தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



படித்த பிடித்த சிறுகதைகள்

4 posters

Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 11:27 am

பால் காரி

பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள். பத்து நிமிஷத்துக்கு முன்புதான் புருசனின் மூச்சு நின்று போனது. இப்போது என்ன செய்வ தென்று தெரியாமல் தடுமாறினாள். நீண்ட பெரு மூச்சை விட்டு பொன்னம்மா எழுந்தாள்! அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விழவில்லை. புருசன் முகத்தைப் பார்க்காமல் சுவறில் தொங்கிய ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்தாள். புன்முறுவல் பூத்த அந்தப் பாசமலர் அவள் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது! மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். உடனே திடுக்கிட்டு பரபரப்புடன் கதவைத் திறந்து கொண்டு வீதிக்கு ஓடினாள்.

“போகாதீங்க, நில்லுங்க! நில்லுங்க!” என்று கூச்சலிட்டாள், பொன்னம்மா. எருமை மாட்டின் மீது ஏறிச் சவாரி செய்யப் போன எமதர்மன், உட்கார்ந்து கொண்டே பின்னால் திரும்பினான்.

“சரித்திரம் மீள்கிறதா ? பின்னாலே வராதே பெண்ணே! உன் புருசன் உயிரைக் கொண்டு போறதுக்கு நான் மிகவும் வருந்துறேன்.”

“நானே வருந்த வில்லை! நீங்க ஏன் வருத்தப் படணும் ? உங்க வேலைய நீங்க செய்றீங்க. என்னை பெண்ணேன்னு சொல்லாம, பொன்னம்மான்னு கூப்பிடுங்க!”

“பொன்னம்மா, பேசாமல் போயிடு! என் பின்னாலே வராதே சாவித்திரி மாதிரி! நான் முதல் தரம்தான் ஏமாந்தேன். இரண்டாம் தடவை தப்பு பண்ணப் போறதில்லே! உன் புருஷன் உயிரை மட்டும் கேட்காதே.”

“என் புருசன் உயிரைக் கேட்க நான் வர வில்ல. அது போறதுதான் நல்லது! எமராசா, நான் ஒன்னும் சாவித்திரி இல்லே ! சாதாரண மனுசிதான்.”

“அட ஆச்சரிய மாயிருக்கே! ஏம்மா! நீ கண்ணகி பிறந்த நாட்டுக்காரி! கல்லானானும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கும்பிட குலமாச்சே! காலம் மாறிப் போச்சு! நீ பெண்ணல்ல என்னு சொன்னது இப்போதான் ஞாபகம் வருது!”

“கண்ணகி எங்க குல தெய்வம் மாதிரி! ஆனா என் புருசன் குலத் துரோகி! நான் வாழ்றதிலே புண்ணிய மில்ல, எம ராசா!”

“பொன்னம்மா! என்ன கவலை உனக்கு ? பால் வியாபாரத்திலே உனக்கு பண நொடிப்பா ?”

“எம ராசா! கையெடுத்துக் கும்பிடறேன். ஒரேதா என் உயிரையும் கொண்டு போயிருங்கோ!”

“நீ செத்துப் போக இன்னும் நாற்பது வருச மிருக்கே, நான் எப்படி உன் உயிரைக் கொண்டு போறது ? அது பெரிய தப்பாச்சே.”

“தனியா எப்படி நாப்பது வருசம் வாழ்றது, எம ராசா! புருசன் இல்லாம, பிள்ளை, குட்டி இல்லாம ?”

“இந்தா வந்துட்டயே! இது பழைய சாவித்திரி உத்தி! முதல்லே பிள்ளை வேணும் என்பே! பிள்ளைக் கொடுத்தா, எப்படிப் பிள்ளை பிறக்கும், புருசன் இல்லாம என்னு, புருசன் உயிரையும் வாங்கத் தந்திரம் பண்ணுவே!”

“இத்தன நாளாய் என் புருசன்தான் என் உயிரை வாங்கிக் கிட்டிருந்தான்! எமலோகம் போற என் புருசன் உயிரை நீங்க தந்தாலும், நான் திரும்ப அங்கே அனுப்பிடுவேன்! அவனும் வேணாம்! அவன் கொடுக்கிற பிள்ளையும் வேணாம்!”

“கதை வேற மாதிரிலே போவுது! புரியலையே பொன்னம்மா! குழப்புறயே!”

“எம ராசா! பெண்ணுக்கு உத்தம புருசன் ஒருத்தன்தான் வேணும்! ஆனா ஆம்பிளைக்கு அப்படி யில்லே. சில ஆம்பிளைக்கு மூனு பொம்பளை வேணு மின்னு ஆசை யிருக்கு! கண்ணைக் கவரும் ஆடகியோ, காதில் இனிக்கும் பாடகியோ ஒருத்தி! கட்டில்லே ராத்திரி பக்கத்திலே படுக்க செதுக்கின சிலை போல இன்னொருத்தி! அப்புறம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு, வீட்டுலே காத்து கிடக்க மூனாவது ஒருத்தி!”

“பொன்னம்மா நீ என்ன சொல்றே ? புதிர் போடாமல் புரியும் படி பேசு.”

“என் புருசன் ஊர்க் காளை மாடு மாதிரி! நாலாவது வீட்டு ரங்கம்மாவுக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அது கழுதையாய் மண்ணுலே புரளுது! அவன் பிறந்த ஊர்லே குப்பம்மாவுக்கு இன்னோர் பிள்ளை கொடுத்து, அது கொண்டி மாடாய் ஊரைச் சுத்துது! இந்தா பாருங்கோ, என் புருசன் படுக்கிற கட்டிலிலே, நான் படுக்கிறதே இல்ல. அந்தப் பிள்ளைகளுக்கே அவன் அப்பனாக தொலையட்டும். என் பிள்ளைக்கு அவன் அப்பனா இருக்க வேணாம். அடுத்துப் பிறக்கிறது பன்றியாத்தான் இருக்கும்!”

“அப்ப பிள்ளை வரத்தை எப்படிக் கொடுக்கிறது, சொல்லு ? ‘

“. . . .மூனாவது குடிசையிலே வாழ்ற . . .  கார் டிரைவர் கந்தசாமி மேலே. எனக்கு ஒரு கண்ணு. கந்தசாமிக்கு என் மேலே. இரண்டு கண்ணு.”

“இது தப்புத் தாளமாச்சே! புருசன் இருக்கும் போது அடுத்தவனை பார்க்கிறது அதர்ம மாச்சே!”

“ஆமா! பொன்னம்மா வீட்டிலே இருக்கும் போது, என் புருசன் ரங்கம்மா கட்டில்லே ஒருநாளும், குப்பம்மா பாயிலே அடுத்த நாளும் படுக்கிறது என்னவாம் ?”

“அதுவும் அதர்மம்தான்.”

‘அதைப் பெண்டாட்டி துரோகம் என்னு முதல்லே சொல்ல, ஆம்பிளை உங்க வாயிலே வரலையே!”

“இரண்டும் தவறுதான். சரி நீயே போய் கந்தசாமியை கட்டிக்க வேண்டியதுதானே. நான் என்ன செய்யணும் ? ‘

“எம ராசா! நான் கேட்க வந்தது, கந்தசாமிக்கு எப்படி ஆயிசு ? நீண்ட ஆயிசு தானே ?”

“என் கிட்டே கந்தசாமியின் ஜாதகம் இல்லே. ஆயுள் கையேடும் இல்லே. எப்படி ஆயிசுக் கணக்கிடறது ?”

“ஏதோ காலன், தூதன், சித்திர குப்தன் என்னு சொல்றாங்க, எங்கே போயிட்டாங்க அவுங்க ?”

“இரு காலனைக் கேட்கிறேன். அவன் கிட்ட போர்டபிள் கம்பியூட்டர் ஒன்னு இருக்கு. சீக்கிரம் பார்த்துச் சொல்லிருவான்.”

“சீக்கிரம் சொல்லுங்க எம ராசா! என் நெஞ்சி பக்பக்கென்னு அடிக்குது.”

எமதர்மன் பெரு மூச்சு விட்டு ஆயுளைச் சொல்லத் தடுமாறினார். இரு கைகளையும் பிசைந்து கொண்டு மேலே நோக்கினார்.

“என்னங்க எம ராசா, ஏன் வானத்தைப் பார்க்கிறீங்க ? ஆயுசு எப்படின்னு சொல்லுங்க ?  என் கண்ணைப் பார்த்துப் பேசுங்க.”

“பொன்னம்மா! பார்த்ததுதான் பார்த்தையே, நீண்ட ஆயுசு ஆளாப் பார்த்துப் பிடிச்சிருக்கலாமே.”

“என்ன சொல்றீங்க எம ராசா ? கந்தசாமி அற்ப ஆயுசா ?”

“கண் கலங்காதே, பொன்னம்மா! கந்தசாமி வீட்டுக்கு . . .. நான் சீக்கிரம் . . . வருகிறதா யிருக்கு.”

“அட கடவுளே! . இன்னும் எத்தனை வருசம் அவரு . .  ?”

“கந்தனுக்கு அற்ப ஆயசுன்னு . . . காலன்கூடக் கண் கலங்குறான்.”

“காலன் சரியாப் பார்த்துதான் சொன்னானா ? சில கம்பியூட்டர் சரியா வேலை செய்யாதாமே ? என் பிள்ளை கொஞ்ச நாள்தான் தகப்பனை பார்க்குமா ? எமதர்ம ராஜா, இது ஞாய மில்லே! அவருக்காவது நீண்ட ஆயுசைக் கொடு! உன் காலிலே விழுந்து கும்பிடுறேன்!”

“என் காலிலே விழறேன்னு, எருமைக் காலைப் போய் கும்பிடறே! . . . அற்ப ஆயிசு கந்தசாமியை விட்டு, வேற ஆளைப் பாரு, பொன்னம்மா! அது தான் புத்திசாலிப் பெண் செய்யுற காரியம்.”

“உத்தம ஆம்பளை கந்தசாமி போல எத்தனை பேர் இருக்கான் ? ஒழுக்கம் கெட்ட பயல்கள் தான் எங்க ஊரில அதிகம். ஆமா கந்தசாமிக்கு . .  எப்போ . .  ஆயுசு . . . முடியுது ? அதைச் சொல்லுங்க முதல்லே.”

“அடேடே கந்தசாமிக்கு தம்பி இருக்கானாமே ! அவனுக்கு ஆயசு பலமா இருக்காம் ! 80 வயசு வரை தெரியுதாம். காதிலே காலன் ஏதோ முணுமுணுக்கிறான்.”

“அந்த ஒட்டடைக் குச்சி பொன்னுலிங்கம் ஒரு குடிகாரப் பயல்! அவனை வச்சி துடைக்க என் வீட்லே ஒட்டடை கூட இல்லே! ராத்திரி ராத்திரி குடிச்சிபிட்டு வந்து பெண்டாட்டியை போட்டு அடிப்பான். காலையிலே நடு வீதியிலே தூங்கிக் கொண்டு கிடப்பான்! குடிக்கப் பண மில்லேனா என் மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையிலே வித்துட்டு, சாராயக் கடைக்கும் சர்க்காருக்கும் சம்பாரிச்சு கொடுப்பான்! எம ராசா! அயோக்கியப் பயலுக்கு அதிக வயசையும், உத்தம ஆம்பளைக்கு அற்ப ஆயுசையும் தலையிலே எழுதி வைக்கறீங்களே, இது என்ன ஞாயம் ? சொல்லுங்கோ அவருக்கு . . ஆயசு எதுவரை ?”

“பொன்னம்மா! அற்ப ஆயுசு ஆளுங்க பூமியிலே இல்லாம போனால், எங்கள் ராஜியத்திலே பலருக்கு வேலை யில்லாம போயிரும் ! அப்புறம் என் பட்டாளங்கள் கறுப்புக் கொடியைத் தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்து பட்டினி கிடப்பாங்க ! வேலை யில்லாத் திண்டாட்டம் எங்க துறையிலே மட்டும் வரக்கூடாது அம்மா !  வந்தால் என் உயிரை வாங்க வந்திடுவாங்க !”

“அம்மான்னு சும்மா சொல்லாதீங்க !  நான் இன்னும் அம்மாவாகலே ! . . . சொல்லுங்க கந்தசாமிக்கு ஆயுசை ! என் மனசு துடிக்குது! சொல்லுங்க எம ராசா!”

“உன்னைப் படைச்ச கடவுளே அதை மறைச்சு வச்சிருக்கான். அதை முன்னாலே நான் சொன்னா நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே. இல்லே திடீரென்னு உன் நெஞ்சு நின்னுட்டா, பிறகு என் மேலே புகார் வந்திடும். உன் உயிரை நான் எடுத்து போகவும் முடியாது.  இங்கே விட்டுட்டு போகவும் முடியாது. அது அப்புறம் அந்தரத்திலே பேயாய் அலையும்! உயிரை திருப்பி உடம்புல ஒட்ட வைக்கிற உத்தியும் எனக்கு தெரியாது! அது என் வேலை இல்லே. பிரம்மா படைப்பு வாரியத்தைச் சேர்ந்தது.”

“சும்மா சொல்லுங்க எமராசா! நான் ஒன்னும் வெண்ணை யில்ல, உருகிப் போக. என் மனம் தேக்கு மரம் போல. . . என்ன கந்தசாமி இன்னும் அஞ்சி வருசம் இருப்பாரா ?”

‘உம் . . . அத்தன நீண்ட ஆயுள் இல்ல . . . அற்ப ஆய்சுக் கந்தனுக்கு.”

“சரி அஞ்சில்லே. மூனு வருசமாவது அவர் . . . உயிரோட இருப்பாரா ?”

“அதுவும் . . . இல்லே! . . . பொன்னம்மா! . . ஏன் கண்ணிலே கண்ணீர் குபுகுபுன்னு பொங்குது ?”

“அப்படீங்களா ? . . பொன்னம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். சரி ஒரு வருடமாவது மனுசன் . . . உயிரோ டிருப்பாரா ?”

“அதை நான் சொல்ல முடியாது, பொன்னம்மா! உனக்குப் பிள்ளை பிறந்து, கந்தன் கொஞ்ச காலம் இருப்பான்.”

“எனக்குப் பிள்ளை பிறந்து, கந்தசாமி ஒரு வருசமாவது உயிரோடு இருக்கணும். அதுக்கு வரம் தருவீங்களா, எம ராசா ? உங்களைக் கெஞ்சி கேக்கிறேன்.”

‘அந்த வரத்தை நான் தர முடியும், பொன்னம்மா!”

“நிச்சயமா சொல்றீங்களா எம ராசா ?”

“ஆமாம்! உனக்கு பிள்ளை பிறந்து, கந்தன் ஒரு வருசம் உயிர் வாழறது உறுதி. அதுக்கு வரம் தருவதிலே எனக்கு எந்த ஆட்சேபணையு மில்லே! . . ஏன் பொன்னம்மா! . . நயாகரா மாதிரி கொட்டின கண்ணீ ரெல்லாம் . .  சினிமா ரீல் திருப்பி ஏறுற மாதிரி உன் கண்ணு மேலே ஏறுதே.”

“என் வயிற்றுலே பசும் பாலை வார்த்திட்டாங்க எம ராசா! அந்த உத்தரவாதம் போதும் எனக்கு!”

ஆனந்த கண்ணீர் இப்போது வடிய, பொன்னம்மா துள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

“என்ன சொல்றே பொன்னம்மா ?  நான் பசும்பாலை உன் வயிற்றில் வார்த்தேனா ?”

“இப்போ எனக்கு பிள்ளை வேணாம் எம ராசா ! . . நான் அதைத் தள்ளிப் போடறேன்.  நீங்க நீண்ட நாள் வாழணும்.” என்று சிரித்துக் கொண்டு கதவை மூடினாள், பொன்னம்மா.

எமனுக்கு மண்டையில் ஏறிப் புரிபட சிறிது நேரம் பிடித்தது.

“அடி பாதகி ! ஏமாற்றி விட்டாயே ! இரண்டாம் தடவையும் நான் ஏமாந்துட்டேன்.  சாவித்திரியை விட பால்காரி பலே கைக்காரி !”  கோபத்தில் கீரிடத்தைத் தூக்கி விட்டெறிந்து தலையில் நாலடி அடித்துக் கொண்டான்.

எருமை வாகனத்தை வேகமாய் முடுக்கினான், எம ராஜன்.  திடீரென்று பின்னால் மறுபடியும் குரல் எழுந்தது.

“போகாதீங்க! நில்லுங்க! நில்லுங்க!” என்று அலறிக் கொண்டு மறுபடியும் பொன்னம்மா ஓடி வந்தாள். பின்னால் திரும்பிய எமனுக்குக் கண்கள் இரண்டும் சிவந்து கோபக் கனல் பறந்தது.  பற்களை நறநற வென்று கடித்தான். கைகளைத் தூக்கி ஆங்காரத்துடன் திரும்பினான்.

“இன்னும் ஏன் பின்னாலே வர்றே ! போதும் உன் உபத்திரம் ! போ! போ! போ! ஒழிஞ்சு போ.  எதுவும் உனக்கினித் தர மாட்டேன் !”

“என் வயிற்றிலே மண்ணைப் போட்டு போறீங்களே, எம ராசா! நான் முக்கியமானதை விட்டிட்டேனே !”

“புரியும்படி சொல்லித் தொலை!”

“எம ராசா ! இது அநியாயம் ! திருடுன்னு எங்க ஊரிலே சொல்லுவாங்க ! நீங்க ஏறிப் போறது, என் எருமை மாடு ! தினம் எனக்குப் பால் கறக்கிற எருமை ! பால் எருமைக்கும் எருமைக் கடாவுக்கும் வித்தியாசம் தெரியாம, என் மாட்டை பத்திட்டு போறது சரியா ? மாட்டைப் பிடிக்க வந்தவ, புருசன் கிடைச்ச சந்தோசத்திலே அதை மறந்துட்டேன் !  புருசனைக் கொடுத்ததுக்கு எருமை வெகுமதியா ?”

எம ராஜனின் சினம் பட்டெனத் தணிந்தது !  எருமையை விட்டுக் கீழ் இறங்கிப் பார்த்தான் !  எருமை மாடு எமனைப் பார்த்து முறைத்தது !

“அட ஆமா, பால் எருமைதான் இது ! முதல்லே அதைச் சொல்லி யிருக்கலாமே ! . .  அதானே பார்த்தேன் ! தெற்கு நோக்கிப் போறதுக்கு பதிலா வடக்கிலே போவுதே, ஏன் என்று எனக்கு தெரிய வில்ல ! . . எங்கே என் மாட்டைக் காணோமே ?”

“புல்லுத் தின்ன போயிருக்கும், எம ராசா! . . காலையிலே அது வயித்துக்கு ஏதாவது போட்டீங்களா ? . . எருமை மாட்டிலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியலையே, நீங்க எடுத்துட்டுப் போற உயிர்கள் எல்லாம் சரியானதா ? . .  அட ஆண்டவா ! . .  எம ராசனுக்கும் வயசாகுதில்லே ! கண்ணு மிரளுது ! . . எம ராசா! மாடு தேடிறதுக்கு முந்தி முதல்லே ஒரு கண்ணாடி வாங்கி மாட்டிக்கங்க ! எருமை மாறாட்டம் மாதிரி, ஆள் மாறாட்டம் ஆனா என்ன ஆகுறது ?”

பொன்னம்மா மாட்டை தட்டிக் கொண்டு கொட்டத்துக்குள் நுழைந்தாள்.  உதட்டைக் கடித்துக் கொண்டு திருதிரு வென்று விழித்த எமன், கீழே கிடந்த கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, வேகமாக வாகனத்தை தேடி நடந்தான்.

 நன்றி ; சி .ஜெயபாரதன் ( கனடா )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 22, 2013 11:42 am

 பாரம்பரிய இரகசியம் 


ஆங்கில முறை மருத்துவம் பயின்ற என்னைப் போன்ற பல மருத்துவர்கள் நாங்கள் கற்றது அறிவியல் பூர்வமானது என்று திடமாக நம்புகிறோம்.

இந்த முறை ஆய்வியல் அடிப்படையில் மேல்நாடுகளில் தோன்றி, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் நாம் நாடுகளில் கொண்டுவரப்பட்டது.

இந்த மேல்நாட்டு மருத்துவம் பயின்ற நாங்கள் இதர உள்நாட்டு மருத்துவ முறைகளின் மீது அவ்வளவு நம்பிக்கை கொள்வதில்லை. அவை அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு சரிவர உட்படுத்தப்படவில்லை என்ற காரணம் கூறி அவற்றை ஊக்குவிப்பதில்லை.

என்னுடைய நிலையும் அப்படிதான்…

நான் மருத்துவ பயிற்சி செய்தபோது மூன்று மாதங்கள் நகரி புத்தூரில் தங்கி ஒரு கிராம மருத்துவமனையில் வேலை செய்தேன்.

நுட வைத்தியத்தில் புகழ் பெற்ற ஊர் அது. நான் அது பற்றி ஆர்வம் இன்றி அங்கு சென்று பார்க்க வில்லை.

ஒரு அருமையான வாய்ப்பை இழந்து போனதாக பின்னர்தான் உணர்ந்தேன். எதையும் பார்த்து உணர்ந்த பின் நாம் ஒரு முடிவுக்கு வருவதே நல்லது என்பதை பின்னர் உணர்ந்தேன்.

அங்கிருந்து திருப்பதி , திருத்தணி கோவில்களுக்குகூட சென்று வந்தேன். ஆனால் அந்த நுட வைத்தியசாலைக்குச் செல்லவில்லை.

நுட சிகிச்சையில் அப்படி என்ன பிரமாதமாக செய்துவிடுகின்றனர் என்று எண்ணியிருந்தேன். எலும்பு முறிவுக்கு மருந்து வைத்து கட்டு போடுகின்றனர் . அது கூடிவிடுகிறது. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

கட்டு போடாவிட்டாலும் அது இயற்கையிலேயே கூடத்தான் போகிறது. ஆனால் கோணலாக கூடிவிடும்.இவ்வளவுதான் வித்தியாசம்!

மேலும் நுடவைத்தியம் செய்பவர்களுக்கு எக்ஸ் -ரே பற்றி தெரியாது. எம்.ஆர். ஐ. பற்றியும் தெரியாது. இவற்றின் உதவி இல்லாமல் கண்மூடித்தனமாக குலத் தொழில், பரம்பரையாகக் கற்றது என்று சொல்லிக்கொண்டு இவர்கள் தொழில் புரிவது நியாயமற்றது என்றும் எண்ணியது உண்மையே.

ஆனால் ஒரு சொந்த அனுபவத்திற்குப் பின்பு என் எண்ணங்கள் தாறுமாறானது.

ஒரு விபத்தில் என்னுடைய வலது காலில் பாதத்தின் மேல் பகுதியிலுள்ள நான்கு எலும்புகள் ( Metataarsal bones ) குறுக்கெ முறிந்துவிட்டன. உடன் கால் வீக்கமுற்று கடுமையாக வலித்தது.

நான் உடன் மதுரை சென்றேன். அங்கு பிரபல எலும்பு சிகிச்சை நிபுணரைப் பார்த்தேன். அவர் உடன் எக்ஸ் – ரே எடுத்துப் பார்த்தார். எலும்புகள் முறிந்துள்ளன என்று கூறினார். அதற்கு மாவு கட்டு ( plaster of Paris ) போட்டு மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று விடுப்பு தந்தார். அந்த கால கட்டத்தில் நடக்கக் கூடாது என்றார். நடந்தால் முறிந்த எலும்புகள் கூடாமல் போகலாம் என்றார்.

நான் வீடு திரும்பினேன்.

ஆனால் என்னால் ஒரு நாளுக்குமேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. கட்டு போட்டுள்ள இடத்தில் பயங்கர அரிப்பு ! காலை உயரத்த்தில் தூக்கி வைத்துக் கொண்டு நாள் முழுதும் படுத்திருக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தடுமாறினேன்.

அப்போது எங்கள் ஃபிஸியோதேராபிஸ்ட் ( physiotherapist ) டேணியேல் ஒரு யோசனை கூறினார் .

” டாக்டர், நான் சொல்கிறேன் என்று தப்பாக எண்ணாதீர்கள். நானும் இந்த பீ ஓ பீ போடும் வேலைதான் செய்கிறேன். இதை போட்டுக்கொண்டு ஒரு மாசம் சிரமப்படணும் . உங்களுக்கு வேறு அலர்ஜி. ” என்றார் பீடிகையுடன்.

” சொல்லுங்க . என்ன செய்யலாம் ? ” என்று கேட்டேன்.

” எனக்கு குன்னக்குடி நுட வைத்தியர் நல்ல பழக்கம். அவர் ஒரு எண்ணைய்ப் போட்டு கட்டுவார். வலியும் இருக்காது. வீககமும் குறைந்துவிடும். நீங்கள் சரியென்றால் அவரை காரில் இப்போதே அழைத்து வருகிறேன் . ” என்றார்.

அப்போது இருந்த அவஸ்தையில் நான் வேறு எது பற்றியும் எண்ணவில்லை.

பங்களா வெளியில் காவலுக்கு நின்றிருந்த சாமுவேல் மூலமாக லட்சுமனனை அழைத்து வரச் சொன்னேன். அவன் மருத்துவமனை அம்பாசிடர் காரை ஓட்டுபவன். அவன் கொண்டு வந்த காரில் டேனியேல் ஏறிச் சென்றார்.

ஒரு மணி நேரத்தில் வைத்தியர் வந்துவிட்டார்.

நலம் விசாரித்துக்கொண்டோம்.

நான் நடந்ததைக் கூறினேன்.

அவர் கட்டை பிரிக்கணும் என்றார்.

நான் தயங்கினேன். மூன்று வாரம் கட்டு இருக்கணும் என்பது எலும்பு சிகிச்சை நிபுணரின் உத்தரவு.

” அதெல்லாம் ஒன்றுமில்லை டாக்டர். இந்த கட்டை பிரித்து விடுவோம். ” என்று தைரியம் கூறினார்.

நான் சரி என்று சொன்னதும் அந்த மாவுக் கட்டு வெட்டி அகற்றப்பட்டது.

அடி பட்டு வீங்கியுள்ள கால் பகுதியை தடவியும் அழுத்தியும் பார்த்தார்.

” எலும்புகள் முறிந்துள்ளன. அதனால் இரத்தக் கட்டு உள்ளது. நான் எங்களுடைய மருந்து வைத்து கட்டு போடுறேன். ஒரு வாரத்தில் சரியாகிவிடும் , ” இவ்வாறு அவர் சொன்னது கேட்டு வியந்து போனேன். ஒரு வாரத்தில் உடைந்துப்போன எலும்புகள் எவ்வாறு கூடும் என்பது என் சந்தேகம்.

அவர் மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கூறியது எனக்கு வியப்பையூட்டியது.

” ஒரு நாலு முழ வேட்டிவேண்டும் .” என்றார்.

நான் அதை வாங்கி வர லெட்சுமணனிடம் கூறினேன்.

அவன் விரைத்து சென்று திரும்பினான்.

வேட்டியை அவர் நீண்ட தூண்டுகளாகக் கிழித்தார்.

தன்னுடன் கொண்டு வந்திருந்த ஒரு டப்பாவிலிருந்து குழகுழவென்றிருந்த களிம்பை எடுத்து காலில் தடவினர். அதன்மேல் கிழிக்கப்பட்ட வேட்டி துண்டால் சுற்றினார்.

அப்பகுதி மதமதவென்றிருந்தது. காலுக்குள் ஏதோ ஒன்று இழுப்பது போன்ற உணர்வும் உண்டாக்கியது.

அதன்பிறகு அவர் சொன்னது என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

” எழுந்திருந்து நன்றாக காலை ஊன்றி நடங்கள். ” என்றார்.

எலும்பு சிகிச்சை நிபுணர் இரண்டு வாரங்கள் நடக்கக் கூடாது என்று கூறியிருந்தார். இந்த நுட வைத்தியர் ஒரு நாளில் நடக்கலாம் என்கிறாரே!

” டாக்டர். பயப்படாமல் ஊன்றி நடங்கள். அப்போதுதான் எலும்பு செட் ஆகும் . நான் மருந்து போட்டுள்ளேன். வலி இருக்காது. ” என்று தைரியமூட்டினார்.

நடந்தால் அசைவு உண்டாகி உடைந்த எலும்புகள் மேலும் விலகும். அசைவு எலும்புகள் கூடுவதை தடை பண்ணும். குணமாகும் நாட்களும் நீடிக்கும். இவையெல்லாம் எனக்கு தெரியும்தான். ஆனால் இவர் சொல்வதுபோல்தான் செய்து பார்ப்போமே என்று எழுந்தேன்.

மெல்ல காலடி வைத்து நடந்தேன்.

எனக்கு ஒரே ஆச்சரியம்!

வலி தெரியவில்லை!

சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டேன்!

வீட்டுக்குள் நடந்தால் போதும் , வெளியே போகவேண்டாம் என்று கூறிவிட்டு விடை பெற்றார். நான் நூறு ரூபாய் நீட்டினேன். அதை வாங்க மறுத்துவிட்டார்.

இரண்டு நாளில் மீண்டும் வந்தார்.

கட்டைப் பிரித்தார். வேட்டித் துணி உலர்ந்திருந்தது. கால் வீக்கம் வற்றியிருந்தது. மீண்டும் களிம்பு மருந்து பூசி துணியால் சுற்றி கட்டு போட்டார்.

இது போன்று மூன்று முறை வந்து கட்டு போட்டார். வீககமும் வலியும் முற்றிலுமாக குணமாகி விட்டது. அதன் பின்பு தடவுவதற்கு களிம்பு மட்டும் தந்தார். அதன் பெயர் மயில் கால் எண்ணை

அவரும் என் நண்பராகிவிட்டார்.

அப்போது குன்றக்குடி அடிகளார் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவரைக் காண மடத்திற்குச் செல்லும் போதெல்லாம் , நுட வைத்தியசாலையும் சென்று அவரைப் பார்த்து வந்தேன். அவரிடம் நிறைய பேர்கள் மயில் கால் எண்ணை வாங்க வருவது கண்டேன்.

அது பற்றி அவரிடம் கேட்டேன். அது எதிலிருந்து செய்யப்படுகிறது என்று கேட்டேன்.

” அது எங்கள் குடும்ப பாரம்பரிய இரகசியம். அதை வெளியில் சொன்னால் பலிக்காது. நீங்கள் நண்பர் என்பதாலும், ஒரு மருத்துவ்ர் என்பதாலும் சொல்கிறேன். அதில் மூன்று பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. மயில் கால்களை கொதிக்க வைத்து அதன் சாறு எடுத்து நல்ல பாம்பின் இரத்தம் கலந்து ஒரு மூலிகையுடன் சேர்த்து செய்யப் படுகிறது. ” அந்த மூலிகையின் பெயரை அவர் கூறவில்லை.

” அது என்ன மூலிகை? ” நான் வேண்டுமென்றே கேட்டு பார்த்தேன்.

” மன்னிக்கணும் .” ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்!

( முடிந்தது )

 நன்றி ;டாக்டர் ஜி. ஜான்சன்
திண்னை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 22, 2013 11:45 am

நல்ல சிறுகதைகள்... பகிர்வுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 22, 2013 11:53 am

பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by அ.இராமநாதன் Thu Aug 22, 2013 3:18 pm

மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 9:08 am

பாட்டியா உள்ளங்க்களுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 24, 2013 9:09 am

முடிவை நோக்கி !
............................
சி. ஜெயபாரதன், கனடா

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !

“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ·போனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோரையும் வாதிக்கும் !  பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் !  விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?

அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ஃபெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?

ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன.  அந்த பயங்கரக் பாலை வனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !

“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ஃபெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.

“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார்.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது ! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் !  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன்.  லாரா இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய வில்லையே ! விபரீதமான விஷப் பரீட்சை ! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது ! மறக்கவும் முடியாது! ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகடைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.  ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

“ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

“மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ் ! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா ?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

“இல்லை டாக்டர் ! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை ! வேறு யாரும் அருகில் இல்லை !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது ?  எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது ?  இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா ?” பதட்டத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

“புளுடோனியம் என்பது என் நினைவு !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“கெட்ட வேளைதான் ! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம்.  அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும் !” என்றார் வில்ஸன்.

“ஹாரி பிழைக்க மாட்டாரா ?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது !” என்றார்.

“இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“பயங்கர அதிர்ச்சி யடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி.  ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

பெரு மூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயரைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று ! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது !

எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி ! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி !  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக ?

“எப்படி இருக்கிறாய் ஹாரி ?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா ? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது ! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்!. இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும் ?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள் ? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

“ஆல்பர்ட் ! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன !” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடான கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் ! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா !”

‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது ! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை !  இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடான கோடி விண்மீன்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ! சக்தி இழந்து போய் தடுமாற்றமுடன் மூவரும் வெளியே மருத்துவ மனை நாற்காலில் அமர்ந்தனர்.

“எப்படி நேர்ந்தது இந்த கோர விபத்து ?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா ? எப்படிச் சொல்வது ?

“பயப்படாதீர்கள் ஜேம்ஸ் ! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை ! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான் ! என் கணவர் சொல்லாத ரகசியங்களா ? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா.  அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று ! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும் ! இன்று ஹாரிக்கு ! நாளை நமக்கு !  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரித் தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளது, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை ! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் துவங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகிக், கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கி யிருக்கின்றன !”

சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா ? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான் ! அவன் தெரியாமல் செய்தது !  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம் ! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி,  புளுடோனிய  அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது !  அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது !  கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின ! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின !”

“நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி,  நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி !  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது !  ஆனால் என்ன பயன் ? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது !  பல்லாயிரம் ராஞ்சன் வீரிய முடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக் கொண்டு விட்டான்.  அது அவனுக்குத் தெரியும் !  அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும் !”

“நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்தி விட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகி யிருக்கும் !”

“அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு ! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிக்கையிலும் உடனே வெளியாகும் !”

“லாரா!  அமெரிக்கா துவக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

“அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படி யாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும்.  வாஷிங்டன் ராணுவ மருத்துக் கூடத்திற்கு
·போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே ! ஹாரியைக் காப்பாற்று ! எங்கள் ஹாரியைக் காப்பாற்று !” என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தாள், லாரா.

கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை ! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புக்களையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிட்சை சாதனங்களை ஏற்றிக் கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். ·போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப் போது தெரிந்து கொண்டார்.

நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

“யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது ?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான் ! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின ! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது ! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள் !! குஷ்ட ரோகி போல் காணப் பட்டான் ஹாரி !

“தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடி யிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா ! பார் ! இப்போது நானொரு புத்த பிச்சு ! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவைகளை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன் !  உயிர்களின் துணைவன் ! அணு ஆயுத எதிரி ! அணு ஆயுதப் பலிகடா !

அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி ! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி ! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணு குண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி !  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது ! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது ! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை !  அது நம்மிடம் இல்லை !  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்ட தல்லவா ஹைடிரஜன் குண்டு !” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர் ! அவர்தான் அணுகுண்டின் பிதா ! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி !

இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணு குண்டுகளா ?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா ? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம் ? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா ? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா ?” என்று கடிந்தார், ஜேம்ஸ் !

ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்த பயங்கர அமைதியைக் கலைத்தாற் போல் ‘ஓ வென’ ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது ! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டு கத்தினான் !  டாக்டர் வில்ஸனும், நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாம் ஓப்பி ! லிட்டில்பாய் ஓப்பி ! டாம் குருவ்ஸ் ! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட் ! கெட் அவுட் !” என்று ஆர்ப்பாட்டமுடன் கத்தினான், ஹாரி !

ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

“லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு ! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ ! குடைக் காளான் ! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு ! அதில் நான் மிதக்கிறேன் ! அதோ ! அணுக் கோளம் ! அனல் கோளம் ! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள் ! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்குகினான் ஹாரி.

ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோட இருபத்தி நான்காம் நாள் ! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகு வர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுது கொண்டிருந்தன !

ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே !  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியும் !”

கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்து கொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன !

உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்து பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம் !  அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது ! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள் ! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம் !” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார்.  ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

***********************

[ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மை சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைக்கதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைக்கதை]


நன்றி ;சி ஜெயபாரதன் (கனடா )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 28, 2013 4:54 pm

பள்ளி காதல் 

வணக்கம் சார்...

யாரும்மா நீ என்று கணிப்பொறி ஆசிரியர் அவளிடம் கேட்டார்..

அதற்கு அவள், " என் பெயர் வனிதா. 11A வகுப்பிலிருந்து இங்கு மாற்றுதலாகி வந்துள்ளேன் ஐயா என்று பணிவாக கூறினாள்...

ஏம்மா... எல்லோரும் ஆங்கிலத்தை தேடி போகும் நீ தமிழ் வழியை தேடி வந்துள்ளாய்... சரி... உள்ளே வா நீ போய் உட்கார் என்று கூறினார்.

அவளும் உமா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்... உமாவிற்கு வனிதாவை முன்பே தெரியும்... பள்ளிவிழாக்களில் சேர்ந்து நடித்தும் ஆடியும் உள்ளார்கள்... வனிதா உமா பக்கத்தில் உட்கார்ந்தவுடன் காயத்ரிக்கு பிடிக்கவில்லை...

காயத்ரியும் உமாவும் உயிர் தோழிகள்... வகுப்பு இடைவேளை வரும் உமாவிடம் வந்து கத்தினாள்... ஏன்டி அவள் வந்து உன் அருகில் அமர்ந்தாள்...

உமாவும் அவளும் நம் தோழி தாம்ப்பா... நீயும் ஏற்றுக்கொள்...நாம் மூன்று பேரும் நண்பிகளாக இருப்போம்...

காயத்ரிக்கும் மனதளவில் பிடிக்கவில்லையென்றாலும் உமாவிற்காக ஒத்துக்கொண்டாள்.

மூன்று பேரும் நன்கு நண்பர்களாக பழகிக் கொண்டார்கள்... வனிதாவின் பிறந்தநாள் வந்தது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினாள்... கோபால் ஒன்று எடுக்காமல் 10,15 எடுத்துக் கொண்டான்...

உமாவும் காயத்ரியும் மத்தவங்களுக்கும் கொஞ்சம் வைப்பா என்று கிண்டலித்தார்கள்...

கணிப்பொறி ஆசிரியர் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்... மற்ற வாத்தியார்கள் போல் இல்லாமல் அனைவருக்கும் சுதந்திரம் கொடுப்பார்.. வாரத்தில் 1வகுப்பை விடுகதை விளையாட்டு, பாட்டுக்பாட்டு என்று விளையாட விடுவார்.. அதனால் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவருடைய விளையாட்டு வகுப்பு வந்தது... வனிதா எழுந்து விடுகதை போட்டாள்... அதற்கு கோபால் சரியான விடை கூறவில்லை.. அதனால் ஆசிரியர் தலையில் கொட்ட சொன்னார்... கொட்ட போகும் போது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது...

அவனை கொட்டும் போது அவன் பெஞ்சில் வனிதா வனிதா என் உயிர் காதலி என்று கிறுக்கி வைத்திருந்தான்... அதை பார்த்தவுடன் வனிதாவுக்கு கோபம் வந்தாலும் பயத்துடன் அவள் இருக்கைக்கு வந்து உட்கார்ந்து விட்டாள்... ஏன்டி ஒரு மாதிரியா இருக்க என்று உமா கேட்க ஒன்றுமில்லை என்று சமாளித்துவிட்டாள்.

வார இறுதி வந்தது... காயத்ரியும் வனிதாவும் உமா வீட்டுக்கு வந்தனர்... உமா அவர்கள் முகத்தை பார்த்தவுடன் ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு வாடி மாடிக்கு போவோம் என்று இருவரையும் கூட்டிக்கொண்டு சென்றாள்...

மாடிக்கு வந்ததும் வனிதா உமாவை கட்டிப்பிடித்து அழ தொடங்கிவிட்டாள்... ஏன்டி இப்படி அழுகிறாள் என்று காயத்ரியிடம் கேட்க அவள் ஒரு கடுதாசியை உமாவிடம் நீட்டினாள்...

அதை வாங்கி படித்தவுடன் அதிர்ச்சியானாள்... என்னடி இப்படி எழுதியிருக்கான்... உனக்கு முன்பே அவனை பற்றி தெரியுமாடி என்று வனிதாவிடம் கேட்டாள் உமா...

இல்லப்பா... பிறந்தநாள் அன்று தான் அவன் பெஞ்சில் என் பெயரை எழுதி வைத்தை பார்த்தேன்... அதன் பிறகு அவனை நான் பார்க்கவே முயற்சி பண்ணவில்லை... அவன் அருகில் வரும்போதெல்லாம் எப்படியாவது தப்பித்து ஓடி விடுவேன் என்று அழுதுகொண்டே வனிதா கூறினாள்.

உமாவும் யோசித்துக்கொண்டே இருந்தாள்... எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. அதன் படி செய்வோம் என்று கூறினாள்...

என்ன ஐடியா உமா? என்றாள் காயத்ரி.

முதலில் கோபாலை பார்த்து நாம் பேசுவோம் அதுவும் ஒத்துவராவிட்டால் கணிப்பொறி ஆசிரியரிடம் கூறிவிடுவோம் அவர் நமக்கு நிச்சயம் உதவி பண்ணுவார்டி.

சரிடி பள்ளிக்கூடம் வந்ததும் கோபாலை பார்த்து உங்களிடம் தனியாக பேசனும் என்று வனிதா சொல்லி தனியாக அவனை கூட்டி வந்தாள்...

அங்கு உமாவும் காயத்ரியும் இருப்பதை பார்த்தவுடன் அவன் அதர்ச்சியடைந்தான். உமா அவன் அருகில் வந்து எப்படியிருக்கிறாய் கோபால்? என்று அமைதியாக பேசத் தொடங்கினாள்.

நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக நீ கேட்டால்  உனக்கே புரியும் நீ செய்வது தவறு என்று உமா கூறியவுடன் வனிதா பற்றிய விஷயம் என்றால் பேச வேண்டாம் உமா... என்னை புரிந்து கொள்... அவளை நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் உமா...

இல்ல... உன்னுடைய வயது இப்போது 16 ஆகிறது. உன் குடும்பத்தில் அப்பாவும் கிடையாது.. நீ தான் நன்கு படித்து உன் குடும்பத்தை காக்கனும்... வனிதாவிற்கும் உன்னை பிடிக்கவில்லை... அவளுக்கு பிடிக்காமல் நீ காதலித்து என்ன பயன்? நீ இப்பவே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் உன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என்று உமா சொன்னவுடன் அவன் அழுக தொடங்கினான்.

எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு கிளம்ப தொடங்கினான்... 

உமாவிற்கும் மனது கஷ்டமாக இருந்தது... இந்த நிகழ்வுக்கு பிறகு அவன் எதுவும் பிரச்சனை பண்ணவில்லை... வகுப்பில் எப்போதும் போலவே நடந்து கொண்டான்...

12ம் வகுப்பு முடிந்து நண்பர்கள் தினத்தன்று எல்லோரிடம் நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தாள் உமா.. அப்போது கோபால் பெஞ்சுக்கு அருகில் வந்தாள். பெஞ்சில் வனிதாவை பற்றிய எழுத்தை அடித்து கிறுக்கி வைத்திருந்தான்... உமாவிற்கு ஒருவிதத்தில் சந்தோஷமாக இருந்தாலும் அவனை நினைக்கையில் பரிதாபமாயிருந்தது.. அவனிடமும் கையெழுத்தை வாங்கி கொண்டு நன்றாக வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவாய் என்று கைகுலுக்கி விடை பெற்றாள்...

உமா, காயத்ரி, வனிதா மூவரும் ஒரே கல்லூரியை தான் தேர்ந்தெடுத்தார்கள்... மூவரும் முதல் வகுப்பு செல்லும் போது தான் பார்த்தார்கள்... கோபாலும் சேர்ந்திருக்கிறான் என்பதை அறிந்தார்கள்...

உமா இப்பவும் அவனிடம் நன்றாக பேசுவாள். வனிதாவுக்கும் காயத்ரிக்கும் அவனை கண்டாலே பிடிக்காது.

கோபால் நன்கு படித்து மாநிலத்திலே முதல் மதிப்பெண் எடுத்தான்... நல்ல வேளையிலும் சேர்ந்தான்... இதனை அறிந்த பிறகு வனிதா அவன் மேல் காதல் கொண்டாள்... இதனை உமாவிடம் சொன்னாள்...

அவளுக்கு பதிலாக கோபாலிடம் வனிதாவை பற்றிக் கூற அலுவலகத்திற்க்கு சென்றாள்... 

எப்படியிருக்கிற உமா...

நல்லாயிருக்கிறேன் கோபால் 

என்ன விஷயம் உமா...

வனிதாவை பற்றி பேச வந்துள்ளேன்... வனிதா உன்னை மனப்பூர்வமாக காதலிக்கிறாள்...

என்ன சொல்ற... நான் அதை மறந்து வெகு வருஷம் ஆயிற்றே... 

இல்லப்பா...

முதல்ல நான் சொல்றத கேள் என்று உமாவின் கையை பற்றினான்...

அவளும் அவன் கையை உதறாமல் சொல்லு கோபால் என்று கூறினாள்.

ஐ லவ் யூ உமா... உன்னை நான் காதலிக்கிறேன்.

என்ன சொல்ற என்று சொல்ல வருவதற்குள் அவள் வாயை கையை வைத்து மூடினான்.

உமா உன் மூலமா தான் என்னை நல்வழியில் திருத்திக் கொள்ளமுடிந்தது. நீ என் கூடவே வாழ்நாள் முழுவதுமிருந்தால் நிச்சயம் என்னால் நன்றாக வாழமுடியும் என்று அனைத்துக் கொண்டான்...

உமாவும் அவனை விட்டு பிரிந்து செல்லாமல் ஆனந்த கண்ணீருடன் அணைத்துக்கொண்டாள். 

நன்றி ரதி தேவி 
நிலா முற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 29, 2013 11:34 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 9:51 pm

புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !

மாலை சூரியன் சுட்டெரிக்கும் தன் கோபக் கனல்களை சுருட்டிக் கொண்டிருந்தான் பால் வெள்ளை முகங்காட்டிச்சிறித்த நிலவின் அந்த அந்தி மாலைப்பொழுதில் ஓய்வாக பால்கனியில் அமர்ந்திருந்தேன்.

ஒரு திருமண வரவேற்பு நிகழ்விற்கு என் மனைவியும் மகளும் சென்றிருந்தார்கள்.

எதிரில் இருந்த அந்த சிறிய மரத்தில் இரு குருவிகள் கீச் கீச் என மாறி மாறி கூப்பிட்டுக் கொண்டிருந்தது, என் நினைவுகளை பின்னோக்கி தூண்டியது.

ஊரின் சந்தடிகள் சற்று குறைந்த தூரத்தில், பல வித மரங்களும், தென்னை மரங்களும், வாழைகளும், கரும்பு தோட்டங்களும் சூழ்ந்த ஒரு ரம்யமான சுழலில் ஆரம்பிக்கும் நிலத்தில் பலவித சிரமங்களுக்கிடையே என் தந்தை ஒரு சிறு இடத்தை வாங்கி போட்டார். 

அவர் மறைவுக்கு பின், அவரில்லாமல் அவரின் ஆசையை பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நானும் பலவித கஷ்டங்களின் இடையே ஏதோ ஒரு உந்துதலில் நமக்கும் ஒரு இனிமையான சொந்த இல்லம் வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் வீடு கட்ட ஆரம்பித்த அந்த பசுமையான நினைவுகள் என் மனதில் மின்னி மறைந்தது. 

இது நடந்து நான்கைந்து ஆண்டுகள் இருக்கும். கட்டிய இந்த புது வீட்டிற்கு ஒரு வாரத்தில் வாடகை வீட்டை காலி செய்து சந்தோசத்துடன் குடி புகுந்திருந்தோம்.

என் மகளுக்கு அப்போது எட்டு வயதிருக்கும் அவளை ஒத்த வயதுடைய மனைவியின் அக்காளின் ஒரு சிறுமியும், மூன்று வயது குறைந்த மற்றொரு குழந்தையும் ஆக மூன்று பேரும் அந்த மாலை நேரத்தில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்பா..., அப்பா சீக்கிறம் வாங்கப்பா.. என்ற மகளின் குறல் கேட்டது.

என்ன ஏதோ பிரச்சனையா? ... என்று நினைத்து வாசலில் எட்டிப்பார்த்தேன். 

மூவரும் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். அருகில் சென்று பார்த்தால் ஒரு சிறு குருவி நிற்காமல் அமர்ந்திருந்தது கீச்... கீச் என கத்திய படி அந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தது.

அந்த குருவி பார்பதற்கு மிக அழகாக இருந்தது சிறிய குஞ்சு போல் தெரிந்தது. அதன் உச்சந்தலை முதல் வால் வரை கரு நீலமாகவும், கழுத்துப்பகுதியில் இருந்து உடல் முழுவதும் இள மஞ்சள் வண்ணமுமாக அந்தி மாலைப் பொழுதின் சூரிய ஒளியில் அதன் உடல் மின்னியது.

அந்த குருவிக்கு ஒரு காலில் எப்படியோ அடி பட்டிருக்கும் போல இருந்தது. அதனால் சரிவர நிற்க முடியவில்லை. சற்று நடுங்கியபடி, அது எங்களைப் பார்த்து கீச்... கீச்... என கத்தியது. அதற்கு எங்களை கண்டு எவ்வித அச்சமும் இல்லை. அடிபட்ட தால் தான் அந்த நடுக்கம். 

என் மகள் வீட்டின் உள்ளே ஓடிச் சென்று ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வந்தாள். அதை வாங்கி குருவியின் அருகில் வைத்தேன். சுற்றும் முற்றும் பார்த்து கீச்... கீச்... என கத்தியது. 

குழந்தைகளை சற்று விலகி இருக்கச் செய்தேன். மெதுவாக அது தண்ணீர் குடித்ததை பார்த்து குதூகளித்தார்கள். 

சற்று நேரத்தில் சூரியன் தன் கிரணங்களை ஒழித்து வைத்துக் கொண்டான்.
இருளின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்து. 

சிறுமிகள் மூவரும் அப்பா, அப்பா ப்ளீஸ் பா.. இதை நாமளே வளர்க்கலாம்...என கெஞ்சினர். குருவி இப்போது எங்கும் செல்ல முடியாத நிலைமை. நம்மை நாடி அடைக்கலம் வந்துள்ளது. என்ன… இருந்தாலும் காலையில் பார்க்கலாம்...சரி என்று அதை மெதுவாக கையில் பிடித்தேன். எவ்வித எதிர்ப்பும் அது காட்டவில்லை. 

ஒரு சிறிய மரப் பெட்டி வீட்டில் இருந்தது அதன் ஒரு பக்கம் நடுவில் உடைந்திருந்தது. பெட்டியை தலைகீழாக கவிழ்க்க சொன்னேன். இப்போது அது பார்க்க ஒரு கதவு இல்லாத வீடு போல் இருந்தது. சிற் சில இடங்களில் பெட்டி உடைந்திருந்ததால் காற்றோட்ட வசதி இருந்தது. 


ஹாலின் ஒரு ஓரத்தில் பெட்டியை வைத்து அதனுள் பாதுகாப்பாக குருவியை வைத்தேன் அது ஒரு புறமாக தவ்வி ஒடுங்கிக்கொண்டது. ஒரு கைப்பிடி அரிசியை அதன் அருகில் வைத்தேன். அதை கண்டு கொள்ளவில்லை. நீர் நிறைந்த கிண்ணத்தை சற்று தள்ளி வைத்தேன். பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று சிறு புத்தகத்தை வாயில் போன்ற பகுதியில் வைத்து மறைத்தேன். 

இரவில் சாப்பிடும் போது மனைவி கேட்டாள் " இத வளர்க்க போறீங்களா? ..

“இல்லை...” என தலை அசைத்தேன்.

குழந்தைகள் விட வில்லை. " இல்ல நாம இத வளர்க்களாம்ப்பா...

அவர்களுக்கு தெளிவு படுத்தினேன். இதை வளர்க்க கூண்டு வேண்டும். அதில்லாம ஒரு குருவியை மட்டும் தனியா வளர்க்க மாட்டாங்க... சுதந்திரமா பறந்து திரியர அத கூண்டிலடைத்து வளர்ப்பது பாவம் இல்லையா..

ஏதேதோ பேசிப்பின் உறங்கச் சென்று விட்டோம்.

இரவின் சில நேரங்களில் அது கீச்..கீச்.. என கத்துவதும் சிறிது அமைதியாவதுமாக இருந்தது.

மீண்டும் காலையின் அதன் கீச் கீச் ஒலியைக் கேட்டு விழித்துக் கொண்டேன். நன்றாக விடிந்திருந்தது. சிறிது நேரத்தில் குழந்தைகளும் விழித்துக் கொண்டனர்.

குருவியை கையில் மெதுவாக எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றோம். அப்பொழுது தான் கவனித்தேன் அதையொத்த மற்றொரு குருவி ஒன்று கீரீச்.. கீரீச்... என கத்திய படி சுற்றி சுற்றி பறந்தது. அந்த குருவி இதன் துணையாக இருக்கவேண்டும். ஆணா? பெண்ணா? தெரியாது. 
இதை குஞ்சு குருவி என ஆரம்பத்தில் நினைத்தேனே. இதன் வளர்ச்சியே அவ்வளவுதான் என புரிந்து கொண்டேன்.

மெதுவாக தரையில் விட்டேன். அது இப்போது சற்று சுதாரித்து நின்றது.

இதை பறக்க ஊக்குவிப்பது போல் குறுக்கும் நெடுக்குமாக சுற்றிச் சுற்றி இதன் இணை கீரீச்...கீரீச்.. என கத்தியபடி பறந்தது.

நான் மற்றும் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இந்த குருவியும் பறந்து தாழ்வான மரத்தின் கிளையில் சுதாரித்து அமர்ந்தது. 

அது அங்கிருந்தே கீச்...கீச்.. என எங்களைப் பார்த்து கத்தியது. அது நன்றி சொல்வது போல இருந்தது.

இதற்கிடையில் புதரில் தவ்வி தவ்வி பறந்தது. அதனுடன் பாதுகாப்பாக இணைக்குருவியும் வழி நடத்திச் சென்றது. அதற்கு முழுவதும் குணமாக இன்னும் சில தினங்கள் ஆகும். 

ஒரு வித பரவச உணர்வு எனக்குள் ஏற்பட்டது. குழந்தைகள் குதூகளித்தனர் " போயிருச்சு....போயிருச்சு...என சப்பதமிட்டனர்.

அந்த சிறிய பறவைக்கு இவ்வளவு மன தைரியத்தை கொடுப்பது எது? தனது இனத்தை எப்படி பாது காக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தன்னை தேர்த்திக் கொள்ளும் பக்குவம். போராடி வாழ வேண்டும் என்ற உந்துதல். இயற்கை எவ்வளவோ இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.

இயந்திரத்தனமான இந்த உலகத்தில் சுயநலம் மிகுந்தவன் மனிதன் தான். எவ்வளவோ விசயங்களை கற்றுக்கொள்ளாமல் இருக்கிறான்.

நன்றி ;கதையாக்கம் : கலாகுமரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 04, 2013 11:04 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 5:05 pm

பலருக்கும் பயன் படும் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 24, 2013 6:24 pm

மகனை பெற்ற சில அப்பாக்கள் 


ஒரு ஊரில் ஒரு பணக்கார தந்தைக்கும் தன் ஒரே மகனுக்கும் ஓவியங்களை தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதே வழக்கமாக இருந்தது.அவர்களிடம் பிகாசோ ஓவியங்களில் இருந்து ரப்ஹேல் ஓவியங்கள் வரை இருந்தது.
அவர்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் தாங்கள் சேர்த்து வைத்து இருக்கும் ஓவியங்களை அவர்களுக்கு காட்டி மகிழ்வர்.
வியட்னாம் போர் அப்போது ஆரம்பமானது, தன் ஒரே மகனை போருக்கு அனுப்பி வைத்தார்.போரில் தன் நண்பன் உயிரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை விட்டான் அவருடைய மகன்.
தன் மகன் இறந்த துயரத்தில் அவர் நோய்வாய் பட்டு கிடந்தார். ஒரு மாதம் கழித்து ஒரு இளைஞன் வந்தார். ஐயா என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் உங்கள் மகனுக்கு நான் நண்பன். போரில் என் உயிரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை கொடுத்தான் உங்கள் மகன்.
அவன் எப்போதும் உங்களை பற்றியே பேசி கொண்டு இருப்பான். நீங்கள் ஓவியத்தின் மேல் தீராத ஆசை கொண்டவர் என்று சொல்லி கொண்டே இருப்பான். அவன் நினைவாக நான் உங்கள் மகனின் படத்தை உங்களுக்காக வரைந்து எடுத்து வந்துள்ளேன், தயவு செய்து வாங்கிகொள்ளுங்கள் என்றான்.
நான் பெரிய ஓவியன் கிடையாது எதோ எனக்கு தெரிந்தவரை வரைந்து உள்ளேன் பிரித்து பாருங்கள் என்றான். அவர் பிரித்து பார்த்தார், தன் மகனின் படத்தை நெஞ்சோடு இறுக அணைத்து கொண்டு கண்ணீர் விட்டார்.
தம்பி இந்த படத்துக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார். ஐயா போரில் என் உயிரையே காப்பாற்றினான் உங்கள் மகன் அவனுக்காக நான் வரைந்த படம் இதை உங்களுக்கு பரிசாக தரவே எடுத்து வந்தேன் என்றார்.
தன் மகனின் ஓவியத்தையும் மற்ற ஓவியங்களோடு சுவற்றில் மாட்டி வைத்தார். வருவோர் போவோரிடம் எல்லாம் தன் மகனின் ஓவியத்தை காட்டி மகிழ்ந்தார்.
சிறிது வருடத்தில் அவரும் இறந்து போனார். அவரது உறவினர் அவர் சேமித்து வைத்த ஓவியங்களை ஏலத்தில் விற்க முடிவெடுத்து விளம்பரம் செய்தார். ஏலம் விடும் அன்று பிரபலங்களின் ஓவியங்களை வாங்க ஏகப்பட்ட கூட்டம் கூடியது.
முதலில் அவரது மகனின் ஓவியத்தை விற்பதற்காக ஆரம்ப விலை 5000 ரூபாய் சொன்னார். யாரும் ஏலம் கேட்கவில்லை. எல்லோரும் பிரபலங்கள் வரைந்த ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள் என்று கூச்சலிட்டனர்.
ஏலம் விடுபவர் அதை காதில் வாங்காமல் இந்த ஓவியத்தின் விலை 5000 ரூபாய் என்று மீண்டும் சொன்னார். யாரும் ஏலம் கேட்கவில்லை. சரி உங்களால் எவ்வளவு பணம் இதற்கு தர முடியும் என்று நீங்களே சொல்லுங்கள் என்றார். மீண்டும் கூட்டத்தில் இருந்து நாங்கள் இந்த படத்தை வாங்க வரவில்லை மற்ற பிரபலங்களின் ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள் என்றார்கள்.
ஒரு பெரியவர் மட்டும் எழுந்து நின்று ஆயிரம் ரூபாய் என்றார். அவர் வேறு யாரும் இல்லை அதே வீட்டில் சமையல் வேலை பார்த்தவர் தான், இந்த இளைஞன் சிறுவனாக இருந்தபோது இவர் அவணை தூக்கி வளர்த்தவர், அவனோடு விளையாடியவர், அவன் விரும்பும் சமையலை சமைத்து போட்டவர். அவன் அப்பாவுக்கு இனையாணவர்.
ஏலம் விடும் நபர் 1000 ஒரு தரம் என்றார், யாரும் அதிகப்படுத்தி ஏலம் கேட்கவில்லை., இரண்டு தரம், மூன்று தரம் என்று சொல்லி ஏலத்தை முடித்தார்.
ஏலம் முடிந்து விட்டது எல்லாரும் செல்லலாம் என்றார். ஏலத்திற்கு வந்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. ஒரு ஓவியம் மட்டும் தான் ஏலம் விட்டீர்கள் மற்ற ஓவியங்களையும் ஏலத்தில் விடுங்கள் என்றனர்.
ஏலம் விட்டவர் சொன்னார் இறந்து போனவரின் உயில்படி, தன் மகனின் ஓவியத்தை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கே மற்ற ஓவியங்களும் இந்த பங்களாவும் மற்றும் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் போய் சேரும் என்று எழுதியுள்ளார் என்றார்.
அவரது மகனை வாங்கிய அவர் தோட்டக்காரனுக்கே இந்த சொத்துக்கள் எல்லாம் போய் சேரும் என்றார்.
நண்பர்களே நீங்கள் ஒரு சிலவற்றை ஒரு பொருளாக பார்ப்பீர்கள் ஆனால் அது வேறு சிலருக்கு அது உயிராக தெரியும்.அடுத்தவர்கள் மனநிலையில் இருந்து பாருங்கள், யாரையும் எதையும் உதாசினப்படுத்தாதீர்கள்.
நன்றி போஸ்புக்கில் : Ilayaraja Dentist.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 25, 2013 1:02 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 25, 2013 6:42 pm

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். 

நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. 

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. 

இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. 

ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!!

நன்றி ;யாழ்ப்பாணம் முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 25, 2013 6:46 pm

உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்.. 
உடுத்த உடையிருந்தால்.. 
தலை மேல் கூரையிருந்தால்.. 
உறக்கம் கொள்ள இடமிருந்தால்.. 
உலகின் 75 சதவிகித மக்களை விட நீங்கள் மேலானவரே!

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்.. 
உங்கள் பர்சில் சிறிது சில்லறை இருந்தால்.. 
உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!

நோய், நொடியின்றி, புத்துணர்ச்சியோடு உங்கள் பொழுது புணர்ந்தால்.. 
அதே நாளில் இறக்கப் போகும் கோடி மக்களை விட நீங்கள் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவரே!

நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால்.. 
எந்த வித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்.. 
தினம் தினம் செத்துப் பிழைக்கும், கோடானு கோடி மக்களை விட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே!

மேற்கூறியவைகளை தங்களால் படித்துப் பார்க்க முடிந்தால்..
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களை விடவும் நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே!!!

[You must be registered and logged in to see this link.] 

Visit our Page -► [You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 26, 2013 11:17 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 6:35 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

படித்த பிடித்த சிறுகதைகள்  Empty Re: படித்த பிடித்த சிறுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum