருப்பாளோ என்னவோ? ஆனால் அம்மா ஏதோ, தன் வார்த்தை சொல்றதுன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இவ்வளவு பெரிய சம்சாரத்தில் இத்தனை சிறிசுகள், பெரிசுகள், விதவிதங்கனிடை உழல்கையில், எந்த சீலத்தை உண்மையா கொண்டாட முடியும்?

ஓரோரு சமயம் அம்மா சொல்வதைப் பார்த்தால், என்னவோ நாங்கள் அஞ்சு பேரும் வெறுமென தின்று தெறித்து வளைய வருகிற மாதிரி நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வீட்டுக்கு எத்தனை நாட்டுப் பெண்கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் மிஞ்சி வேலையிருக்கிறது. சமையலை விட்டால், வீட்டுக் காரியம் இல்லையா, விழுப்புக் காரியம் இல்லையா, குழந்தைகள் காரியம் இல்லையா, சுற்றுக் காரியம் இல்லையா? புருஷாளுக்கே செய்யற பணிவிடைக் காரியங்கள்.. இதெல்லாம் காரியத்தில் சேர்த்தியில்லையா? இந்த வீட்டில் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பந்திகள், ஒவ்வொருத்தருக்கும் சமயத்துக்கு ஒரு குணம். ஒருத்தருக்கு குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும்; ஒருத்தருக்கு எதிரே நின்று கொண்டு கரண்டி கரண்டியாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மௌன விரதம்! தலை கலத்தின் மேல் கவிழ்ந்துவிட்டால் சிப்பலைச் சாய்க்கக் கூட முகத்துக்கும் இலைக்கும் இடையில் கிடையாது; ஒருத்தர் சதா சளசளா வளவளா, கலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு, “இன்னும் பசிக்கிறதே, ரஸம் சாப்பிட்டேனோ? மோர் சாப்பிட்டேனோ?” என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார். குழந்தைகளைப் பற்றியோ சொல்ல வேண்டாம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம் Empty Re: பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Post by RAJABTHEEN Sun Mar 13, 2011 3:24 am

எல்லோர் வீட்டிலும் தீபாவளி முந்தின ராத்திரியானால் நம் வீட்டில் மூணு நாட்களுக்கு முன்னதாக வந்துவிடுகிறது. அரைக்கிறதும், இடிக்கிறதும், கரைக்கிறதுமாய் அம்மா கை எப்படி வலிக்கிறது? மைஸூர்ப்பாகு கிளறும்போது கம்மென்று மணம் கூடத்தைத் தூக்குகிறது. நாக்கில் பட்டதும் மணலாய்க் கரைகிறது. அது மணல் கொம்பா, வெண்ணையா? எதை வாயில் போட்டாலும் உங்களை நினைத்துக் கொள்வேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மௌனம். ஒன்றைத்தவிர வேறெதைத் தனியாய் அநுபவிக்க முடியும்? மௌனம் கூட ஒரு ‘ஸ்டே’ஜூக்குப் பிறகு அநுபவிக்கிற விஷயமில்லை. வழியில்லாமல் ஸஹித்துக் கொள்ளும் சமாசாரம்தான். உங்களுக்கும் எனக்கும் மௌனமாயிருக்கிற வயசா? நெஞ்சக் கிளர்ச்சியை ஒருவருக்கொருவர் சொல்லச் சொல்ல, அலுக்காமல், இன்னமும் சொல்லிக் கொள்ளும் நாளல்லவா? நீங்கள் ஏன் இப்படி வாயில்லாப் பூச்சியாயிருக்கிறேள்? நீங்கள் புருஷாள். உங்களுக்கு உண்மையிலேயே விரக்தியாயிருக்கலாம். நான் உங்களைவிடச் சின்னவள்தானே! உங்கள் அறிவையும் பக்குவத்தையும் என்னிடம் எதிர்பார்க்கலாமா? உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது என்னுடன் நீங்கள் பேசணும், எனக்குப் பேச்சு வேணும். உங்கள் துணை வேணும்... ஐயையோ, இதென்ன உங்களைக் கையைப் பிடித்து இழுக்கிற மாதிரி நடந்து கொள்கிறேனே! என்னை மன்னிச்சுக்கோங்கோ, தப்பா நினைச்சுக்காதேங்கோ. ஆனால் எனக்கு உங்களையும் என்னையும் பற்றித் தவிர வேறு நினைப்பில்லை. ‘நானும் நீயும்’ எனும் இந்த ஆதாரத்தி ஒட்டின சாக்குத்தான் மற்றதெல்லாம். எனக்கு இதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், எழுத வந்ததுகூட மறந்து விடுகிறது.

ஆனால், ‘நானும் நீங்களும்’ என்று எல்லாம் எண்ணவும், எழுதவும் சுவையாயிருந்தாலும் குடும்பம் என்பதை மறந்து எங்கே ஒதுக்கி வைக்க முடிகிறது, அல்லது மறந்துவிட முடிகிறது? குடும்பம் என்பது ஒரு க்ஷீராட்சி. அதிலிருந்துதான் லக்ஷ்மி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டாகிறது. குடும்பத்திலிருந்து நீங்கள் முளைத்ததனால் தானே எனக்குக் கிட்டினீர்கள்? ஆலகால விஷமும் அதிலிருந்துதான்; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதில்தான். ஒன்றுமில்லை, அல்ப விஷயம்; இந்தக் குடும்பத்திலிருப்பதால்தானே, தீபாவளியை நான் அநுபவிக்க முடிகிறது! நீங்க்ள் எங்கேயோ இருக்கிறீர்கள்.

எனக்குத் தோன்றுகிறது. நானும் நீயுமிருலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் நீயுமாய் இழைந்து மறுபடியும் குடும்பத்துக்குள்ளேயே மறைத்துவிட்ட நானும் நீயின் ஒரு தோற்றசாக்ஷிதான் தீபாவளியோ? குடும்பமே நானும் நீயாய்க் கண்டபின், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. தீபாவளிக்கு முதல் ராத்திரி. கூடத்து ஊஞ்சலில் புது வேஷ்டிகளும் புடவைகளும் சட்டைகளும் ரவிக்கைகளும் போராய்க் குவிந்திருப்பதைப் பார்த்ததும் ஏன் இத்தனை துணிகளையும் நானே உடுத்திக் கொண்டு விட்டால் என்ன? பொம்மனாட்டி துணிகளை நானும் புருஷாள் துணிகளையும், உங்களுக்காக நானே! நீங்கள்தான் இல்லையே, எல்லாமே இந்த விசுவரூப நானும் நீயுக்குந்தானே?

அம்மா ஒரு மரச் சீப்பில் கரும் பச்சையாய் ஒரு உருண்டையை ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தார்.

”குட்டீ, சாப்பிட்டுட்டையா?”

”ஆச்சு அம்மா”

”தின்ன வேண்டியதெல்லாம் தின்னாச்சா?”

”ஆச்சு -” (அந்தக் கோதுமை அல்வாவில் ஒரு துண்டு வாங்கிட்டால் தேவலை. நான்தான் துண்டு போட்டேன். ஆனால் கேக்கறதுக்கு வெக்கமாயிருக்கே!)

“அப்படியானால் உக்கார்ந்துக்கோ, மருதாணியிடறேன்.”

அம்மா என் பாதங்களைத் தொட்டதும் எனக்கு உடல் பதறிப்போச்சு. “ என்னம்மா பண்றேள்?” அம்மா கையிலிடப் போறாராக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் பேச்சு அம்மாவுக்கு காது கேட்கவில்லை. என் பாதங்களை எங்கோ நினைவாய் வருடிக் கொண்டிருந்தார். வேலை செய்தும் பூப்போன்று மெத்திட்ட கைகள் எனக்கு இருப்பே கொள்ளவில்லை. அம்மா திடீரென்று என் பாதங்களைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு அவை மேல் குனிந்தார். அவர் தோளும் உடலும் அலைச்சுழல்கள் போல் விதிர்ந்தன. உயர்ந்த வெண் பட்டுப்போல் அவள் கூந்தல் பளபளத்தது. என் பாதங்களின் மேல் இரு அனல் சொட்டுகள் உதிர்ந்து பொரிந்தன.

“அம்மா! அம்மா!” என்று அழுகை வந்து விட்டது. அதுவே ஒட்டுவாரொட்டி. எனக்கும் தாங்கிக்கிற மனசு இல்லை.

”ஒண்ணுமில்லேடி குட்டி. பயப்படாதே.” அம்மா மூக்கை உறிஞ்சிக்கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண்டார். “எனக்கு என்னவோ நினைப்பு வந்தது. எனக்கு ஒரு பெண் இருந்தாள். முகம் உடல்வாகு எல்லாம் உன் அச்சுதான். இப்போ இருந்தால் உன் வயசுதான் இருப்பாள். என் நெஞ்சை அறிஞ்சவள் அவள்தான். மூணு நாள் ஜூரம். முதல் நாள் மூடிய கண்ணை அப்புறம் திறக்கவேயில்லை. மூளையில் கபம் தங்கிவிட்டதாம். இப்போத்தான் காலத்திற்கேற்ப வியாதிகள் எல்லாம் புதுப்புது தினுசாய் வரதே? பின்னால் வந்த விபத்தில் அவளை நான் மறந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் இப்போத்தான் தெரியறது. உண்மையில் எதுவுமே மறப்பதில்லை. எதுவுமே மறப்பதற்கில்லை. நல்லதோ கெடுதலோ அது அது, சாப்பாட்டின் சத்து ரத்தத்துடன் கலந்து விடுவதுபோல், உடலிலேயே கலந்துவிடுகிறது. நாம் மறந்துவிட்டோம் என்று மனப்பால் குடிக்கையில், ‘அடி முட்டாளே! இதோ இருக்கிறேன், பார்!’ என்று தலை தூக்கிக் காண்பிக்கிறது. உண்மையில் அதுவே போகப்போக நம்மைத் தாக்கும் மனோசக்தியாய்க்கூட விளங்குகிறது. இல்லாவிட்டால் என் மாமியாரும் நானும், எங்களுக்கு நேர்ந்ததெல்லாம் நேர்ந்தபின் இன்னும் ஏன் இந்த உலகத்தில் நீடிச்சு இருந்திண்டிருக்கணும்...?”

இதைச் சொல்லிவிட்டு அம்மா அப்புறம் பேசவில்லை. தன்னை அமுக்கிய ஒரு பெரும் பாரத்தை உதறித் தள்ளினாற்போல் ஒரு பெருமூச்செறிந்தார்; அவ்வளவுதான். என் பாதங்களில் மருதாணி இடுவதில் முனைந்தார். ஆனால் அவர் எனக்கு இடவில்லை. என் உருவத்தில் அவர் கண்ட தன் இறந்த பெண்ணின் பாவனைக்கும் இடவில்லை; எங்கள் இருவரையும் தாண்டி எங்களுக்குப் பொதுவாய் இருந்த இளமைக்கு மருதாணியிட்டு வழிபட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்துக்கு அந்த இளமையின் சின்னமாய்த்தான் அவருக்கு நான் விளங்கினேன்; எனக்கு அப்படித்தான் தோன்றிற்று. இப்படியெல்லாம் நினைக்கவும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் எனக்கு அப்படித் தோன்றிற்றோ என்னவோ?

இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா - அப்பா, பிறகு நாங்கள் - நீங்கள், பிறகு உங்கள் அண்ணன் அண்ணிமார்களின் குழந்தைகள். ஆனால் இங்கே எல்லா உயிரினங்களின் ஒருமையின் வழிபாடு இருக்கிறது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆனால் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே தோன்றுகிறது. மலைக்கோட்டை மேல் உச்சிப் பிள்ளையார் எழுந்தருளிய்யிருப்பது போல் பாட்டி மூன்றா மாடியில் எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றா மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ரகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தை தூக்கிக் கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பகமா, சாதமா- எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம்காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது.

சில சமயங்களில் அம்மா, அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள். ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவது போல், ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில், ‘சடக்’கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது.

“என்னடி குட்டீ, இப்போ என்ன விசேஷம்?”

எனக்கேத் தெரிந்தால்தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிகிறது. அம்மா முகத்தில் புன்னகை தவழ்கின்றது. அன்புடன் என் கன்னத்தைத் தடவிவிட்டு இருவரும் மேலே நடந்து செல்கிறார்கள். அம்மா தாழ்ந்த குரலில் அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம் Empty Re: பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Post by RAJABTHEEN Sun Mar 13, 2011 3:24 am

“பரவாயில்லை. பெண்ணைப் பெரியவா சின்னவா மரியாதை தெரிஞ்சு வளர்த்திருக்கா.”

அதனால் ஒன்றுமில்லை. என்னவோ எனக்குத் தோன்றிற்று. அவ்வளவுதான். இந்தச் சமயத்தில் இவர்களை நான் நமஸ்கரித்தால், மேலிருந்து இவர்கள் பெற்று வந்த அருளில் கொஞ்சம் ஸ்வீகரித்துக் கொள்கிறேன். சந்ததியிலிருந்து சந்ததிக்கு இறங்கி வரும் பரம்பரை அருள்.

எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தை விடச் சுருக்கவே திரும்பிவருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. “பாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்.” அப்பாவும், அம்மாவும் மேலேறிச் செல்கிறார்கள். நாங்கள் எல்லோரும் சொர்க்க வாசல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தியுடன் மௌனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென நினைப்பு வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேர வாண்டு ‘ஸ்டூலை’ வைத்து மேலேறி, மாடி விளக்கின் ‘ஸ்விட்சைப்’ போடுகிறான்.

திடீரென மாடி வளைவில் பாட்டி தோன்றுகிறார். விமானத்தில் சுவாமியை எழுப்பினாற் போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மாவும் அப்பாவும் இரு பக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாய், மெதுவாய், கீழே இறங்குகிறார்கள். பிறகு பத்திரமாய் அப்பா பாட்டியை இரு கைகளிலும் வாரித் தூக்கிக்கொண்டு போய் மனைமீது உக்காத்தி வைக்கிறார். அப்பா பிடித்துக் கொண்டிருக்க, அம்மா, பதச்சூட்டில் வெந்நீரை மொண்டு மொண்டு ஊற்றி, பாட்டி உடம்பைத் தடவினாற்போல் தேய்க்கிறார். நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிறோம்.

இது ஆராதனை இல்லாது ஏது? ஆமாம், பாட்டியின் உடல்நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பது போல், பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம்போதுதான். சரிவ ஜாக்கிரதையாய் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்று தான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்துவிட்டாலும், வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று நினைக்கிறேன். வருடங்களில் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது.

பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள், நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மௌனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல, குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது; இவர் இவரா, இதுவா? கோயிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும், இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்? கோவிலில் தான் என்ன இருக்கிறது?

“ஐயோ ஐயோ-” என ரேழி அறையிலிருந்து ஒரு கூக்குரல் கிளம்புகிறது. என்னவோ ஏதோ எனப் பதறிப் போய், எதிரோலமிட்டபடி எல்லோரும் குலுங்கக் குலுங்க ஓடுகிறோம். ‘வீல்’ என அழுதபடி குழந்தை அவன் பாட்டி மேல் வந்து விழுகிறான். “என்னடா கண்ணே?” அம்மா அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். சேகர் எப்பவும் செல்லப் பேரன். இரண்டாமவரின் செல்வமில்லையா?

“பாட்டி! பாட்டி!” பையன் ரோஸத்தில் இன்னும் விக்கி விக்கி அழுகிறான். “அம்மா அடி அடின்னு அடிச்சுட்டா-”

“அடிப்பாவி! நாளும் கிழமையுமாய் என்ன பண்ணீட்டடா உன்னை!” அம்மாவுக்கு உண்மையிலேயே வயிறு எரிந்து போய்விட்டது. கன்னத்தில் அஞ்சு விரலும் பதிஞ்சிருப்பதைப் பார்த்ததும்,

“காந்தீ! ஏண்டி காந்தீ!!-”

ரேழியறை ஜன்னலில், காந்திமதி மன்னி உட்கார்ந்திருந்தாள். ஒரு காலைத் தொங்கவிட்டு ஒரு காலைக் குத்திட்டு, அந்த முட்டி மேல் கைகளைக் கோர்த்துக்கொண்டு, கூந்தல் அவிழ்ந்து தோளில் புரள்வது கூட அவளுக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் கோபக்கனல் வீசிற்று. உள் வலியில் புருவங்கள் நெரிந்து, கீழ் உதடு பிதுங்கிற்று. அம்மாவைக் கண்டாதும் அவள் எழுந்திருக்கக் கூட இல்லை.

“ஐயையோ!” என் பக்கத்தில் சின்ன மன்னி நின்று கொண்டிருந்தாள். முழங்கையை பிடித்துக் காதண்டை, “காந்தி மன்னிக்கு வெறி வந்திருக்கு” என்றாள்.

காந்தி மன்னிக்கு இப்படி நினைத்துக் கொண்டு, இம்மாதிரி முன்னறிக்கையில்லாது குணக்கேடு வந்துவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ மூன்று நாட்களுக்குக் கதவையடைத்துக் கொண்டு விடுவாள். அன்ன ஆகாரம், குளி ஒன்றும் கிடையாது. சந்திரனை ராகு பிடிப்பது போல் பெரிய மனச்சோர்வு அவளைக் கவ்விவிடும். அப்போது அம்மா உள்பட யாரும் அவள் வழிக்குப் போக மாட்டார்கள்.

காந்தி மன்னியின் வாழ்வே தீராத் துக்கமாகி விட்டது. சின்ன மன்னி அப்புறம் என்னிடம் விவரமாய்ச் சொன்னாள். என்னால் நிஜமாகவே கேட்கவே முடியவில்லை. காதையும் பொத்திக்கொண்டு கண்ணையும் இறுக மூடிக்கொண்டு விட்டேன். அந்த காக்ஷியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் இரண்டாவது அண்னா, தீபாவளிக்குச் சீனி வெடி வாங்கப் போய்ப் பட்டாசுக் கடையில் வெடி விபத்தில் மாட்டிக்கொண்டு விட்டாராமே! எந்த மஹாபாவி சிகரெட்டை அணைக்காமல் தூக்கி எறிந்தானோ, அல்ல வேறு என்ன நேர்ந்ததோ? வெடித்த வெடியில் கடைச் சாமான்கள் பனை மர உயரம் எழும்பி விழுந்தனவாமே! அண்ணாவுக்குப் பிராணன் அங்கேயே போய்விட்டதாம் அண்ணாவுக்கு முகமே இல்லையாம்; சில்லு சில்லாய்ப் பேந்து விட்டதாம். முகமிருந்தவிடத்தில் துணியைப் போட்டு மூடிக் கொண்டு வந்தார்களாம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம் Empty Re: பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Post by RAJABTHEEN Sun Mar 13, 2011 3:25 am

சேகர் அப்போ வயிற்றிலே மூணு மாசமாம். இப்போ சேகருக்கு வயது ஏழா, எட்டா?

நிஜம்மா கேக்கறேன்; இந்தக் கஷ்டத்தை நீங்கள் எல்லோரும் எப்படி ஸஹிச்சிண்டிருந்தீர்கள்? அம்மாவும், அப்பாவும் எப்படி இதிலிருந்து மீண்டார்கள்? நீங்கள் எல்லோரும் முதலில் எப்படி உயிரோடிருக்கிறீர்கள்? காந்திமதி மன்னி கருகிப் போனதற்குக் கேட்பானேன்? இது நேர்வதற்கு முன்னால், அவள்தான் ரொம்பவும் கலகலப்பாய், எப்பவும் சிரிச்ச முகமாய் இருப்பாளாமே!

இப்போக்கூட, அந்த முகத்தின் அழகு முற்றிலும் அழியவில்லை. அவள் சீற்றம் எல்லாம் அவள் மேலேயே சாய்கையில், நெருப்பில் பொன் உருகி நெளிவது போல, தன் வேதனையின் தூய்மையில்தான் ஜ்வலிக்கிறாள். அவளுக்கு அவள் கதி நேர்ந்த பின், மற்றவர் போல் தெறித்துக்கொண்டு பிறந்தகம் போகாமல், எங்களோடு ஒருவராய், இதுவரை இங்கேயே அவள் தங்கியிருப்பதிலும் ஒரு அழகு பொலிகின்றது.

அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச் சற்றுக் குரல் தணிந்தது.

“ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா வா, எழுந்திரு - குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே, இது நியாயமா?”

“நியாயமாம் நியாயம்! உலகத்தில் நியாயம் எங்கேயிருக்கு?”

காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று.

“அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?”

”பாட்டி! பாட்டி! நான் ஒண்ணுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சுண்டு வந்து ‘இதோ பாரு அம்மா’ன்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனிய வெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா, பாட்டீ!” பையனுக்குச் சொல்லும் போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அணைத்துக் கொண்டார்.

“இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப்பிடறேன்! வயத்திலே இருக்கறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு, உன்னை என்ன பண்ணால் தகாது?”

அம்மாவுக்குக் கன கோபம் வந்துவிட்டது.

“நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க? நானும் தான் பிள்ளையத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லை?”

மன்னி சீறினாள். “உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?”

நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். அம்மாவை நேரிடையாகப் பார்த்து இப்படிப் பேசறவாளும் இருக்காளா? இன்னிக்கு விடிஞ்ச வேளை என்ன வேளை?

அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.

மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலை முடித்து நெற்றியில் கலைந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார்.

“காந்தி, இதோ பார், இதோ பாரம்மா-”

சேகர் ஒரு ஊசி மத்தப்பாடை அம்மாவுக்கும் பாட்டிக்கும் முகத்துக்கு நேர் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் கன்னத்தில் கண்ணீர் இன்னும் காயவில்லை.

எங்களில் ஒருவர் விலக்கில்லாமல் எல்லோருக்கும் கண்கள் நனைந்திருந்தன.

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயே தான்......
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம் Empty Re: பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 13, 2011 1:18 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம் Empty Re: பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum