தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 1:58 pm

தமிழுக்குப் புத்துயிர் கொடுத்தவர்
டாக்டர் உ.வே.சா. என்று கூறுவதில் துளியும் பிழையில்லை. தம் வாணாளில் நூறு
அரிய பதிப்புக்கள் செய்து வெளியிட்ட அவரைத் தமிழ்த்தாய்
நன்றியுணர்ச்சியுடன் பார்க்கிறாள்.

ஓலைகளில் முடங்கி
உலகுக்குப் புலப்படாமற் கிடந்த இலக்கிய இலக்கண நூல்களை அச்சு வாகனத்தில்
ஏற்றி அழகிய - பிழையற்ற - ஆராய்ச்சிப் பதிப்புக்களாக வெளியிட்டார்.

முற்கால இலக்கியப்பதிப்புகள்

சீவக சிந்தாமணி,
பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல், பெருங்கதை குறுந்தொகை என்னும் நூல்களை உ.வே.சா
அவர்கள் ஆய்ந்து பதிப்பித்துள்ளார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 1:58 pm

சங்க நூல்கள்

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு நூலை 1889ஆம்
ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்தார். இந்நூலையும் தம் வாணாளில்
மூன்றுமுறை பதிப்பித்தார். 1918ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் 1931ஆம் ஆண்டு
மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது.

இது நச்சினார்க்கினியர்
உரையுடன் கூடிய பதிப்பே. பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு,
நச்சினார்க்கினியர் வரலாறு, அரும்பத முதலியவற்றின் அகராதி, மேற்கோள்கள்
உள்ளிட்ட அடிக் குறிப்புகள் ஆகிய ஆராய்ச்சி உறுப்புகளுடன் இந்நூலை
வெளியிட்டார்.

* டாக்டர் உ.வே.சா.
அவர்களின் வாழ்வும் தமிழ்த் தொண்டும் என்ற இக்கட்டுரையாளர் 1975ஆம் ஆண்டு
எழுதி வெளியிட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

இவர் பதிப்பிப்பதற்கு முன்
இதனுள் முதற்பாட்டாகிய திருமுருகாற்றுப்படையை மட்டும், பாராயணநூல் என்ற
அளவில் சைவர் அறிந்திருந்தனர். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி,
நெடுநல்வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்து
நூல்கள் கொண்ட தொகுப்பே பாத்துப்பாட்டு என்று தமிழ் உலகத்திற்குத்
துலக்கிய பெருமை இவரையே சாரும்.

இந்நூலுக்கு
நச்சினார்க்கினியர் உரைக்கு முன் வேறோர் உரை இருந்திருக்கவேண்டும்
என்பதும், பத்துப் பாட்டுகளையும் தொகுத்து ஒரு நூலாக்கியவர்கள்
சங்கத்தவர்களே என்பதும் இவர்தம் நுண்ணிய ஆய்வினால் கிடைத்த முடிபுகளிற்
சிலவாகும்.

இப்பதிப்புச் செய்ய
உ.வே.சா. அவர்கள் பதினோர் ஓலைச் சுவடிகளைப் பார்த்து ஆய்ந்தார். அவற்றுள்
மூன்று ஓலைச்சுவடிகளே உரையுடன் பத்துப்பாடல்களையும் கொண்டவை.

பத்துப்பாட்டாரய்ச்சியைத்
தொடங்கியதும், உரையுடன் முழுமையும் கூடிய ஓலைச்சுவடி பெறத்
திருவாவடுதுறைக்குச் சென்று, அங்கும் கிடைக்காமல், ஆதீனத் தலைவரைத்
திருமுகம் தீட்டச்செய்து திருச்செந்தூரிலிருந்து பெற்றதும் எல்லாச்
சுவடிகளிலும் குறிஞ்சிப் பாட்டில் சில அடிகள் இல்லாமையைக் கண்டு வருந்தி,
அவ்வடிகளை அறிந்து நிறைவுறுத்தத் தருமையாதீனத்திற்குச் சென்று, அங்கிருந்த
ஓலைச் சுவடிகளையெல்லாம் பார்வையிட்டு அப்பகுதிகளை நிறைவுறுத்தியதும் ஆகிய
செய்திகளெல்லாம் தமிழன்னையின் நெஞ்சைக் குளிர்விக்க இவர்பட்ட பாடுகள்
என்றே கூறவேண்டும்.

1931ஆம் ஆண்டு மூலமும் குறிப்புரையும், அருஞ்சொல் முதலியவற்றின் அகராதியும் கொண்ட இந்நூற்பதிப்பை உ.வே.சா. அவர்கள் வெளியிட்டார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 1:58 pm

புறநானூறு

இந்நூல் முதன் முறையாக
உ.வே.சா. அவர்களால் 1894ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது. 16 ஓலைச்சுவடிகளை
அரும்பாடுபட்டுத் தேடிப் பெற்று அவற்றை ஒப்பு நோக்கி இந்நூலை
வெளியிட்டார். இப்பதிப்பையும் உ.வே.சா. அவர்கள் தம் காலத்தில் மூன்று முறை
வெளியிட்டார். இரண்டாம் பதிப்பு 1923ஆம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பு
1935ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.

புறநானூறு நூலில் உள்ள
ஊர்களை நேரிற் காண விருப்பப்பட்டுப் பலவூர்கட்கும் சென்றார். உ.வே.சா.
கரூருக்குச் சென்று அவ்வூரைப் பற்றி அங்கிருந்த வழக்குரைஞர்களைக் கேட்டபோது
அவர்கள் ‘இங்குச் சிலரின் பெயர்களுடன் வள்ளல் என்ற அடைமொழியும் உள்ளது’
என்றனராம். வள்ளல் என்ற அடைமொழி பெற்றுள்ள அவர்களெல்லாம் கடையெழு
வள்ளல்கள் போன்றோரின் மரபினராகலாம் என உ.வே.சா. கருதினார்.

உ.வே.சா. அவர்கள்,
புறநானூறு கூறும் செய்திகளை முழுதும் திரட்டி ‘முன்னாளிடையே’ என்ற
தொடக்கத்துடன் 54 அடிகள் கொண்டதாக ஆசிரியப்பா ஒன்றை இயற்றி முகவுரைப்
பகுதியில் வெளியிட்டுள்ளார்.

கிடைத்த ஓலைப்
பிரதிகள் ஒன்றிலேனும் இந்நூலின் 267, 268ஆம் பாடல்களின் மூலமேனும்,
உரையேனும் காணப் பெறவில்லையென்று உ.வே.சா. வருந்துகிறார்.

இயற்றியோர் இன்னார் எனத்
தெரியாத பழைய உரையையும் உ.வே.சா. இந்நூற் பதிப்பில் வெளியிட்டுள்ளார்.
பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, திணை துறைகளின் பட்டியல்,
அளவைகள், ஆபரண வகை, ஆயுத வகை, ஆறுகள், இடவகை, உடைவகை, உணவு வகை உள்ளிட்ட 62
வகைச் செய்திகளடங்கிய விசேடச் செய்திகள், உரையின் இயல்பு முதலிய சிறப்பு
ஆராய்ச்சிக் குறிப்புகள் ஆகியவை 100 பக்க அளவில் வரைந்துள்ளார். 72 பக்க
அளவில் அரும்பத முதலியவற்றின் அகராதி திரட்டிப் பிற்சேர்க்கையாக
இணைத்துள்ளார். இச்சிறப்புப் பகுதிகள் அனைத்தும் முதற் பதிப்பிலேயே
வெளிவந்தன அல்ல.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 1:58 pm

புறநானூறு ஓலைப் பிரதிகள் இருந்த நிலையைக் கீழ்வருமாறு உ.வே.சா. கூறுகிறார் :

‘உரையில்லாத மூலங்கள்
எழுத்தும் சொல்லும் மிகுந்தும், குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும்
பலவாறு வேறுபட்டிருந்ததன்றி இவற்றுள் சில பாடல்களின் பின் திணை
எழுதப்படாமலும், சிலவற்றின் பின் துறையெழுதப்படாமலும் சிலவற்றின் பின்
இரண்டுமெழுதப்படாமலும் சிலவற்றின் பின் பாடினோர் பெயர் சிதைந்தும்,
சிலவற்றின் பின் பாடப்பட்டோர் பெயர் சிதைந்தும், சிலவற்றின் பின் இருவர்
பெயருமே சிதைந்தும், சில பாடல்கள் இரண்டிடத்து எழுதப்பெற்று இரண்டு எண்களை
ஏற்றும், வேறு வேறிடத்தில் இருத்தற்குரிய இரண்டு பாடல்கள்
ஒருங்கெழுதப்பட்டு ஓரெண்ணை ஏற்றும், சில முதற்பாகம் குறைந்தும், சில
இடைப்பாகம் குறைந்தும், சில கடைப்பாகம் குறைந்தும், சில முற்றும் இன்றியும்
ஒரு பாடலின் அடிகளுள் ஒன்றும் பலவும் வேறு பாடலின் அடிகளோடு கலந்தும்,
ஓரடியே ஒரு பாட்டுள் சிலவிடத்து வரப்பெற்றும் பொருளுண்மை காணாவண்ணம்
இன்னும் பல வகைப்பட மாறியும் கையெழுத்துப் பிரதிகளில் இருந்தன.’

இக் குறைகளை எல்லாம் களைவதற்கு உ.வே.சா. என்ன பாடுபட்டிருப்பார் என்றெண்ணும்போது அந்தப் பேருழைப்பு நம்மைத் திகைக்க வைக்கிறது.

1936ஆம் ஆண்டு மூலம்
மட்டும் கொண்ட புறநானூறு பதிப்பை உ.வே.சா. வெளியிட்டார்.
மூலத்துக்குமட்டுமான அரும்பத முதலியவற்றின் அகராதியை இப்பதிப்புக்கென
உண்டாக்கி வெளியிட்டார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 1:59 pm

ஐங்குறுநூறு

எட்டுத் தொகையுள்
மூன்றாவதாகிய ஐங்குறு நூறு என்னும் நூல் 1903ஆம் ஆண்டு முதன்முறையாக
உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. இந்நூலைப் பதிப்பிக்க உ.வே.சா
அவர்களுக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளில் நான்கு ஓலைச் சுவடிகளே பயன்தந்தன.
அவற்றிலும் ஓர் ஓலைச் சுவடியில்தான் பழைய உரை இருந்தது. அதனை உ.வே.சா.
அவர்கட்குத் தந்தவர் தே. லக்ஷ்மணக் கவிராயர் என்பவர். எஞ்சிய மூன்று ஓலைச்
சுவடிகளும் மூலம் மட்டுமே கொண்டவை.

இந்நூலுக்குக் கடவுள்
வாழ்த்து எழுதிய பாரதம் பாடிய பெருந்தேவனார் வரலாற்றையும், இந்நூலின் முதல்
நூறாகிய மருதத்தைப் பாடிய ஓரம்போகியார் வரலாற்றையும், இராண்டாம் நூறாகிய
நெய்தலைப் பாடிய அம்மூவனார் வரலாற்றையும், மூன்றாம் நூறாகிய குறிஞ்சியைப்
பாடிய கபிலர் வரலாற்றையும், நான்காம் நூறாகிய பாலையைப் பாடிய
ஓதலாந்தையார் வரலாற்றையும், ஐந்தாம் நூறாகிய முல்லையைப்பாடிய பேயனார்
வரலாற்றையும், இந்நூலைத் தொகுத்தவராகக் கருதப்பெறும் புலத்துறை முற்றிய
கூடலூர்கிழார் வரலாற்றையும், தொகுப்பித்தவராகக் கருதப்பெறும் யானைக்
கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வரலாற்றையும் உ.வே.சா. அவர்கள்
ஆய்ந்தெழுதி இந்நூலின் முற்பகுதியில் சேர்த்துள்ளார். இந்நூலின்
பாக்களையும், தொடர்களையும் மற்றையோர் எவ்வெவ்விடங்களில் எடுத்தாண்டுள்ளனர்
என்பதைத் தெளிவுசெய்யும் பிரயோக விளக்கம் என்னும் அட்டவணையையும்
தயாரித்து இப்பதிப்பின் இறுதியில் வெளியிட்டுள்ளார். அரும்பத
முதலியவற்றின் அகராதியும் இப்பதிப்பிற்கு உண்டு.

இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1920ஆம் ஆண்டில் வெளிவந்தது.
இந்நூலின் பழைய உரையினை இன்னார் எழுதினார் என்று
புலப்படவில்லை. உரையின் நடையினை நோக்கிப் பேராசிரியர்,
நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகிய மூவருள் ஒருவர் இப்பழைய உரையை
யாத்தவராகலாம் என உ.வே.சா. குறிப்பெழுதியுள்ளமையைத் தமிழுலகம் மேலும்
ஆராய்ச்சி செய்து முடிவெடுக்க வேண்டும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 1:59 pm

பதிற்றுப் பத்து

எட்டுத் தொகையுள்
நான்காவது நூலாகிய பதிற்றுப்பத்து என்னும் நூலினை 1904ஆம் ஆண்டு உ.வே.சா.
வெளியிட்டார். எழுதியவர் பெயர் தெரியாத பழைய உரையினையும் மூலத்துடன்
வெளியிட்டார். உ.வே.சா. அவர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும் இந்நூலின்
கடவுள் வாழ்த்தும், முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை.

இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1920ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும், 1941ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் பதிப்பித்தார்.

தொல்காப்பியப்
பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் கடவுள் வாழ்த்துக்கு
நச்சினார்க்கினியர் தரும் எடுத்துக்காட்டாகிய ‘எரியெள்ளு வன்ன’ எனத்
தொடங்கும் பாடல் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருக்கலாமென்றும்,
அப்பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆகலாம் என்றும் பிறர்
கருதுவர்.

அரிதின் முயன்று பெற்ற
பதிற்றுப்பத்தின் பல ஓலைப் பிரதிகளுள் ஆறு ஓலைப் பிரதிகளே இவர்தம்
ஆராய்ச்சிக்குப் பயன்பட்டன. அவற்றுள்ளும் இரண்டு பிரதிகளில்தான் பழைய உரை
இருந்தது. எஞ்சிய பிரதிகள் மூலம் மட்டிலுமே கொண்டவை.

மூன்றாம் பதிப்பில் இந்நூலை மேலும் எளிமையாக்குவதற்காக உ.வே.சா. அவர்கள் தாமே குறிப்புரை இயற்றி வெளியிட்டார்.
மூன்றாம் பதிப்பின் முன்னுரையில், ‘இத்தகைய நூல்களோடு
பழகுகையில் எனக்கு ஊக்கமும், உலகத்தை மறந்துவிடும் நிலையும் உண்டாகின்றன’
என்று உ.வே.சா. அவர்கள் எழுதியுள்ள தொடர் நம் கவனத்தைக் கவர்கின்றன.

பாடினோர் வரலாறு, அரும்பத முதலியவற்றின் அகராதி ஆகிய சிறப்புப் பகுதிகள் இந்நூற் பதிப்புகளிலும் உள.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 1:59 pm

பரிபாடல்

இந்நூலை முதன் முறையாக
உ.வே.சா. அவர்கள் 1918ஆம் ஆண்டு வெளியிட்டார். பரிபாட்டென்றும் இந்நூலுக்கு
ஒரு பெயர் உண்டு. பரிமேலழகரின் உரையுடன் இந்நூற் பதிப்பு வெளிவந்தது.

பரிபாடல் என்பது இசைப்
பாடல். பரிபாடல் என்பதற்கு, ‘தெய்வ வாழ்த்து உட்படக் காமப் பொருள் குறித்து
உலகியலே பற்றிவரும் பாடல்’ என விளக்கம் தருவார் நச்சினார்க்கினியர்.

இந்நூலுட் காணப்பெறும் 22
பாடல்களுள் திருமாலுக்குரியவை ஆறு; முருகக் கடவுளுக்குரியவை எட்டு;
இப்பதினான்கும் தெய்வ வாழ்த்து என்னும் வகையைச் சார்ந்த இசைப்பாடல்கள்.
வையைக் குரியவை எட்டுப் பாடல்கள். மலை விளையாட்டு, புனல் விளையாட்டு என்ற
காமப் பொருள் குறிக்கும் பகுதிகள் நூல் முழுவதிலுமாக விரவி வந்துள்ளன.

இந்நூலின் ஓலைப்
பிரதிகளில் காணப்பெறாதனவும், பண்டை உரையாசிரியர்களால் மேற்கோளாகக்
காட்டப்பெற்றனவும், புறத்திரட்டில் காணப்பெறுவனவும் ஆகிய பாடல்களை
இந்நூற்பதிப்பின் இறுதியில் உ.வே.சா. சேர்த்துள்ளார். இப்பகுதிக்குப்
பரிமேலழகர் உரை கிடையாது.

நூல் முழுமைக்கும்
இன்றியமையாத குறிப்புகளும், ஐம்பது பக்க அளவில் பொருட் சுருக்கமும்
(பிற்பகுதியிலுள்ள திரட்டின் பகுதிக்கும் இப்பகுதியில் பொருட் சுருக்கம்
உண்டு) பாடினோர் வரலாறும் (நல்லந்துவனார், இளம்பெருவழுதியார், கடுவன்
இளவெயினனார், கரும்பிள்ளைப் பூதனார், கீரந்தையார், குன்றம் பூதனார்,
கேசவனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லழுசியார், நல்லெழுனியார்,
நல்வழுதியார், மையோடக்கோவனார் என்னும் 13 புலவர்களின் வரலாறு) இசை
வகுத்தோர் வரலாறும் (கண்ணகனார், கண்ணன்நாகனார், கேசவனார், நந்நாகனார்,
நல்லச்சுதனார், நன்னாகனார், நாகனார், பித்தாமத்தர், பெட்டனாகனார்,
மருத்துவன் நல்லச்சுதனார் என்னும் 10 இசைவாணர்கள் பற்றிய குறிப்பு),
சிறந்த பாகங்கள் என்னும் தொகுப்பும், பரிமேலழகர் வரலாறும், அரும்பத
முதலியவற்றின் அகராதியும் ஆகிய சிறப்புப் பகுதிகளை உ.வே.சா. இந்நூற்
பதிப்புள் வெளியிட்டுள்ளார். விசேடக் குறிப்பு, தொல்காப்பியம் தெய்வச்
சிலையார் உரையில் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்ட இந்நூற் பகுதிகளும் இடமும்
என்ற சிறப்புப் பகுதிகள் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டவை. இந்நூலின்
இரண்டாம் பதிப்பு 1935ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 1:59 pm

குறுந்தொகை

உ.வே.சா. அவர்கள்
எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை 401 பாடல்களுக்கும் பதவுரை
விசேடவுரை எழுதி 1937ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

சுவையான செய்திகளுடன்
கூடிய செறிவான முன்னுரையும், பொருள்கள், அன்பைப் பற்றியன, உபகாரிகள்
(அகுதை, அஞ்சி, அதிகன், அருமன், அழிசி, ஆய், எவ்வி, எழினி, ஓரி, கட்டி,
குட்டுவன், கொங்கர், கோசர், சேந்தன், தொண்டையர், நள்ளி, நன்னன், பசும்பூட்
பாண்டியன், பாரி, பூழியர், பொறையர், மலையன், வடுகர், விச்சிக்கோ, வேளிர்
என்னும் 25 புரவலர்களைப் பற்றிய குறிப்புகள்), இடங்கள், மக்கள் வாழ்க்கை
நிலை, (அரசியல், ஊரமைப்பு, அறம், பொருள், சாதிகள், ஆடவர், மகளிர்,
நிமித்தங்கள், வழக்கங்கள், கருவிகள், ஊர்திகள், உணவு வகை, உரை, நீதி
என்னும் 14 வகைச் செய்திகள்), இலக்கணச் செய்திகள் ஆகியவைகளைக் கொண்ட
முக்கியமான செய்திகள் என்ற ஆராய்ச்சிப்பகுதியும், 60 பக்கங்களில் இந்நூலிற்
பாடிய 205 புலவர்களைப் பற்றிய வரலாறும், 80 பக்கங்கள் கொண்ட அரும்பத
முதலியவற்றின் அகராதியும் இந்நூற்பதிப்பின் உயர்வைத் தெளிவுடன்
விளக்குகின்றன.

‘இத்தொகை முடித்தான்
பூரிக்கோ’ என ஓலைகளிற் காணப்பட்டனவாம். இப் பூரிக்கோவைப் பற்றிய செய்தி
ஏதும் தெரிந்திலது. இந்நூலுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும்,
அவர் இருபது செய்யுட்களுக்கு மட்டும் உரை எழுதவில்லை என்றும், அவற்றிற்கு
நச்சினார்கினியர் உரையெழுதினார் என்றும் உ.வே.சா. அவர்கள் பல சான்றுகள்
தந்து இந்நூற் பதிப்பின் முன்னுரையில் நிறுவுகிறார். ‘இங்ஙனம் மிகச்
சிறந்த இரண்டு உரையாசிரியர்களாலும் எழுதப்பட்ட பழைய உரை இப்பொழுது
கிடைக்கவில்லை; இது தமிழர்களுக்கு நேர்ந்ததொரு பெரிய நஷ்டமேயாகும்’ என
உ.வே.சா. கூறுவது சிந்திக்கத் தக்கதாகும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:00 pm

காப்பியங்கள்

சீவக சிந்தாமணி

திருத்தகு மாமுனிசெய்
சிந்தாமணியும் அதற்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்
விருத்தியுரையும் அடங்கிய சீவக சிந்தாமணிப் பதிப்பை 1887ஆம் ஆண்டு உ.வே.சா.
அவர்கள் வெளியிட்டார்.

உரையுடன் கூடிய பத்தொன்பது
ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கி உண்மையான பாடங்களைக் கண்டறிந்து இந்நூலை
அச்சிட்டு உ.வே.சா. அவர்கள் தமிழுலகிற்குத் தந்துதவினார்.

1907ஆம் ஆண்டு இந்நூலை
இரண்டாம் முறையாகப் பதிப்புச் செய்யும்போது மேலும் பல சிறப்பு அம்சங்களுடன்
வெளியிட்டார். அதற்கிடையில் மேலும் பதினேழு ஓலைப் பிரதிகளைப்
பார்வையிட்டு ஒப்பு நோக்கி முதற் பதிப்பைக் காட்டிலும் மிகு சிறப்பு
வாய்ந்ததாக இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்.

ஏடு பெயர்த்தெழுதுவோர்
செய்த தவறுகள் சொல்லில் அடங்கா. அவற்றையெல்லாம் கண்டு பிடித்து உ.வே.சா.
அவர்கள் முன்னுரையில் குறித்துள்ளார். கொழும்புத்துறை தி. குமாரசாமி
செட்டியாரவர்கள் அளித்த ஓலைச்சுவடியின் இறுதியில் ‘இவ்வுரையாசிரியர்*
கருத்தறியாது இக்காலத்தார் வேண்டாதவற்றிற்கு வேண்டுவனவாகக் கருதி எழுதிய
இடை வசனங்கள், முடிக்கும் சொல்லோடு முடியாமையின் மிகையென்று
விதப்புரைகளையும் லி நாட்டு வளங்களினும் நகர வளங்களினும், கதைகளினும்
கூடிப் பாடியிட்ட பாட்டுக்களையும் லி பொருள் வேறுபாட்டானும் சொல்
வேறுபாட்டானும் இலக்கண வழுவாலும் வாய்பாட்டின் பேதங்களானும் கண்டு
அவற்றைத்தள்ளி எழுதின சிந்தாமணி உரை நச்சினார்க்கினியம் முடிந்தது’
என்றிருந்ததாம்.

இவ்வளவு வேலைகளையும்
உ.வே.சா. அவர்கள் செய்தார். இடைச்செருகலான பாடல்களைக் களைந்தும், இடைச்
செருகலான உரைத் தொடர்களைக் களைந்தும் செப்பம் மிக்க பதிப்புகளைத்
தமிழுக்குத் தந்த பெருமை உ.வே.சா. அவர்களைச் சாரும். அதற்கு அவர் பட்ட
இன்னல்கள் எண்ணிலாதன.

1922 ஆம் ஆண்டு இந்நூலை
உ.வே.சா. அவர்கள் மூன்றாம் முறையாக வெளியிட்டார். இராண்டாம் பதிப்பில்
சீவகசிந்தாமணி ‘ஆராய்ச்சி விளக்கம்’ என்ற பெயருடன் 41 பக்கங்களில் வெளியான
பகுதி ‘ஒப்புமைப் பகுதிகள்’ என்ற பெயருடன் 113 பக்கங்களில் இப் பதிப்பில்
வெளிவந்தது. பிரயோக விளக்கமும், விசேடக் குறிப்புகளும் இப்பகுதியில்
சேர்க்கப்பட்டன.

சீவக சிந்தாமணியை
நச்சினார்க்கினியர் உரையுடன் ஆய்ந்து பதிப்பிக்க உ.வே.சா. அவர்கள் பெரிதும்
பாடுபட்டார். நச்சினிôர்க்கினியம் உரையில் நிறைய மேற்கோட் பாடல்கள்
உள்ளன; அப்பாடல்கள் எந்வெந்நூல்களினின்றும் எடுக்கப்பட்டன என்ற குறிப்பும்
இல்லை. அப்பொழுது பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய இலக்கியங்கள் ஏட்டுச்
சுவடிகளாகவே இருந்தனவேயொழிய அச்சுவாகனம் ஏறவில்லை. உ.வே.சா. அவர்கள் உரைப்
பகுதியில் உள்ள மேற்கோட் பாடல்களை எல்லாம் தனியாகத் தொகுத்து எழுதி
மனப்பாடம் செய்து கொண்டார். திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று
அங்கிருந்த பழைய இலக்கிய ஓலைச் சுவடிகளையெல்லாம், மகா சந்நிதானத்தைக்
கேட்டுப் பெற்று வந்து படித்து நச்சினார்க்கினியர் தரும் மேற்கோட் பாடல்கள்
எவ்வெந் நூலிலிருந்து கூறப்பட்டன எனக் குறித்துக் கொள்வார். ஒவ்வொரு
மேற்கோளும் இன்ன நூலிலிருந்து தரப்பட்டது எனக் கண்டு பிடிக்கும்
போதெல்லாம் ‘பெரிய புதையல் கிடைத்த மகிழ்ச்சி’ இவருக்கு ஏற்பட்டது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:00 pm

நச்சினார்க்கினியர்.

1942ஆம் ஆண்டு சீவக
சிந்தாமணிப் பதிப்பு, தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகு
கீர்த்தியைப் பெற்றிறிருந்ததால் உ.வே.சா. அதனை நான்காம் முறையாகப்
பதிப்பிக்கத் தொடங்கினார். ஆனால் அப்பதிப்புப் பாதி அச்சாகும் போதே
உ.வே.சா. இறைவன் திருவடியை அடைந்ததினால் அன்னாரின் மகனாராகிய திரு. சா.
கலியாணசுந்தரையர் அப்பணியைத் தொடர்ந்து முடித்து அவ்வாண்டிலேயே அந்நூலை
வெளிக்கொணர்ந்தார்.

இந்நூலை பதிப்பிக்க ஓலைகள்
தேடியது முதல் பதிப்பிக்கக் காரணமான நிகழ்ச்சிகள், இந்நூற் பதிப்பின்
சிறப்புகள் முதலிய அனைத்துச் செய்திகளையும் இவர்தம் என்சரித்திரத்துள்
கண்டறியலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:01 pm

சிலப்பதிகாரம்

ஐம்பெரும் காப்பியங்களுள்
ஒன்றாகிய இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1892ஆம் ஆண்டு பதிப்பித்து
வெளியிட்டார். இப்பதிப்புள், யார் எழுதியது என்று பெயர் தெரியாத அரும்பத
உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் உண்டு. அடியார்க்கு நல்லார் உரை
முதல் ஆறு காதைகட்கும், கானல் வரி நீங்கலாக அதற்குப் பின்னர் உள்ள 12
காதைகட்குமே உண்டு.

முதற்பதிப்புக்கு அரிதின்
முயன்று 22 ஓலைச் சுவடிகளைத் திரட்டி ஒப்புநோக்கி ஆய்ந்தார். கானல்
வரிக்கும் வழக்குரைத்த காதைக்கும் அடியார்க்கு நல்லார் உரை
எழுதியிருப்பார் லி கிடைக்கவில்லை என்ற ஆய்வின் அடிப்படையில் தோன்றிய
எண்ணத்தால், உ.வே.சா. தமிழகம் முழுதும் இருந்த புலவர்களின் வீடுகட்கெல்லாம்
‘யாத்திரை’ செய்தார். பாரீஸ் நகரத்துக் கையெழுத்துப் புத்தகசாலையிலும்
அங்கிருந்த அன்பர்களைக் கொண்டு தேடச் செய்தார். இவ்வளவு முயன்றும்
அப்பகுதிகட்கு அடியார்க்கு நல்லார் உரை கிடைக்காமல் பெருவருத்தம்
கொண்டார்.

சிலப்பதிகாரம்
மூன்று காண்டங்கட்கும் உ.வே.சா. அவர்கள் தாமே குறிப்புரை எழுதித் தம்
பதிப்புடன் வெளியிட்டார். இக்குறிப்புரை முன்னையோர் உரை உள்ள பகுதிகளைப்
பொருத்தமட்டில் அவ்வுரைகட்கு மாறுபடாததாகும்.

1920ஆம் ஆண்டும் 1927ஆம்
ஆண்டுமாக இந்நூலை இவர் மேலும் இரு முறை பதிப்புச் செய்தார். இரண்டாம் முறை
பதிப்புச் செய்யும் பொழுது மேற்கொண்டும் பல ஓலைச் சுவடிகளை ஒப்பு
நோக்கினார். அவ்வோலைச்சுவடிகளிலும் முதற்பதிப்புக்குக் கிடைக்காத
அடியார்க்கு நல்லாரின் உரைப்பகுதிகள் இல்லை.

சிலப்பதிகார ஆசிரியரான
இளங்கோவடிகள் சைவர் என்பதற்கு இவர் நான்கு அகச் சான்றுகள் தந்துள்ளமை
படித்துணரத்தக்கது. இளங்கோவடிகளைச் சமணராகவும் கருதலாம் என்பதற்கு மூன்று
சான்றுகள் தந்துள்ளார். இச்சான்றுகளை இந்நூற் பதிப்பிலுள்ள இளங்கோவடிகள்
வரலாறு என்ற தலைப்புள் குறிக்கிறார்.

சிலப்பதிகாரத்தாலும் அதன்
உரையாலும் தெரியவரும் அரசர் பெயர் முதலியன, இளங்கோவடிகள் வரலாறு,
சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம், அரும்பதம் முதலியவற்றின் அகராதி என்னும்
இவர் பதிப்பின் பெருமையை உயர்த்தும் பகுதிகள் இப்பதிப்பிலும் உள்ளன.
விளங்கா மேற்கோள் அகராதி எனக் காணப்பெறும் பகுதி இவர் தம் பெருந்தன்மையைச்
சுட்டிக் காட்டும் சிறப்புப் பகுதி எனலாம்.

சிலப்பதிகார முதற் பதிப்பின் முன்னுரையில் உ.வே.சா. அவர்கள் கீழ்வருமாறு எழுதியுள்ளார்:

‘மேற்கூறிய பழைய பிரதிகள்
பல, இனி வழுப்பட வேண்டுமென்பதற்கு இடமில்லாமற் பிழை பொதிந்து, அனேக
வருஷங்களாகத் தம்மைப் படிப்போரும் படிப்பிப்போரும் இல்லை யென்பதையும்,
நூல்களைப் பெயர்த்தெழுதித் தொகுத்து வைத்தலையே விரதமாகக் கொண்ட சில
புண்ணியசாலிகளாலேயே தாம் உருக்கொண்டிருத்தலையும் நன்கு புலப்படுத்தின.
ஒன்றோடு ஒன்று ஒவ்வாது பிறழ்ந்துலிகுறைவுற்றும் பழுதுபட்டுப் பொருள்
தொடர்பின்றிக் கிடந்த இப் பிரதிகளைப் பரிசோதித்த துன்பத்தை உள்ளுங்கால்
உள்ளம் உருகும்.’

இத்தொடர்களே இவர் இப்பதிப்புக்கு மேற்கொண்ட இன்னல்களைத் தெள்ளிதின் உணர்த்தும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:02 pm

மணிமேகலை

ஐம்பெருங் காப்பியங்களுள்
ஒன்றாகிய மணிமேகலையினை உ.வே.சா. அவர்கள் 1898ஆம் ஆண்டு வெளியிட்டார்.
1891ஆம் ஆண்டு திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை மணிமேகலை மூலத்தை
மட்டும் வெளியிட்டிருந்தார். அப்பதிப்பைக் கொண்டு நூலின் பொருளை அறிதல்
மிகவும் கடினம். எனவே, ஆராய்ச்சி உரைகளுடனும் நூற்பொருளைத் தெள்ளிதின்
உணரச் செய்யும் குறிப்புரையுடனும் இப்பதிப்பினை உ.வே.சா. வெளியிட்டார்.

இந்நூல் பௌத்த சமயச்
சார்பானது ஆகையினால் மளூர் அரங்காசாரியார் அவர்களிடம் ஒன்றரை ஆண்டு காலம்
நாடோறும் பௌத்த சமயம் பற்றிக் கேட்டுக் குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.
அன்றியும் இலங்கையிலிருந்த பௌத்த மத ஆசிரியரான சுமங்களர் என்பாரிடமும் பல
கருத்துகளைக் கேட்டெழுதி அறிந்தார். ஒரு சமயத்தைப் பற்றி நன்கு தெரிந்து
கொள்ளாமல் அச்சமயச் சார்பான நூலை வெளியிடக் கூடாது என்பது உ.வே.சா.
அவர்களின் உயரிய கருத்து.

இந்நூலையும் உ.வே.சா.
அவர்கள் தம் வாணாளில் மூன்று முறை பதிப்பித்தார். இராண்டாம் பதிப்பு
1921ஆம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பு 1931ஆம் ஆண்டிலும் வெளிவந்தது.

மணிமேகலைப் பதிப்பில்
உ.வே.சா. செய்த சிறப்புகள். 1. இந்நூலில் தெரிந்த அரசர்களின் பெயர்கள்
முதலியன (23 செய்திகளின் ஆய்வுத் தொகுப்பு) 2. மணிமேகலைக் கதைச் சுருக்கம்
(முப்பது காதைகட்கும் உரைநடையில் சாரம்) 3. மேற்கோள்களுடன் கூடிய
குறிப்புரை.
4. மணிமேகலைப் பிரயோக விளக்கம் (மணிமேகலை அடிகளை இன்னின்னார்
இவ்விவ் விடங்களில் கையாண்டுள்ளனர் என்ற தொகுப்பு)
5. மணிமேகலையில் வந்துள்ள வேறு கதைகள். 6. புத்தருடைய
பெயர்கள். 7. மறுப்புகள். 8. அரும்பத முதலியவற்றின் அகராதி. 9. மும்மணிகள்
என்ற தலைப்பில் புத்த சரித்திரம், புத்த தர்மம், புத்த சங்கம்பற்றிய
விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை (இது முதல் மூன்று பதிப்புக்களில்தான்
இருக்கும். நான்காம் பதிப்பு முதல் இருக்காது.*)

இச்சிறப்புப் பகுதிகளுட்
சில இரண்டாம், மூன்றாம் பதிப்புக்களிற் சேர்க்கப்பட்டவை. முதற் பதிப்பில்
இருந்த அபிதான விளக்கம், அரும்பதவகராதி, அருந்தொடரகராதி, மூல விஷய
சூசிகை, தமிழ் நூற்பெயர்கள் முதலியன லி என்பனவற்றையெல்லாம் ஒன்று
திரட்டியதே இரண்டாம் பதிப்பு முதற்கொண்டு வெளிவந்த அரும்பத முதயவற்றின்
அகராதி என்பது.

முதற் பதிப்பு வெளியிடப்
பத்து ஓலைச் சுவடிகளை அரிதின் முயன்று பெற்று ஒப்பு நோக்கி ஆராய்ந்தார்.
இராண்டாம் பதிப்புக்கு மேலும் இரண்டு ஓலைச் சுவடிகளைப் பெற்று ஆராய்ந்து
குறிப்புகள் சேர்த்தார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:02 pm

பெருங்கதை

உதயணன்
என்பவனது வாழ்வு பற்றிய இந்நூலை உ.வே.சா. அவர்கள், தாம் எழுதிய
குறிப்புரையுடன் 1920ஆம் ஆண்டு முதன் முறையாக வெளியிட்டார். இந்நூல்
கொங்குவேளிர் என்பார் இயற்றியது. முதற் பதிப்பிலேயே நூலாசிரியர் வரலாறு,
நூலைப் பற்றிய குறிப்புகள், அபிதான விளக்கம் (ஊர்ப் பெயர்கள்,
உறுப்பினர்கள் பற்றிய விளக்கம்) உதயணன் கதைச் சுருக்கம், அரும்பத
முதலியவற்றின் அகராதி ஆகிய சிறப்புப் பகுதிகள் அமைக்கப்பெற்றன. 1935ஆம்
ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை இரண்டாம் முறையாகப் பதிப்பித்தார்.

* பௌத்த மும்மணிகள் எனத்தனியொரு நூலாக வெளியிடப்பெற்றது.
இந்நூற் பதிப்பின் முன்னுரையையொட்டி உ.வே.சா. அவர்கள் எழுதிய
உதயணன் கதைச் சுருக்கம் 1926ஆம் ஆண்டு தனி நூலாகவும் வெளியிடப்பெற்றது.

பத்துப் பாட்டு
நூலை அச்சிட எண்ணி உ.வே.சா. அவர்கள் ஓலைச் சுவடிகளைத் தேடியலைந்த
காலத்தில் திருநெல்வேலி கவிராஜர் நெல்லையப்பப் பிள்ளை அவர்கள் இல்லத்தில்
இருந்த ஓலைச்சுவடிகளையும் பார்வையிட்டார். நெல்லையப்பப் பிள்ளை
வீட்டிலிருந்த ஓலைச் சுவடிகளில் ஒன்றன்மேல் ‘கொங்குவேள் மாக்காதை’
என்றிருந்தது. அதைப் பார்த்ததும் இலக்கணக்கொத்துப் பாயிர உரையில் சாமிநாத
தேசிகர், ‘கொங்குவேள் மாக்கதை முதலிய நூல்களைக் கற்போர் வாணாளை
வீணாளாக்குவர்’ என்ற பொருளுடன் எழுதிய தொடர் உ.வே.சா. அவர்களின் நினைவுக்கு
வந்தது. அந்த நினைவும், அதனால் அவ்வோலைச் சுவடியைப் பெற்று ஆய்ந்ததன்
பயனுமே இப்பதிப்பாக மலர்ந்தது.

உ.வே.சா. அவர்கள்
இந்நூலின் ஓலைச் சுவடிகளை ஆராய்ச்சி செய்யும்பொழுது அவற்றில் க, ச, த, ப,
ம, ய, ழ, வ, ல, ள, ன என்னும் எழுத்துகள் அனைத்தும் ஒரு வடிவிலேயே
இருந்தனவாம். சொல் தொடர்ச்சியும், பொருள் தொடர்ச்சியும் நோக்கி, இன்னின்ன
எழுத்துகள் இவ்விடங்களில் இருத்தல் வேண்டுமென ஊகித்து உறுதிசெய்துகொண்டு
அமைத்தார். இன்னும் இவை போன்ற எண்ணற்ற இன்னல்கள் எய்தியே உ.வே.சா. அவர்கள்
இப்பணியை முடித்தார்.

1935ஆம் ஆண்டு பெருங்கதை மூலம் குறிப்புரை மட்டும் அடங்கிய பெருங்கதைப் பதிப்பினை வெளியிட்டார்.

உதயண குமார காவியம்

இதன் ஆசிரியர் இன்னாரென்று
தெரியவில்லை. உதயண குமார காவியம் என்பது பெருங்கதை என்னும் இலக்கியத்தைச்
சுருக்கி எளிமைப்படுத்தித் தரும் இலக்கியம் ஆகும். இந்நூலின்கண் 367
செய்யுட்கள் உள்ளன. இந்நூலுக்குக் குறிப்புரை எழுதி 1935ஆம் ஆண்டு
உ.வே.சா. அவர்கள் பதிப்பித்தார். இது கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 5)
வெளிவந்தது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:03 pm

இலக்கண நூற் பதிப்புகள்

புறப்பொருள் வெண்பாமாலை,
நன்னூல் (மயிலை நாதருரையுடன்), நன்னூல் (சங்கர நமச்சிவாயருரையுடன்)
தமிழ்நெறி விளக்கம் என்னும் இலக்கண நூல்களை உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து
வெளியிட்டார்.

புறப்பொருள் வெண்பா மாலை

சேரர் குலத்தவராகிய
ஐயனாரிதனார் இயற்றிய இவ்விலக்கண நூலை முதன்முறையாக உ.வே.சா. அவர்கள்
1895ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். உ.வே.சா. அவர்கள்
பதிப்பித்த முதல் இலக்கண நூல் இதுவே. இந்நூல் பன்னிருபடலம் என்னும் இலக்கண
நூலையொட்டி வழி நூலாக இயற்றப்பெற்ற புறப்பொருள் பற்றிய இலக்கண நூலாகும்.

புறப்பொருள் வெண்பாமாலை
நூலுள் பன்னிரண்டு படலங்களும் ஓர் ஒழிபியலும் உள்ளது. ஒழிபியலுக்கு ஒரே
ஒரு நூற்பா உண்டேயன்றித் துறையை விளக்கும் கொளு (புறச்செய்தி சொல்லும்
இலக்கண நூற்பாவின் பெயர்கொளு என்பதாகும்) கிடையாது; உதாரணப் பாடல்கள்
உண்டு.

11ஆவது படலமாகிய கைக்கிளைப்
படலத்துறைவிளக்க உதாரணப் பாடல்கள் இருபத்தொன்றும் மருட்பா என்ற வகைப்
பாடல்கள். எஞ்சிய, நூல் முழுதும் உள்ள துறை விளக்க உதாரணப் பாடல்கள்
வெண்பாக்களே. எனவேதான் இந்நூல் வெண்பா மாலை எனப் பெயர்பெற்றது.
இவ்வுதாரணப் பாடல்களும் ஆசிரியர் ஐயனாரிதனாராலேயே எழுதப் பெற்றவையாகும்.
கைக்கிளை என்னும் ஒருமருங்குபற்றிய காமத்தை மருட்பாவாலேயே எழுதவேண்டும்.
என்ற இலக்கண நியதி உள்ளமையின் ஆசிரியர் அப்படல உதாரணப் பாக்களை மட்டும்
மருட்பாக்களாகவே அமைக்க வேண்டியதாயிற்று. எனினும் மருட்பாக்களின் இறுதி
இரண்டடிகள்தாமே வேற்றுப்பாவாகிய ஆசிரியப்பாவாக அமையும்; முன்னிரண்டடிகளும்
வெண்பா அடிகள்தாமே? சமநிலை மருட்பா என்ற வகைப்பாடல்களாக உள்ள பாடல்கள்
முன்னிரண்டடி வெண்பாக்களாகவும், பின்னிரண்டடிகள் ஆசிரியப்பாவடிகளாகவும்
அமையும் என்பது ஈண்டு நினைவுகொள்ளல் தகும்.

இந்நூற்பதிப்புச் செய்ய
முதலில் உ.வே.சா. அவர்கள் ஆராய்ச்சி செய்த ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கை ஏழு.
முதற் பதிப்பிலேயே பழையவுரை வெளியிடப்பெற்றது. ஆனால் அப்பொழுது அவ்வுரையை
இயற்றியவர் யார் என்று விளங்கவில்லை. இரண்டாம் பதிப்பு 1915ஆம் ஆண்டு
வெளியிடப்பெற்றது. இப்பதிப்பு வெளியிடுகையில் சேது சமஸ்தான வித்துவான்
இரா. இராகவையங்கார் அவர்கள் புறப்பொருள் வெண்பா மாலைக்குக் கிடைத்துள்ள
பழைய உரையின் ஆசிரியர் பெயர் சாமுண்டிநாயகர் என்பது எனத் தக்க
ஆதாரங்களுடன் செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தார்.
அக்கருத்தை உ.வே.சா. அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

இரண்டாம் பதிப்பில்
அரும்பத முதலியவற்றின் அகராதி சேர்க்கப் பெற்றது. 1924ஆம் ஆண்டு இந்நூலின்
மூன்றாவது பதிப்பு உ.வே.சா. அவர்களால் வெளியிடப்பெற்றது. முதலிரு
பதிப்புகளில் கண்ட விளங்கா மேற்கோளகராதியின் பெரும்பகுதி இப்பதிப்பில்
குறைந்ததுடன் நூல் மிகத் தெளிவும் பொலிவும் பெற்றது.

1934ஆம் ஆண்டு உ.வே.சா.
அவர்கள் இந்நூலை நான்காவது முறையாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
இப்பதிப்பில் புறப்பொருள் வெண்பாமாலை லி பொருளமைப்பு என்ற பகுதியை எழுதிச்
சேர்த்தார். இந்நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் இப்பகுதி பதினைந்து
பக்கங்களில் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிய நடையில் விளக்குகிறது.

சாமுண்டி நாயகர் உரை
முழுமையாகத் கிடைத்துள்ளமையின் உ.வே.சா. அவர்கள் தாமும் உரையெழுதாமல்
இதனைப் பதிப்புச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:07 pm

கோவை நூற்பதிப்புகள்

சீகாழிக் கோவை,
திருவாவடுதுறைக் கோவை, பழமலைக் கோவை, கலைசைக்கோவை, சிராமலைக்கோவை,
திருவாரூர்க் கோவை, கோடீச்சரக் கோவை என்ற கோவை என்னும் வகை நூல்களை
உ.வே.சா. அவர்கள் ஆராய்ச்சி செய்து பதிப்பித்தார்.

கோவை என்பது அகப்பொருள் துறைகளுக்குக்
கட்டளைக் கலித்துறை என்னும் வகைப் பாடல்களால் 400 பாடுவது. மேலும் பாடுதல்
உண்டு. இதன் விளக்கம் உ.வே.சா. அவர்களின் கோவை நூற்பதிப்பு யாதானும்
ஒன்றன் முன்னுரையில் காண்க.

திருக்கழுக்குன்றக்கோவை என்ற நூலை உ.வே.சா.
அவர்கள் ஆங்காங்கு எழுதிய குறிப்புரைகளுடன் முற்றிலுமாகத் தாம் ஒரு
குறிப்புரை எழுதி 1943ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களின் மகனார் திரு. எஸ்.
கலியாண சுந்தரஐயர் அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:07 pm

சீகாழிக் கோவை

இக்கோவையை இயற்றியவர் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் ஆவார். 1860ஆம் ஆண்டு சீகாழியில் முன்சீப்
வேதநாயகம் பிள்ளையவர்கள் முன்னிலையில் இந்நூல் அரங்கேற்றப்பெற்றது.
இந்நூலுக்கு முன்சீப் வேதநாயகம்பிள்ளை அளித்த அரிய சாற்றுக் கவிகளும் உள.
அச்சாற்றுக் கவிகள் இருபதில் யாதானும் ஒன்றைப் படித்துப் பார்த்தாலும்
இந்நூலின் பெருமை புலப்படும். ஒரு பாடலைக் கீழே காண்போம்.
‘நல்லார்க்கு நல்லவனாம் மீனாட்சி சுந்தரவேள்
நவின்ற கோவை
இல்லார்க்கு நிதி;துறவா வில்லார்க்கு விதி;புவிவாழ்(வு)
எல்லாம் நீத்த
வல்லார்க்குத் திதி;ஞானம் கல்லார்க்கு மதி;வேலை*
வைய கத்தில்
பல்லார்க்குக் கதி;புகலிப் பதியார்க்குத் துதி;அதன்சீர்
பகர்வார் யாரே!’

இப்பாடலுள், இந்நூல் நிதியாகவும்,
விதியாகவும், திதியாகவும், மதியாகவும், கதியாகவும், துதியாகவும் அமைந்துள்ள
பாங்கு பாராட்டப்பெற்றுள்ளது.

இந்நூலை உ.வே.சா. அவர்கள் தாமெழுதிய
குறிப்புரையுடன் 1903ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். சீகாழித்
தலச்சிறப்பு, மூர்த்தி, தீர்த்தச் சிறப்புகள் ஆகியவற்றை முன்னுரையில்
கொடுத்துள்ளார். முன்னுரைக்கு அடுத்து வேதநாயகம் பிள்ளையின் சாற்றுக்
கவிகள் இருபதும் உள்ளன.

இந்நூலின் முன்னுரையில், மகாவித்துவான்
இயற்றிய நூல்களில் தமக்குத் தெரிந்தவை எழுபது என்றும் அவற்றுள் தன்னாலும்
பிற பலராலும் வெளியிடப் பெற்றவை முப்பது நான்கு என்றும் உ.வே.சா. அவர்கள்
குறிப்பிட்டுள்ளார். இக்கோவையில் 531 செய்யுட்கள் உள்ளன.

* வேலை லி கடல்.

திருவாவடுதுறைக் கோவை

இந்நூலை இயற்றியவர் தொட்டிக்கலை
சுப்பிரமணிய முனிவர் ஆவர். இவர் திருவாவடுதுறை ஆதீனத்து முனிபுங்கவராய்
இருந்தவர். மாதவச் சிவஞான முனிவரிடம் பயின்றவர்.

இந்நூல் துறைசைக் கோவையென்றும்,
ஐந்திணைக்கோவை யென்றும் பெயர் பெறும். இந்நூலை 1903ஆம் ஆண்டு உ.வே.சா.
அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார். நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்களின்
அரும்பதவுரை உண்டு. நூலாசிரியர் வரலாறு, நூலாராய்ச்சி ஆகிய சிறப்புப்
பகுதிகளும் முன்னுரையை ஒட்டி உ.வே.சா. அவர்களால் எழுதி வெளியிடப்
பெற்றுள்ளன.

இக்கோவையில் 457 செய்யுட்கள் உள்ளன.

பழமலைக் கோவை

இந்நூல் துறைமங்கலம் சாமிநாதைய தேசிகர்
என்னும் வீர சைவக் கவிஞரால் இயற்றப்பெற்றது. பழமலைலிவிருத்தாசலம். இது
பாடல் பெற்ற சிவத்தலம். இந்நூல் உ.வே.சா. அவர்களால் 1935ஆம் ஆண்டு
பதிப்புச் செய்து வெளியிடப்பெற்றது.

கோவைகளின் இயல்பு, பழமலையின் பெருமை,
நூலாசிரியர், நூலாராய்ச்சி முதலியவை அடங்கிய முன்னுரையும், நூல்
முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி உ.வே.சா. அவர்கள் இத்துடன்
வெளியிட்டார். இக்கோவையில் 427 செய்யுட்கள் உள்ளன.

கலைசைக் கோவை

இந்நூலை இயற்றியவர் தொட்டிக்கலை
சுப்பிரமணிய முனிவர் ஆவார். இவர் திருவாவடுதுறை ஆதீனத்து வித்துவான்.
கலைசை என்பது தொட்டிக்கலை என்ற ஊரைக் குறிக்கும் வேறு பெயர். இவ்வூர்
சென்னை ஆவடிக்கு அண்மையில் உள்ளது.

இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் முதலியன
அடங்கிய முன்னுரை, சுப்பிரமணிய முனிவர் வரலாறு, நூலாராய்ச்சி ஆகிய
சிறப்புப் பகுதிகளுடன், நூல் முழுமைக்கும் குறிப்புரை எழுதி உ.வே.சா.
அவர்கள் இந்நூலை 1935ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூல் மதுரைத்
தமிழ்ச்சங்கப் பதிப்பாக வந்தது.

இந்நூலில் 458 பாடல்கள் உள்ளன.

சிராமலைக் கோவை

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று
தெரியவில்லை. இந்நூல் திருச்சிராப்பள்ளி மலையில் உள்ள தாயுமானவரைப் பற்றிய
இலக்கியம். இன்றைக்குச் சுமார் 250 ஆண்டுகட்கு முற்பட்டதாதல் வேண்டும்.

சிராமலைச் சிறப்பு, நூலாசிரியர் வரலாறு
(பெயர் நீங்கலாக, காலம் முதலியவை பற்றிய ஆய்வு) நூலாராய்ச்சி ஆகிய
கட்டுரைகளுடன் நூல் முழுமைக்கும் அரியதொரு குறிப்புரையும் எழுதி உ.வே.சா.
அவர்கள் 1937ஆம் ஆண்டு இந்நூலை வெளியிட்டார். இதுவும் மதுரைத் தமிழ்ச்
சங்கப் பதிப்பாக வந்தது.

இந்நூலின் முன்னுரையில் ‘யாவையும் பாடிக்
கோவை பாடு’ என்று ஒரு பழமொழியை உ.வே.சா. அவர்கள் குறித்துள்ளார். மற்ற
அனைத்து வகைப் பிரபந்தங்களையும் இயற்றித் தேர்ந்தவரே கோவை இலக்கியம்
பாடவேண்டும் என்பது இதன் கருத்து. இது போன்ற இலக்கியத் தொடர்பான
பழமொழிகளைப் புலவர்கள் இறவாமற் காத்துப் பயன்படுத்த வேண்டும்.

கோவைகள் நானூறும், நானூற்றுக்கு மேலும்
பாக்கள் கொண்டனவாதலின் அவற்றிற்கு ‘நானூற்றுக்கோவை’ என்றே பெயருண்டு என்ற
செய்தியையும் இந்நூற் பதிப்பில் உ.வே.சா. அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறான அறிவுக்கு விருந்தான பல கருத்துகளை உ.வே.சா.
அவர்களின் பதிப்புக்களில் நாம் நிறையப் பெறலாம். சிராமலைக் கோவையில் 458
பாடல்கள் உள்ளன.

திருவாரூர்க் கோவை

இந்நூல் உண்ணாமுலை எல்லப்ப நயினார்
என்பவரால் இயற்றப்பட்டதாகும். ஆறு பிரதிகட்கு மேற்பட்ட ஓலைச் சுவடிகளை
ஒப்பு நோக்கி இந்நூலை 1937ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து
வெளியிட்டார்.

இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை அவர்கட்கு விருப்பமான நூல் என்று உ.வே.சா. அவர்கள் இந்நூற்
பதிப்பின் முன்னுரையிலும், தாம் இயற்றிய ‘மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம்’ என்ற நூலின் இரண்டாம் பாகத்திலும் குறித்துள்ளார். இந்நூலில்
514 செய்யுட்கள் உள்ளன.

இவர் வெளியிடுவதற்கு முன்பே ஆ.மே.
சென்னகேசவலு நாயுடு என்பவர் இந்நூலைப் பதிப்பித்திருந்தார். அவர் 496
செய்யுட்களையே பதிப்பித்திருந்தமையால், இந்நூலில் உள்ள மேற்கொண்ட
பாடல்களையும் சேர்த்து உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்புச் செய்தார்.
இச்செய்தியை இந்நூற் பதிப்பின் முன்னுரையில் உ.வே.சா. அவர்கள்
குறித்துள்ளார்.

திருவாரூர்த் தலச் செய்திகள், எல்லப்ப
நயினார், நூலாராய்ச்சி என்ற சிறப்புக் கட்டுரைகளுடன், நூல் முழுமைக்கும்
குறிப்புரை எழுதி இத்துடன் உ.வே.சா. அவர்கள் வெளியிட்டுள்ளார்.
பழனிப் பிள்ளைத் தமிழ்

இது சின்னப்ப நாயக்கர் என்பவரால்
இயற்றப்பட்டதாகும். பிள்ளைத் தமிழ் நூல் நூறு பாக்களைக் கொண்டதாக இருக்க
வேண்டும். இந்நூலுக்குரிய பாடல்களாக 31 பாடல்களே கிடைத்துள்ளன. நூல்
முடிவதற்கு முன் ஆசிரியர் மறைந்தாரோ, அன்றி எழுதி வைத்த எஞ்சிய பகுதிகள்
கிடைக்கவில்லையோ தெரியவில்லை. எஞ்சிய இம்முப்பத்தொரு பாடல்களும்
வழக்கொழிந்து போகக் கூடாது என்பதற்காக உ.வே.சா. அவர்கள் 1932ஆம் ஆண்டு
இதனைப் பதிப்புச் செய்து வெளியிட்டார். கிடைத்த பாடல்கள் முழுமைக்கும்
உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார். இந்நூல் மதுரைத் தமிழ்ச்
சங்கப் பதிப்பாக வந்தது..

வெண்பா நூற்பதிப்புகள்

திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, சிவசிவ
வெண்பா, திருக்குற்றாலச் சிலேடை வெண்பா, ஆகிய வெண்பா நூல்களை உ.வே.சா.
அவர்கள் ஆய்ந்து பதிப்பித்து வெளியிட்டார். இலக்கியம் முழுவதும் வெண்பா
யாப்பில் அமைந்தால் வெண்பா நூல் எனப் பெயர் பெறும். இஃது அந்தாதியாக
அமையின் வெண்பா அந்தாதி எனப்பெறும்.

திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா

இவ்வெண்பா நூலை இயற்றியவர் காஞ்சிபுரம்
சபாபதி முதலியார். இந்நூலில் நூறு பாடல்கள் உள்ளன. முதல் ஐம்பது
வெண்பாக்கள் சிலேடையின்றி உள்ளன. 51 ஆம் வெண்பாவும், 53 முதல் 89 முடிய
உள்ள வெண்பாக்களும் இரு பொருட் சிலேடை கொண்டனவாக உள்ளன. 52ஆம் வெண்பாவும்,
90 முதல் 95 முடிய உள்ள வெண்பாக்களும் முப்பொருட் சிலேடை கொண்டனவாக உள்ளன.
96 முதல் 100 முடிய உள்ள வெண்பாக்கள் நாற்பொருட் சிலேடை கொண்டவையாக உள்ளன.


இந்நூலின் ஆசிரியராகிய காஞ்சிபுரம் சபாபதி
முதலியார் என்பவர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
ஆசிரியர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சிலேடை வெண்பாவுக்குத் தலக் குறிப்பு
விளக்கங்கள் அடங்கிய குறிப்புரை எழுதி உ.வே.சா. அவர்கள் 1933ஆம் ஆண்டு
பதிப்புச் செய்து வெளியிட்டார். நூலின் இறுதியில் அரியதோர் ஆராய்ச்சிக்
குறிப்பும் வெளியிட்டார்.

சிவசிவ வெண்பா

இவ்வெண்பா நூலை இயற்றியவர்
ஸ்ரீசென்னமல்லையர் என்பவர். இவர் சிதம்பரம் பச்சைக்கந்தையர் மடத்தைச்
சார்ந்தவர். இவர் இந்நூலைக் கி.பி. 1767லி68இல் அரங்கேற்றினார்.

இவ்வெண்பா நூல் 133 பாடல்களைக் கொண்டது. இது
திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தினின்றும் ஒவ்வொரு குறளைப்
பின்னிரண்டடியாக அமைத்து, முன்னிரண்டடிகளில் அக்குறளுக்கு விளக்கமோ லி
விளக்கக் கதையோ அமையப் பாடிய வெண்பா நூலாகும். இவ்வாறான திருக்குறள் விளக்க
இலக்கியங்கள் பதின்மூன்றென்றும், அவற்றுள் கிடைப்பன பதினொன்றுதாமென்றும்
உ.வே.சா. அவர்கள் இந்நூற்பதிப்பின் முன்னுரையில் விளக்கமாகக்
குறித்துள்ளார்.

இந்நூலின் முதல் 98 செய்யுட்களுக்கு
மட்டிலும் ஓருரை கிடைத்துள்ளது. அவ்வுரை ஒவ்வொரு வெண்பாவுக்கும்
பின்னிரண்டடிகளாகிய திருக்குறளுக்குப் பரிமேலழகரின் உரையைக் கொண்டது.
முன்னிரண்டடிகட்கே உரையாசிரியர் தம் உரையினைத் தந்துள்ளார்.
இவ்வுரையாசிரியர் யாரென்று தெரியவில்லை. ஒவ்வோர் உரைக்குக் கீழும்
இன்னதிற்குப் பிரமாணம் இன்னதென்று மேற்கோள் செய்யுட்களை அவ்வுரையாசிரியர்
தருவது சிறப்பாக உள்ளது. இவர்தம் உரை கிடைக்காத 99ஆம் செய்யுள் முதல்
எஞ்சிய 35 வெண்பாக்களுக்கும் உ.வே.சா. குறிப்புரை எழுதியுள்ளார்.
இந்நூற்பதிப்பை உ.வே.சா. அவர்கள் 1938ஆம் ஆண்டு
வெளியிட்டார். இந்நூலின் மூலம் மட்டும் சோமேசர் முதுமொழி வெண்பா என்ற
நூலுடன் சேர்த்து 1901ஆம் ஆண்டு சிதம்பரம் அ. இரத்தின சபாபதி என்பவர்
வெளியிட்டிருந்தார். அப்பதிப்பு வெளிவந்து 37 ஆண்டுகள் ஆனமையாலும்,
அப்பதிப்பில் இல்லாத பழைய உரையொன்று கிடைத்தமையாலும், தாம் பல
ஏட்டுச் சுவடிகளைப் பார்வையிட்டுப் பாடபேதங்களைக்
கண்டமையாலும், உ.வே.சா. இதனை மீண்டும் பதிப்பிக்க எண்ணி, எண்ணத்தை
நிறைவேற்றினார்.

இந்நூற்பதிப்பு கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 8) வந்தது.
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
இவ்வெண்பா நூலை இயற்றியவர் திரிகூட ராசப்பக் கவிராயர்
என்பவராவார். இந்நூல் 105 வெண்பாக்களைக் கொண்டது. 10, 20, 30, 40, 50, 60,
70, 80, 90 ஆகிய பாடல்கள் நீங்கலாக எஞ்சிய அனைத்துப் பாடல்களும்
சிலேடையாக அமைந்துள்ளன.

தல விசேடம், சிலேடை வெண்பாக்களின் வரலாறு,
இந்நூல் பற்றிய விளக்கம், ஆகிய செய்திகளுடன் கூடிய முன்னுரையுடனும், நூல்
முழுமைக்கும் குறிப்புரையுடனும் 1940ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை
வெளியிட்டார்.

இந்நூலும் கலைமகள் வெளியீடாக வந்தது. வெளியீடு எண் 19.
பரணி நூற் பதிப்புக்கள் தக்கயாகப் பரணி, பாசவதைப் பரணி, என்ற
இரு பரணி நூல்களையும் உ.வே.சா. அவர்கள் ஆய்ந்து பதிப்பித்தார்.

‘பரணி என்னும் பெயர்க் கராணம் பலவாறாகக்
கூறப்படினும் காளியையும், யமனையும் தன் தெய்வமாகப் பெற்ற பரணி என்னும்
நாண்மீனால் வந்த பெயரென்பதே பொருத்தமுடியதாகத் தோன்றுகின்றது’ என உ.வே.சா.
அவர்கள் கூறுகிறார். இக்கருத்துக்கு அவர் ஆதாரமாகத் தருவது ‘காடு கிழவோள்
பூத மடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப், பாகுபட்டது பரணி நாட்
பெயரே’ என்னும் திவாகரத்தை. இத் திவாகரச் செய்யுள் பரணி நாட் பெயர்க்குக்
காரணம் கூறுகின்றது.

தக்கயாகப் பரணி

இப்பரணி நூலை இயற்றியவர்
கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் பெருமான் ஆவார்.
இந்நூலுள் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாடியது, தேவியைப் பாடியது,
பேய்களைப் பாடியது, கோயிலைப் பாடியது, பேய் முறைப்பாடு, காளிக்குக் கூளி
கூறியது, கூழடுதலும் இடுதலும், களங்காட்டல், வாழ்த்து என்னும் பதினொரு
பகுதிகள் உள்ளன. அவற்றுள் காளிக்குக் கூளி கூறியது என்பதே மிக விரிவான
பகுதியாகும். கூளிலிபேய்.

இப்பரணி நூல் சிவபெருமானை அவமதித்துத்
தக்கன் புரிந்த வேள்வியை, வீரபத்திரக் கடவுள் அழித்ததையும், தக்கன்
தலையை வெட்டியதையும் அவனுக்கு உதவி புரிய வந்தவர்களை வீழ்த்தியதையும்
உணர்த்தும் வீரஞ்செறிந்த புராணக்கலப்புடைய இலக்கியமாகும்.

இந்நூலை டாக்டர் உ.வே.சா. அவர்கள் 1930ஆம்
ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். இப்பதிப்புச் செய்ய உ.வே.சா.
அவர்கள் மூலமும் உரையும் கொண்ட ஐந்து ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கினார்.
பத்துப்பாட்டுப் பிரதியைத் தேடுவதற்குத் தருமபுர ஆதீனத்துக்குச் சென்றபோது
உ.வே.சா. அவர்கட்கு இந்நூற் பிரதி ஒன்றும் கிடைத்தது. பின்னர் ஆய்வு
தொடர்ந்தது. பணி முடிந்தது. பதிப்பு மலர்ந்தது.

இந்நூற் பதிப்பில் உ.வே.சா. அவர்கள்
நூலாசிரியர் வரலாறு, நூலாராய்ச்சி, உரையாசிரியர் வரலாறு, இந்நூலை
ஆக்குவித்தோனாகிய இரண்டாம் இராசராச சோழனின் வரலாறு, நூறு பக்கங்கட்கு
மேற்பட்ட விரிவான அரும்பத முதலியவற்றின் அகராதி ஆகியவற்றை ஆய்ந்தெழுதியும்
தொகுத்தும் வெளியிட்டுள்ளார். 814 தாழிசைகளைக் கொண்ட இந்நூலின் சிறப்பை
இப்பகுதிகள் நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. மூலம்மட்டும் உள்ள
ஏட்டுச் சுவடிகளில் காணப்பெற்ற அதிகப்படியான நான்கு தாழிசைகளையும் நூலின்
இறுதியில் உ.வே.சா. அவர்கள் வெளியிட்டுள்ளார்.

நூலாராய்ச்சி என்ற பகுதியுள் மற்றப்
பரணிகளுக்கும், இதற்கும் உள்ள வேறுபாடுகள், சரித்திரத் தொடர்பான செய்திகள்,
நூலாசிரியர் கொள்கைகள், அரிய செய்திகள், புறப்பொருளமைதிகள், பொருளணிகள்,
சொல்லணிகள், தெய்வங்கள், வடமொழிப் பிரயோகங்கள், ஆக்கச் சொற்கள், முதலிய
பல்வேறு செய்திகள் விரிவாக ஆராயப் பெற்றுள்ளன.

பாசவதைப் பரணி

இந்நூலை இயற்றியவர் இலக்கண விளக்க நூலின்
ஆசிரியராகிய வைத்தியநாத தேசிகர் என்பது செவிவழிச் செய்தி. உ.வே.சா.
அவர்கள் இந்நூற் பதிப்பின் முன்னுரையில் இந்நூலை இயற்றியவர் வைத்தியநாத
தேசிகர்தாம் என்பதற்குத் தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளில் எதிலும்
சிறிதும் ஆதாரம் கிடைக்கவில்லை என்கிறார்.
இந்நூலில் 737 தாழிசைகள் உள்ளன. பரணியின் இலக்கணம், பரணி
என்னும் பெயர்க் காரணம், பழைய பரணி நூல்கள், பரணிக்குரிய யாப்பு, பரணியின்
உறுப்புகள் ஆகியவை பற்றியெல்லாம் இந்நூற்பதிப்பிலும் வெளியிட்டுள்ளார்.
இந் நூற்பதிப்பில் பாசவதைப் பரணி ஆராய்ச்சியும் உண்டு.

பல ஓலைச் சுவடிகளை ஒப்புநோக்கிப் பாட
பேதங்களையும் கண்டு வெளியிட்டுள்ளார். இந்நூலின் முழுமைக்கும் உ.வே.சா.
அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார்.

நூலின் இறுதியில் அரும்பத முதலியவற்றின்
அகராதியையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்நூல் 1933ஆம் ஆண்டு கலைமகள்
வெளியீடாக (வெளியீடு எண் 2) வெளிவந்தது.

தூது நூற்பதிப்புகள்

கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டு விடுதூது,
மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது, ஸ்ரீ பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது,
மான்விடு தூது, அழகர் கிள்ளைவிடு தூது, புகையிலைவிடு தூது என்னும் தூது
நூல்களை உ.வே.சா. அவர்கள் ஆய்ந்து பதிப்புச் செய்து வெளியிட்டார்.
தூது இலக்கியம் மக்களுட் சிறந்தாரிடமாவது, தேவர்,
கடவுளர்களிடமாவது காமுற்ற தலைவி யாதானும் ஒரு பொருளாகத் தூதாகச் செல்ல
வேண்டிக் கொள்வது போல இயற்றப்படும் இலக்கியம். தலைவன் தலைவியிடம் தூது
விடுதல் சிறுபான்மை. இதன் விரிவு இலக்கணத்தை உ.வே.சா. அவர்களின் தூது நூற்
பதிப்புள் யாதானும் ஒன்றன் முன்னுரையுட் காண்க.

கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டுவிடு தூது

இந்நூலை இயற்றியவர் கச்சியப்ப முனிவர்
ஆவார். இவரையே மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தம் மானசிக
வித்யா குருவாகக் கொண்டிருந்தார்களாம். நூல்கள் இயற்றும் போதும் பாடம்
சொல்லும்போதும் பொருள் கூறுங்காலும் முட்டுப்பாடு நேர்ந்தால் இம்முனிவரைத்
தியானித்தல் மகாவித்துவானுக்கு வழக்கமென்று உ.வே.சா. அவர்கள்
இந்நூற்பதிப்பின் முன்னுரையில் குறித்துள்ளார்.

ஐந்து ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கி
உ.வே.சா. அவர்கள் இந்நூலின் மூலத்தை மட்டும் 1888ஆம் ஆண்டு முதன் முறையாகப்
பதிப்புச் செய்து வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1931ஆம்
ஆண்டு வெளிவந்தது. நூலின் சுருக்கம், நூல் முழுமைக்கும் குறிப்புரை முதலிய
சிறப்புப் பகுதிகளுடன் அருஞ்சொல் முதலியவற்றின் அகராதியும் இந்நூற்
பதிப்பில் உண்டு. இந்நூலில் 504 கண்ணிகள் உள்ளன.

மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று
தெரியவில்லை. இந்நூலைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி முன்னுரையும், தெளிவான
குறிப்புரையும், ஆராய்ச்சிக் குறிப்பு என்ற சிறப்புப் பகுதியும் எழுதி
1930ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்புச் செய்து வெளியிட்டார்.
இந்நூல் தமிழின் கீர்த்தியை முற்றிலுமாகக் கூறி இலக்கியங்கள்,
புலவர்கள் ஆகிய சிறப்புக்களையெல்லாம் அழகுபட நவில்கிறது. தமிழ்விடு தூது
நூலில் 268 கண்ணிகள் உள்ளன.

பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது

இந்நூலை இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாத
பிள்ளை ஆவார். பத்மகிரி என்பது மதுரை மாவட்டத்திலுள்ள திண்டுக்கல் என்ற
தலத்தைக் குறிக்கும். இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1932ஆம் ஆண்டு
பதிப்பித்தார். தூது நூல்களைப் பற்றிய விளக்கம், நூல் ஆராய்ச்சி ஆகியவை
பற்றி இப்பதிப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார். முன்னுரையை ஒட்டி,
ஆசிரியர் வரலாறு எழுதப் பெற்றுள்ளது. நூல் முழுமைக்கும் உ.வே.சா.
அவர்களின் குறிப்புரை உண்டு.
இந்நூல் ‘கலைமகள்’ வெளியீட்டகத்தின் முதல் வெளியீடாக வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூலில் மகிழ்ச்சி கண்ணிகள் உள்ளன.

மான்விடு தூது

இந்நூலை இயற்றியவர் குழந்தைக் கவிராயர்
என்பவர் ஆவார். இவர் சிவகங்கைக்கு அண்மையிலுள்ள மிதிலைப்பட்டி என்ற
ஊரினர். இந்நூல் சிவகங்கை சமஸ்தானத்தில் பிரதானியாயிருந்த முல்லையூர்த்
தாண்டவராய பிள்ளை என்னும் வேளாளர்மீது பாடப்பட்டது.

குழந்தைக் கவிராயர், நூலாராய்ச்சி,
தாண்டவராயபிள்ளை என்ற சிறப்பு ஆராய்ச்சிக் கட்டுரைகளுடனும், நூல்
முழுமைக்கும் அரிய குறிப்புரையுடனும் 1936ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களால்
இந்நூல் பதிப்பிக்கப்பெற்றது. இந்நூலும் கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண்
6) வந்தது. இந்நூலில் 301 கண்ணிகள் உள்ளன.

திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளைவிடு தூது
இந்நூலை இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை ஆவார்.
திருமாலிருஞ் சோலைமலை என்பது மதுரைக்கு அண்மையிலுள்ள வைணவத்தலம்.

இந்நூல் மூலம் மட்டும் 1905ஆம் ஆண்டு மு.
வேணுகோபாலசாமி நாயுடு என்பவரால் அச்சிடப் பெற்றது. அப்பதிப்பில் பல
கண்ணிகள் வேறுபட்ட பாடங்களும், பிழைகளும் கொண்டனவாக இருந்தமையால்
உ.வே.சா. அவர்கள் திருத்தமுற மீண்டும் பதிப்பித்து வெளியிட
வேண்டியதாயிற்று.

இப்பதிப்புச் செய்வதற்கு நான்கு ஓலைச்
சுவடிகளை அரிதின் முயன்று தேடிப் பெற்று ஒப்பு நோக்கினார். ஆசிரியர்
வரலாறும், 26 பக்கங்கள் கொண்ட விரிவான நூலாராய்ச்சியும் நூல் முழுமைக்கும்
அரிய குறிப்புரையும், உ.வே.சா. அவர்கள் எழுதினார். இந்நூற் பதிப்பு
1938ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்பதிப்பில் அரும்பத முதலியவற்றின் அகராதியும்
உண்டு. இந்நூலில் 239 கண்ணிகள் உள்ளன.

புகையிலைவிடு தூது

இந்நூலை இயற்றியவர் 18ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவராகிய இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான் சர்க்கரைப் புலவரின்
மகனாராகிய சீனிச்சர்க்கரைப் புலவராவார். இந்நூல் பழனியில் கோயில்
கொண்டுள்ள முருகப்பெருமான்மீது காமுற்ற ஒரு தலைவி புகையிலையைக் தூதாக
விடுத்ததாக அமைந்துள்ளது. பழனியாண்டவருக்குக் புகையிலைச் சுருட்டு
நிவேதனம் உண்டாம். அதையொட்டியே இச்சிறு பிரபந்தம் தோன்றியிருக்க வேண்டும்.
இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1939ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார்.
இப்பதிப்பின் முன்னுரையில் நூலைப்பற்றிய ஆராய்ச்சியும், ஆசிரியரைப் பற்றிய
செய்திகளும் உள்ளன.
இந்நூலில் 59 கண்ணிகள் மட்டிலுமே உள்ளன. இது மிகச் சிறிய
பிரபந்தம். இதிலுள்ள 59 கண்ணிகளிலும் 53 கண்ணிகள் புகையிலையின்
மகத்துவத்தைப் பறை சாற்றுவனவே. 54, 55, 56ஆம் கண்ணிகள் பழனியாண்டவரின்
பெருமையைக் கூறுவன. 57, 58, 59ஆம் கண்ணிகளே தூது சென்றுவர வேண்டுவதாக
அமைந்த கண்ணிகள் ஆகும்.

இந்நூலும் கலைமகள் வெளியீடாகவே (வெளியீடு எண் 12) வெளிவந்தது..

உலா நூற்பதிப்புகள்

திருக்காளத்தி நாதருலா, திருப்பூவண
நாதருலா, தேவையுலா, திருவாரூர் உலா, மதுரைச் சொக்கநாதருலா,
கடம்பர்கோயிலுலா, சங்கரலிங்க உலா, திருஇலஞ்சி முருகனுலா,
திருக்கழுக்குன்றத்துலா, தஞ்சைப் பெருவுடையாருலா என்னும் உலா நூல்களை
உ.வே.சா. அவர்கள் ஆராய்ச்சி செய்து பதிப்பித்தார்.

உலா என்பது மக்களுட் சிறந்தோனாவது
கடவுளாவது திருவீதியில் யானைமீதேறி வருங்கால் பரத்தையர் சேரியிலுள்ள ஏழு
பருவத்துப் பெண்களும் நயந்ததாகப் பாடப்படுவதொரு பிரபந்தம். இதன்
விளக்கங்களை உ.வே.சா. அவர்களின் உலா நூற்பதிப்புக்களின் முன்னுரைகளில்
விரிவாகக் காணலாம்.

திருக்காளத்தி நாதருலா

இந்நூல் சேறைக் கவிராசபிள்ளை இயற்றியது.
ஆறு ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கி, அரும்பதவுரையெழுதி, நூலாசிரியர் வரலாறு
எழுதி 1904ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்புச் செய்து
வெளியிட்டார். மேலும் இரண்டு ஓலைப் பிரதிகளை ஒப்புநோக்கி, உயரிய
ஆராய்ச்சிக் குறிப்புரை ஒன்றெழுதி 1925ஆம் ஆண்டு இந்நூலை இரண்டாம் முறையும்
பதிப்பித்தார். முதற் பதிப்புக்காக ஆராய்ந்த ஆறு ஓலைச்சுவடிகளில் ஒன்றில்
மட்டும் இந்நூல் ‘இரட்டையர்கள் இயற்றியது’ என்றிருந்ததாம்.
அக்கருத்தைக் தக்க ஆதாரங்களுடன் உ.வே.சா. மறுத்துள்ளார். சேறைக்
கவிராசபிள்ளை பற்றிய வரலாற்று ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளதாகும்.
இந்நூலிலுள்ள கண்ணிகள் 578.
திருப்பூவண நாதருலா
இந்நூல் திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் இயற்றியது.
திருப்பூவணம் மதுரைக்குக் கிழக்குப் பகுதியில் அண்மையிலுள்ள பாடல் பெற்ற
சிவத்தலம்.

இவ்வுலா திருப்பூவை உலா எனவும்
வழங்கப்பெறும். 1904ஆம் ஆண்டு முதன்முறையாக உ.வே.சா. அவர்கள் இந்நூலைப்
பதிப்பித்தார். உ.வே.சா. அவர்கள் நூல் முழுமைக்கும் அரும்பத உரை
எழுதியுள்ளார். நூலாசிரியரின் வரலாற்றை ஆய்ந்து எழுதியுள்ளார். நூலின்
சிறப்பு, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகள் முதலியவற்றை
இந்நூற்பதிப்பின் முன்னுரையில் காணலாம். இந்நூலை இரண்டாம் முறையாக உ.வே.சா.
அவர்கள் 1923ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
இந்நூலிலுள்ள கண்ணிகள் 469.

தேவையுலா

இந்நூல் பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை
இயற்றியது ஆகும். தேவை என்பது இராமேச்சரத்தின் வேறு பெயர். இந்நூலை
1907ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் வெளியிட்டார். இது மதுரைச் தமிழ்ச்சங்கப்
பதிப்பாக வெளிவந்தது. இந்நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்கள்
குறிப்புரையெழுதியுள்ளார்.

1925ஆம் ஆண்டு பல ஓலைச்சுவடிகளை ஒப்புநோக்கி இந்நூலைச் சொந்தமாக உ.வே.சா. அவர்கள் பதிப்பித்தார். இந்நூலின் கண்ணிகள் 360.
இந்நூலைப் பதிப்பிக்க வேட்கை தோன்றியதைப் பற்றி உ.வே.சா. அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:லி

‘இற்றைக்குச் சற்றேறக்குறைய 50
வருடங்களுக்கு முன்பு (1875 முன்பு) அன்பர்களுடன் நான் சேதுபுராணத்தில்
பாலோடைச் சருக்கத்திற்குப் பொருள் கேட்டுக்கொண்டிருந்தபொழுது
திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்கள்,
‘மேலான கத்துருவின் வீழ், சலதோ டம்தணிக்கப்
பாலாவி யாகியபா லோடையும்’ (தே.உ.கண்ணி. 31)
என்பதைக் கூறி அதிலுள்ள ‘சலதோடம்’ ‘பாலாவி’ என்பவற்றைப்
பலபடப் பாராட்டி, இது தேவையுலா என்றும், இதில் (தேவையுலாவில்) 24
தீர்த்தங்களும் இப்படியே ஒவ்வொரு நயம்படக் கூறப்பெற்றுள்ளன என்றும்
சொன்னார்கள். அதுவே இந்நூலைத் தேடி ஆராய்ச்சி செய்யும்படி பண்ணுவித்தது.’

திருவாரூருலா

இந்நூலை இயற்றியவர் அந்தகக் கவி வீரராகவ
முதலியார் ஆவார். உ.வே.சா. அவர்கள் இந்நூலுக்கு அரும்பதவுரை
எழுதியுள்ளார். இவ்வுரையுடன் 1910ஆம் ஆண்டு இந்நூலை மதுரைத்
தமிழ்ச்சங்கத்தார் வெளியிட்டனர். இந்நூலிலுள்ள கண்ணிகள் 528.

மதுரைச் சொக்கநாதருலா

இந்நூல் புராணத் திருமலைநாதர் என்பவரால்
இயற்றப்பட்டது ஆகும். இந்நூலை 1931ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள்
பதிப்புச்செய்து வெளியிட்டார். இந்நூற் பதிப்பில் மூர்த்தி, தலதீர்த்தச்
சிறப்புக்களினை உ.வே.சா. அவர்கள் முன்னுரையில் தந்துள்ளார். அதையடுத்து
நூலாசிரியரின் வரலாற்று ஆராய்ச்சியினைத் தந்துள்ளார். நூல் முழுமைக்கும்
குறிப்புரை எழுதியுள்ளார்.

இந்நூலின் கண்ணிகள் 516.

இந்நூலின் சிறப்பு, ஆலவாய்ச் சொக்கலிங்கப்
பெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் ஒன்பது பகுதிகளாக்கி,
முதல் மூன்று திருவிளையாடல்களை முதற் பகுதியிலும், அடுத்து ஐந்து பகுதித்
திருவிளையாடல்களைக் குழாங்கள் கூற்றிலும், ஒன்பதாவது பகுதியை (56
திருவிளையாடல்களை) எவ்வெட்டாக ஒவ்வொரு பருவத்திலும் அமைத்துப்
பாடியிருப்பதாகும்.

கடம்பர் கோயில் உலா

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று
தெரியவில்லை. பல ஓலைச்சுவடிகளைப் பரிசோதித்து மூலத்தைப் படியெடுத்து நூல்
முழுமைக்கும் குறிப்புரை எழுதி 1932ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை
வெளியிட்டார். தலவரலாறு, நூற்சிறப்பு முதலிய அரிய ஆராய்ச்சிச் செய்திகளை
இப்பதிப்பின் முன்னுரையில் காணலாம். இதனை மதுரைத் தமிழ்ச் சங்கத்தார்
பதிப்புச் செய்தனர். இந்நூலில் உள்ள கண்ணிகள் 383.

சங்கரநயினார்கோயிற் சங்கரலிங்க உலா

இந்நூலை இயற்றியவரும் இன்னாரென்று
தெரியவில்லை. சங்கரநயினார் கோயில் என்பது பாண்டி நாட்டிலுள்ள ஓரூர்.
இந்நூலுக்கு வரராசை உலா என்றும் வேறு பெயர் உண்டு.
இந்நூலைப்பற்றியதொரு சிறந்த ஆராய்ச்சியுரையும், நூல்
முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி இந்நூலை 1933ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள்
பதிப்புச்செய்து வெளியிட்டார்.

இந்நூலில் உள்ள கண்ணிகள் 312.

திருஇலஞ்சி முருகனுலா

இந்நூலை இயற்றியவர் மேலகரம் பண்டாரக்
கவிராயர் என்பவர் ஆவார். இவர் திரிகூடராசப்பக் கவிராயரின் புதல்வர்.
இலஞ்சி என்பது திருக்குற்றாலத்துக்கு அண்மையிலுள்ள பாண்டிநாட்டுத் தலம்.
இந்நூலைப்பற்றிய ஆராய்ச்சி முன்னுரையுடனும், நூல்
முழுமைக்கும் குறிப்புரையுடனும் உ.வே.சா. அவர்கள் இந்நூலை 1935ஆம் ஆண்டு
பதிப்புச்செய்து வெளியிட்டார். இந்நூலிலுள்ள கண்ணிகள் 460.

திருக்குழுக்குன்றத்து உலா

இந்நூலை இயற்றியவர் அந்தகக் கவி வீரராகவ
முதலியார் ஆவார். உ.வே.சா. அவர்கள் இந்நூலை 1938ஆம் ஆண்டு பதிப்புச்செய்து
வெளியிட்டார். திருக்குழுக்குன்றத் தல வரலாறு என்ற கட்டுரையும், அந்தகக்
கவி வீரராகவ முதலியார் என்ற கட்டுரையும், நூல்பற்றியதொரு ஆராய்ச்சிக்
கட்டுரையும், நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி இப்பதிப்பை
வெளியிட்டுள்ளார். இந்நூலிலுள்ள கண்ணிகள் 404.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:07 pm

கலம்பக நூற்பதிப்பு

திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்

இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியத் தேவர்
என்பவர் ஆவார். இவர் அகத்தியரின் மாணவரும், தொல்காப்பியம் என்னும் நூலைத்
தந்தவரும் ஆகிய ஒல்காப் பெரும்புகழ், ஐந்திரமுணர்ந்த தொல்காப்பியனார்
அல்லர்.

இத்தொல்காப்பியத் தேவர் இந்நூலை
இயற்றுவதற்குக் காரணமான நிகழ்ச்சி பற்றித் தமிழ் நாவலர் சரிதையுள் ஒரு
வரலாறு உண்டு. அதனை உ.வே.சா. அவர்கள் இந்நூற் பதிப்பின் முன்னுரையில்
தந்துள்ளார். இந்நூலை 1918ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து
வெளியிட்டார். 1919ஆம் ஆண்டு இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டபோது நூல்
முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி வெளியிட்டார். 1940ஆம் ஆண்டு உ.வே.சா.
அவர்கள் இந்நூலை மூன்றாம் முறையும் பதிப்புச் செய்து வெளியிட்டார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:08 pm

குறவஞ்சி நூற்பதிப்பு

திருமலையாண்டவர் குறவஞ்சி

இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை.
இந்நூலில் 89 பாடல்கள் முழுமையாகக் கிடைத்துள்ளன. 90ஆவது பாடலின்
முதற்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. கிடைத்தவரை 1938ஆம் ஆண்டு உ.வே.சா.
அவர்கள் வெளியிட்டார்.

90ஆவது பாடலில் கிடைக்காதது எனப்படுவது
சிங்கனும் சிங்கியும் ஒருங்கே திருமலையாண்டவரை வாழ்த்தும் சுவையான
பகுதியாக இருத்தல் வேண்டும்.

இந்நூலுக்கு உ.வே.சா. அவர்களின் குறிப்புரை உண்டு. இந்நூலும் கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 9) வெளிவந்தது..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 2:08 pm

விருத்தம் நூற்பதிப்பு

திருத்தணிகைத் திருவிருத்தம்

இந்நூல் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவரால்
இயற்றப் பெற்றதாகும். 100 பாடல்களைக் கொண்ட இந்நூலின் மூலம் மட்டும்
1914ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களால் வெளியிடப்பட்டது. இது மதுரைத் தமிழ்ச்
சங்க வெளியீடாக வந்தது. இதற்கு உயரிய குறிப்புரை எழுதி 1946ஆம் ஆண்டு
உ.வே.சா. அவர்களின் திருமகனார் வே. கலியாணசுந்தர ஐயர் வெளியிட்டுள்ளார்.

அந்தாதி நூற்பதிப்புகள்

திருமயிலைத் திரிபந்தாதி, மயிலை யமக
அந்தாதி, சங்கரநயினார் கோயிலந்தாதி என்னும் அந்தாதி நூல்களை உ.வே.சா.
அவர்கள் ஆய்ந்து பதிப்பித்து வெளியிட்டார். ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ,
சீரோ, அசையோ அடுத்த பாடலின் முதலாக வரப்பாடும் ஒருவகைப் பிரபந்தத்தை
அந்தாதி என்பர். இதன் இலக்கண விரிவை உ.வே.சா. அவர்களின் மேற் கூறிய மூன்று
பதிப்பில் யாதானும் ஒன்றின் முன் பகுதியிற் காண்க.

திருமயிலைத் திரிபந்தாதி

இந்நூலை இயற்றியவர் இராமையர் என்பவர்
ஆவார். இந்நூல் மாயூரம் என்னும் சோழ நாட்டூரில் கோயில் கொண்டிருக்கும்
இறைவனைப் பற்றியது. 100 பாடல்களைக் கொண்டது. இந்நூலின் மூலத்தை மட்டும்
உ.வே.சா. அவர்கள் 1888ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். 1930ஆம் ஆண்டு
நூல் முழுமைக்கும் குறிப்புரையுடனும், மூர்த்தி, தலம், தீர்த்தம் முதலியவை
பற்றிய செய்திகளுடனும், நூலாராய்ச்சியுடனும் பதிப்பித்து வெளியிட்டார்;
இவற்றை முன்னுரையில் காணலாம்.

சங்கரநயினார் கோயிலந்தாதி

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று
தெரியவில்லை. இந்நூல் பாண்டி நாட்டிலுள்ள சங்கரநயினார் கோயில் என்ற ஊரின்
இறைவன்மேல் பாடப்பெற்றது. இந்நூலுக்கு கூழையந்தாதி என்றும், வரராசையந்தாதி
என்றும் வேறு பெயர்கள் உள்ளன.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்கள் உ.வே.சா. அவர்கட்கு இலக்கியப் பாடம் சொல்லி வருகையில்
ஒருமுறை ‘இளந்தென்றலை’ என்று தொடங்கும் பாடலைச் சொல்லி நயங்களை விளக்கி,
அப்பாடல் கூழையந்தாதியில் உள்ளதென்றும், அந்நூல் கிடைக்கவில்லை என்றும்
வருந்திக் கூறினார்களாம். அதுமுதல் உ.வே.சா. அவர்கள் அவ்வளவு சிறந்த நூலை
எப்படியும் பெற்றுப் படித்துச் சுவைக்க வேண்டுமென்று எவ்வளவோ முயன்று
பார்த்தார். முயற்சி பலனளிக்காமற் போயிற்று. பிற்காலத்தில் ஒரு நாள் தாம்
அரிதின் முயன்று பெற்று வைத்திருந்த ஓலைச்சுவடிக் கட்டுகளையெல்லாம்
புரட்டும்போது ஒரு பெரிய ஓலைச்சுவடியின் மேல் ‘கருடத்துதி’ எனப்
போடப்பட்டிருப்பதைக் கண்டார். ‘கருடத்துதி’ என்ற நூல் இவ்வளவு பெரிய கட்டாக
இருக்க முடியாதே என்ற எண்ணத்துடன் அதனைப் புரட்டிப் பார்த்தார். உள்ளே
உள்ள பாடல்களில் ‘கூழை’ என்ற சொல் பலவிடங்களில் வருதலைக் கண்டார்;
மகிழ்ச்சி கொண்டார். கருடத் துதியோடு கூழையந்தாதியையும் சேர்த்துக் கட்டிய
கட்டே அஃது என உணர்ந்தார். பின்னர் ஆய்வு தொடங்கியது; தொடர்ந்தது. நூலில்
98 பாடல்களும் 99ஆவது பாடலின் முதலடியும் மட்டிலுமே கிடைத்தது. பின்னர்
முயன்று பார்த்தும் கிடைக்கவில்லை. ‘இது கூழைப் பெருமானுடைய (சங்கரநாராயணக்
கடவுள்) அந்தாதியாகலின் கூழையாகவே (கூழைலிகுறைவு) கிடைக்கும்படி
திருவருள் செய்வித்ததுபோலும்’ என்கிறார் உ.வே.சா.
கிடைத்த 98 பாடல்களில் மகாவித்துவான் கூறிய ‘இளந் தென்றலை’
என்று தொடங்கும் பாடல் இல்லை. 99ஆவது பாடலின் முதலடியும் இளந்தென்றலை என்று
தொடங்கவில்லை. கிடைக்காத பாடலாகிய 100 பாடலாக அப்பாடல் இருக்குமென்றும்
சொல்ல முடியாது. காரணம், அந்தாதி நூல்களில் கடைசிப் பாடலின் கடைசிச்சொல்
முதற் பாடலின் முதற்சொல்லாக இருக்கும்; மகாவித்துவான் கூறிய இளந்தென்றலை
என்று தொடங்கும் பாடலின் கடைசிச்சொல் ‘பொருளே’ என்பதாகும்; இந்நூலின்
முதற்சொல் ‘பார்’ என்பதாகும்; எனவே இவை இரண்டு சொற்களும் ஒன்றாக
அமையாமையின் இந்நூலின் இறுதிப் பாடலாகவும் மேற்படி பாடலைக் கொள்ள
முடியாது.
அந்தாதி நூலை 1934ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் (கிடைத்தவரை)
முழுமைக்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார். நூலின்
முன்னுரையில் அரிய பல ஆராய்ச்சிக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

‘இந்நூலை முற்றும் பெற்றுப் படிக்க
வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த என்னுடைய தமிழாசிரியர் மகாவித்துவான்
ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இதனைப் பார்க்கவில்லையே என்ற வருத்தம்
உண்டாக்கி என்னை வருத்துகிறது’ என உ.வே.சா. அவர்கள் இந்நூல் முன்னுரையில்
கூறியுள்ள தொடர் நம் நெஞ்சத்தைத் தொடுகிறது.

மாலை நூற்பதிப்புகள்

திருக்காளத்திநாதர் இட்ட காமிய மாலை
இதனை இயற்றியவரும் இன்னாரென்று தெரிந்து கொள்ளக்கூடவில்லை.
நோய்வாய்ப்பட்ட அடியவர் ஒருவர் திருக்காளத்தியப்பரிடம் தம் குறைகளை
நீக்கிக் காத்தருள வேண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது. உ.வே.சா. அவர்கள்
1938ஆம் ஆண்டு இந்நூலைப் பதிப்பித்தார். 32, 33, 34ஆம் பாடல்கள் நீங்கலாக
49ஆம் எண்ணுள்ள பாடல் வரையிலுமே கிடைத்ததால் அதுவரை வெளியிட்டுள்ளார்.
கிடைத்த இந்த 46 பாடல்களுக்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை
எழுதியுள்ளார்.

இந்நூலும் கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 10) வந்தது.
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் பாமாலை
இந்நூலை இயற்றியவர் நாராயணதீட்சிதர் என்பவர் ஆவார். இஃது ஒரு வைணவ இலக்கியம். இதில் 103 பாடல்கள் உள்ளன.

1939ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை
வெளிப்படுத்தினார். முன்னுரையில் நூலாசிரியரைப் பற்றிய செய்திகளை விரிவாக
எழுதியுள்ளமையுடன், நூலாய்வும் செய்து வெளியிட்டுள்ளார். இதுவும் கலைமகள்
வெளியீடாக (வெளியீட்டு எண் 11) வந்தது.

மும்மணிக்கோவை நூற்பதிப்புகள்

மதுரை மும்மணிக்கோவை, வலிவல மும்மணிக்கோவை
ஆகிய மும்மணிக்கோவை நூல்களை உ.வே.சா. அவர்கள் ஆய்ந்து பதிப்பித்தார்.
மூன்று வகையான பாடல்களால் அந்தாதியாகப் பாடப்பெறுவது மும்மணிக்கோவை என்ற
இலக்கியம். இதன் விரிவான இலக்கணத்தை வலிவல மும்மணிக்கோவை நூற் பதிப்பில்
காணலாம்.

மதுரை மும்மணிக்கோவை

இம்மும்மணிக் கோவை நூல் பலபட்டடைச்
சொக்கநாதபிள்ளையவர்களால் இயற்றப்பெற்றது ஆகும். இந்நூல் 1932ஆம் ஆண்டு
உ.வே.சா. அவர்களால் வெளியிடப்பெற்றது. நூல் பற்றிய செய்திகளை இந்நூற்
பதிப்பின் முன்னுரையில் உ.வே.சா. அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்;
முன்னுரைக்கு அடுத்து ஆசிரியரின் வரலாற்றை எழுதியுள்ளார். நூலில் உள்ள
முப்பது பாடல்களுக்கும் குறிப்புரை எழுதியுள்ளார். இந்நூல் மதுரைத்
தமிழ்ச் சங்கப் பதிப்பாக வெளிவந்தது.

வலிவல மும்மணிக்கோவை

இம்மும்மணிக் கோவையை இயற்றியவர்
இன்னாரென்று தெரியவில்லை. வலிவலம் என்பது சோழ நாட்டில் மூவர்
தேவாரங்களையும் பெற்ற தலங்களுள் ஒன்று.

இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1934ஆம் ஆண்டு
பதிப்பித்தார். இந்நூற் பதிப்பின் முன்னுரையில் நூலின் வரலாறு, தலக்
குறிப்பு, ஆகிய செய்திகளுடன் நூலாராய்ச்சியினையும் வெளியிட்டுள்ளார்.
இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன. அப்பாடல்கள் அனைத்திற்கும்
உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்நூல் கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 9) வந்தது.

இரட்டைமணி மாலை நூற் பதிப்புகள்

பழனி இரட்டைமணி மாலை, களக்காட்டுச்
சத்யவாசகர் இரட்டைமணி மாலை என்னும் இரண்டு இரட்டைமணி மாலை நூல்களையும்
உ.வே.சா. அவர்கள் பதிப்பித்தார். வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும்
இருவகைப் பாடல்களால் அந்தாதியாகத் தொடுக்கப்பெறும் இருபது பாக்கள் கொண்ட
சிற்றிலக்கியமே இரட்டைமணி மாலை எனப்படும்.

பழனி இரட்டைமணிமாலை

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று
தெரியவில்லை. இந்நூல் பழனிமலையில் குடிகொண்ட இறைவனைப் பற்றியது. இந்நூலை
உ.வே.சா. அவர்கள் 1932ஆம் ஆண்டு பதிப்பித்தார். நூல் முழுமைக்கும் உ.வே.சா.
அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார்.
இந்நூலும் கலைமகள் வெளியீடாகவே வெளிவந்தது.

களக்காட்டுச் சத்யவாசகர் இரட்டைமணிமாலை

நாங்குநேரி வட்டத்தில் உள்ள ஊர்களில்
களக்காடு என்பது ஒன்று. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
களக்காட்டைச் சார்ந்த கைலாசநாத தேசிகரோ அன்றி அவர் மரபினரோ இந்நூலை
இயற்றியிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.
இந்நூலின் இருபது பாடல்கட்கும் குறிப்புரை எழுதி உ.வே.சா.
கலைமகள் அனுபந்தமாக வெளியிட்டார். அதுவே தனியாகவும் கலைமகள்
பதிப்பகத்தாரால் வெளியிடப் பெற்றது.

புராண நூற்பதிப்புகள்

திருப்பெருந்துறைப் புராணம்,
வீரவனப்புராணம், சூசைமா நகர்ப் புராணம், தியாகராஜ லீலை, நம்பித்
திருவிளையாடற் புராணம், தனியூர்ப் புராணம், திருக்காளத்திப் புராணம்,
விளத்தொட்டிப் புராணம், ஆற்றூர்ப்புராணம், மண்ணிப்படிக்கரைப் புராணம்,
தணிகாசலப் புராணம், வில்லைப் புராணம் என்னும் புராண நூல்களை உ.வே.சா.
அவர்கள் ஆராய்ந்து பதிப்பித்தார்.

தம் ஆசிரியப் பெருந்தகையாராகிய
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருக்குடந்தைப்
புராணத்தைத் தியாகராசச் செட்டியார் அவர்களும் உ.வே.சா. அவர்களுமாகப்
பதிப்பித்தனர். இப்பதிப்பு, சீவகசிந்தாமணி அச்சுவேலை நடைபெற்றுக்
கொண்டிருக்கையில் 1883ஆம் ஆண்டு வெளிவந்தது.

திருப்பெருந்துறைப் புராணம்

இந்நூல் 1656 பாடல்கள் கொண்டது.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப்பட்டது.
திருப்பெருந்துறை என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆவுடையார் கோயில் என்னும்
சிவத்தலமாகும். இந்நூலை 1897ஆம் ஆண்டு முதன்முறையாகப் பதிப்பித்து
வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம்பதிப்பு 1913ஆம் ஆண்டு வெளிவந்தது.
ஆவுடையார் கோயிலைப்பற்றிய விசேடங்கள் அடங்கிய முகவுரையும், பாடல்களுக்கான
அருஞ்சொல் அகராதியும் இப்பதிப்புகளில் உண்டு.

வீரவனப் புராணம்

இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்களால் வடமொழியினின்றும் மொழி பெயர்த்தெழுதப்பட்டது.
இந்நூலிலுள்ள செய்யுட்களின் மொத்த எண்ணிக்கை 704. வீரவனம் என்பது
திருப்பெருந்துறைக்கு (ஆவுடையார் கோவிலுக்கு) மேற்றிசையில் உள்ள
சிவத்தலம். இத்தலத்திற்கு வீரவாரணியம், வீராரணியம், வீரை, வீரையூர், அளகை,
சாக்கோட்டை, சாக்களூர், சாக்கை என்னும் வேறு பெயர்களும் உண்டு.

இத்தலத்தின் விசேடங்களுடன் மூர்த்தி,
தீர்த்தம் ஆகியவற்றைப் பற்றியும் விரிவாக இந்நூற்பதிப்பின் முன்னுரையில்
உ.வே.சா. அவர்கள் வரைந்துள்ளார். நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்கள் அரிய
குறிப்புரையையும் எழுதி வெளியிட்டுள்ளார். 1903ஆம் ஆண்டு இப்பதிப்பு
வெளிவந்தது.

சூரை மாநகர்ப் புராணம்

இந்நூலும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. இந்நூல் பாண்டி நாட்டைச் சார்ந்த
விசயாலயபுரம், சூரை என்றெல்லாம் பெயர் கொண்ட சூரைக்குடி என்னும் தலத்தைப்
பற்றியது. இந்நூலிலுள்ள செய்யுட்களின் மொத்த எண்ணிக்கை 539. மூர்த்தி,
தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளை முன்னுரையில் குறித்து நூல் முழுமைக்கும்
அரும்பத உரையெழுதி 1904ஆம் ஆண்டு இந்நூலை உ.வே.சா. அவர்கள் பதிப்புச்
செய்து வெளியிட்டார்.

திருவாரூர்த் தியாகராஜ லீலை

இந்நூலும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றதே. தியாகராஜ லீலை என்னும் வடமொழி நூல்
திருவாரூர்த் தியாகேசப் பெருமானின் 360 லீலைகளை லி திருவிளையாடல்களை லி
உணர்த்துவது. அவற்றுள் முதல் 13 லீலைகள், 14ஆம் லீலையின்
முதற்பாகம்லிஆகியவற்றின் தமிழ் வடிவமே இந்நூல். வடமொழியின் எஞ்சிய பகுதி
கிடைக்காமையால் மகாவித்துவான் இந்நூலை இத்துடன் முடித்தார். இந்நூலுக்குத்
திருவாரூர்த் திருவிளையாடல் என்பதும் ஒரு பெயர். இந்நூலிலுள்ள பாடல்களின்
மொத்த எண்ணிக்கை 699. இந்நூலை 1845ஆம் ஆண்டு மகா வித்துவான் எழுதினார்.

இந்நூலுக்கு அரிய குறிப்புரை எழுதி விஷய
சூசிகை (சிறப்புச் சொற் பொருளகராதி) தயாரித்து மூலத்துடன் 1905ஆம் ஆண்டு
உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார். முன்னுரையில் தலத்தைப் பற்றிய
அனைத்துச் செய்திகளையும் காணலாம். இதன் இரண்டாம் பதிப்பு 1928இல்
வெளிவந்தது.

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

இந்நூல் செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர்
நம்பி என்பவரால் இயற்றப்பெற்றது. அதனால் இதனை நம்பி திருவிளையாடல் என்று
கூறும் வழக்கமும் உண்டு. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்
புராணத்திற்கும் இது காலத்தால் முற்பட்டது. ஆதலால் இதனைப் பழைய
திருவிளையாடல் என்றும் கூறுவர். இந்நூலை வேப்பத்தூரார் திருவிளையாடல் என்று
கூறும் வழக்கமும் உண்டு. இந்நூலில் உள்ள செய்யுட்களின் மொத்த எண்ணிக்கை
1753.

பதினோர் ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கி
ஆராய்ந்து 1906ஆம் ஆண்டு முதன் முறையாக உ.வே.சா. அவர்கள் இந்நூற்பதிப்பை
வெளியிட்டார். நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்களின் சிறந்த குறிப்புரை
உண்டு. இதன் இரண்டாம் பதிப்பு 1927ஆம் ஆண்டு வெளிவந்தது.

இந்நூல் இவ்வளவு சிறப்பும் நயமும் கொண்டதாக
இருந்தும், இதுநாள் வரை இந்நூல் தமிழகத்தில் விளக்கம் பெறாமல் இருந்ததே
எல்லா ஆச்சரியத்திலும் பெரியதோர் ஆச்சரியம் என உ.வே.சா. இந்நூற் பதிப்பின்
முன்னுரையில் கூறுகிறார்.

பழைய திருவிளையாடற் புராண பயகர மாலையையும்*
கடம்பவன புராணத்தின் ஒரு பகுதியும், திருவுசாத்தன நான்மணி மாலையும்
இந்நூற்பதிப்பின் பிற்பகுதியில் அமைத்து வெளியிடப்பெற்றுள்ளன.

தனியூர்ப் புராணம்

இந்நூலை இயற்றியவர் மகாவித்துவான் மீனாட்சி
சுந்தரம்பிள்ளையவர்களே. தனியூர் என்பது மாயூரத்திற்கு அண்மையிலுள்ள
பாரிஜாத வனம் அல்லது புழுகீசம் என்னும் தலம். இந்நூலில் உள்ள
திருவிருத்தங்களின் மொத்த எண்ணிக்கை 202. மூர்த்திதல தீர்த்தச் சிறப்புக்
களடங்கிய முன்னுரையும் நூன் முழுமைக்கும் அரும்பதவுரையும் எழுதி இந்நூலை
1907ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார்.

மண்ணிப் படிக்கரைப் புராணம்

இந்நூலை இயற்றியவரும் மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களே. மண்ணிப்படிக்கரை என்பது சோழநாட்டிலுள்ள
ஒரு தலம். இந்நூலில் 20 படலங்கள் உள்ளன. பாடல்களின் மொத்த எண்ணிக்கை 501.
தாமியற்றிய அரும்பத உரையுடன் உ.வே.சா. அவர்கள் இந்நூலை 1907ஆம் ஆண்டு
பதிப்பித்து வெளியிட்டார்.

திருக்காளத்திப் புராணம்

இந்நூல் ஆனந்தக் கூத்தர் என்பவரால்
இயற்றப்பட்டது. இந்நூலில் உள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை 1726. உ.வே.சா.
அவர்கள் நான்கு ஓலைச்சுவடிகளை நன்கு ஆராய்ந்து இந்நூலைப் பதிப்பித்தார்.
மூன்று வடமொழி மூலங்களையும் இந்நூலை ஆராய்ச்சி செய்யுங்கால் உ.வே.சா.
அவர்கள் கற்றுப் பயன்படுத்தினார். நூலாசிரியர், நூல், தலம் பற்றிய
குறிப்புகள் யாவும் முன்னுரையில் உள்ளன. நூல் முழுமைக்கும் உ.வே.சா.
அவர்களின் குறிப்புரை உண்டு. இப்பதிப்பு முதன் முறையாக உ.வே.சா. அவர்களால்
1912ஆம் ஆண்டு பதிப்புச் செய்யப்பெற்று வெளிவந்தது.

தலக்குறிப்பு முதலிய சிறப்புச் செய்திகளை
இந்நூற்பதிப்பின் முன்னுரையுள் காணலாம். இந்நூலை 1913ஆம் ஆண்டு உ.வே.சா.
அவர்கள் இரண்டாம் முறையாகவும் பதிப்பித்தார்.

விளத்தொட்டிப் புராணம்

இந்நூலும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை அவர்கள் இயற்றியதே. விளத்தொட்டி என்பது தஞ்சை மாவட்டம்
குத்தாலத்திற்கு அண்மையிலுள்ள ஓரூர். இந்நூலிலுள்ள படலங்கள் 17.
பாடல்களின் மொத்த எண்ணிக்கை 353. குறிப்புரையும் ஒவ்வொரு
படலத்துக்கு முன்னும் கதைச் சுருக்கமும் எழுதி 1934ஆம் ஆண்டு
உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்புச் செய்து வெளியிட்டார். ஊர்
பற்றியும், நூற் சிறப்புப் பற்றியும், இந்நூலை மகாவித்துவான்
பாடியதற்குரிய காரணம் பற்றியும் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளார்.

ஆற்றூர்ப் புராணம்

இந்நூலும் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டதே. ஆற்றூர் என்பது தஞ்சை
மாவட்டம் மாயூரத்திற்கு வடக்கே மண்ணியாற்றின் தென்கரையில் உள்ள சிவத்தலம்.
இந்நூலில் உள்ள படலங்கள் 14. பாடல்களின் மொத்த எண்ணிக்கை 525. நூல்
முழுமைக்கும் குறிப்புரையும், ஒவ்வொரு படலத்துக்கு முன்னும் கதைச்
சுருக்கமும் எழுதி 1935ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்புச் செய்து
வெளியிட்டார். தியாகராச செட்டியார் இந்நூலுக்கு இயற்றிய சிறப்புப்
பாயிரமும் இந்நூற் பதிப்பினுள் வெளியிடப் பெற்றுள்ளது. மூர்த்தி முதலியன
பற்றிய சிறப்புச் செய்திகளை இந்நூற் பதிப்பின் முன்னுரையில் காணலாம்.

தணிகாசலப் புராணம்

இந்நூல் திருத்தணிகை கந்தப்பையர் என்பவரால்
இயற்றப்பட்டது. இவர் 18ஆம் நூற்றாண்டுப் புலவர். 14 பகுதிகளைக் கொண்ட
இந்நூலின் மொத்தச் செய்யுட்கள் 426. நூலாசிரியர், தலம் முதலியவை பற்றிய
விளக்கங்கள் கொண்ட முன்னுரையும், நூல் முழுமைக்கும் குறிப்புரையும்
ஒவ்வொரு பகுதிக்கு முன்னும் கதைச் சுருக்கம் எழுதி 1939ஆம் ஆண்டு இந்நூலை
உ.வே.சா. அவர்கள் பதிப்புச் செய்து வெளியிட்டார்.

வில்லைப் புராணம்

இந்நூல் வீரராகவ கவி என்பவரால்
இயற்றப்பட்டது. இந்நூலிலுள்ள சருக்கங்கள் 9. செய்யுட்களின் மொத்த
எண்ணிக்கை 4952. இந்நூல் புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள ‘வில்வ நல்லூர்’
என்னும் சிவத்தலத்தின் வரலாற்றை உரைப்பது. இத்தலம் இந்நாளில் வில்லியனூர்
என்று வழங்கப்படுகிறது.

நூல் முழுமைக்கும் குறிப்புரையுடனும்,
ஒவ்வொரு சருக்கத்துக்கு முன்பும் கதைச் சுருக்கத்துடனும், சிறந்த
ஆராய்ச்சி முன்னுரையுடனும் 1940ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலைப்
பதிப்பித்து வெளியிட்டார். இந்நூற் பதிப்பின் முன்னுரையில் உள்ள உ.வே.சா.
எழுதிய சில ஆராய்ச்சிக் குறிப்புக்கள் வருமாறு:

‘வில்வ வனம் என்பது வில்லை எனவும்
வழங்கும். வில்வ வனம் என்பது வில்ல வனம் ஆகி, அது மருவி வில்லையாயிற்று.
இது தேவாரத்தில் வரும் வில்வேச்சரம் என்னும் வைப்புத் தலமாகும்.’
‘இத் தமிழ்ப் புராணம் வடமொழியிலுள்ள புராணத்திலிருந்து
மொழிபெயர்க்கப்பெற்றது. இது காந்த புராணத்திலே நாகர கண்டத்துள்
சொல்லப்பட்டதென்று இந்நூல் கூறும்.’
‘தமிழ்ப் புராணத்தின் ஆசிரியர்
இன்னாரென்பது இந்நூற் சுவடிகளிலேனும், இந்நூற் செய்யுட்களிலேனும்
காணப்படவில்லை. ஆயினும், இத்தலத்து முருகக் கடவுள் விஷயமாக அருணாசலக் கவி
என்பவர் பாடிய ‘வில்லை முத்துக்குமாரர் பிள்ளைத்தமிழ்’ என்னும்
பிரபந்தத்தில் அம்புலிப் பருவத்திலுள்ள எட்டாம் செய்யுளால் இப்புராணத்தின்
ஆசிரியர் வீரராகவர் என்னும் பெயருடையார் என்று தெரிய வருகிறது..’
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி Empty Re: டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு -- பேராசிரியர் ம.வே. பசுபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையா ? அதிர்ஷ்டமா ? பட்டிமன்றம் . நடுவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் . பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இ
» டாக்டர் உ.வே.சா. அவர்களின் குடும்ப ஒளிப்படங்கள்
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் வாழ்க்கை வரலாறு
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. ***** மகிழ்வுரை : முனைவர் யாழ். சு. சந்திரா, இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum