தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தரக்குறைவு - ஜெயகாந்தன்.

2 posters

Go down

தரக்குறைவு   -  ஜெயகாந்தன். Empty தரக்குறைவு - ஜெயகாந்தன்.

Post by udhayam72 Thu May 09, 2013 8:56 pm

தரக்குறைவு

கதை ஆசிரியர்: ஜெயகாந்தன்.


“இதுக்கோசரமாம்மே இருட்லே தனியே வந்து ரயில் ரோட் மேலே குந்திக்குணு அய்வுறே… ‘சீ சீ!… அவங் கெடக்கறான் ஜாட்டான்’னு நென்சிகினு எந்திரிம்மே…”

-ஐந்தாறு பிரிவு தண்டவாளங்கள் நிறைந்த அந்த அகலமான ரயில்வே லைன் மீது இருட்டில், கப்பிக்கல் குவியலின் மீது அமர்ந்து அழுது கொண்டிருந்த அவள், இந்தக் குரலையும் இதற்குரியவனையும் எதிர்பாராதவளாய், இவனைக் கண்டு திகைத்தவள் போன்றும், அஞ்சியவள் போன்றும் பதைத்தெழுந்து நின்றாள்.

அப்போது கனைப்புக் குரலை முழக்கியவாறு சடசடத்து ஓடிவந்த மின்சார ரயிலின் வெளிச்சத்தில் அடிபட்டு, உதடுகள் வீங்கிய அவளது முகமும், அழுது கலங்கிய பெரிய கண்களும் அவனுக்குப் பிரகாசமாய்த் தெரிந்தன. அவன் தனது கோலத்தைப் பார்க்கின்ற கூச்சத்தாலும், தன் கண்களை நோக்கிப் பாய்கின்ற வெளிச்சத்தின் கூச்சத்தாலும் முகத்தை மூடிக்கொண்டாள் அவள். ரயில் போன பிறகும் முகத்தை மூடியிருந்த கரங்களை எடுக்காமல் இன்னும் அழுந்தப் புதைத்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதாள். அழுகையினூடே அவள் புலம்பினாள்.

“போ! நீ இன்னாத்துக்கு வந்தே? நானு இப்டியே போறேன்… இல்லாகாட்டி ரயில்லே தலையெக் குடுத்து சாவறேன்… உனக்குப் பண்ண துரோகத்துக்கு எனக்கு இதுவும் ஓணும், இன்னமும் ஓணும்…” என்று அழுது புலம்பிய பொழுது அவள் தனக்கிழைத்த துரோகத்தை எண்ணியோ, அதை உணர்ந்து அவள் கதறுவதைக் கண்ட சோகத்தாலோ அவனும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். குமுறி வரும் அழுகையை அடக்கிக் கொள்வதற்காக வானத்தை நோக்கித் தலை நிமிர்ந்து பெருமூச்சு விட்டான்.

- அவள் அழுது கொண்டே நின்றாள். அவன் அழுகையை அடக்கிக் கொண்டே நின்றான்.

“இப்படியெல்லாம் வரும்னு எனக்குத் தெரியும்… ஆமாம்மே! எனக்குத் தெரியும்… ம்… இன்னா செய்யலாம்; போனது போவட்டும். அதுக்கோசரம் நீ ஒண்ணும் ரயில்லே தலையெ வுட வேணாம். எங்கே போவணும்னு பிரியப் படறியோ அந்த எடத்தைச் சொல்லு… உன்னெ இஸ்தாந்த தோஷத்துக்கு.. ரெண்டு வருஷம் உன்னோட வாய்ந்தத்துக்கு பர்த்தியா அங்கேயே இட்டுக்கினு போயி உட்டுட்றேன். உனக்கு பட்டணம் ஆவாதும்மே; இந்தப் பொயப்பு ஓணாம்மே; இங்கேயே இருந்தா இன்னம் நீ பாயாப்பூடுவே… ஆமாம்மே; நீ ஊருக்குப் பூடும்மே…”
இப்போது அவனுக்கு எதிர்ப்புறத்திலிருந்து கனைப்பு குரலை முழக்கியவாறு சடசடத்து ஓடிவரும் மின்சார ரயிலின் கண் கூச வைக்கும் வெளிச்சத்தில், அவள் அவன் முகத்தைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

தன்னைக் கண்டு அருவருத்து அவன் முகம் சுளிப்பது போல் அவள் அவனது முகத் தோற்றத்தை, வெளிச்சத்தைக் கண்டு கூசும் அவன் விழிகளைக் கற்பனை செய்து கொண்டாள்.

அவன் தன்னை அருவருத்து ஒதுக்கவும் வெறுத்து விலக்கவும் நியாயம் இருக்கிறது என்ற உணர்வில் அவள் தலை குனிந்து நின்றாள். ஆனால் தனக்கு ஆறுதல் கூறவும் தன் விஷயத்தில் இன்னும் சிரத்தை காட்டித் தனது நிராதரவான நிலையில் துணையாய் வந்து நிற்கவும் என்ன நியாயம் இருக்கிறது அவனுக்கு? தனக்குத்தான் அதை ஏற்றுக் கொள்ள என்ன நியாயம் இருக்கிறது என்று யோசித்தபடி, மண் தரையில் வலது காலின் முன் பாகத்தைத் தேய்த்தவாறு நின்றிருந்தாள் அவள்.

கணவன் மனைவி என்ற நியாயத்தின் பாற்பட்டோ, வஞ்சிக்கப்பட்டவனும் வஞ்சித்தவளும் என்கிற முறையிலோ அல்லாமல் வெறும் மனித நியாயத்தினால் உந்தப்பட்டு, அவள் நிலையை மனித இதயத்தால் மட்டுமே உணர்ந்து அங்கு வந்து நின்றிருக்கும் அவன் அவளிடம் சொன்னான்:

“நீ நெசத்துக்குத்தான் சொல்றியோ? சும்மனாச்சியும் தான் சொல்றியோ? ரயில்லே தலையை வுட்டுக்குவேன்னு… செத்த மின்னே நீ தலையெ விரிச்சுப் போட்டுக்கினு அயுதுக்கினே ஓடியாந்தியே, அத்தெப் பாத்தப்ப அப்பிடித்தான் நீ என்னமோ செய்துக்கப் போறேன்னு நெனச்சிக்கினேம்மே… ஆமாம்மே… எனுக்கு ‘பக்’குனு வயித்திலே என்னமோ ஆயிடுச்சிம்மே… உம் பின்னாலே நா ஓடியாந்தா கும்பலு வந்துடும்னு வண்டியெ மெறிச்சிக்கினு கெங்கு ரெட்டி ரோடு கைக்கா ஓடியாறேன்… நல்ல வேளை… கேட்டு சாத்தலே… அப்பக்கூட இன்னா?… கேட்டாண்டே வரும்போது ‘லெப்டு’க்காத்தான் பார்த்துக்கறேன்… பாத்தா, நீ ஒம்பாட்டுக்கு ரயில் ரோட்டு மேலே போயிக்கினே கீறே… சேத்துப்பட்டு டேசனாண்டயாவது புடிச்சிட மாட்டமான்னு வேகமா ரெண்டு மெறி மெறிச்சனா – இது ஒரு தெண்ட கருமாந்தர வண்டி – பூந்தமல்லி ஐரோட்டாண்ட வரும்போது ‘மடார்’னு செயின் கயண்டுக்கிச்சு… அத்தெ ஒரு இஸ்ப்பு இஸ்து மாட்டிக்கினு வந்தா… நேரு பார்க்காண்ட வரும்போதே இங்கே நீ நின்னுக்கினு இருக்கறதெப் பாத்தெனா? அப்பிடியே வண்டியெப் போட்டுட்டு ஓடியாறேன்… ‘இவன் எதுக்கோசரம் வரான்’னு நீ நெனச்சிக்குவேனு எனக்குத் தெரியும். நீ இன்னா நெனச்சா இன்னாம்மே எனக்கு? நாட்டுப் பொறத்திலேருந்து உன்னெயெ தாலிகட்டி பட்ணத்துக்கு இஸ்த்தாந்தவன் நானு.. உனக்கு இன்னா நடந்தாலும் அதுக்குக் காரணம் நாந்தான்னு எனக்குப் படுது… அதானேம்மே நாயம்.”
” ‘அது இன்னாடா நாயம், நீ இஸ்த்தாந்தே… நாந்தான் உன்னெ உட்டுட்டு இன்னொருத்தங் கூடப் பூட்டேனே. அப்பாலே இன்னாடா உனக்கு ரைட்டு’ன்னு நீ நெனப்பே… ஊர்லே உள்ளவனுங்க அதாம்மே கேக்கறானுவ. அவனுங்களுக்கு இன்னாமே தெரியும் என்னெப் பத்தி… உனக்காவது தெரியும். தெரியலேன்னாலும் இப்ப சொல்றேன்… கேளூம்மே… நீ எவங்கூடப் போனாதான் இன்னாம்மே – இப்பே வந்து உன்னெ இஸ்த்துக்கினு போயி இன்னொரு தடவை வாயணும்னா ஓடியாறேன்?… அப்படி நெனச்சிக்கினு ‘போ போ’ன்னு நீ வெரட்டாதே…. நீ என்னோட வாய்ந்தாலும் வாயாட்டியும் உங் கய்த்திலே தொங்கற தாலி நாங்கட்னது தானே? அது உங் கய்த்திலே இருக்கறவரைக்கும் எனக்கு ரைட்டு இருக்கும்மே… அநியாயமா எங்கனாச்சும் உய்ந்து எங்கண்ணு மின்னாடி நீ சாவறதெப் பாத்துக்கினு இருந்தா நாளைக்கு எவனும் வந்து என்னெ ஒண்ணும் கேக்கப் போறதில்லே… ஆனா எம் மனசு கேக்குமேம்மே… ‘அவதான் பட்டிக்காட்டுப் பொண்ணு; அறிவு கெட்டுப் போயி – இஸ்டத்துக்கும் போயி – கெட்டுப் போனா… அந்தப் பாவத்துக்கு நல்லா கஸ்ட்டமும் பட்டா… அதுக்கெல்லாம் நீ தான்டா காரணம். அநியாயமா இப்ப பூட்டாளே… எல்லாம் உன்னாலே தானே?’ன்னு நாளைக்கி எம் மனசே என்னெக் கேக்காதாம்மே… அப்போ இன்னா பதில் சொல்லுவேன்? அதுக்கோசரம் தாம்மே ஓடியாந்தேன்.”

“இந்த ரெண்டரை வருசத்திலே இப்ப ஆறு மாசமா தானேம்மே நீ எங்கூட இல்லே… ரெண்டு வருசம் வாய்ந்தமே.. அப்ப ஒரு சண்டை போட்டு இருப்பனா! சாடி போட்டு இருப்பனாம்மே? நீ தான் ஒரு நாளு சோத்துக்குப் பணம் தரலேன்னு கூவியிருப்பியா? அங்கே போயி குடிச்சியே, இங்கே போயி சுத்துனியேன்னு எங்கிட்டே வந்து கேட்டிருப்பியாம்மே? சந்தோசமாத்தானேம்மே வாய்ந்தோம்… பிரியமாத்தானேம்மே இருந்தோம், எந்தப் பாவி கண்ணு பட்டுச்சோ? திடீர்னு என்னான்னமோ ஆயிடுச்சி, சரித்தான்! ம்!… இப்போ பேசி இன்னா பண்றது? நடந்தது நடந்து போச்சு…”

“கய்த்திலே கட்ன ஒரு கய்த்தெ வெச்சுக்கினு பிரியமில்லாத ரெண்டு பேரும் கய்த்திலே சுருக்கிக்கினு சாவறதாம்மே? என்னமோ புடிக்கலே, அவ பூட்டா… நாம்பளும் இன்னொருத்தியெ பாத்துக்குவோம் – அப்படீன்னு கூட நான் யோசிச்சேன்…”

“ஆனா இன்னா?… எனக்கு உன்னியுந் தெரியும்… நீ போனியே அவன் பின்னாலே… அந்த சோமாறியெயும் தெரியும். உனக்கு இன்னாம்மே தெரியும் ஒலகம்?… ம், நீ கொய்ந்தெம்மே. பட்ணம் பளபளப்பா இருக்குது உங் கண்ணுக்கு; அத்தெப் பாத்து நீ பல்லெக் காட்டிக்கினு நின்னுக்கினே… நீ என்னெ ஒண்ணும் ஏமாத்தலேம்மே… உன்னியே நீ ஏமாத்திக்கினேம்மே… ஆமாம்மே!”

அவன் இடையிலேயே பேச்சை நிறுத்திப் பெருமூச்செறிந்தும், சூள் கொட்டியும், ‘ம்ம்’ என்று உணர்ச்சி மேலிட்டு உள்ளூறக் குமுறிக் குமுறிக் கூறிய அந்த வார்த்தைகள், அவள் நெஞ்சைக் குத்திக் குழைத்து, உடம்பை நாணிச் சிலிர்க்க வைத்து, அவன் பாதங்களில் அவளது ஆத்மாவை வீழ்ந்து பணிய வைத்தது.

“ஐயோ… நா இன்னாத்துக்கு இன்னும் உசிரே வெச்சிக்கினு இருக்கணும்?” என்று தனக்குக் கிடைக்கவொண்ணாததைப் பெற்றிழந்த பேரிழப்பை எண்ணிக் குமுறியவாறே தலையில் கை வைத்தவாறு தரையில் உட்கார்ந்தாள்.

“அய்வாதேம்மே…” என்று சொல்லிக் கொண்டே அவனும் சற்று நகர்ந்து பக்கத்தில் குவித்திருந்த கப்பிக்கல் குவியலின் மேல் ஏறிக் குத்துக்காலிட்டு உட்கார்ந்து சட்டைப் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்தான். பிறகு வியர்வையில் நனைந்து மார்பின் மேல் நீளமாய்க் கிழிந்திருந்த சட்டையின் மறுபுறப் பையில் தீப்பெட்டியைத் தேடி, அது கிடைக்காமல் கப்பிக் கற்குவியலின் மேல் உயரமாய் எழுந்து நின்று, அரைக்கால் சட்டைப் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்துப் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். பீடிப் புகையை நெஞ்சுக்கு இதமாக ஆழ்ந்து ஒரு மூச்சு இழுத்து, வாயிலும் மூக்கிலும் புகை பறக்க, கூரிய சிந்தனையோடு அவளைப் பார்த்தான். அவள் பூமியில் குத்துக்காலிட்டுக் குறுகி உட்கார்ந்து முழங்கால் மூட்டுக்களின் மேல் முகம் புதைத்துச் சிறு குரல் பாய்ச்சி அழுது கொண்டிருந்தாள்.

அவளைப் பார்க்கும்போது இந்த ஆறு மாதமாக அவளுக்காகப் பட்ட வேதனைகளைப் போலவே – இப்பொழுது சற்று அதிகமாக அவன் மனம் வேதனையுற்றது. அழுகையையும் உணர்ச்சி மேலீட்டையும் அடக்கி அடக்கி அவனுக்கு நெஞ்செல்லாம் புண்ணாகிப் போனது போன்ற உணர்வு தொண்டைக் குழிவரை பெருகி வந்து நொந்தது.

அவன் கரகரத்த குரலில் பேசினான்:
“நானு உனக்குத் தாலி கட்ன புருசன்றெதெ மறந்துட்டுதாம்மே பேசறேன்; இந்த ஒறவு இப்பத்தானம்மே, ரெண்டு வருசமாத்தானமே? அதுக்கு மின்னே உன்னெ தெம்மாங் கொயந்தெலேருந்து எனக்குத் தெரியுமேம்மே. ‘மாமெ, மாமெ’ன்னு கூப்பிட்டுக்கினு கம்பங் கொல்லியிலியும், மல்லாக் கொட்டெ காட்லியும் ஓடியாருவியே… அப்ப இன்னாம்மே ஒறவு நமக்கு? நானு பட்ணத்லேருந்து வந்தேன்னா, நீயும் ஒன் தங்கச்சியும் ஓடியாந்து காசி வாங்க்கிக்கினு, கதெ சொல்லணும்னு ரோதனை பண்ணுவீங்களே.. அப்ப நானு உங்கிட்டே காட்டின பிரியமெல்லாம் இன்னா ஒறவுலேம்மே? உன்னெக் கண்ணாலங் கட்டிக்கிணும்னு நானு நெனச்சது கூட இல்லேம்மே. அப்போ ஏதோ, கூடப் பொறந்தது இல்லாத கொறையிலே வெச்ச பாசந்தானம்மே? அப்புறம்… ஊர்லே பெரியவங்களாப் பாத்து இன்னாரே நீ கட்டிக்கணும்னு சொல்றப்ப நானு இன்னா சொல்றது?… பட்ணத்திலே கெடக்கற கய்திங்களெப் பாக்கும்போது சீ சீ இந்த மாதிரி நமக்கு வோணாம்… நம்ப பக்கத்திலே நல்ல மாதிரி ஒரு பொண்ணைப் பாத்துக் கட்டிக்கணும்னு நானு எண்ணம் வெச்சிருந்தது மெய்தான்… ஆனா சொல்றேன்… அய்யனாரப்பன் மேலே ஆணையாச் சொல்றேன்… ஊர்லே வந்து மித்தவங்க சொல்றதுக்கு மின்னாடி நானு உன்னெ நெனக்கவே இல்லேம்மே… அப்பாலே யோசிச்சேன்; நம்பகிட்டே ரொம்பப் பிரியமா இருக்குமே அந்தப் பொண்ணு. கட்டிகினாத்தான் இன்னா… அத்தெங்காட்டியும் நல்ல பொண்ணு, எங்கே கெடைக்கும்னு யோசிச்சி, உன்னெ கட்டிக்கினேன்… அவ்வளவு தானேம்மே? கட்டிக்கினு வாய இஸ்டம் இல்லேன்னா போ… அதுக்கு மின்னாடி இருந்த பிரியம் எங்கேம்மே பூடும்? ஒண்ணா வாய்ந்தப்போ காட்ன ஆசையெல்லாம் பொய்யா வாம்மே பூடும்?… அந்த மாதிரி ஒறவுலே தாம்மே இப்ப இங்க வந்து நிக்கிறேன்…”

“இன்னாத்துக்குமே இப்ப நீ சாவறது? இன்னாம்மே நடந்துடிச்சி இப்ப… பூலோகத்தில் நடக்காதது? போனதுதான் போனியே, ஒரு ஒயுங்கானவனெப் பாத்து அவனோட போனியா? சரி, எங்கனாச்சும் நல்லா இருக்கட்டும்னு நானு நிம்மதியா இருப்பேன்… அவன் ஒரு எச்சப் பொறுக்கி! நல்லா வாயறவஙளே இஸ்த்துக்கினு வந்து, ரெண்டு மாசம் மூணு மாசம் வெச்சிருந்து அப்பாலே தெருவுலே வுடறதே அவனுக்குத் தொயிலு… தன் வவுத்துக்குத் தன் கையெ நம்பாத சோமாறி; ஒடம்பு வளைஞ்சு வேலை செய்யாத பொறுக்கி; அவன் உன்னெ வச்சு காப்பாத்துவான்னு நெனச்சிப் போனியேம்மே நீ? எனக்கு அய்வுறதா, சிரிக்கிறதானு தெரியல்லேம்மே…”

“அதுக்கோசரந்தாம்மே நானும் ஆறு மாசமா ஒரே கொயப்பத்திலே இருக்கேன். இன்னா கொயப்பம்னு கேளு… இப்ப நீ அறிவு கெட்டுப் போயி, மின்னே பின்னே யோசிக்காம அந்த சோமாறி கூட பூட்டே… எனக்குத் தெரியுது.. நாளைக்கி நீ தெருவுலே நிக்கப் போறேன்னு… உன்னெ வச்சுக்கினு நானு வாயப் போறதில்லேன்னாலும் உன்னெப் பத்தி ஒரு முடிவு தெரியாம இன்னொருத்தியைக் கொண்ணாந்து வெச்சிக்கினு நானு எப்படிம்மே வாயறது? அப்படி வாய்ந்தா இப்ப இங்கே வருவனாம்மே? வர்லேன்னா, நீ ரயில்லே வுய்ந்து சாவறேன்னு வெச்சிக்கோ… அந்தப் பாவம் யாருக்கும்மே? அந்த சோமாறிக்கா? அவனெத் தெரிஞ்சிருந்தும் உன்னெ இங்கே கொண்ணாந்து அவங்கையிலே உட்டுட்ட எனக்கா? நல்லா யோசிச்சுப் பாரும்மே…”

அவன் பேசப் பேச அவனது வார்த்தைகள் அவளது மன இருளில் எத்தனையோ முறை ஒளி மழை சொரிந்து தன்னைத் தான் உணரத் தன்மை தந்து கொண்டிருந்தன அவளுக்கு. அப்பொழுது புற இருளைக் கிழிக்கும் ஈட்டிகள் போன்று ஒளிக் கதிர்களை எறிந்தவாறு எதிர் எதிரே ஓடிக் கொண்டிருந்த ரயில் வண்டிகளின் சப்தத்தால் மட்டுமே அவன் பேச்சு பல முறை நின்று தொடர்ந்தது.

அவன் மௌனமாக, அவளுக்குத் தெரியாமல் தனது நிலைக்கு இரங்கி, தன் மீது கொண்ட சுய அனுதாபத்தில் அழுதான். இருளில் அவன் கன்னங்களில் வழிந்த கண்ணீரை அவள் காணாவிடினும், பீடியைப் புகைக்கும் போது அந்த வெளிச்சத்தில் அவள் கண்டு கொள்வாளோ என்ற நினைவில் முகத்தை அழுத்தித் துடைத்து, இடது பக்கம் சற்று சாய்ந்து மூக்கைச் சிந்தி விட்டுக் கொண்டான் அவன். சில விநாடிகள் அமைதியாய்ப் பீடியைப் புகைத்தவாறே, தூரத்தில் பூந்தமல்லி ஐரோட்டில் நிற்கும் தனது சைக்கிள் ரிக்ஷாவையே வெறித்துப் பார்த்திருந்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் பேசினான்.

“இந்த ஆறு மாசமா நானு ஒண்ணும் சம்பாரிக்கல்லேம்மே. இன்னாத்தே சம்பாரிக்கறது? இன்னாத்துக்குச் சம்பாரிக்கறது? வண்டியெ ரிப்பேருக்கு உடணும். மூணு மாசத்துக்கு மிந்தியே…. சர்த்தான் போ! பசி தாங்கல்லேன்னா ஒரு சவாரி… சவாரி போறதுக்கு மனசு இல்லேன்னா பட்டினி! ம்… இப்படியாம்மே நா இருந்தேன் இதுக்கு மிந்தி?… இந்த மாதிரிக் கியிஞ்ச சட்டெ போட்டுகினு இருப்பேனாம்மே?” என்று அவன் நிமிர்ந்தபோது, ஒரு விநாடி அவன் மீது வீசிய தூரத்து ரயிலின் வெளிச்சத்தில் அவள் அவனை ந்ன்றாகப் பார்த்தாள்.

பரட்டைத் தலையும், முகமெல்லாம் கட்டை பாய்ச்சி நின்ற தாடியும், வியர்வையில் ஊறிக் கிழிந்த சட்டையும் கிழசலினூடே தெரிந்த எலும்பெடுத்த மார்பும்…

அவள் ஒரு விம்மலையே தனது பதிலாகச் சொல்லித் தலையைப் பிடித்துக் கொண்டு சற்றுக் குரலை உயர்த்தி அழுதாள்.

“இதுக்கோசரம் இன்னும் கொஞ்சம் அயுவாதேம்மே… என்னமோ, போனது போச்சு… நெதம் ராவும் பகலும் அந்தப் பொறுக்கி குடிச்சிட்டு வந்து, ஒன்னே மாட்டே அடிக்கிற மாதிரி அடிக்கிறப்போ ‘அடப்பாவி, உன் தலை எயுத்தா’ன்னு உனக்கோசரம் எத்தினி நாளு நா அய்திருக்கேன் தெரியுமா? ‘எவ்வளவு சீரா வாய்ந்தா இப்படி மவ சீரழியிறாளே’ன்னு ஒரு அப்பங்கார மாதிரி, ஒரு அண்ணங்கார மாதிரி. ஆரோ ஒரு பரதேசி மாதிரி ஒனக்காக அய்து இருக்கேன், தெரியுமாம்மே?”

“அந்த மாதிரி தான் இப்பவும் வந்திருக்கேன்… உனக்குத் தாலி கட்னவன்ற மொறையிலே வரலே… உன் நல்ல காலம், இவ்வளவு சீக்கிரமே உன்னெ அவன் ஒதைச்சி வெரட்டிப் பிட்டான். உன்னெ ஊர்லே கொண்டு போயி உட்டுடறேன்… நம்ப சாதி வயக்கப்படி பஞ்சாயத்துக் கூடி பேசி ரத்துப் பண்ணிட்டு வந்துடறேன்… அப்பாலே உம்பாடு. நானும் வேற யாரையாவது பாத்துக்கினு நிம்மதியா வாய்ந்துடுவேன். ரெண்டு பேரும் வாய்நாளெ வீணாக்கிக்க வேணாம்…. இன்னா சொல்றே? சொல்றது இன்னா, எந்திரி போவலாம்; பத்தரை மணிக்கு இருக்கு ரயிலு… அது தான் நல்லது. இல்லேன்னா உன்னே எனக்கு நல்லாத் தெரியும்.. உம் மனசுக்கு…. நீ இன்னிக்கு இல்லேன்னா இன்னொரு நாளு வந்து இந்த ரயில்லே தலையெ வுட்டுக்குவே… ஆமாம், உனக்கு ஒலகம் தெரியாதும்மே… நீ கொயந்தேம்மே.. அதனாலே தான் எனக்கு ஒம்மேலே கோவம் வரலேம்மே.”

“வேணாம்… நான் ஊருக்குப் போக மாட்டேன்… உன் கையாலியே என்னெ ரயில் முன்னே புடிச்சுத் தள்ளிடு… சத்தியமா, சந்தோசமா சாவேன்… ஆமா… உன் கையாலே” என்று அவன் எதிரே எழுந்து நின்று கதறி அழுதவாறு கை கூப்பிக் கெஞ்சினாள் அவள்.

“இன்னாம்மே, சுத்தப் பைத்தியமா இருக்கே! உன்னெ ரயில்லே தள்றத்துக்கா, ஒங்க ஆத்தாளும் அப்பனும் எனக்கு கட்டி வெச்சாங்க?” என்று அவளைக் கண்டிப்பது போல் சற்றுக் குரலை உயர்த்திக் கத்தினான் அவன்.

“இல்லே, எம் பாவத்துக்கு அதான் சரி…. நான் சொல்றேன்… என்னெத் தள்ளிடு…”

“சீ சீ! கம்னு கெட! நீ சொன்னேன்னு தள்னேன்னா உடுவானாம்மே போலிசுலே… பொறப்படு பொறப்படு… போவலாம்” என்று கப்பிக்கல் குவியலின் மீதிருந்த அவன், இன்னும் இங்கேயே நின்றிருந்தால் அவளது தற்கொலை எண்ணமே வலுக்கும் என்ற உணர்வில், அவசரப்பட்டுக் கீழே இறங்கினான்.

அவன் தன்னருகே வந்தவுடன் எழுந்து நின்ற அவள், முகத்தைத் தாங்கொணாத் துயரத்தோடும், ஏக்கத்தோடும் பார்த்தாள். அந்தப் பார்வையில் விளைந்த சோகம் கண்ணீராய்ப் பெருகிப் பார்வையை மறைத்தது. அவளால் தனது தவிப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திடீரென அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டு ‘ஓ’வென்று கதறினாள்.

“என்னெக் கொண்டு போயி நீ ஊர்லே விட்டாலும்… இங்கேயே ரயிலு முன்னாலே தள்ளினாலும் ஒண்ணுதான். நானு பாயாபூட்டவ” என்று அழுது கொண்டே அவள் புலம்பினாள்.


“இன்னாம்மே, இதுக்கோசரமா அய்வுறே! இப்ப இன்னா நீ மட்டும் பெஸலா பாயாபூட்டே? மனுசாள்னா தப்பே பண்றதில்லியா? அப்படிப் பாத்தா இது தப்பே இல்லியே… புடிக்காத ஒருத்தனோட வாய முடியலேனு ஒருத்தி பூட்டா அது தப்பா? போன எடமும் சரியில்லேன்றது தான் நீ செஞ்ச தப்பு… சர்தான்.. ஊருக்கே போயி உனக்குப் புடிச்சவனாகப் பார்த்துக் கட்டிக்கறது.”

“ஐயோ! என்னெக் கொல்லாதியேன்… நானு உன்னெப் புடிக்காம ஒண்ணும் ஓடிப் போவலே… ஏன்.. ஓடிபோனேன்னு எனக்கே புரியலே… அல்பத்தனமா இன்னா இன்னாத்துக்கோ ஆசைப்பட்டேன். நீ இன்னா ரிக்ஷாக்காரன் தானே? என்னைக்கும் அதே கதிதான் உனக்குன்னு யார் யாரோ சொன்னதெக் கேட்டு… நீ சொன்னது மாதிரி பளபளப்புக்கு ஆசெப்பட்டுப் பல்லைக் காட்டி நானு பாயாப்பூட்டேன். நான்… பாவி பாவி…”

அப்போது சிக்னல் இல்லாததால் மெதுவாக வந்து நின்ற மின்சார ரயிலின் வெளிச்சத்தில் இருவருமே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் முழுமையாகக் கண்டனர்.

கண்கள் சிறுத்து, முகமெல்லாம் அழுகையில் சுருங்கித் துடிக்க, வறண்ட உதடுகள் அசைய அவன் கேட்டான்.

“அப்டியா?… நெசம்மாவா?… என்னெப் புடிக்காம, என்னோட வாயப் பிரியமில்லாம நீ என்னெ வுட்டுப்புட்டுப் போவலியா? நெசம்மாவா? சொல்லும்மே! இன்னம் உனுக்கு எம்மேலே பிரியந்தானா? என்னோட வாய இஸ்டந்தானா?” என்று ஒவ்வொரு கேள்வியையும் குரலைத் தாழ்த்தித் தாழ்த்தி கடைசியில் ரகசியமாக அவள் முகத்தருகே குனிந்து ‘இஸ்டந்தானா?’ என்று அவளது தோளை இறுகப் பற்றினான்.

அந்தக் கேள்விக்கும் அந்த ஸ்பரிசத்துக்கும் காத்திருந்தவள் போன்று மெய் சிலிர்த்து, இதயங் கனிந்து ஆர்வமும் ஆவேசமும் கொண்டு அவன் மீது சாய்ந்து அவனைத் தழுவிக் கொண்டு அவள் அழுதபோது…

சிக்னலுக்காகக் காத்திருந்த ரயிலுக்கு சிக்னல் கிடைத்து நகர…

அங்கே இரண்டு இதயங்கள் மிக நெருக்கமாய் இணைந்து ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, ஒன்றில் ஒன்று கலந்து, ஒன்றை மற்றொன்று ஆதரவாக்கி, ஆதாரமாக்கி ஒன்றிய போது -

ரயில் நகர்ந்தபின் விளைந்த இருளில் இருந்து வார்த்தைகள் ரகசியமாக இதயங்களுக்குள்ளாக ஒலித்தன.

“மாமா… என்னெ நீ மன்னிப்பியா? நானு உனக்கு துரோகம் பண்ணிட்டுப் பாயாப் பூட்டவளில்லியா?”

“இன்னா கய்தே! பெரிசா கண்டுப்பிட்டே… மனசு தங்கமாயிருந்தாப் போதும்மே… நானு கூடத்தான் எவ்வளவோ பாயாப் போனவன், உன்னைக் கட்டிக்கிறத்துக்கு மிந்தி…”

“மாமா!….ம்…”

“அட கய்தே… அய்வாதேம்மே…”

“அப்பிடி கூப்புடு மாமா! நீ கய்தேன்னு மின்ன மாதிரி கூப்பிட்டப்புறம் தான் எனக்கு மின்னமாதிரி நெனப்பும் ஆசையும் வருது. நடுப்புற நடந்ததெல்லாம் மறந்தே போவுது.”

“அட கய்தே. இதுக்குத்தான் கய்தே சொன்னேன் நீ கொய்ந்தே இன்னு.”

“மாமா”

“அட, கய்தே!…”

அவளை அவன் காதல் மொழிப் பேசிக் கொஞ்சுகிறான்.

அந்த பாஷை மிகவும் தரம் குறைந்திருக்கிறதா?

ஆமாம்; பாஷை மட்டுமே மட்டமாக இருக்கிறது.

தரம் என்பது பேசுகின்ற பாஷையை மட்டும் வைத்துக் கணிக்கப்படுவதா என்ன?

udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

தரக்குறைவு   -  ஜெயகாந்தன். Empty Re: தரக்குறைவு - ஜெயகாந்தன்.

Post by அ.இராமநாதன் Thu May 09, 2013 11:48 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum